Saturday, February 13, 2021

காதற்சிறப்பு

 காதற்சிறப்பு : - நற்காதலன் வள்ளுவன் ❤️


திருக்குறள் : காமம்

களவியல் / காதற்சிறப்புரைத்தல் :


1121. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

          வாலெயி றூறிய நீர்.


இனியமொழி பேசுகின்ற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்துவரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.


1122. உடம்பொ டுயிரிடை யென்னமற் றன்ன

          மடந்தையொ டெம்மிடை நட்பு.


உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு.


1123. கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழுந்

          திருநுதற் கில்லை யிடம்.


நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!


1124. வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாத

          லதற்கன்ன ணீங்கு மிடத்து.


ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன்.


1125. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே

          னொள்ளமர்க் கண்ணாள் குணம்.


ஒளி கொண்டிருக்கும் விழிகளையுடைய காதலியின் பண்புகளை நினைப்பதேயில்லை; காரணம் அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு.


1126. கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருகுவரார்

          நுண்ணியரெங் காத லவர்.


காதலர், கண்ணுக்குள்ளிருந்து எங்கும் போக மாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் வருந்த மாட்டார்; காரணம், அவர் அவ்வளவு நுட்பமானவர்.


1127. கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணு

          மெழுதேங் கரப்பாக் கறிந்து.


காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப்பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்.


1128. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்ட

          லஞ்சுதும் வேபாக் கறிந்து.


சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்.


1129. இமைப்பிற் கரப்பாக் கறிவ லனைத்திற்கே

          யேதில ரென்னுமிவ் வூர்.


கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணை இமைக்காமல் இருக்கின்றேன்; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத துன்பத்தை எனக்குத்தந்த அன்பில்லதாவர் என்று அவரைக்கூறும்.


1130. உவந்துறைவ ருள்ளத்து ளென்று

          மிகந்துறைவ

          ரேதில ரென்னுமிவ் வூர்.


காதலர், எப்போதும் உள்ளதோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு.


                              - நற்காதலன் வள்ளுவன் ❤️


❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️


நன்றி. வணக்கம்.



No comments:

Post a Comment