Wednesday, February 27, 2019

சென்னை என்னும் மாதரசன் பட்டினம்

சென்னை என்னும் மாதரசன்பட்டினம் சுருக்கவரலாறு:









மதராசு என்பது சென்னை மாநகரமாக 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆங்கிலேயர்களால் 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி உருவாக்கப்பட்டதாக கருதி, சென்னையின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால், சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, நான் பிறந்த எங்கள் கிருட்டிணகிரி மாவட்டம் பெண்ணேசுவர மடம் கிராமத்தில் 1973-ம் ஆண்டு தமிழகத்தொல்லியல்துறையால் பெரிய பாறைக்கல்வெட்டு ஒன்று படியெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டில், சென்னையில் கடற்கரை ஒட்டி இன்றும் அதே பெயரில் இருக்கும் பல இடங்களின் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் அன்றைய துறைமுக நகரங்களாக இருந்தவை.

விசயநகர ஆட்சியின்போது முளுபாகல் மண்டலேசுவரனாக (ஆளுநர் பதவியில்) இருந்தவர் குமாரகம்பண்ணன். இவர் மதுரையில் சுல்தான்களை ஒழித்தவர். முளுவாய் அரசின் கீழ் பையூர் நாடு இருந்தது. பையூர் சோழர்களின் நிகரிலிச்சோழ மண்டலத்தின் கீழ் இருந்தது.

விசயராசேந்திரனின் கீழ் பையூரில் படைகளை வைத்து ஆட்சிசெய்த சிற்றரசன் மதுராந்தகன் வீரநுளம்பன் ராசநாராயணன் கங்கப்பெருமாள் என்பவர் ஆவார். அவரது கல்வெட்டுகள் பெண்ணேசுவர மடம் பெண்ணைநாயனார் கோயிலில் உள்ளது. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பையூர் பகுதி விஜயநகர ஆளுகையின் கீழ் வந்தது. முளுவாய் ஆளுநர் குமாரகம்பண்ண உடையாரின் படைத்தளபதி சோமப்பதண்ட நாயகனின் மகன் கூளிமாராயனின் வீரச் செயல்களை 31 வரிகளில் பெரிய கல்வெட்டாக வெட்டி வைத்துள்ளார். இந்த கல்வெட்டில்தான் சென்னையின் பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அக்கல்வெட்டின் 16, 17வது வரிகளில்....

“...சானபட்டணம், புதுப்பட்டினம், மாதரசன் பட்டினம் சத்திக்குவரிய ...பட்டினம், நீலாங்கரையான்பட்டினம், கோவளம் (வரி 16)

மற்றுள்ள பல பட்டினங்களும், கரையும், துறையும் உட்படக் கொண்டு இராசாவின் கைய்யிலே காட்டிக்குடுத்து இராசபதமாந தாந’’ (வரி 17)
என்று குறிப்பிட்டுள்ளது.

இக்கல்வெட்டு 1367-ஆம் ஆண்டு  வெட்டப்பட்டது, நீர் பாசனத்துக்காக கண்டரக்கூளிமாராயன் பெருவாய்க்கால் வெட்டிய செய்தி மற்றும் வீரச்செயல்கள் பறைசாற்றுகிறது.

இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்துக்காக, தமிழகத்தில் உள்ள விசயநகர காலத்துக் கல்வெட்டுகளை முனைவர் ஒய்.சுப்பராயலு, தொல்லியல் முனைவர் ராஜவேல், பூங்குன்றன் ஆகியோர், காவேரிப்பட்டினத்தில் நடந்த தமிழகத் தொல்லியல் கழகத்தின் 26-வது கருத்தரங்கில் திரும்பவும் படியெடுத்து மீளாய்வு செய்து சென்னையின் பழைய பெயரான மதராசு என்கிற பெயர் சுமார் 700 ஆண்டுகள் பழமையானது என்பதை உறுதி செய்துள்ளனர்.

(இதே ஊர்க்கல்வெட்டில் தான் கையூட்டு(இலஞ்சம்) வாங்குவோருக்கு மரண தண்டனை கொடுக்க கட்டளையிடும் செய்தியும் கிடைக்கிறது)

சென்னை 380 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு உருவாக்கப்பட்டது என கூறுவது வரலாற்றுப் பிழையாகும். சென்னை 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரமாகும். பெண்ணேசவர மடம் கல்வெட்டில் உள்ள குறிப்புகள் மூலம் மதராசப்பட்டினம் (எ) சென்னை 650 வயதை கடந்துள்ளது.

இக்கல்வெட்டில் குறிப்பிடப் பட்டிருக்கும் ஊர்கள் புதுப்பட்டினம், நீலாங்கரை, கோவளம் என்னும் பெயரில் தற்போதும் இருப்பது நீங்கள் அறிந்ததே, அதன் வரிசையில் மதராசன் பட்டினம் என்று குறிப்பிட்டது தற்போதைய சென்னையின் ஒரு பகுதி என்பது புலனாகிறது.

