Thursday, January 14, 2021

இலக்கியத்தில் நம்நாடு தமிழ்நாடு

இலக்கியத்தில் தமிழ்நாடு : 


நம்நாட்டிற்கு தமிழ்நாடு என்னும் பெயர், ஈகி சங்கரலிங்கனாரின் உயிர் ஈகத்தாலும், பல தமிழறிஞர்களின் போராட்டத்தாலும், அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரையாரால் 1969ஆம் ஆண்டு இதேநாளில் தான் சூட்டப்பட்டது என்பது நாம் அறிந்ததே. அவ்வீகியருக்கும் அரசுக்கும் நம் நன்றியை உரித்தாக்குவோம். 


ஆனால், இப்போது நாம் அறியவேண்டிய செய்தி யாதெனில், 1969க்கு முன்பும் நம்நாட்டின் பெயர் தமிழ்நாடே. அதற்கான சான்றுகளைத் தான் இப்பதிவில் காணவுள்ளோம். தமிழ்கூறும் நல்லுலகு, தமிழகம், தமிழர்நிலம், தமிழ்மருங்கு, தமிழ் வரைப்பகம் என்றெல்லாம் நம்நாட்டிற்கு பெயர் இருந்ததாக மிகப்பல சான்றுகள் இலக்கியகளிலுண்டு. ஆனால், "தமிழ்நாடு" "தமிழ்நன்னாடு" என்ற பெயரிலேயே இருக்கும் சான்றுகளை மட்டும்தான் ஈண்டு பதிவிடுகிறேன்.


அவை,


௧) பரிபாடல் - மதுரையைப்பற்றிய பாடல்

௨) சிலம்பு - மூன்று சான்றுகள்

௩) இளம்பூரணனாரின் தொல்காப்பிய உரைநூல்




1) பரிபாடல் மதுரையைப்பற்றிய பாட்டு:


தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லா

நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது

குன்றுத லுண்டோ மதுரை கொடித்தேரான்

குன்றமுண் டாகு மளவு.


பொருள்:

பாண்டிய மன்னனின் பொதியில்மலை இருக்குமளவும் மதுரை, குளிர்ந்த தமிழ்மொழியையே 

எல்லையாகவுடைய தமிழ்நாடெங்கும் தன் புகழ் பரவப் பொலிந்து நிற்பதன்றிக் குன்றமாட்டாது.


2) சிலப்பதிகாரம்:

அ) புகார்க்காண்டம் - நாடுகாண்காதை - 58ஆம் அடி


"தென்றமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு"


பொருள்: தெற்கின்கணுள்ள தமிழ் நாட்டின் கண்ணதாகிய குற்றந் தீர்ந்த மதுரைக்கு


ஆ) மதுரைக்காண்டம் காட்சிக்காதை 165ஆம் அடி


"இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கி" 


பொருள்: முழங்கும் கடலை வேலியாகவுடைய இந்நிலம் முழுவதையும் தமிழ்நாடாக்க விரும்பி


இ) மதுரைக்காண்டம் காட்சிக்காதை 171ஆம் அடி


"தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி"


தென்றிசைக் கண்ணதாகிய வளமிக்க தமிழ்நாட்டு வில்லுங் கெண்டையும் புலியுமென்னும் இவற்றின் இலச்சினை.


3) இளம்பூரணனாரின் தொல்காப்பியவுரைநூல்:


தொல்காப்பியத்தின் சொல்லதிகார கியவியாக்கத்தில் "செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்னும் நூற்பாவிற்கு உரை எழுதிய இளம்பூரணனார், வினாவும் விடையும் குழப்பமின்றி தெளிவாக இருக்கவேண்டும் என்று இந்தநூற்பாவின் பொருளை விளக்கி, அதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறார்.


“நும் நாடு யாது என்றால், #_தமிழ்நாடு என்றல்“ என்று கூறுகிறார். இதில் நாடுயாது என்பது வினாவாம், அதற்கு நேரடியான விடை தமிழ்நாடு என்பதாம். இவ்வாறு விளக்கினார். இவர் 11ஆம் நூற்றாண்டைச்சார்ந்தவர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.


பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் மாக்கதையிலும் தமிழ்நாடென்றே பலவிடங்களில் கூறப்பட்டிருக்கும்.


1969க்குப்பிறகு மட்டுமல்ல ஈராயிரமாண்டுகளாகவே நம் நாடு தமிழ்நாடு தான். நம்நாடு இந்தியா அல்ல நற்றமிழ்நாடு என்போம்.


நன்றி. வணக்கம்.


******************************************************

தரவுகள் உதவி:

1) பரிபாடல் நூல்

2) சிலப்பதிகாரம் நூல்

3) இளம்பூரணனாரின் தொல்காப்பிய உரைநூல்


தொகுப்பு : தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment