Monday, June 12, 2023

பிறன்மனை நோக்காப் பேராண்மை

பிறன்மனை நோக்காப் பேராண்மை


பொத்தகம் : சிற்றம்பலக்கோவை

அதிகாரம் : 16.உடன்போக்கு (ஓடிப்போகுதல்)

பா : 51 (244) 

இயற்றியவர் : மணிமொழியார் (மணிவாசகர்)




புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல்


மீண்டா ரெனஉவந் தேன்கண்டு

    நும்மையிம் மேதகவே

பூண்டா ரிருவர்முன் போயின

    ரேபுலி யூரெனைநின்

றாண்டான் அருவரை ஆளியன்

    னானைக்கண் டேனயலே

தூண்டா விளக்கனை யாயென்னை

    யோஅன்னை சொல்லியதே...244


கொளு

புணர்ந்து டன்வரும் புரவலன் ஒருபால்

அணங்கமர் கோதையை ஆராய்ந்தது.


பொருள் : 


தலைவனோடு உடன்போக்கு(ஓடிப்போன) நிகழ்த்திய தலைவியைத்தேடி செவிலித்தாய் செல்கிறாள். அப்போது, முன்பே புணர்ச்சி நிகழ்த்தி வேறொரு காதலனும் காதலியும் எதிரே வருகின்றனர். அவர்களிடம் தம்மகளைப்பற்றி செவிலித்தாய் வினவுவதாக அமைந்துள்ளது இப்பாட்டு. அதன்பொருள் பின்வருமாறு,


"உடன்போக்கு நிகழ்த்திய இணையர் மீண்டுவந்துவிட்டனரென்று உங்களைக்கண்டு உவகையுற்றேன். இவ்வாறு உங்களைப்போலவே உடன்போக்கு ஒழுக்கத்தைப்பூண்ட இருவர் முன்பு இவ்வழியில் போனார்களா சொல்லுங்கள்?" என செவிலித்தாய் கேட்க, அதற்கு, அக்காதலன்  தன்காதலியிடம் சொல்கிறான்,


"அரியமலையில் இருக்கும் ஆளி(சிங்கம்) போன்றவனை யான்கண்டேன். தூண்டத்தேவையற்ற விளக்கைப்போன்ற என்காதலியே, அந்த ஆளியைப்போன்றவனின் அருகில் யாரோ இருந்தாரென்று இச்செவிலித்தாய் சொல்கிறாள். நீ யாரையாவது கண்டாயா? அதை இந்த அன்னைக்குச் சொல்."


************


தன்காதலியைத் தவிர பிறபெண்களை ஏறெடுத்துங் காணாத பிறன்மனை நோக்காப் பேராண்மையாளர்களாக ஒழுக்கநெறியைப் பின்பற்றி இருந்துள்ளனர் என்னும் செய்தி இப்பாட்டால் அறிய முடிகிறது. எதிரில் வந்த இணையரில் ஆணை மட்டும் பார்த்தானாம், அருகிலிருந்த பெண்ணை நீ பார்த்தாயாவென்று தன்காதலியிடம் கேட்கிறான் காதலன்.


(கொஞ்சம் ஓவர் உருட்டா இருக்கோ) 🤣🤣🤣

Monday, June 6, 2022

தமிழர்களின் அறப்பண்பு

தமிழர்களின் அறப்பண்பு ❤️❤️❤️

நற்றிணை கஎஉ (172)

விளையா டாயமொடு வெண்மண லழுத்தி
மறந்தனந் துறந்த காழ்முளை யகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினுஞ் சிறந்தது நுவ்வை யாகுமென்
றன்னை கூறினள் புன்னையது சிறப்பே
யம்ம நாணுது நும்மொடு நகையே
விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலு மிலங்குநீர்த்
துறைகெழு கொண்கநீ நல்கி
னிறைபடு நீழல் பிறவுமா ருளவே.



உரை:-

புதியராய்வந்த பாணர் பாடுகின்ற இளையதாய (மெல்லிய) இசைப்பாட்டுப்போல வெளிய வலம்புரிச்சங்கு ஒலியாநிற்கும் விளங்கிய நீரையுடைய துறைபொருந்திய நெய்தனிலத்தலைவனே, யாம் எம்மொடு விளையாடுகின்ற தோழியரோடுசென்று ஒருநாள் வெள்ளிய மணலிலூன்றினேமாகி மறந்தொழிந்த புன்னைவிதையானது வேரூன்றி முளைத்து முளை தோன்றுதலானே மீண்டும் அதனைநோக்கி மகிழ்ந்து நெய்கலந்த இனியபாலை நீராகவார்த்து இனிமையொடு வளர்க்குநாளில் எமது அன்னை எம்மைநோக்கி 'நீயிர் வளர்த்துவரும் புன்னையானது நும்மினுஞ் சிறந்ததன்றோ, அது நும்முடன்பிறந்த தங்கையாந் தகுதியையுடையது கண்டீர்' என்று இதன் சிறப்பினை விளங்கவுரைத்தனள்; ஆதலின் எமது தங்கையாகிய இப்புன்னையினெதிரில் நும்மொடு நகைத்து விளையாடி மகிழ்வதற்கு யாம் வெட்கமடையாநின்றோம்; அம்மையோ? இவளை அணைந்து நல்குவையோ? நல்குவை யாயின் நிறைந்த மரத்தினிழல் பிறவு மீங்குள்ளன காண்; அவ்வயிற் செல்லுதல் நல்லதொன்றாகும்.

எளிய_உரை (பாடலின் அறக்கருத்து)

நெய்தல் நிலத்தில் தலைவன், தலைவியின் இல்லத்திற்கருகில் ஓர் புன்னைமரத்திடை சந்திக்கின்றனர். அதற்கு, தலைவி தலைவனிடத்தில் சொல்கிறாள், "இனிமேல் இப்புன்னை மரத்தின் அருகில் சந்திக்கவேண்டாம். நான் சிறுவயதில் இந்தப்புன்னை மரத்தை நட்டு, இனிய பாலை ஊற்றி வளர்த்தோம். அப்போது என் அன்னை இப்புன்னை மரத்தை என்னுடைய தங்கையாக எண்ணவேண்டுமென்று புன்னையின் சிறப்பைக் கூறினாள். அப்படி தங்கைபோன்ற புன்னை மரத்தின் அருகில் நாம் மகிழ்ந்து பேசுவது எனக்கு வெட்கமாக இருக்கிறது. தங்கையின் முன்பு காதலர்களாகிய நாம் பேசிக்கொள்வது முறையன்று. அதனால், வேறு மரத்தின் நிழலில் சந்திக்கலாம்". என்று கூறுகிறாள்.

என்னே வியத்தகு தமிழர் அறம். ஒரு பேச்சிற்கு மரத்தை தங்கையென்று எண்ணியதை மதித்து, அதனருகில் மகிழ்ந்து பேசுவதை தவிர்த்த பண்பு வியக்கத்தக்கதே.

நன்றி. வணக்கம்.
தனித்தமிழாளன் நெடுஞ்சேரலாத கரிகாற்பெருவள நெடுஞ்செழியன்

Wednesday, May 25, 2022

கவரி வீசிய காவலன் தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

கவரி வீசிய காவலன் - புறநானூறு 50

பாடியவர் : மோசிகீரனார்.
பாடப்பட்டோன் : சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.
திணை : பாடாண்.
துறை : இயன் மொழி.
குறிப்பு : அறியாது முரசுகட்டிலில் ஏறியவரைத் ஒறுத்தல் செய்யாது துயில் எழுந்துணையும் கவரிகொண்டு வீசினன் சேரமான்; அதுகுறித்து புலவர் பாடிய செய்யுள் இது.

மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்,
பொலங்குழை உழிஞையடு, பொலியச் சூட்டிக்,

குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,

இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நற் றமிழ்முழுது அறிதல்;
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித், தண்ணென

வீசி யோயே; வியலிடம் கமழ,
இவன்இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்:
வலம்படு குருசில்! நீ ஈங்குஇது செயலே?




விளக்கம் :

 
முகத்தின் தோல் சுருக்கம் இல்லாமல் தோல்வாரால் கட்டப்பட்டது. மருங்குல் என்னும் அதன் அடிப்பகுதியை மயில்தோகை அழகுபடுத்தியது. (போர்முரசு என்பதைக் காட்டும் அடையாளமாக) பொன்னாலான உழிஞைப்பூவும் அதனை அழகுபடுத்தியது.

குருதியில் குளிப்பதற்காக அது வெளியே சென்றிருந்தது. முரசுக்கட்டில் முரசு திரும்புமுன் முரசுக்கட்டில் வெறுமனே இருந்தது. எண்ணெய் நுரைபோல் அதில் மெத்தை இருந்தது. அது முரசுக்கட்டில் என அறியாமல் புலவர் அதன்மேல் உறங்கிவிட்டார்.

முரசுடன் திரும்பிய அரசன் புலவருக்குக் கவரி வீசினான். புலவர் சொல்கிறார் அறியாது கட்டிலேறிய என்னை இரு துண்டாக ஆக்குவதை விட்டதே நல்ல தமிழ்நெறி அறிந்த செயல். அதுவே போதுமானது.

அதனோடு நிறைவடையாமல், பக்கத்திலே வந்து, வலிமைமிக்க உன் தோள்களால் அகன்ற இடமெல்லாம் குளிர்ந்த காற்று வரும்படி, கவரி வீசினாயே! இந்த உலகத்தில் புகழ் உடையோருக்குத்தான் மேலுலகத்தில் வாழும் பேறு கிடைக்கும் என்பார்கள். அதற்கு மாறாக, (குற்றம் செய்த எனக்ககே இந்த உலகத்தில்) மேலுலக வாழ்வு தந்த செயலை என்னென்பேன்?

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

நன்றி. வணக்கம்

Wednesday, April 20, 2022

சோழன் நலங்கிள்ளியின் மறத்தையெண்ணி வடநாட்டார் தூங்கார்

வடநாட்டார் தூங்கார் - புறநானூறு 31


பாடியவர் : கோவூர்கிழார்.

பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.

திணை : வாகை.

துறை : அரசவாகை: மழபுல வஞ்சியுமாம்.

சிறப்பு : வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பைக்கேட்டு அஞ்சிய அச்சத்தால் துஞ்சாக்கண்ணர் ஆயினமை.






சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,

இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை

உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,

நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப்

பாசறை யல்லது நீயல் லாயே;

நிதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்

கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே;

‘போர்’ எனில் புகலும் புனைகழல் மறவர்,

‘காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய;

செல்வேம் அல்லேம்’ என்னார்; ‘கல்லென்

விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்,

குண கடல் பின்ன தாகக், குட கடல்

வெண் தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப,

வலமுறை வருதலும் உண்டு’ என்று அலமந்து

நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்,

துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே.


#_விளக்கம் :

அறத்தைப் பின்தொடர்ந்து பொருளும் இன்பமும் வருவது போல, உன் குடையைப் பின்தொடர்ந்து சேரர், பாண்டியர் குடைகள் வருகின்றன. இதனால் தமிழகமே ஒன்றுபட்டுள்ளது. நீ புகழ் வேட்டைக்குப் புறப்பட்டுவிட்டாய். பாசறையில் உள்ளாய். கூர் மழுங்கிய கொம்புகளுடன் போருக்குத் துடிக்கும் உன் களிறு அடங்க மறுக்கிறது. போரை விரும்பும் உன் வீரக்கழல் மறவர் தொலைதூரம் செல்ல விரும்புகின்றனர். கீழைக்கடல் அரசனாகிய நீ தென்கடல் பாண்டியனையும் மேலைக்கடல் சேரனையும் அழைத்துக்கொண்டு வலம் வருவாயோ என்று வடபுலத்து அரசர்கள் நெஞ்சம் நடுங்கித் தூங்காமல் கிடக்கின்றனர்.


நன்றி. வணக்கம் 🙏

Tuesday, January 18, 2022

களிற்றுமேலோன் கடுஞ்சினவேலோன்

களிற்றுமேலோன் கடுஞ்சினவேலோன்


"கடுஞ்சின வாள்வேள் களிறு ஊர்ந்தாங்கு"
( - பதிற்றுப்பத்து 11.6)

"சேயுயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி"
( - பரிபாடல் 5.2)

"கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு"
( - திருமுருகாற்றுப்படை 82)

"ஓடாப் பூட்கை பிணிமுகம் வாழ்த்தி"
( - திருமுருகாற்றுப்படை 247)

நெடுஞ்சேரலாத கரிகாற்பெருவள நெடுஞ்செழியன்








 

Thursday, April 22, 2021

சிந்துவில் சிவவழிபாடு - நீறுபூசிய முகம்

 சிந்து எழுத்தில் 

      திருநீறு  பூசிய முகம் .


     சிவனிய வழிபாட்டின் 

   5000 - ஆண்டுகள்  தொன்மை . 






    வாழ்வின் எதார்த்தம் சில போது நமக்கு நம்ப முடியாத வியப்பைத் தரும் . அப்படி ஒரு வியப்பளிக்கும் தருணம்  என்னை எதிர் கொண்டது . என் குடும்பம் பகுத்தறிவுப் பாதையில் முற்போக்கானஇடதுசாரிச் சிந்தனையுள்ளவர்களைக் கொண்டது . எனக்கு நினைவு தெரிந்து என் வீட்டில் இறை வழிபாடு செய்ததே இல்லை . அப்பா பொதுவுடைமைச் சிந்தனையும் , இறை மறுப்புக் கொள்கையும் கொண்டவர் . அப்போதே மாதத்திற்கு நூற்றுக் கணக்கான உரூபாய் செலவு செய்து பல்துறை நூல்களும் , அரசியல் இலக்கியங்களும் ,  எளிமையான தொல்லியல் , இலக்கிய நூல்களும் எங்களுக்கு வாங்கித் தருவார் . வழிபாடு இறைவணக்கம் தொடர்பான நூல்கள் வாங்கியதே இல்லை .


      சினிமா நடிகர்கள் , இறைவுருவப் படங்கள் எங்கள் வீட்டில் மாட்டக் கூடாது என்பது எங்கள் வீட்டின் எழுதப்படாத சட்டம் . கல்லூரியில் சேரும்வரை  வீரபாண்டியக் கட்டபொம்மன் ,  கப்பலோட்டியத் தமிழன் , சிவகங்கைச் சீமை என்று கைவிட்டு எண்ணக்கூடிய சில திரைப்படங்களே பார்த்துள்ளேன் . ஆனால் தமிழ்நாட்டின் தலையாய எழுத்தாளர்கள் அனைவரது நூல்களையும் வாங்கித் தருவார் . என் திருமணத்திற்குப் பிறகு  எனது மனைவியும் சகோதரர்கள்  இருவரது மனைவியரென்று   எங்கள்  வீட்டு மருமகள்களே எங்கள் வீட்டுக்கு இறைவழிபாட்டைக் கொண்டு வந்தார்கள் . என் மனைவி நான் அவர்  சாமி கும்பிடுவதைத் தடை செய்துவிட்டதாகவும் , தனக்கு அதில் விருப்பம் என்று என் தந்தையிடம் முறையிட்டபோது என்னை அழைத்து " நம் போன்ற நாத்திகர்களே பிறரது கருத்துகளுக்கு மதிப்பளிப்பவர்கள் . இது அவள் உரிமையில் தலையிடுவதாகும் . உன் தனிப்பட்ட கருத்துரிமை போல அவளுக்கும் அவளது கருத்துகளைக் கடைப்பிடிக்க உரிமையுண்டு "  என்று சொல்லி என்னிடம் அவள் உரிமையைப் பெற்றுக் கொடுத்தார் . 


      இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் எனது சிந்து நாகரிக எழுத்தாய்வில்  தமிழ்ச் சிந்து மக்கள் முற்ற முழுக்கத்  தங்கள் வழிபாடு சார்ந்தே முத்திரைகள் வெளியிட்டுள்ளார்கள் என்றறிந்த போது  என மனையாளுக்கு நான் கொடுத்த அதே உரிமையைச் சிந்து மக்களின் வழிபாட்டுரிமையை எத்தடையுமின்றி வெளிப்படுத்தி அவர்களுக்கும் தந்து இந்த  உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற உறுதியேற்றேன் . என் குடும்பச் சூழலறிந்த நண்பர்களுக்கு வியப்பு . என் கருத்துப்போலச் செய்திகளை  எத்தயக்கமும் இன்றி நான் எழுதுவதாகக் கூறுகின்றனர் .   மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனர் .


      இப்போது நான் படித்துக் காட்டப்போகும் முத்திரையும் அப்படி வியப்புக்குரியதுதான் . சிந்து எழுத்தில் படவுருக்கள்  லோகோகிராபிக் சொல் வடிவங்களாக உள்ளன என்பதும் நாமறிவோம் . அவை  ஒலிநிலை வடிவங்களுக்குத் துணையாக இயங்குகின்றன .  இந்த முத்திரையும்  அத்தகைய  மூன்று  படவுருக்களை -  சொல்லசையன்   வடிவங்களை மட்டுமே  கொண்டு எழுதப்பட்டுள்ளது .  மூன்று வடிவங்களையும் நீங்கள் எளிதாக அடையாளம் கண்டு பொருளுணரலாம் . வலமிருந்து முதல் வடிவம் தேள் வடிவமும் ,  அதனோடு இணைந்த இரண்டு அசைகளுடன் ண்(ன்) - அ இணைந்து தேளண்அ =  தேளன -  தேள் அன்ன  என்னும்  சொல்லசையனாக -  Logosyllabic -  சொல் வடிவமாகவும் ,  இரண்டாவது முக ( முகம் ) என்னும் சொல்வடிவமாகவும் ,  மூன்றாவது வடிவம் வாவல் ( வௌவால் ) என்னும் சொல் வடிவமாகவும்  இணைந்து               =  தேளன்ன  முக  வாவன்  .  என்று எழுதப் பட்டுள்ளது .


      இது  மறைபொருட் குறியீட்டு முத்திரை . இதன் பொருள்  தேள்  ஓரையின் முகம் போன்ற முகம் கொண்ட  வாவன்  = தாண்டவன் என்று பொருள் . வாவல் என்ற சொல்லுக்கு  தாண்டுதல் ,  கூத்து என்று பொருளுண்டு . தாண்டி அல்லது குதித்துக் குதித்து சிவன் ஆடும் நடனமே  தாண்டவம் .  இதனை ஊர்த்துவ தாண்டவம் என்பர் . காலை உயயரத் தூக்கி ஆடுவது .  விருச்சிகம் செவ்வாயை அதிபதியாகக் கொண்டது .  இது  முருகனின் விண்மீன் . எனவே     இவை சிவ  -  முருக  வழிபாட்டுடன் தொடர்புடையவையாகும் .  விருச்சிகன் என்று சூரியனும் பிற்காலத்தில் அழைக்கப்பட்டான் . சிந்து மக்கள் தேளையும் வழிபட்டனர் .  தேளன் ,  தேளண்ண என்னும் சொற்கள் பேரளவில் காணப்படுவதோடு ,  தேளின் படமுள்ள முத்திரைகளும் மிகுதியாக உள்ளன .  


      முக வடிவைப் பாருங்கள் . முகம் என்பது  நெற்றி , மூக்கு ஆகியவை இணைந்த  படவுருவாக எழுதப்படுகிறது .  இம்முத்திரை  சிவனியம்  சார்ந்தது என்று  எளிதாகத் தெரிகிறது .  முகத்தை வரைந்த  எழுத்துக் கலைஞன்  முகத்தின் நெற்றியில்  மூன்று  கோடுகளை இட்டுள்ளான் . இது திருநீறு பூசிய நெற்றி என்றே கருத  வேண்டியுள்ளது . 


   மொக 1226 :   வாவ  -  முக  -  தேளண 

       =   தேளன்ன  முக வாவன் . 


தேள் போன்ற முகத்தோற்றமுடைய  வாவன் ஆகிய  சிவன்  என்பது பொருள் .  


      இம்முத்திரை வடிவம் நெற்றியில் முக்கோடாகத் திருநீறு  இட்டுள்ளது என்பது தெளிவு .  உள்ள இரண்டொரு  முகப்  படவுருவனிலும்  ஒன்றிரண்டில் மட்டுமே  திருநீறு  பூசிய நெற்றியுள்ளது .  சிந்து எழுத்தில்  ஒரு சிறு  கோடு  மாறுவதுகூட  பொருள் மாற்றம் தரும் . வாவன் என்பவர் சிவன் என்று குறிக்கவே  இத்திருநீறு  பூசிய  நெற்றியை  அம்மக்கள் பதிவிட்டுள்ளனர்  என்பதே உண்மை .  எனவே  நெற்றியில்   திருநீறு  இடும் வழக்கம்  சிந்துவெளி நாகரிகக் காலத்துக்கும் முன்பிருந்தே வழக்கில் உள்ளதென உறுதிபடக் கூறலாம் . குறைந்தது இக்காலம்  5000  ஆண்டுகள் என்று உறுதிபடக் கூறலாம் . சிவனியம்  இந்தியாவின் மிகத் தொன்மையான  சமயமென்று  உறுதிபடுகிறது  .  தமிழர்கள்  திருநீறு  இடும்  இவ்வழக்கத்தைப் பழங்காலம் தொட்டே கடைப்பிடித்து வருகின்றனர் .

Friday, April 9, 2021

வேத எதிர்ப்பே சித்தர் மரபு

 சித்தர்மரபு என்னும் வேத எதிர்ப்பு மரபு ❤️


சதுர்வேதம் ஆறுவகைச் சாத்திரம் பல

தந்திரம் புராணங்கலை சாற்றும் ஆகமம்

விதம் வித மானவனான வேறு நூல்களும்

வீணான நூல்களை என்று ஆடு பாம்பே.


                                     - (பாம்பாட்டிச் சித்தர்)


பொய் வேதம் தன்னைப் பாராதே - அந்தப்

போதகர் சொற்புத்தி போத வாராதே


                                      - (கடுவெளிச் சித்தர்)


பார்ப்பனர்கள் கட்டிய பாழான வேதத்தைச்

சோதித்துத் தள்ளடி - குதம்பாய்

சோதித்துத் தள்ளடி            


                                      - (குதம்பைச் சித்தர்)


நேமங்கள் நிட்டைகள் 'வேதங்கள்' ஆகம நீதிநெறி ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செபமந்திர யோக நிலை நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே

சாமங்கள் தோறும் இவர்செய்யும் பூசைகள் சர்ப்பனையே


                                     - (பட்டினத்தார்)


சாத்திரத்தைச் சுட்டு சதுர்மறையப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்


                                      - (பத்திரகிரியார்)