Saturday, March 23, 2019

களிற்றையட்டும் யாளி

களிற்றைக்கொல்லும் யாளி:




ஆளி நன்மா னணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி
முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத்
தலைக்கோள் வேட்டங் களிறட் டாஅங்கு

- முடத்தாமக்கண்ணியார் பாடிய
பொருநராற்றுப்படை - 139 முதல் 142 அடிகள்

உரை :
யாளியாகிய சிறந்த விலங்கின் வருத்துதலையுடைய குருளையின், கூற்றுவனுடையவலியைக்காட்டிலும் மிகுகின்ற வலியாலே செருக்குக்கொண்டு, முலையுண்ணுதலைக் கைவிடாத இளம்பருவத்தில் விரைவாக, முதன்முதலிற் கொள்வதற்குக் காரணமான வேட்டையிற் களிற்றைக்கொன்றாற் போல, (கரிகாற்சோழன் தன் இளம் பருவத்திலேயே சேரனையும் பாண்டியனையும் வெண்ணிப்போரில் வெற்றிகொண்டான்).

நூல் : பொருநராற்றுப்படை

நன்றி. வணக்கம்
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Friday, March 8, 2019

மகளிர் ஆடவர் அகவையும் பருவங்களும்

மகளிர் ஆடவர் அகவையும் பருவங்களும்:




மகளிருக்கும் ஆடவருக்கும் முறையே ஏழேழ் பருவங்களென்றும் இன்னின்ன அகவையோர் இன்னின்ன பருவத்தோரென்று பலரும் அறிந்ததே. ஆயினும் இவ்வகவைகளும் பருவங்களும் பகுத்து இலக்கணங்கூறியது எந்நூலென்றும் யாரென்றும் அறிந்திலோம் நாம். ஆகையினாலே, நென்னலை(நேற்று) யான் இஃதைத்தேடி இணையத்திலுலாவி அறியப்பெற்றேன். அஃதை, முகநூல் நண்பர்கள் நுங்கட்கு அறிவிக்கும்பொருட்டே இப்பதிவை இடுகிறேன். விருப்புளோர் படித்தறிக, வெறுப்புளோர் விடுத்தொழிக.

பன்னிருபாட்டியலும்_திருக்கைலாயஞானவுலாவும்:


திருக்கைலாயஞானவுலா:


திருக்கைலாயஞானவுலா என்பது, சிவநெறியில் (சைவசமயம்) இருக்கும் பன்னிருதிருமுறைநூல்களில் பதினொன்றாம் திருமுறையுள் சேரமான் பெருமாள் என்ற மாக்கோதை நாட்டையாண்ட சேரமன்னர் பாடிய நூல். இவ்வேழ்பருவப்பெண்களை மட்டும் குறிப்பிடுகிறார். அகவைகளை விளக்கவில்லை. இவரின் காலம் 8ஆம் நூற்றாண்டு. தமிழில் எழுந்த முதல் உலாநூலான இஃதை ஆதிவுலாவென்றும் அழைப்பர். இவரின் கதையையும் நூலைப்பற்றியும் திருடத்தொண்டர்மாக்கதை (பெரியபுராணம்) பேசுகிறது. (இங்கு அப்பாக்களை பதிவிடவில்லை).

பன்னிருபாட்டியல்: இனவியல்:


பன்னிருபாட்டியல் என்பது செய்யுளிலக்கணத்தை விளக்கும் ஒருநூல். இஃது 15 புலவர்களால் பாடிய பாக்கள் பின்னோரொருவரால் தொகுக்கப்பட்ட தொகைநூலாகையால் இன்ன பாவை இன்னார் பாடினாரென்று துணிதற்கில்லை. இருப்பினும், பெண்பாற்பருவங்களை பொய்கையார் என்ற புலவரும் ஆண்பாற்பருவங்களை அவிநயனார் என்ற புலவரும் பாடியதாகக்குறிக்கப்பட்டுள்ளது. இந்நூலின் பாக்களின் காலத்தையும் தொகுத்த காலத்தையும் அறுதியிட்டுக்கூறவியலவில்லை.

நூற்பாக்கள்:


பெண்பாற்பருவங்களும் அகவையும்:


ஏழு நிலையு மியம்புங் காலைப்
பேதை பெதும்பை மங்கை மடந்தை
யரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காத
னோக்கி யுரைப்பது நுண்ணியோர் கடனே. 220

பேதைக் கியாண்டே யைந்துமுத லெட்டே. 221

பெதும்பைக் கியாண்டே யொன்பதும் பத்தும். 222

மங்கைக் கியாண்டே பதினொன்று முதலாத்
திரண்ட பதினா லளவுஞ் சாற்றும். 223

மடந்தைக் கியாண்டே பதினைந்து முதலாத்
திடம்படு மொன்பதிற் றிரட்டி செப்பும். 224

அரிவைக் கியாண்டே யறுநான் கென்ப. 225

தெரிவைக் கியாண்டே யிருபத்தொன்பது. 226

ஈரைந் திருநான் கிரட்டி கொண்டது
பேரிளம் பெண்டுக் கியல்பென மொழிப. 227

                                                    - பொய்கையார்.

ஆண்பாற்பருவங்களும் அகவையும்:


காட்டிய முறையே நாட்டிய வாண்பாற்
கெல்லையும் பெயரு மியல்புற வாய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரு முளரே. 228

பாலன் யாண்டே யேழென மொழிப. 229

மீளி யாண்டே பத்தியை காறும். 230

மறவோன் யாண்டே பதினான் காகும். 231

திறலோன் யாண்டே பதினைந் தாகும். 232

பதினா றெல்லை காளைக் கியாண்டே. 233

அத்திற மிறந்த முப்பதின் காறும்
விடலைக் காகு மிகினே முதுமகன். 234
                 
நீடிய நாற்பத் தெட்டி னளவு
மாடவர்க் குலாப்புற முரித்தென மொழிப. 235
                         
                                             - அவிநயனார்.

இவ்விருநூற்களை விடுத்து, ஆடவர் மகளிர் அகவைகளைப்பகுத்து பருவங்களைக்கூறும் வேறுநூல்களிருப்பின் அறிந்தோர் விளக்கிப்பதிவிட வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். பதிவில் குற்றங்குறைகளிருப்பின் அடியேனை திருத்தவேண்டுகிறேன். நன்றி. வணக்கம் 🙏

உதவி :
பன்னிருபாட்டியல் நூல்,
திருக்கைலாயஞானவுலா நூல்
மற்றும் வலைத்தளங்கள்.
தொகுப்பு : தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

தமிழவை பெண்பாற்புலவர்கள்

தமிழவை பெண்பாற்புலவர்கள்




ஈராயிரமாண்டுகட்கு முன்பே வீரமும் கல்வியில் புலமையும்பெற்றிருந்த பெண்கள் நிறைந்திருந்த குடி உலகிலேயே நம் தமிழ்க்குடியாகத்தான் இருந்திருக்கமுடியும்.

௧) அச்சியத்தை மகள் நாகையார்
௨) ஔவையார்
௩) அள்ளூர் நன்முல்லையார்
௪) ஆதிமந்தி
௫) இளவெயினி
௬) உப்பை ஃ உறுவை
௭) ஒக்கூர் மாசாத்தியார்
௮) கரீனா கண்கணையார்
௯) கவியரசி
௰) கழார் கீரன் எயிற்றியார்
௧௧) கள்ளில் ஆத்திரையனார்
௧௨) காக்கை பாடினியார் நச்செள்ளையார்
௧௩) காமக்கணிப் பசலையார்
௧௪) காரைக்காலம்மையார்
௧௫) காவற்பெண்டு
௧௬) கிழார் கீரனெயிற்றியார்
௧௭) குட புலவியனார்
௧௮) குமிழிநாழல் நாப்பசலையார்
௧௯) குமுழி ஞாழல் நப்பசையார்
௨०) குறமகள் ஃ இளவெயினி
௨௧) குறமகள் ஃ குறிஎயினி
௨௨) குற மகள் இளவெயினியார்
௨௩) கூகைக்கோழியார்
௨௪) தமிழறியும் பெருமாள்
௨௫) தாயங்கண்ணி
௨௬) நக்கண்ணையார்
௨௭) நல்லிசைப் புலமை மெல்லியார்
௨௮) நல்வெள்ளியார்
௨௯) நெட்டிமையார்
௩०) நெடும்பல்லியத்தை
௩௧) பசலையார்
௩௨) பாரிமகளிர் (அங்கவை சங்கவை)
௩௩) பூங்கண்ணுத்திரையார்
௩௪) பூங்கண் உத்திரையார்
௩௫) பூதபாண்டியன் தேவியார்
௩௬) பெண்மணிப் பூதியார்
௩௭) பெருங்கோப்பெண்டு
௩௮) பேய்மகள் இளவெயினி
௩௯) பேயனார்
௪०) பேரெயென் முறுவலார்
௪௧) பொத்தியார்
௪௨) பொன்மணியார்
௪௩) பொன்முடியார்
௪௪) போந்தலைப் பசலையார்
௪௫) மதுவோலைக் கடையத்தார்
௪௬) மாற்பித்தியார்
௪௭) மாற்பித்தியார் (இயற்பெயர் பித்தி)
௪௮) மாறோக்கத்து நாப்பசலையார்
௪௯) முள்ளியூர் பூதியார்
௫०) முன்னியூப் பூதியார்
௫௧) வரதுங்க ராமன் தேவியார்
௫௨) வருமுலையாருத்தி
௫௩) வில்லிபுத்தூர்க் கோதையார்
௫௪) வெண்ணிக் குயத்தியார்
௫௫) வெள்ளி வீதியார்
௫௬) வெறிபாடிய காமக்கண்ணியர்

தொகுப்பு : விக்கிபீடியா.

நன்றி.
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

"பெண்" என்பதன் வேறுசொற்கள்

"பெண்" என்னும் சொல்லின் வேறுசொற்கள்




மகடூஉ, ஆடவள், மாது, மகள் (மகளிர்), தையல், ஆட்டி, ஆயிழை, அணங்கு, பிணவு, பூவை, பாவை, பெண்டு, ஏழை, கிழத்தி, காந்தை, காரிகை, கோதை, சுரிகுழல், நல்லாள், நுண்ணிடை, மடவரல், மடவோள், மாயோள், மானினி, மின், வஞ்சி, நங்கை, விறலி, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண், "பெண்".
பெண் என்னும் சொல்லுக்கு தமிழில் யான் கேள்வியுற்ற வேறுசில சொற்கள்.

நன்றி
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Saturday, March 2, 2019

இதழகற்குறட்பாக்கள்

இதழகற்குறட்பாக்கள் இருபத்தெட்டு:



இதழகற்குறள், அதாவது ஒலிக்கும்போது இதழ்கள் ஒட்டா வண்ணம் ஒலிக்கும் குறட்பாவென்று ஒரேயொரு குறளைத்தான் சொல்லுவர். அது, துறவு என்னும் அதிகாரத்தின்கீழ் "யாதனின் யாதனி" என்று தொடங்கும் குறள். ஆனால், அப்படியான இதழகற்குறள்கள் இருபத்தெட்டு உள்ளன.
"ப" மற்றும் "ம" வரிசை எழுத்துகள் இடம்பெறாத குறட்பாக்களே இதழகலிகள் எனப்படுகின்றன. அவற்றை பதிவிட்டுள்ளேன்.

யாழ்ப்பாணத்து வேலுப்பிள்ளை என்னும் புலவர் #_திருத்தில்லை_நீரோட்டக_யமகவந்தாதி" என்னும் ஒரு அந்தாதி நூலைச்செய்துள்ளார். அவ்வந்தாதியின் 100 பாக்களும் இதழகல் பாக்களே. அதைப்பற்றி மற்றோர்நாள் பார்க்கலாம். இப்போது இக்குறட்பாக்களைப் படிக்க.

1) தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுறைந் தற்று. 208

2) வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய
வாழ்வாரே வாழா தவர். 240

3) அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட்
கன்றிய காத லவர். 286

4) இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. 310

5) யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன். 341

6) இன்சொலா லீத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலாற்
றான்கண் டனைத்திவ் வுலகு. 387

7) நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது. 419

8 ) அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
ரஃதறி கல்லா தவர். 427

9) தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில். 446

10) ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில். 472

11) எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல். 489

12) செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த வுணர்ந்து செயல்.516

13) அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. 523

14) கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது
தூக்கங் கடிந்து செயல். 668

15) வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள்
யானையால் யானையாத் தற்று. 678

16) நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
யொட்டாரை யொட்டிக் கொளல். 679

17) கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல். 894

18) எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து. 1080

19) நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து 1082

20) உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண். 1177

21) வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை
யாரஞ ருற்றன கண்.1179

22) காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து. 1211

23) நனவினா னல்கா தவரைக் கனவினாற்
காண்டலி னுண்டென் னுயிர். 1213

24) நனவினா னல்காரை நோவர் கனவினாற்
காதலர்க் காணா தவர்.1219

25) தொடியொடு தோணெகிழ நோவ லவரைக்
கொடிய ரெனக்கூற னொந்து. 1236

26) உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ
யாருழைச் சேறியென் னெஞ்சு. 1249

27) காணுங்காற் காணேன் தவறாய காணாக்காற்
காணேன் தவறல் லவை. 1286

28) தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத்
தினிய விருந்ததென் னெஞ்சு. 1296

***************************************

நன்றி. வணக்கம்
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்
உதவி : வலைத்தளம்

Wednesday, February 27, 2019

சென்னை என்னும் மாதரசன் பட்டினம்

சென்னை என்னும் மாதரசன்பட்டினம் சுருக்கவரலாறு:









மதராசு என்பது சென்னை மாநகரமாக 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆங்கிலேயர்களால் 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி உருவாக்கப்பட்டதாக கருதி, சென்னையின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால், சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, நான் பிறந்த எங்கள் கிருட்டிணகிரி மாவட்டம் பெண்ணேசுவர மடம் கிராமத்தில் 1973-ம் ஆண்டு தமிழகத்தொல்லியல்துறையால் பெரிய பாறைக்கல்வெட்டு ஒன்று படியெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டில், சென்னையில் கடற்கரை ஒட்டி இன்றும் அதே பெயரில் இருக்கும் பல இடங்களின் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் அன்றைய துறைமுக நகரங்களாக இருந்தவை.

விசயநகர ஆட்சியின்போது முளுபாகல் மண்டலேசுவரனாக (ஆளுநர் பதவியில்) இருந்தவர் குமாரகம்பண்ணன். இவர் மதுரையில் சுல்தான்களை ஒழித்தவர். முளுவாய் அரசின் கீழ் பையூர் நாடு இருந்தது. பையூர் சோழர்களின் நிகரிலிச்சோழ மண்டலத்தின் கீழ் இருந்தது.

விசயராசேந்திரனின் கீழ் பையூரில் படைகளை வைத்து ஆட்சிசெய்த சிற்றரசன் மதுராந்தகன் வீரநுளம்பன் ராசநாராயணன் கங்கப்பெருமாள் என்பவர் ஆவார். அவரது கல்வெட்டுகள் பெண்ணேசுவர மடம் பெண்ணைநாயனார் கோயிலில் உள்ளது. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பையூர் பகுதி விஜயநகர ஆளுகையின் கீழ் வந்தது. முளுவாய் ஆளுநர் குமாரகம்பண்ண உடையாரின் படைத்தளபதி சோமப்பதண்ட நாயகனின் மகன் கூளிமாராயனின் வீரச் செயல்களை 31 வரிகளில் பெரிய கல்வெட்டாக வெட்டி வைத்துள்ளார். இந்த கல்வெட்டில்தான் சென்னையின் பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அக்கல்வெட்டின் 16, 17வது வரிகளில்....

“...சானபட்டணம், புதுப்பட்டினம், மாதரசன் பட்டினம் சத்திக்குவரிய ...பட்டினம், நீலாங்கரையான்பட்டினம், கோவளம் (வரி 16)

மற்றுள்ள பல பட்டினங்களும், கரையும், துறையும் உட்படக் கொண்டு இராசாவின் கைய்யிலே காட்டிக்குடுத்து இராசபதமாந தாந’’ (வரி 17)
என்று குறிப்பிட்டுள்ளது.

இக்கல்வெட்டு 1367-ஆம் ஆண்டு  வெட்டப்பட்டது, நீர் பாசனத்துக்காக கண்டரக்கூளிமாராயன் பெருவாய்க்கால் வெட்டிய செய்தி மற்றும் வீரச்செயல்கள் பறைசாற்றுகிறது.

இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்துக்காக, தமிழகத்தில் உள்ள விசயநகர காலத்துக் கல்வெட்டுகளை முனைவர் ஒய்.சுப்பராயலு, தொல்லியல் முனைவர் ராஜவேல், பூங்குன்றன் ஆகியோர், காவேரிப்பட்டினத்தில் நடந்த தமிழகத் தொல்லியல் கழகத்தின் 26-வது கருத்தரங்கில் திரும்பவும் படியெடுத்து மீளாய்வு செய்து சென்னையின் பழைய பெயரான மதராசு என்கிற பெயர் சுமார் 700 ஆண்டுகள் பழமையானது என்பதை உறுதி செய்துள்ளனர்.

(இதே ஊர்க்கல்வெட்டில் தான் கையூட்டு(இலஞ்சம்) வாங்குவோருக்கு மரண தண்டனை கொடுக்க கட்டளையிடும் செய்தியும் கிடைக்கிறது)

சென்னை 380 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு உருவாக்கப்பட்டது என கூறுவது வரலாற்றுப் பிழையாகும். சென்னை 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரமாகும். பெண்ணேசவர மடம் கல்வெட்டில் உள்ள குறிப்புகள் மூலம் மதராசப்பட்டினம் (எ) சென்னை 650 வயதை கடந்துள்ளது.

இக்கல்வெட்டில் குறிப்பிடப் பட்டிருக்கும் ஊர்கள் புதுப்பட்டினம், நீலாங்கரை, கோவளம் என்னும் பெயரில் தற்போதும் இருப்பது நீங்கள் அறிந்ததே, அதன் வரிசையில் மதராசன் பட்டினம் என்று குறிப்பிட்டது தற்போதைய சென்னையின் ஒரு பகுதி என்பது புலனாகிறது.

இந்த மாதரசன் யார் என்ற குறிப்பு யாண்டும் சரிவர கிடைக்கப்பெறவில்லை. ஆனால், மாதரசன் பட்டினம் என்ற பெயரில் இவ்வூர் 1300களிலும் அதற்கு முன்பும் அழைக்கப்பட்டதற்கான சான்று இக்கல்வெட்டால் கிடைக்கப்பெருகிறது.

அதற்கு முன்பும், இப்பகுதி ஊர்களான திருமயிலை, திருவான்மியூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில், திருவேற்காடு, திருவலிதாயம்(பாடி), திருவல்லிக்கேணி என்னும் பழைய ஊர்கள் இதே பெயரில் அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் தேவாரம் மற்றும் நாலாயிரப்பனுவல்களால் கிடைக்கின்றன.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்கள் ஈராயிரமாண்டுகள் பழைய ஊர்களே.

இனி, இவ்வூர் சென்னை என்று எப்படி மாறியது என்று பார்ப்போம்.

விசயநகர ஆட்சியின்போது அதன்சார்பில் மாதரசன் பட்டினப்பகுதியை வேலூரைக்கோட்டையைத் தலைமையாகக்கொண்டு ஆண்டவர் வெங்கடபதி நாயக்கர். அவர் 1639ல் சென்னையைச் சுற்றியுள்ள நிலத்தை ஆங்கிலேயர்களான பிரான்சிசு டே மற்றும் ஹென்றி ஹோகன் என்ற இருவருக்கு 16000 வராகன் வாங்கிக்கொண்டு பட்டா எழுதிக் கொடுத்தார். எழும்பூர் ஆற்றுக்கும் கூவம் ஆற்றுக்கும் இடையில் இருந்த நிலம்தான் அவர் பட்டா எழுதிக் கொடுத்த நிலம்.

அப்படி அந்த நிலத்தை ஆங்கிலேயரிடம் கொடுக்கும் போது, தன்னுடைய தந்தையாரின் பெயரான சென்னப்பன் நாயக்கர் எனும் பெயரில் அந்த இடம் அழைக்கப்பட வேண்டும் என்று எழுதிக்  கொடுத்தார்.

வெங்கடபதி நாயக்கரின் தந்தையார் பெயர் சென்னப்பன் நாயக்கர். இந்தச் சென்னப்பன் எனும்  பெயரை வைத்து சென்னப்ப பட்டினம் என்று அந்த இடத்திற்கு பெயர் வந்தது. இந்தச் சென்னப்ப பட்டினம்தான் கடைசியில் சென்னப் பட்டினமாக மாறியது. பிறகு சென்னப்பட்டினம் சென்னையாக மாறியது. அந்தச் சமயத்தில்தான் சென்னைப் பட்டினத்திற்கு வடக்கே மதராச பட்டினம் இருந்தது. ஆங்கிலேயர்கள் புனித சார்ச் கோட்டை கட்டி, வணிக நகரமாக்கி வாழ்ந்தனர்.

வெங்கடபதி நாயக்கர் ஆங்கிலேயர்களுக்கு பட்டா போட்டுக்கொடுத்த நாள் 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி, அதைத்தான் சென்னை உருவாக்கப்பட்டதாக நாளாகக்கருதி, சென்னையின் பிறந்தநாள் "சென்னை நாள்" என்ற பெயரில் கொண்டாடுகிறோம். பார்த்தீர்களாக, நம்மண் விலைபோன நாளைத் தான் விழாவாகக் கொண்டாடுகிறோம். என்னே கொடுமை.
1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் நாள் தமிழக அரசே சென்னை மாநகரம் என்று பெயர் மாற்றம் செய்தது.

இனி இதே பெயர் நிலைக்கும். நாம் மாற்ற முடியாது. இருந்தாலும் நாம் இந்தவரலாற்றையெல்லாம் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

உங்களின் பொன்னாநேரத்தையொதுக்கிப் படித்தமைக்கு நன்றி, வணக்கம்.

**********************************

படங்கள் மற்றும் தகவல் உதவி : பல்வேறு வலைத்தளங்கள் மற்றும் கிருட்டிணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் மற்றும் வரலாறு நூல்.

தொகுப்பு : தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Thursday, February 21, 2019

உலகத்தாய்மொழிநாள்

உலகத்தாய்மொழிநாள் 21.02.1940 வரலாறு:
(உலகத்தமிழ்மொழிநாள்)



உலகத்தாய்மொழிநாள் என்பது வங்கமொழிப்போரில் உயிரிழந்த 5 பேரின்  நினைவாக, வங்காள அரசின் முயற்சியால் ஐக்கிய நாடுகள் அவையின் யுனெசுகோ-வால் 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் நாள் அறிவிக்கப்பட்டு, 2000ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் முதல் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது என்பது இதுவரை இருக்கிற வரலாறு. ஆனால், அதைவிட 60 ஆண்டுகால பழைய உலகத்தாய்மொழிநாள் வரலாறு தமிழர்களுக்குண்டு. அதையறிந்துகொள்வோம்.

1937ஆம் ஆண்டு இந்தி கட்டாயப்பாடமாக்கப்பட்டு இந்திய அரசால் திணிக்கப்பட்டது. அப்போது மூண்டதே முதல் இந்தி திணிப்பு எதிர்ப்புப்போர். நடத்தியவர் ஐயா பெரியார். தாய்மொழி விருப்பப்பாடமாகவும் இந்தி கட்டாயப்பாடமாகவும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல் இந்தி திணிப்புப்போரைத் தொடங்கினார். மறைமலையடிகளாரையும் நாவலர் சோமசுந்தரபாரதியாரையும் தலைமையேற்றச்செய்து, பெரியார் தொண்டராக இருந்து இப்போராட்டத்தை நடத்தினார்.

இதுவே முதல் இனப்போர், மொழிப்போர். தமிழர்கள் தம் இனம்காக்க மொழிகாக்க ஒன்றரையாண்டுகள் நெடும்போராட்டமாக இந்தி திணிப்பு எதிர்ப்புப்போராட்டத்தை நடத்தினர், பலவுயிர்களை பறிகொடுத்தனர். அதில் உயிரிழந்தவர்கள் தான் ஐயா தாளமுத்துவும் நடராசனாரும். 1940 பிப்ரவரி 21ஆம் நாள் இந்தி கட்டாயப்பாடம் என்பது ஒழிக்கப்பட்டது. தமிழர்கள் மொழிபோரில் வெற்றிகண்டனர். அதன்பிறகு, 1947, 1950 சட்டம், மீண்டும் 1965ல் இரண்டாம் இந்தி திணிப்பு எதிர்ப்புப்போர் உருவானது, இது ஒரு நீண்ட வரலாறு. (படித்தறிக)

ஐ.நா அவையால் வங்கமொழிப்போர் நினைவாக உலகத்தாய்மொழிநாள் அறிவிக்கப்படுவதற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தாய்மொழிப்போர் நிகழ்த்தி வெற்றிகண்டு உலகத்தாய்மொழிநாளை உருவாக்கினர். உலகத்து மக்கள் அனைவரும் இத்தாய்மொழிநாளைக் கொண்டாடினாலும், அதற்கு முழு உரிமையுடையவர் தமிழர்களே.

இது மட்டுமின்றி, உலகமொழிகளுக்கெல்லாம் மூத்தமொழியாகவும் தாய்மொழியாகவும் இருப்பது தமிழேயாகையால் இது உலகத்தமிழ்மொழிநாளாகும்.

இந்நாளில் தாய்த்தமிழ்மொழிகாக்க நாம் சில உறுதிகளை பூணவேண்டும்.

தமிழிலேயே பேசவேண்டும்
தமிழிலேயே படிக்கவேண்டும்
தமிழில் பிறமொழி கலப்பைத் தவிர்க்கவேண்டும்
வழிபாட்டுமொழி வழக்காடுமொழி தமிழாகவே இருக்கவேண்டும்.
பிறமொழி தவிர்த்து நற்றமிழிலேயே பெயரிடவேண்டும்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழாகவே இருக்கவேண்டும்.

அனைவருக்கும் உலகத்தாய்மொழிநாள் வாழ்த்துகள்.

நன்றி. வணக்கம்.
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்