பெரியாரைப்பற்றி தமிழ்த்தேசியத்தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் கூறியது :
பெரும்பணியைச் சுமந்த உடல்
பெரும்புகழைச் சுமந்த உயிர்
“பெரியார்” என்னும்
அரும்பெயரைச் சுமந்த நரை!
அழற்கதிரைச் சுமந்த மதி!
அறியாமை மேல்
இரும்புலக்கை மொத்துதல் போல்
எடுக்காமல் அடித்தஅடி!
எரிபோல் பேச்சு!
பெரும்புதுமை! அடடா, இப்
பெரியாரைத் தமிழ்நாடும்
பெற்றதம்மா!
மணிச்சுரங்கம் போல்அவரின்
மதிச்சுரங்கத் தொளிர்ந்தெழுந்த
மழலைக் கொச்சை!
அணிச்சரம் போல் மளமளவென
அவிழ்கின்ற பச்சை நடை!
ஆரியத்தைத்
துணிச்சலுடன் நின்றெதிர்த்துத்
துவைத்தெடுத்த வெங்களிறு!
தோல்வியில்லாப்
பணிச்செங்கோ! அடடா, இப்
பகுத்தறிவைத் தமிழ் நாடும்
சுமந்த தம்மா!
உரையழ கிங்கெவர்க்குவரும்?
உடலழகிங் கெவர்பெற்றார்?
ஒளிர்முகத்தின்
நரையழகிங் கெவர்க்குண்டு?
நாளெல்லாம் வாழ்க்கையெல்லாம்
நடை நடந்து
திரையுடலை, நோயுடலைச்
சுமந்துபல ஊர்திரிந்து
தொண்டு செய்த
இரைகடலை அடடா இவ் வெரியேற்றைத் தமிழ்நாடும்
இழந்ததம்மா!
எப்பொழுதும் எவ்விடத்தும்
எந்நேரமும் தொண்டோ டினைந்த பேச்சு! முப்பொழுதும் நடந்தநடை!
முழுஇரவும் விழித்தவிழி!
முழங்குகின்ற
அப்பழுக்கி லாதவுரை!
அரிமாவை அடக்குகின்ற அடங்காச் சீற்றம்! எப்பொழுதோ, அடடா, இவ்
வேந்தனையித்
தமிழ்நாடும் ஏந்தும் அம்மா?
பெற்றிழந்தோம், பெரியாரை!
பெற்றிழந்தோம்! அவரின்
பெருந்த லைமை
உற்றிழந்தோம்; உணர்விழந்தோம் உயிரிழந்தோம்; உருவிழந்தோம்!
உலையாத் துன்பால்
குற்றுயிராய்க் குலையுயிராய்க் கிடக்கின்ற தமிழினத்தைக்
கொண்டு செல்லும்
தெற்றுமணித் தலைவரினை,
அடடா, இத் தமிழ்நாடும்
நெகிழ்ந்ததம்மா!
பெரியாரைப் பேசுகின்றோம்;
பெரியாரை வாழ்த்துகின்றோம்;
பீடு, தங்கப் பெரியாரைப் பாடுகின்றோம்; பெரியார்நூல் கற்கின்றோம்;
பீற்றிக் கொள்வோம்!
உரியாரைப் போற்றுவதின் அவருரைத்த பலவற்றுள் ஒன்றை யேனும்
சரியாகக் கடைப்பிடித்தால்
அடடா, இத் தமிழ்நாடும்
சரியாதம்மா!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார். 1973
*************
ஒளியைப் பரப்பிய ஊழித் தலைவராம்
அளிசேர் எங்கள் அருமைப் பெரியார்
பேசிய பேச்சுகள் நச்சுகள் என்றால் - ஊசிய
கருத்தை உரைத்த புராணங்கள், வேத அழுக்குகள், பொய்ம்மை விளக்கங்கள் - ஊதை
உளுத்தைகள் நச்சிலா உரைகளா?
*************
பெரியார் உணர்வினைப்பாவேந்தர் பீடினை அறியாத் தமிழராய், ஐயகோ, அழிகிறோம்! தமிழர் இனமே! தாழ்ந்துபோம் இனமே! : இமியும் பொறுத்திடற் கில்லை! இனியேனும் அமிழா உணர்வினால் ஆர்ந்துடன் எழுகவே!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 1983
*******************
பெரியாரைப்பற்றி தமிழ்த்தேசியக்கவிஞர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் :
அவர்தாம் பெரியார் - பார்
அன்பு மக்கள் கடலின் மீதில்
அறிவுத் தேக்கம் தங்கத் தேரில் (அவர்தாம்)
மக்கள் நெஞ்சின் மலிவுப் பதிப்பு
வஞ்சகர்க்கோ கொடிய நெருப்பு
மிக்க பண்பின் குடியிருப்பு
விடுதலைப்பெரும்படையின்தொகுப்பு (அவர்தாம்)
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகுதொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும் (அவர்தாம்)
- கனக சுப்புரத்தினம்
***************
பெரியாரின் பார்ப்பானிய எதிர்ப்பைப்பற்றி தமிழ்த்தேசியக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் :
பார்ப்பனியம் மேலென்று சொல்லிச் சொல்லிப்
பழையயுகப் பொய்க்கதைகள் காட்டிக் காட்டி
வேர்ப்புறத்தில் வெந்நீரை வார்த்து வார்த்து
மிகப்பெரிய சமூகத்தை இந்நாள் மட்டும்
தீர்ப்பரிய கொடுமைக்குள் ஆக்கி வைத்த
செயல்அறிந்து திடுக்கிட்ட தலைவா! உன்னை
ஊர்ப்புறத்து மாந்தரெலாம் உணருங் காலை
உவக்கின்றாய் உன்பணியில் ஓய்ந்தாய் இல்லை
ஆர்ப்பரித்தே பணிசெய்த தன்மை கண்டோம்
அப்பணிக்கே நாங்கள்உனை வணக்கம் செய்தோம்.
- பாவேந்தர்
*****************
பெரியாரைப்பற்றி தமிழ்த்தேசியர் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் :
தமிழன் விடுதலை தலைவர் மூவருள்
அமரும் ஈகையர் அறநூல் வள்ளுவர்
தமியின் மொழியினர் தவநன் மறைமலை
இமிழ்தன் மானியர் இராமசாமியார்
- தேவநேயர்
தமிழினத்தை காக்க, முன்னேற்ற மூவர் தோன்றினர்கள் அவர்கள் திருவள்ளுவர், மறைமலையடிகள், மற்றும் பெரியார்.
**************
பெரியாரைப்பற்றி தனித்தமிழியக்கத்துத் தந்தை மறைமலையடிகள் கூறியது :
நன்றி. வணக்கம்
தனித்தமிழாளன்
No comments:
Post a Comment