இந்த மாதரசன் யார் என்ற குறிப்பு யாண்டும் சரிவர கிடைக்கப்பெறவில்லை. ஆனால், மாதரசன் பட்டினம் என்ற பெயரில் இவ்வூர் 1300களிலும் அதற்கு முன்பும் அழைக்கப்பட்டதற்கான சான்று இக்கல்வெட்டால் கிடைக்கப்பெருகிறது.

அதற்கு முன்பும், இப்பகுதி ஊர்களான திருமயிலை, திருவான்மியூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில், திருவேற்காடு, திருவலிதாயம்(பாடி), திருவல்லிக்கேணி என்னும் பழைய ஊர்கள் இதே பெயரில் அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் தேவாரம் மற்றும் நாலாயிரப்பனுவல்களால் கிடைக்கின்றன.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்கள் ஈராயிரமாண்டுகள் பழைய ஊர்களே.

இனி, இவ்வூர் சென்னை என்று எப்படி மாறியது என்று பார்ப்போம்.

விசயநகர ஆட்சியின்போது அதன்சார்பில் மாதரசன் பட்டினப்பகுதியை வேலூரைக்கோட்டையைத் தலைமையாகக்கொண்டு ஆண்டவர் வெங்கடபதி நாயக்கர். அவர் 1639ல் சென்னையைச் சுற்றியுள்ள நிலத்தை ஆங்கிலேயர்களான பிரான்சிசு டே மற்றும் ஹென்றி ஹோகன் என்ற இருவருக்கு 16000 வராகன் வாங்கிக்கொண்டு பட்டா எழுதிக் கொடுத்தார். எழும்பூர் ஆற்றுக்கும் கூவம் ஆற்றுக்கும் இடையில் இருந்த நிலம்தான் அவர் பட்டா எழுதிக் கொடுத்த நிலம்.

அப்படி அந்த நிலத்தை ஆங்கிலேயரிடம் கொடுக்கும் போது, தன்னுடைய தந்தையாரின் பெயரான சென்னப்பன் நாயக்கர் எனும் பெயரில் அந்த இடம் அழைக்கப்பட வேண்டும் என்று எழுதிக்  கொடுத்தார்.

வெங்கடபதி நாயக்கரின் தந்தையார் பெயர் சென்னப்பன் நாயக்கர். இந்தச் சென்னப்பன் எனும்  பெயரை வைத்து சென்னப்ப பட்டினம் என்று அந்த இடத்திற்கு பெயர் வந்தது. இந்தச் சென்னப்ப பட்டினம்தான் கடைசியில் சென்னப் பட்டினமாக மாறியது. பிறகு சென்னப்பட்டினம் சென்னையாக மாறியது. அந்தச் சமயத்தில்தான் சென்னைப் பட்டினத்திற்கு வடக்கே மதராச பட்டினம் இருந்தது. ஆங்கிலேயர்கள் புனித சார்ச் கோட்டை கட்டி, வணிக நகரமாக்கி வாழ்ந்தனர்.

வெங்கடபதி நாயக்கர் ஆங்கிலேயர்களுக்கு பட்டா போட்டுக்கொடுத்த நாள் 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி, அதைத்தான் சென்னை உருவாக்கப்பட்டதாக நாளாகக்கருதி, சென்னையின் பிறந்தநாள் "சென்னை நாள்" என்ற பெயரில் கொண்டாடுகிறோம். பார்த்தீர்களாக, நம்மண் விலைபோன நாளைத் தான் விழாவாகக் கொண்டாடுகிறோம். என்னே கொடுமை.
1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் நாள் தமிழக அரசே சென்னை மாநகரம் என்று பெயர் மாற்றம் செய்தது.

இனி இதே பெயர் நிலைக்கும். நாம் மாற்ற முடியாது. இருந்தாலும் நாம் இந்தவரலாற்றையெல்லாம் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

உங்களின் பொன்னாநேரத்தையொதுக்கிப் படித்தமைக்கு நன்றி, வணக்கம்.

**********************************

படங்கள் மற்றும் தகவல் உதவி : பல்வேறு வலைத்தளங்கள் மற்றும் கிருட்டிணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் மற்றும் வரலாறு நூல்.

தொகுப்பு : தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Thursday, February 21, 2019

உலகத்தாய்மொழிநாள்

உலகத்தாய்மொழிநாள் 21.02.1940 வரலாறு:
(உலகத்தமிழ்மொழிநாள்)



உலகத்தாய்மொழிநாள் என்பது வங்கமொழிப்போரில் உயிரிழந்த 5 பேரின்  நினைவாக, வங்காள அரசின் முயற்சியால் ஐக்கிய நாடுகள் அவையின் யுனெசுகோ-வால் 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் நாள் அறிவிக்கப்பட்டு, 2000ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் முதல் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது என்பது இதுவரை இருக்கிற வரலாறு. ஆனால், அதைவிட 60 ஆண்டுகால பழைய உலகத்தாய்மொழிநாள் வரலாறு தமிழர்களுக்குண்டு. அதையறிந்துகொள்வோம்.

