Friday, March 8, 2019

மகளிர் ஆடவர் அகவையும் பருவங்களும்

மகளிர் ஆடவர் அகவையும் பருவங்களும்:




மகளிருக்கும் ஆடவருக்கும் முறையே ஏழேழ் பருவங்களென்றும் இன்னின்ன அகவையோர் இன்னின்ன பருவத்தோரென்று பலரும் அறிந்ததே. ஆயினும் இவ்வகவைகளும் பருவங்களும் பகுத்து இலக்கணங்கூறியது எந்நூலென்றும் யாரென்றும் அறிந்திலோம் நாம். ஆகையினாலே, நென்னலை(நேற்று) யான் இஃதைத்தேடி இணையத்திலுலாவி அறியப்பெற்றேன். அஃதை, முகநூல் நண்பர்கள் நுங்கட்கு அறிவிக்கும்பொருட்டே இப்பதிவை இடுகிறேன். விருப்புளோர் படித்தறிக, வெறுப்புளோர் விடுத்தொழிக.

பன்னிருபாட்டியலும்_திருக்கைலாயஞானவுலாவும்:


திருக்கைலாயஞானவுலா:


திருக்கைலாயஞானவுலா என்பது, சிவநெறியில் (சைவசமயம்) இருக்கும் பன்னிருதிருமுறைநூல்களில் பதினொன்றாம் திருமுறையுள் சேரமான் பெருமாள் என்ற மாக்கோதை நாட்டையாண்ட சேரமன்னர் பாடிய நூல். இவ்வேழ்பருவப்பெண்களை மட்டும் குறிப்பிடுகிறார். அகவைகளை விளக்கவில்லை. இவரின் காலம் 8ஆம் நூற்றாண்டு. தமிழில் எழுந்த முதல் உலாநூலான இஃதை ஆதிவுலாவென்றும் அழைப்பர். இவரின் கதையையும் நூலைப்பற்றியும் திருடத்தொண்டர்மாக்கதை (பெரியபுராணம்) பேசுகிறது. (இங்கு அப்பாக்களை பதிவிடவில்லை).

பன்னிருபாட்டியல்: இனவியல்:


பன்னிருபாட்டியல் என்பது செய்யுளிலக்கணத்தை விளக்கும் ஒருநூல். இஃது 15 புலவர்களால் பாடிய பாக்கள் பின்னோரொருவரால் தொகுக்கப்பட்ட தொகைநூலாகையால் இன்ன பாவை இன்னார் பாடினாரென்று துணிதற்கில்லை. இருப்பினும், பெண்பாற்பருவங்களை பொய்கையார் என்ற புலவரும் ஆண்பாற்பருவங்களை அவிநயனார் என்ற புலவரும் பாடியதாகக்குறிக்கப்பட்டுள்ளது. இந்நூலின் பாக்களின் காலத்தையும் தொகுத்த காலத்தையும் அறுதியிட்டுக்கூறவியலவில்லை.

நூற்பாக்கள்:


பெண்பாற்பருவங்களும் அகவையும்:


ஏழு நிலையு மியம்புங் காலைப்
பேதை பெதும்பை மங்கை மடந்தை
யரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காத
னோக்கி யுரைப்பது நுண்ணியோர் கடனே. 220

பேதைக் கியாண்டே யைந்துமுத லெட்டே. 221

பெதும்பைக் கியாண்டே யொன்பதும் பத்தும். 222

மங்கைக் கியாண்டே பதினொன்று முதலாத்
திரண்ட பதினா லளவுஞ் சாற்றும். 223

மடந்தைக் கியாண்டே பதினைந்து முதலாத்
திடம்படு மொன்பதிற் றிரட்டி செப்பும். 224

அரிவைக் கியாண்டே யறுநான் கென்ப. 225

தெரிவைக் கியாண்டே யிருபத்தொன்பது. 226

ஈரைந் திருநான் கிரட்டி கொண்டது
பேரிளம் பெண்டுக் கியல்பென மொழிப. 227

                                                    - பொய்கையார்.

ஆண்பாற்பருவங்களும் அகவையும்:


காட்டிய முறையே நாட்டிய வாண்பாற்
கெல்லையும் பெயரு மியல்புற வாய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரு முளரே. 228

பாலன் யாண்டே யேழென மொழிப. 229

மீளி யாண்டே பத்தியை காறும். 230

மறவோன் யாண்டே பதினான் காகும். 231

திறலோன் யாண்டே பதினைந் தாகும். 232

பதினா றெல்லை காளைக் கியாண்டே. 233

அத்திற மிறந்த முப்பதின் காறும்
விடலைக் காகு மிகினே முதுமகன். 234
                 
நீடிய நாற்பத் தெட்டி னளவு
மாடவர்க் குலாப்புற முரித்தென மொழிப. 235
                         
                                             - அவிநயனார்.

இவ்விருநூற்களை விடுத்து, ஆடவர் மகளிர் அகவைகளைப்பகுத்து பருவங்களைக்கூறும் வேறுநூல்களிருப்பின் அறிந்தோர் விளக்கிப்பதிவிட வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். பதிவில் குற்றங்குறைகளிருப்பின் அடியேனை திருத்தவேண்டுகிறேன். நன்றி. வணக்கம் 🙏

உதவி :
பன்னிருபாட்டியல் நூல்,
திருக்கைலாயஞானவுலா நூல்
மற்றும் வலைத்தளங்கள்.
தொகுப்பு : தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment