தனித்தமிழியக்கம் காண காரணப்பா:
பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற #_தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- திருவருட்பா, 2ஆம் திருமுறை.
செந்தமிழோடு வடமொழியைச்சேர்த்து எழுதிப்பேசிய மணிப்பிரவாளநடை என்னும் இழிநிலை தமிழுக்கு நேர்ந்தகாலத்தில் தனித்தமிழியக்கம் தோன்றியது.
மறைமலையடிகள், தம் மகளார் நீலாம்பிகை அம்மையாரோடு தம்முடைய தோட்டத்தில் உலாவிவரும்போது, மறைமலையடிகள், வள்ளலாரின் "பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெற்றதாய் மறந்தாலும், உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்" என்னும் மேற்கண்ட பாடலைப் பாடிவிட்டு, தம் மகளை நோக்கி, அம்மா, இப்பாடல் நல்ல தனித்தமிழில் உள்ளது. ஆனால், இதில் தேகம் என்னும் வடமொழியை நீக்கி, யாக்கை என்னும் தனித்தமிழ்ச்சொல்லை பயன்படுத்தியிருந்தால் மிகவும் இனிமையாக இருந்திருக்கும்.
இப்படி தமிழில் வடமொழியைக்கலப்பதால் தமிழின் இனிமை கெட்டுவிடுவதோடு காலப்போக்கில் அத்தமிழ்ச்சொற்களும் மறைந்துவிடும் என்று கூறினார். இவற்றை எண்ணிப்பார்த்த அடிகளும் அம்மையாரும், அன்று முதல் தனித்தமிழிலேயே நாம் உரையாடுவோமென்று உறுதிபூண்டனர். இவ்வரலாற்றை அம்மையார் தமது "தனித்தமிழ்க்கட்டுரைகள்" என்னும் நூலில் முகவுரையாக எழுதியுள்ளார். அம்மையார் மற்றும் மறைமலையடிகளின் இவ்வுறுதிப்பாடு தனித்தமிழியக்கமாகத் தோன்றி வளர்ந்தது.
இவ்வியக்கம் 1916 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், பரிதிமாற் கலைஞர், கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியவர்கள் தனித்தமிழ் இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவர்கள்.
வடமொழியிலிருந்த தம் இல்லத்தார் பெயர்களை, அடிகளார் தனித்தமிழில் மாற்றினார்.
வேதாசல சுவாமிகள் - மறைமலையடிகள்
திருஞானசம்பந்தன் - அறிவுத்தொடர்பன்
மாணிக்கவாசகம் - மணிமொழி
சுந்தரமூர்த்தி - அழகுரு
திரிபுரசுந்தரி - முந்நகரழகி
குஞ்சிதபாதம் - தூக்கிய திருவடி என்று மாற்றினார்.
அவர் நடத்திய மாதஇதழ் ஞானசாகரம் - அறிவுக்கடல் என்றாயிற்று. அவர் நடத்திய சன்மார்க்கசங்கம் - பொதுநிலைக்கழகம் என்றாயிற்று.
ஆரியத்தை நீக்கிய தமிழ்த்திருமணம், திருவள்ளுவர் ஆண்டுமுறை, தமிழர் மதம், தமிழரின் நான்மறை முதலிய கோட்பாடுகள் முதன்முறையாகத் தமிழ்நிலத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டன.
காங்கிரசிலிருந்து விலகிய ஈ.வே.ரா. பெரியார் திராவிட இயக்கம் தொடங்கினார். பார்ப்பனர்களுக்கு அவர் எதிர்ப்புத்தெரிவிக்க மறைமலையடிகளின் ஆராய்ச்சியே பயன்பட்டது. அக்காலத்தில் மேடையில் பேசும்போது “பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்“ என்னும் மறைமலையடிகளில் நூலைக் கையில் வைத்துக்கொண்டு பேசினார். அவருடைய இயக்கத்தாரும் அவருடைய கருத்துகளையே எடுத்துப்பரப்பி வந்தனர்.
மறைமலையடிகளைப் பின்பற்றியே தமிழ்த்திருமணம், தமிழர்மதம் ஆகிய கொள்கைகளைப் பெரியார் பரப்பினார். ஆரிய ஏமாற்று, மூடநம்பிக்கைகள், மதச்சடங்குகள், முதலியவற்றையும் பெரியார் மக்களிடத்தில் பரப்பினார். தி.மு.க வும் அதே கருத்துகளைப் பெரிய அளவில் மக்களிடத்தில் பரப்பியது. மக்களிடத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. தி.மு.க வினர் வடமொழியிலிருந்த தம் பெயர்களைத் தனித்தமிழில் மாற்றிக்கொண்டனர்.
தமிழ்த்திருமண நிகழ்ச்சிகளை நடத்தினர்.
பண்பாட்டு மீட்பும் தமிழ்க்காப்புணர்வும் மக்களிடத்தில் ஏற்படத்தொடங்கின. தமிழறிஞர் மறைமலையடிகளின் எண்ணத்தைப் பொதுமக்களின் எண்ணங்களாக மாற்றி வாழ்க்கை முறை அடியோடு மாறுவதற்குத் தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும், தி.க. வும் திமு.க.வும் கரணியராய் அமைந்தனர்.
தனித்தமிழியக்கம் செய்த இத்தகைய பெரும்புரட்சியால் மணிப்பிரவாளநடை என்னும் இழிநிலை தமிழைவிட்டகன்று தனித்தமிழ் நிலைபெற்றது. இத்தமிழியக்கங்கண்ட மறைமலையடிகளின் நினைவுநாள் இன்று.
நம் செயலகளால் மறைமலையடிகளின் உயிர் அமைதி பெற்றிருக்குமா? ஒரு நூற்றாண்டுகாலம் புரட்சிசெய்து தனித்தமிழைக்காத்த வரலாறுகளையெல்லாம் மறந்துவிட்டு மிகச்சாதாரணமாக பிறமொழிகளை தமிழில் கலந்து, குற்றவுணர்வு சிறிதுமின்றி தமிழின் தனித்தன்மையை குலைத்துக்கொண்டிருக்கிறோம் நாம். தமிழைக்காத்த சான்றோர்க்கு, இதுவா நாம் செய்யும் கைமாறு? வெட்கித்தலைகுனியுங்கள் தமிழர்களே.
தனித்தமிழியக்கத்துத் தந்தை மறைமலையடிகள் மறைந்த இந்த நாளிலாவது, தனித்தமிழே பேசுவோம் எழுதுவோம் என்னும் உறுதிமொழியைக் ஏற்கவேண்டும் நாம்.
நன்றி. வணக்கம்
தனித்தமிழாளன்
No comments:
Post a Comment