Monday, September 23, 2019

சங்கவிலக்கியத்தில் ஆதன் : 


அண்மையில் கீழடி அகழ்வாய்வின் பானையோடுகளில் எழுதிய பெயர்களில் ஆதன் என்பதும் ஒன்று. இப்பெயர் தமிழவை நூல்களில் பலவிடங்களிலுண்டு. பெரும்பாலும் சேரமரபினரின் பெயர்களே ஆதன் என்றுள்ளன. ஆனால், பாண்டி நாட்டில் கிடைத்த தொல்சான்றில் சேரப்பெயரான ஆதனெனும் பெயர் நம்முள் பலவினாக்களைத் தொடுக்கிறது. எது எவ்வாறோ இருக்கட்டும். இப்பெயர், சங்கநூல்களில் யாங்கெல்லாம் குறிப்பிட்டப்பட்டுள்ளது என்பதை எடுத்தியம்பும் சிறுபதிவே இது. அடியனுக்குக் கிடைத்த சிலசான்றுகளை உமக்கும் அறிவிக்கிறேன்.



ஆதன் பெயர்க்காரணம் : 


மூச்சுக்காற்றில் உள்ளிழுக்கும் காற்று, வெளிவிடும் காற்று என்று இரண்டு வகையுண்டு. உள்ளிழுக்கும் காற்றிலுள்ள உயிர்வளி உடலில் ஊறிய சத்தை எரிக்க உதவுகிறது. உதவும் காற்று நமக்கு ஆகும் காற்று. ஆகும் காற்று ஆதல் காற்று. ஆதல் காற்றை ஆதன் என்பது தமிழ். ஆதன் என்பது உயிர்வளி. உயிர் என்றும் பொருளாகும்.

வெளிவிடும் காற்று அவிந்த காற்று. எரிந்தது அவிந்தால் கரி. அதனால் வெளிவிடும் காற்றைக் கரி+அமில வாயு என்பர். தமிழ் அவிந்த காற்றை அவினி என்று குறிப்பிடுகிறது.

ஆதன், அவினி என்னும் பெயர்கள் இவ்வாறு தோன்றின. இவற்றை மக்களும் தமக்குப் பெயராக்கிக்கொண்டனர்.

ஆதன் பெயர்கள் :


1. சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் - புறம் 2

2. சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் - புறம் 8

3. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் - புறம் 62

4. பெருஞ்சேரலாதன் - புறம் 65

5. ஆதன் அழிசி - ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியனின் 5 நன்பர்களுள் ஒருவன் - புறம் 71

6. ஆதன் - ஓரியின் தந்தை - புறம் 153

7. நெடுவேள் ஆதன் - போந்தைப்பட்டினம் என்னும் குறுநில மன்னன் - புறம் 338

8. நல்லியாதன் - ஓய்மான் நல்லியக்கோடன் - புறம் 376

9. ஓய்மான்வில்லியாதன் - இலங்கையரசன் - புறம் 379

10. ஆதனுங்கன் - வேங்கடநாட்டு அரசன் - புறம் 389

11. ஆதன் - வாட்டாற்று எழினியின் மகன் - புறம் 396

12. ஆடுகோட்பாட்டச்சேரலாதன்

13. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

14. முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன்

15. ஆதனூர் - "மேற்காநாட்டு ஆதனூர்" - திருட்தொண்டர் மாக்கதை.

*******************

நன்றி. வணக்கம்.

பதிவிற்கு உதவிய நூல்கள் :
1. புறநானூறு நூல்
2. செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி
3. சங்ககாலவரசர் வரிசை நூல்
4. பெரியபுராணம்.

தொகுப்பு  : தனித்தமிழாளன்

Wednesday, September 18, 2019

உதயசூரியன் சின்னத்தை உருவாக்கிய இரட்டைமலையார்

உதயசூரியன் சின்னத்தை உருவாக்கிவர் தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் : 

தற்காலத்தமிழ்த்தேசியர்க்கு திராவிட அடிமை.

உதயசூரியன் சின்னம் யார் சிந்தனையில் முதன் முதலில் உதயமானது என்று தேடிப்போனால் கண்டடையும் முகம் இரட்டைமலை சீனிவாசனார்.



1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த முதலாவது சுயமரியாதை இயக்க மாநாட்டுக்காக ஒரு கொடி தயார் செய்யப்பட்டது. தியாகராயர், டி.எம்.நாயர், பனகல் அரசர், பெரியார் உருவம் தாங்கிய அந்தக் கொடியில் சூரியன் உதிப்பதுபோல இருக்கும். ஆனால், இரண்டு மலைகளில் இருந்து உதயம் ஆவதைப் போன்ற சின்னம் ரெட்டைமலை இயக்கத்தைச் சார்ந்தவர்கள் உருவாக்கியதாக அமைந்திருந்தது.

‘சென்னை மாகாண செட்யூல்டு வகுப்பினர் ஃபெடரேஷன்’ என்ற அமைப்பை 1936-ல் இவர் தொடங்கியபோது அந்த அமைப்புக்கு சூரியன்தான் சின்னமாக அமைந்து இருக்கிறது. சூரியனைவைத்து கொடி தயாரித்துள்ளார். மாநாடுகளில் அந்தக் கொடியையே ஏற்றியுள்ளார். அதனால், அந்தக் கட்சிக்கு ‘சூரியக் கட்சி’ என்ற பெயரும் இருந்து உள்ளது.

சுவர் விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள், இரண்டு மலைகளுக்கு நடுவே சூரியன் உதயமாவதைப்போல. ரெட்டைமலை சீனிவாசனின் பெயரில் இருந்த இரட்டை மலைகளை வரைந்து அதில் இருந்து சூரியன் உதயமாவதைப்போல அந்தக் காலத்தில் வடிவம் கொடுத்துள்ளார்கள். இந்த அமைப்புக்காக குடியாத்தம் பகுதியில் இருந்து எஸ்.பி.பாலசுந்தரமும், ஜெ.ஜெ.தாசும் இணைந்து 1941-ல் ஓர் இதழ் தொடங்கினார்கள். இந்த இதழின் பெயர் ‘உதயசூரியன்.’

“உதயசூரியன் இதழில்தான் இரண்டு மலைகளுக்கு நடுவில் உதயசூரியன் இருப்பது போன்ற சின்னம் வரையப்பட்டது’’ என்கிறார் ரெட்டைமலை சீனிவாசனின் பேத்தி முனைவர் நிர்மலா அருட்பிரகாசு.

ரெட்டைமலை சீனிவாசன் மனதில் உதயசூரியன் எப்படி உதித்தது? இளம் பருவத்தில் இருந்தே தினமும் சூரியனை வணங்கும் பழக்கத்தை விடாமல் கடைப்பிடித்தவர் அவர். அது அவரது இறை நம்பிக்கை.

பட்டியல் இனத்து மக்களுக்கு ‘ஹரிஜன்’ என்று புதுப் பெயர் வைத்து கோயிலுக்குள் அழைத்துச் செல்லும் ஆலய நுழைவுப் போராட்டத்தை காந்தியின் நிர்மாணத் திட்டங்களின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்தபோது, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் அதனை எதிர்த்தார் ரெட்டைமலை சீனிவாசன்.

‘‘ஒரு காலத்தில் இந்தக் கோயில்கள் எல்லாம் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தவை. அதில் இருந்து எங்களை விரட்டிவிட்டு கைப்பற்றிக்கொண்டீர்கள். எங்களுக்குச் சொந்தமான கோயில்களைத் திரும்பக் கேட்காமல் அதனுள் நுழைய மட்டும் அனுமதி கேட்பது என்ன நியாயம்?’’ என்று கேட்டார் ரெட்டைமலை சீனிவாசன். ‘‘ஆலயத்துக்குள் அனுமதித்தால் மட்டும் சாதி இழிவு போய்விடாது” என்றும் சொன்னார்.

சாதிக் கொடுமையில் இருந்தும், தீண்டாமைத் தீ வினையில் இருந்தும் விடுபட வேண்டுமானால், இந்து மதத்தில் இருந்து மாற்று மதத்துக்கு மாற வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னபோது, காந்தி உள்ளிட்ட பலரும் எதிர்த்தார்கள். அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் ரெட்டைமலை சீனிவாசனும் எதிர்த்தார்.

