சங்கவிலக்கியத்தில் ஆதன் :
அண்மையில் கீழடி அகழ்வாய்வின் பானையோடுகளில் எழுதிய பெயர்களில் ஆதன் என்பதும் ஒன்று. இப்பெயர் தமிழவை நூல்களில் பலவிடங்களிலுண்டு. பெரும்பாலும் சேரமரபினரின் பெயர்களே ஆதன் என்றுள்ளன. ஆனால், பாண்டி நாட்டில் கிடைத்த தொல்சான்றில் சேரப்பெயரான ஆதனெனும் பெயர் நம்முள் பலவினாக்களைத் தொடுக்கிறது. எது எவ்வாறோ இருக்கட்டும். இப்பெயர், சங்கநூல்களில் யாங்கெல்லாம் குறிப்பிட்டப்பட்டுள்ளது என்பதை எடுத்தியம்பும் சிறுபதிவே இது. அடியனுக்குக் கிடைத்த சிலசான்றுகளை உமக்கும் அறிவிக்கிறேன்.
ஆதன் பெயர்க்காரணம் :
மூச்சுக்காற்றில் உள்ளிழுக்கும் காற்று, வெளிவிடும் காற்று என்று இரண்டு வகையுண்டு. உள்ளிழுக்கும் காற்றிலுள்ள உயிர்வளி உடலில் ஊறிய சத்தை எரிக்க உதவுகிறது. உதவும் காற்று நமக்கு ஆகும் காற்று. ஆகும் காற்று ஆதல் காற்று. ஆதல் காற்றை ஆதன் என்பது தமிழ். ஆதன் என்பது உயிர்வளி. உயிர் என்றும் பொருளாகும்.
வெளிவிடும் காற்று அவிந்த காற்று. எரிந்தது அவிந்தால் கரி. அதனால் வெளிவிடும் காற்றைக் கரி+அமில வாயு என்பர். தமிழ் அவிந்த காற்றை அவினி என்று குறிப்பிடுகிறது.
ஆதன், அவினி என்னும் பெயர்கள் இவ்வாறு தோன்றின. இவற்றை மக்களும் தமக்குப் பெயராக்கிக்கொண்டனர்.
ஆதன் பெயர்கள் :
1. சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் - புறம் 2
2. சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் - புறம் 8
3. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் - புறம் 62
4. பெருஞ்சேரலாதன் - புறம் 65
5. ஆதன் அழிசி - ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியனின் 5 நன்பர்களுள் ஒருவன் - புறம் 71
6. ஆதன் - ஓரியின் தந்தை - புறம் 153
7. நெடுவேள் ஆதன் - போந்தைப்பட்டினம் என்னும் குறுநில மன்னன் - புறம் 338
8. நல்லியாதன் - ஓய்மான் நல்லியக்கோடன் - புறம் 376
9. ஓய்மான்வில்லியாதன் - இலங்கையரசன் - புறம் 379
10. ஆதனுங்கன் - வேங்கடநாட்டு அரசன் - புறம் 389
11. ஆதன் - வாட்டாற்று எழினியின் மகன் - புறம் 396
12. ஆடுகோட்பாட்டச்சேரலாதன்
13. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
14. முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன்
15. ஆதனூர் - "மேற்காநாட்டு ஆதனூர்" - திருட்தொண்டர் மாக்கதை.
*******************
நன்றி. வணக்கம்.
பதிவிற்கு உதவிய நூல்கள் :
1. புறநானூறு நூல்
2. செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி
3. சங்ககாலவரசர் வரிசை நூல்
4. பெரியபுராணம்.
தொகுப்பு : தனித்தமிழாளன்