1937ஆம் ஆண்டு இந்தி கட்டாயப்பாடமாக்கப்பட்டு இந்திய அரசால் திணிக்கப்பட்டது. அப்போது மூண்டதே முதல் இந்தி திணிப்பு எதிர்ப்புப்போர். நடத்தியவர் ஐயா பெரியார். தாய்மொழி விருப்பப்பாடமாகவும் இந்தி கட்டாயப்பாடமாகவும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல் இந்தி திணிப்புப்போரைத் தொடங்கினார். மறைமலையடிகளாரையும் நாவலர் சோமசுந்தரபாரதியாரையும் தலைமையேற்றச்செய்து, பெரியார் தொண்டராக இருந்து இப்போராட்டத்தை நடத்தினார்.

இதுவே முதல் இனப்போர், மொழிப்போர். தமிழர்கள் தம் இனம்காக்க மொழிகாக்க ஒன்றரையாண்டுகள் நெடும்போராட்டமாக இந்தி திணிப்பு எதிர்ப்புப்போராட்டத்தை நடத்தினர், பலவுயிர்களை பறிகொடுத்தனர். அதில் உயிரிழந்தவர்கள் தான் ஐயா தாளமுத்துவும் நடராசனாரும். 1940 பிப்ரவரி 21ஆம் நாள் இந்தி கட்டாயப்பாடம் என்பது ஒழிக்கப்பட்டது. தமிழர்கள் மொழிபோரில் வெற்றிகண்டனர். அதன்பிறகு, 1947, 1950 சட்டம், மீண்டும் 1965ல் இரண்டாம் இந்தி திணிப்பு எதிர்ப்புப்போர் உருவானது, இது ஒரு நீண்ட வரலாறு. (படித்தறிக)

ஐ.நா அவையால் வங்கமொழிப்போர் நினைவாக உலகத்தாய்மொழிநாள் அறிவிக்கப்படுவதற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தாய்மொழிப்போர் நிகழ்த்தி வெற்றிகண்டு உலகத்தாய்மொழிநாளை உருவாக்கினர். உலகத்து மக்கள் அனைவரும் இத்தாய்மொழிநாளைக் கொண்டாடினாலும், அதற்கு முழு உரிமையுடையவர் தமிழர்களே.

இது மட்டுமின்றி, உலகமொழிகளுக்கெல்லாம் மூத்தமொழியாகவும் தாய்மொழியாகவும் இருப்பது தமிழேயாகையால் இது உலகத்தமிழ்மொழிநாளாகும்.

இந்நாளில் தாய்த்தமிழ்மொழிகாக்க நாம் சில உறுதிகளை பூணவேண்டும்.

தமிழிலேயே பேசவேண்டும்
தமிழிலேயே படிக்கவேண்டும்
தமிழில் பிறமொழி கலப்பைத் தவிர்க்கவேண்டும்
வழிபாட்டுமொழி வழக்காடுமொழி தமிழாகவே இருக்கவேண்டும்.
பிறமொழி தவிர்த்து நற்றமிழிலேயே பெயரிடவேண்டும்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழாகவே இருக்கவேண்டும்.

அனைவருக்கும் உலகத்தாய்மொழிநாள் வாழ்த்துகள்.

நன்றி. வணக்கம்.
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Thursday, February 14, 2019

தனித்தமிழ்த்திருவாட்டி நீலாம்பிகை அம்மையார்

தனித்தமிழ்த்திருவாட்டி நீலாம்பிகை அம்மையார்



செந்தமிழோடு வடமொழியைச்சேர்த்து எழுதிப்பேசிய மணிப்பிரவாளநடை என்னும் இழிநிலை தமிழுக்கு நேர்ந்தகாலத்து, #_தனித்தமிழியக்கம் தோன்றக்கரணியமாகவிருந்த தனித்தமிழ்த்திருவாட்டி நீலாம்பிகை அம்மையார். மறைமலையடிகளாரின் மகளார். தனித்தமிழையும் பெண்ணுரிமையையும் பேசியவர். ௧௯௩௮ ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாட்டுப்பெண்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர்.

அம்மையார் பதின்மூன்றாண்டுடைய சிறுமியாயிருந்தபோது தம் தந்தையாருடன் தம்முடைய தோட்டத்தில் உலாவிவரும்போது, மறைமலையடிகள், வள்ளலாரின் "பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெற்றதாய் மறந்தாலும், உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்" என்னும் பாட்டை பாடிவிட்டு, தம் மகளை நோக்கி, அம்மா, இப்பாடல் நல்ல தனித்தமிழில் உள்ளது. ஆனால், இதில் தேகம் என்னும் வடமொழியை நீக்கி யாக்கை என்னும் தனித்தமிழ்ச்சொல்லை பயன்படுத்தியிருந்தால் மிகவும் இனிமையாக இருந்திருக்கும். இப்படி தமிழில் வடமொழியைக்கலப்பதால் தமிழின் இனிமை கெட்டுவிடுவதோடு காலப்போக்கில் அத்தமிழ்ச்சொற்களும் மறைந்துவிடும் என்று கூறினார். இதைக்கேட்ட அம்மையார், அன்று முதல் தனித்தமிழிலேயே நாம் உரையாடுவோம் என்று தம் தந்தையாரோடு உறுதிபூண்டார். இவ்வரலாற்றை அம்மையாரே தமது "தனித்தமிழ்க்கட்டுரைகள்" என்னும் நூலில் முகவுரையாக எழுதியுள்ளார். அம்மையார் மற்றும் மறைமலையடிகளின் இவ்வுறுதிப்பாடு தனித்தமிழியக்கமாகத் தோன்றி வளர்ந்தது.

தனித்தமிழில் வடசொல் கலந்துவிடக்கூடாதென்பதற்காக வடசொல்லை இனங்கண்டு நீக்கவேண்டி தம் தந்தையாரிடம் வடமொழியைக் கற்றுத்தேர்ந்தவர். பின் அக்காலத்தில் வழக்கிலிருந்த வடமொழிச்சொற்களை நீக்கி அவற்றிற்குத் தனித்தமிழ்ச்சொற்களை பட்டியலிட்டு நூல்களாக வெளியிட்டார். "வடசொற்றமிழ் அகரவரிசை" மற்றும் "வடசொற்றமிழ் அகரவரிசைச்சுருக்கம்" என்பன அவை.

தம் பத்தொன்பதாவது வயதில் தமிழாசிரியரானார்.
தமது தந்தையிடம் தமிழிசைப்பண்களைக் கற்று, தேவாரம், திருவாசகம், திருவருட்பா முதலிய பாடல்களைப்பாடுந்திறம் பெற்றவர். சிவநெறியைப்போற்றிப் பின்பற்றிய அம்மையார்.

* தனித்தமிழ்க்கட்டுரைகள்
* ஆராய்ந்தெடுத்த அறுநூறு
* பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும்
* தமிழ்நாடும் தமிழ் மொழியும் முன்னேறுவது எப்படி?
* முப்பெண்மணிகள் வரலாறு
* பட்டினத்தார் பாராட்டிய மூவர்

என தமிழுக்கு அவர்தந்த நூல்கள் பல.

தனித்தமிழ் வளர்ச்சிக்காகவும், பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றிய நீலாம்பிகை அம்மையார், தம் நாற்பத்திரண்டாம் அகவையிலேயே இறைவனடியையடைந்துவிட்டார். அவர் மறைந்தாலும் அவரின் தனித்தமிழ்த்தொண்டு தமிழ்மொழி உள்ளளவும் போற்றப்படும்.

அம்மையாரின் வரலாறு அடியேன் ஏழாம் வகுப்பில்படிக்கும்போது பாடமாக வைக்கப்பட்டிருந்தது.

நன்றி. வணக்கம்🙏
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Friday, February 1, 2019

தமிழன்னைக்குக் கண்களாய் விளங்கும் நூல்கள்

அன்னைத்தமிழுக்கு இரு கண்களாவன

நற்றொல்காப்பியமும்
நற்றிருக்குறளுமாம்

தமிழன்னையின் தலைமைசான்ற தவப்புதல்வர்கள் தந்தவை.

நன்றி,
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்



இலக்கியத்தில் வேல் என்னும் சொல்

இலக்கியத்தில் வேல்:

சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்
(திருமுருகாற்றுப்படை - 46)

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்;
சினம்மிகு முருகன் தண் பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கதெழு நெடுவரை - (அகநானூறு - 59)

சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமு நீங்கா இறைவன்கை வேலன்றே
பாரிரும் பெளவத்தின் உள்புக்குப் பண்டொருநாள்
சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே. 7

அணிமுகங்க ளோராறும் ஈராறு கையும்
இணையின்றித் தானுடையான் ஏந்திய வேலன்றே
பிணிமுகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம்
மணிவிசும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே. 8

சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மா ரறுவர்
திருமுலைப்பா லுண்டான் திருக்கைவே லன்றே
வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து
குருகு பெயர்க்குன்றம் கொன்ற நெடுவேலே. 9
(சிலம்பு - குன்றக்குரவை)

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
(திருக்குறள் - 772)

நன்றி. வணக்கம்
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்