‘‘நாம்தான் இந்து மதத்தில் இல்லையே. அவர்ணஸ்தர் அதாவது, வருணம் அற்றவர் ஆயிற்றே! இந்துக்களே அல்லாத நாம் இந்து மதத்தில் இருந்து எப்படி விலக முடியும்?’’ என்று கேட்ட இவர், ‘‘ஆதி திராவிடர் மதம் மாறுவது தேவையற்றது. எந்த மதத்துக்கு மாறினாலும் இழிவுபோகாது’’ என்று சொன்னார்.

இளமைக்காலம் முதல், தான் அனுபவித்த தீண்டாமைக் கொடுமையே அவரை இப்படி யோசிக்க வைத்தது. இந்தச் சமூக அழுக்கைத் துடைப்பதற்காகவே 1890-ம் ஆண்டு திராவிட மகாசன சபையை பண்டித அயோத்திதாசருடன் இணைந்து தொடங்கினார். பிறகு தனது அமைப்பின் பெயரை, ‘ஆதிதிராவிட மகாசன சபை’ என மாற்றினார். ‘பறையன்’ என்ற இதழைத் தொடங்கினார். ‘‘எந்த வார்த்தையைச் சொல்லி இழிவுபடுத்துகிறார்களோ, அதையே ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்’’ என்றார்.

1894-ல் இவர் அனுப்பிய விரிவான மனுதான், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மிகமோசமான சாதி, தீண்டாமைக் கட்டமைப்பு தலைவிரித்து ஆடுகிறது என்பதை பிரிட்டிஷ் அரசுக்கு உணர்த்தியது. இதன்பிறகு உருவாக்கப்பட்டதே தொழிலாளர் நல ஆணையம். இதுதான் பட்டியல் இன மக்களுக்குக் கல்வி நிலையங்கள், குடியிருப்புகள், மனைகள், விவசாய நிலங்கள் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்க வழி வகுத்தது.

இந்தக் கோரிக்கைகளை நேரடியாக பிரிட்டிஷாரிடம் சொல்வதற்காக லண்டன் பயணமானார். லண்டன் செல்வதற்கு முன் தென்னாப்பிரிக்கா போனார். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அங்கேயே தங்கிவிட்டார். அங்கு காந்திக்கும் இவருக்கும் நட்பு ஏற்பட்டது. அனைவரும் பார்த்து இருப்பீர்கள், எம்.கே.காந்தி என்று தமிழில் காந்தி போட்ட கையெழுத்தை. அதைக் கற்றுக்கொடுத்தவர் இந்த ரெட்டைமலை சீனிவாசன்தான். 20 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு மீண்டும் வந்தவர், முன்னிலும் உற்சாகமாகப் போராடத் தொடங்கினார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டமேஜை மாநாட்டில் பங்கெடுத்தவர் ரெட்டைமலை சீனிவாசன். ஜார்ஜ் மன்னரையும் ராணியையும் வின்சர் கேஸல் மாளிகையில் ரெட்டைமலை சீனிவாசன் சந்தித்தார். மன்னர் கைகொடுத்தார். சீனிவாசன் கை கொடுக்கவில்லை. ‘‘என்னைத் தொட்டால் உங்களுக்கு தீட்டுப் பட்டுவிடும்’’ என்றார் இவர். ‘‘அப்படியா... தீண்டாமை என்றால் என்ன?’’ என்று ஜார்ஜ் மன்னர் கேட்டார். ‘‘எங்கள் நாட்டில் மேல்சாதிக்காரன், கீழ்சாதிக்காரனை தொடமாட்டான். தொட்டால் தீட்டாகிவிடும்’’ என்றார்.

 ‘‘அப்படியானால் கீழ்சாதிக்காரன் தெருவில் விழுந்தால் மேல்சாதிக்காரன் தொட்டுத் தூக்கமாட்டானா?’’ என்று ஜார்ஜ் மன்னர் திருப்பிக் கேட்டார். ‘‘தூக்க மாட்டான்’’ என்றார் ரெட்டைமலை சீனிவாசன். ‘‘அப்படி நடக்க எனது ராஜ்யத்தில் நான் விடமாட்டேன்’’ என்ற ஜார்ஜ், ரெட்டைமலை சீனிவாசனின் இரண்டு கையையும் பிடித்துக் குலுக்குகிறார். ‘‘அன்புக்குரிய இந்திய மக்கள் வளமுடன் ஆனந்தமாக வாழ வழிகாட்டிய மாமனிதர்களின் வரலாற்றில் உங்கள் பெயரும் இடம்பெறும்’’ என்று அப்போது ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் சொன்னது இவரைத்தான்.

இப்படி வாழ்நாள் முழுவதும், சாதி தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடியவர், திராவிட என்னும் பெயரில் புரட்சி செய்ததால், தற்கால தமிழ்த்தேசியர்கள் பாங்கில் போற்றவேண்டுமென்றால் திராவிட அடிமை இரட்டைமலை சீனிவாசன் நினைவைப்போற்றுவோம்.

*******
நன்றி, விகடன்.

தனித்தமிழாளன்

Tuesday, September 17, 2019

பெரியாரைப்பற்றி தமிழறிஞர்கள் கூறியது

பெரியாரைப்பற்றி தமிழ்த்தேசியத்தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் கூறியது :




பெரும்பணியைச் சுமந்த உடல்
பெரும்புகழைச் சுமந்த உயிர்
“பெரியார்” என்னும்
அரும்பெயரைச் சுமந்த நரை!
அழற்கதிரைச் சுமந்த மதி!
அறியாமை மேல்
இரும்புலக்கை மொத்துதல் போல்
எடுக்காமல் அடித்தஅடி!
எரிபோல் பேச்சு!
பெரும்புதுமை! அடடா, இப்
பெரியாரைத் தமிழ்நாடும்
பெற்றதம்மா!

மணிச்சுரங்கம் போல்அவரின்
மதிச்சுரங்கத் தொளிர்ந்தெழுந்த
மழலைக் கொச்சை!
அணிச்சரம் போல் மளமளவென
அவிழ்கின்ற பச்சை நடை!
ஆரியத்தைத்
துணிச்சலுடன் நின்றெதிர்த்துத்
துவைத்தெடுத்த வெங்களிறு!
தோல்வியில்லாப்
பணிச்செங்கோ! அடடா, இப்
பகுத்தறிவைத் தமிழ் நாடும்
சுமந்த தம்மா!

உரையழ கிங்கெவர்க்குவரும்?
உடலழகிங் கெவர்பெற்றார்?
ஒளிர்முகத்தின்
நரையழகிங் கெவர்க்குண்டு?
நாளெல்லாம் வாழ்க்கையெல்லாம்
நடை நடந்து
திரையுடலை, நோயுடலைச்
சுமந்துபல ஊர்திரிந்து
தொண்டு செய்த
இரைகடலை அடடா இவ் வெரியேற்றைத் தமிழ்நாடும்
இழந்ததம்மா!

எப்பொழுதும் எவ்விடத்தும்
எந்நேரமும் தொண்டோ டினைந்த பேச்சு! முப்பொழுதும் நடந்தநடை!
முழுஇரவும் விழித்தவிழி!
முழங்குகின்ற
அப்பழுக்கி லாதவுரை!
அரிமாவை அடக்குகின்ற அடங்காச் சீற்றம்! எப்பொழுதோ, அடடா, இவ்
வேந்தனையித்
தமிழ்நாடும் ஏந்தும் அம்மா?

பெற்றிழந்தோம், பெரியாரை!
பெற்றிழந்தோம்! அவரின்
பெருந்த லைமை
உற்றிழந்தோம்; உணர்விழந்தோம் உயிரிழந்தோம்; உருவிழந்தோம்!
உலையாத் துன்பால்
குற்றுயிராய்க் குலையுயிராய்க் கிடக்கின்ற தமிழினத்தைக்
கொண்டு செல்லும்
தெற்றுமணித் தலைவரினை,
அடடா, இத் தமிழ்நாடும்
நெகிழ்ந்ததம்மா!

பெரியாரைப் பேசுகின்றோம்;
பெரியாரை வாழ்த்துகின்றோம்;
பீடு, தங்கப் பெரியாரைப் பாடுகின்றோம்; பெரியார்நூல் கற்கின்றோம்;
பீற்றிக் கொள்வோம்!
உரியாரைப் போற்றுவதின் அவருரைத்த பலவற்றுள் ஒன்றை யேனும்
சரியாகக் கடைப்பிடித்தால்
அடடா, இத் தமிழ்நாடும்
சரியாதம்மா!

           - பாவலரேறு பெருஞ்சித்திரனார். 1973

*************

ஒளியைப் பரப்பிய ஊழித் தலைவராம்
அளிசேர் எங்கள் அருமைப் பெரியார்
பேசிய பேச்சுகள் நச்சுகள் என்றால் - ஊசிய
கருத்தை உரைத்த புராணங்கள், வேத அழுக்குகள், பொய்ம்மை விளக்கங்கள் - ஊதை
உளுத்தைகள் நச்சிலா உரைகளா?

*************

பெரியார் உணர்வினைப்பாவேந்தர் பீடினை அறியாத் தமிழராய், ஐயகோ, அழிகிறோம்! தமிழர் இனமே! தாழ்ந்துபோம் இனமே! : இமியும் பொறுத்திடற் கில்லை! இனியேனும் அமிழா உணர்வினால் ஆர்ந்துடன் எழுகவே!

           - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 1983

*******************

பெரியாரைப்பற்றி தமிழ்த்தேசியக்கவிஞர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் :




அவர்தாம் பெரியார் - பார்
அன்பு மக்கள் கடலின் மீதில்
அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்                                                                                                                 (அவர்தாம்)

மக்கள் நெஞ்சின் மலிவுப் பதிப்பு
வஞ்சகர்க்கோ கொடிய நெருப்பு
மிக்க பண்பின் குடியிருப்பு
விடுதலைப்பெரும்படையின்தொகுப்பு                                                                                                 (அவர்தாம்)

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகுதொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்                                                                                                               (அவர்தாம்)

                 - கனக சுப்புரத்தினம்

***************

பெரியாரின் பார்ப்பானிய எதிர்ப்பைப்பற்றி தமிழ்த்தேசியக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் :




பார்ப்பனியம் மேலென்று சொல்லிச் சொல்லிப்
        பழையயுகப் பொய்க்கதைகள் காட்டிக் காட்டி
வேர்ப்புறத்தில் வெந்நீரை வார்த்து வார்த்து
        மிகப்பெரிய சமூகத்தை இந்நாள் மட்டும்
தீர்ப்பரிய கொடுமைக்குள் ஆக்கி வைத்த
        செயல்அறிந்து திடுக்கிட்ட தலைவா! உன்னை
ஊர்ப்புறத்து மாந்தரெலாம் உணருங் காலை
        உவக்கின்றாய் உன்பணியில் ஓய்ந்தாய் இல்லை
ஆர்ப்பரித்தே பணிசெய்த தன்மை கண்டோம்
        அப்பணிக்கே நாங்கள்உனை வணக்கம் செய்தோம்.

                                                        - பாவேந்தர்

*****************

பெரியாரைப்பற்றி தமிழ்த்தேசியர் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் :




தமிழன் விடுதலை தலைவர் மூவருள்
அமரும் ஈகையர் அறநூல் வள்ளுவர்
தமியின் மொழியினர் தவநன் மறைமலை
இமிழ்தன் மானியர் இராமசாமியார்

                                         - தேவநேயர்

தமிழினத்தை காக்க, முன்னேற்ற மூவர் தோன்றினர்கள் அவர்கள் திருவள்ளுவர், மறைமலையடிகள், மற்றும் பெரியார்.

**************

பெரியாரைப்பற்றி தனித்தமிழியக்கத்துத் தந்தை மறைமலையடிகள் கூறியது :



நன்றி. வணக்கம்
தனித்தமிழாளன்

Sunday, September 15, 2019

தனித்தமிழியக்கம் தோன்றக் காரணம்

தனித்தமிழியக்கம் காண காரணப்பா:


பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற #_தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

     - திருவருட்பா, 2ஆம் திருமுறை.

செந்தமிழோடு வடமொழியைச்சேர்த்து எழுதிப்பேசிய மணிப்பிரவாளநடை என்னும் இழிநிலை தமிழுக்கு நேர்ந்தகாலத்தில் தனித்தமிழியக்கம் தோன்றியது.



மறைமலையடிகள், தம் மகளார் நீலாம்பிகை அம்மையாரோடு தம்முடைய தோட்டத்தில் உலாவிவரும்போது, மறைமலையடிகள், வள்ளலாரின் "பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெற்றதாய் மறந்தாலும், உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்" என்னும் மேற்கண்ட பாடலைப் பாடிவிட்டு, தம் மகளை நோக்கி, அம்மா, இப்பாடல் நல்ல தனித்தமிழில் உள்ளது. ஆனால், இதில் தேகம் என்னும் வடமொழியை நீக்கி, யாக்கை என்னும் தனித்தமிழ்ச்சொல்லை பயன்படுத்தியிருந்தால் மிகவும் இனிமையாக இருந்திருக்கும்.

இப்படி தமிழில் வடமொழியைக்கலப்பதால் தமிழின் இனிமை கெட்டுவிடுவதோடு காலப்போக்கில் அத்தமிழ்ச்சொற்களும் மறைந்துவிடும் என்று கூறினார். இவற்றை எண்ணிப்பார்த்த அடிகளும் அம்மையாரும், அன்று முதல் தனித்தமிழிலேயே நாம் உரையாடுவோமென்று உறுதிபூண்டனர். இவ்வரலாற்றை அம்மையார் தமது "தனித்தமிழ்க்கட்டுரைகள்" என்னும் நூலில் முகவுரையாக எழுதியுள்ளார். அம்மையார் மற்றும் மறைமலையடிகளின் இவ்வுறுதிப்பாடு தனித்தமிழியக்கமாகத் தோன்றி வளர்ந்தது.

இவ்வியக்கம் 1916 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், பரிதிமாற் கலைஞர், கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியவர்கள் தனித்தமிழ் இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவர்கள்.

வடமொழியிலிருந்த தம் இல்லத்தார் பெயர்களை, அடிகளார் தனித்தமிழில் மாற்றினார்.

வேதாசல சுவாமிகள் - மறைமலையடிகள்
திருஞானசம்பந்தன் - அறிவுத்தொடர்பன்
மாணிக்கவாசகம் - மணிமொழி
சுந்தரமூர்த்தி - அழகுரு
திரிபுரசுந்தரி - முந்நகரழகி
குஞ்சிதபாதம் - தூக்கிய திருவடி என்று மாற்றினார்.

அவர் நடத்திய மாதஇதழ் ஞானசாகரம் - அறிவுக்கடல் என்றாயிற்று. அவர் நடத்திய சன்மார்க்கசங்கம் - பொதுநிலைக்கழகம் என்றாயிற்று.

ஆரியத்தை நீக்கிய தமிழ்த்திருமணம், திருவள்ளுவர் ஆண்டுமுறை, தமிழர் மதம், தமிழரின் நான்மறை முதலிய கோட்பாடுகள் முதன்முறையாகத் தமிழ்நிலத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டன.

காங்கிரசிலிருந்து விலகிய ஈ.வே.ரா. பெரியார் திராவிட இயக்கம் தொடங்கினார். பார்ப்பனர்களுக்கு அவர் எதிர்ப்புத்தெரிவிக்க மறைமலையடிகளின் ஆராய்ச்சியே பயன்பட்டது. அக்காலத்தில் மேடையில் பேசும்போது “பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்“ என்னும் மறைமலையடிகளில் நூலைக் கையில் வைத்துக்கொண்டு பேசினார். அவருடைய இயக்கத்தாரும் அவருடைய கருத்துகளையே எடுத்துப்பரப்பி வந்தனர்.

மறைமலையடிகளைப் பின்பற்றியே தமிழ்த்திருமணம், தமிழர்மதம் ஆகிய கொள்கைகளைப் பெரியார் பரப்பினார். ஆரிய ஏமாற்று, மூடநம்பிக்கைகள், மதச்சடங்குகள், முதலியவற்றையும் பெரியார் மக்களிடத்தில் பரப்பினார். தி.மு.க வும் அதே கருத்துகளைப் பெரிய அளவில் மக்களிடத்தில் பரப்பியது. மக்களிடத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. தி.மு.க வினர் வடமொழியிலிருந்த தம் பெயர்களைத் தனித்தமிழில் மாற்றிக்கொண்டனர்.
தமிழ்த்திருமண நிகழ்ச்சிகளை நடத்தினர்.

பண்பாட்டு மீட்பும் தமிழ்க்காப்புணர்வும் மக்களிடத்தில் ஏற்படத்தொடங்கின. தமிழறிஞர் மறைமலையடிகளின் எண்ணத்தைப் பொதுமக்களின் எண்ணங்களாக மாற்றி வாழ்க்கை முறை அடியோடு மாறுவதற்குத் தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும், தி.க. வும் திமு.க.வும் கரணியராய் அமைந்தனர்.

தனித்தமிழியக்கம் செய்த இத்தகைய பெரும்புரட்சியால் மணிப்பிரவாளநடை என்னும் இழிநிலை தமிழைவிட்டகன்று தனித்தமிழ் நிலைபெற்றது. இத்தமிழியக்கங்கண்ட மறைமலையடிகளின் நினைவுநாள் இன்று.

நம் செயலகளால் மறைமலையடிகளின் உயிர் அமைதி பெற்றிருக்குமா? ஒரு நூற்றாண்டுகாலம் புரட்சிசெய்து தனித்தமிழைக்காத்த வரலாறுகளையெல்லாம் மறந்துவிட்டு மிகச்சாதாரணமாக பிறமொழிகளை தமிழில் கலந்து, குற்றவுணர்வு சிறிதுமின்றி தமிழின் தனித்தன்மையை குலைத்துக்கொண்டிருக்கிறோம் நாம். தமிழைக்காத்த சான்றோர்க்கு, இதுவா நாம் செய்யும் கைமாறு? வெட்கித்தலைகுனியுங்கள் தமிழர்களே.

தனித்தமிழியக்கத்துத் தந்தை மறைமலையடிகள் மறைந்த இந்த நாளிலாவது, தனித்தமிழே பேசுவோம் எழுதுவோம் என்னும் உறுதிமொழியைக் ஏற்கவேண்டும் நாம்.

நன்றி. வணக்கம்
தனித்தமிழாளன்

Saturday, September 14, 2019

மறைமலை மறைந்தநாள்

"மறைமலை மறைந்த நாள்"


தனித்தமிழியக்கத்துத்தந்தை மறைமலையடிகள் மறைந்த நாள் இன்று.



அடிகள் ஆக்கிய நூல்கள்  :


1) பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921)
2) மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, இரு தொகுதிகள் (1933)
3) மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)
4) யோக நித்திரை: அறிதுயில் (1922)
5) தொலைவில் உணர்தல் (1935)
6) மரணத்தின்பின் மனிதர் நிலை (1911)
7) சாகுந்தல நாடகம் (சமசுகிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது) (1907)
8 ) சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934)
9) ஞானசாகரம் மாதிகை (1902)
10) Oriental Mystic Myna Bimonthly (1908-1909)
11) Ocean of wisdom, Bimonthly(1935)
12) Ancient and Modern Tamil Poets (1937)
13) முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் (1936)
14) முல்லைப்பாட்டு- ஆராய்ச்சியுரை (1903)
15) பட்டினப்பாலை-ஆராய்ச்சியுரை (1906)
16) சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் (1911)
17) முதற்குறள் வாத நிராகரணம் (1898)
18) திருக்குறள் ஆராய்ச்சி (1951)
19) முனிமொழிப்ப்ரகாசிகை (1899)
20) மறைமலையடிகள் பாமணிக் கோவை (பாடல்கள்) (1977)
21) அம்பிகாபதி அமராவதி (நாடகம்) (1954)
22) கோகிலாம்பாள் கடிதங்கள் (புதினம்) (1921)
23) குமுதவல்லி: அல்லது நாகநாட்டரசி (புதினம்) (1911)
24) மறைமலை அடிகள் கடிதங்கள் (1957)
25) அறிவுரைக் கொத்து (1921)
26) அறிவுரைக் கோவை (1971)
27) உரைமணிக் கோவை (1972)
28) கருத்தோவியம் (1976)
29) சிந்தனைக் கட்டுரைகள் (1908)
30) சிறுவற்கான செந்தமிழ் (1934)
31) இளைஞர்க்கான இன்றமிழ் (1957)
32) திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை (1900)
33) மாணிக்க வாசகர் மாட்சி (1935)
34) மாணிக்க வாசகர் வரலாறும் காலமும் (இரு தொகுதி) (1930)
35) மாணிக்க வாசகர் வரலாறு (1952)
36) சோமசுந்தரக் காஞ்சியாக்கம் (1901)
37) சோமசுந்தர நாயகர் வரலாறு (1957)
38) கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா (1968)
39) திருவாசக விரிவுரை (1940)
40) சித்தாந்த ஞான போதம், சதமணிக்கோவை குறிப்புரை (1898)
41) துகளறு போதம், உரை (1898)
42) வேதாந்த மத விசாரம் (1899)
43) வேத சிவாகமப் பிராமண்யம் (1900)
44) Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge (1940)
45) சைவ சித்தாந்த ஞானபோதம் (1906)
46) சிவஞான போத ஆராய்ச்சி (1958)
47) Can Hindi be a lingua Franca of India? (1969)
48) இந்தி பொது மொழியா ? (1937)
49) Tamilian and Aryan form of Marriage (1936)
50) தமிழ் நாட்டவரும், மேல்நாட்டவரும் (1936)
51) பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் (1958)
52) வேளாளர் நாகரிகம் (1923)
53) தமிழர் மதம் (1941)
54) பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் (1906)

ஆகிய 54 நூல்கள்.

நன்றி
தனித்தமிழாளன்

Wednesday, September 11, 2019

ஆரியமொழிந்து தமிழைப்போற்றிய வள்ளற்பெருமான்

ஆரியமொழிந்து தமிழைவிரும்பிய வள்ளற்பெருமான்:




"இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரியம் முதலான பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய்ப் பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய் சாகாக்கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றினிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென்மொழிகளால் பல்வகைத் தோத்திரப் பாட்டுக்களைப் பாடுவித்தருளினீர்.

இங்ஙனஞ் செய்தருள்கின்ற தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!

இங்ஙனம்,
- சிதம்பரம் இராமலிங்கம் "

{ சமரச சுத்த சன்மார்க்க சத்தியப்பெருவிண்ணப்பம்}

தமிழர்விழவு திருவோண நன்னாள்

தமிழர்விழவு திருவோண நன்னாள்:


உலகத்தமிழர்கட்கு ஓணநன்னாள் வாழ்த்துகள். திருவோணத்திருவிழவு தமிழரின் நன்னாள் என்பதற்குக் கிடைக்கும் சான்றுகளான சில :

மதுரைக்காஞ்சி, பெரியாழ்வாரின் திருப்பால்லாண்டு, திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பு ஆகியனவாகும்.



தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடிய மதுரைக்காஞ்சி 590 முதல் 605 அடிகள் வரை :


"கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய #_வோண_நன்னாள்
கோணந் தின்ற வடுவாழ் முகத்த
சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை
மறங்கொள் சேரி மாறுபொரு செருவில்
மாறா துற்ற வடுப்படு நெற்றிச்
சுரும்பார் கண்ணிப் பெரும்புகன் மறவர்
கடுங்களி றோட்டலிற் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழகம் நிலம்பர லுறுப்ப
கடுங்கட் டேறன் மகிழ்சிறந்து திரிதர
கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து
பணைத்தேந் திளமுலை யமுத மூறப்
புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
வளமனை மகளிர் குளநீர் அயரத்
திவவுமெய்ந் நிறுத்துச் #_செவ்வழி பண்ணிக்
குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி"

***********************************

நாலாயிரப்பனுவலில் பெரியாழ்வாரின் திருப்பால்லாண்டு :


எந்தைதந்தைதந்தை தந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழிஆட்செய்கின்றோம் #_திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே. 6

உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய் மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருத்தித்
#_திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப் பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 9

***********************************

திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பு:


"மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி #_ஓண_விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்”

{ஐப்பசியில் ஓணவிழவு கொண்டாடியதாக சம்பந்தர் குறிப்பிடுகிறார்}

************************************

தரவு நூல்கள் :
1. மதுரைக்காஞ்சி
2. நாலாயிரப்பனுவல், மற்றும்
3. தேவாரம்

தொகுப்பு : தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்