Wednesday, July 24, 2019

அதியமான் நெடுமானஞ்சி ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்தல்

அதியமான் நெடுமானஞ்சி ஒளவையாருக்கு அரிய நெல்லிக்கனியை ஈந்த வரலாறுகூறும் புறநானூற்றுப்பாடல் - ௯௧


வணக்கம்,
வள்ளல் அதியமான் நெடுமானஞ்சி ஒளவையாருக்கு நீண்டநாள் வாழவைக்குந் தன்மையுடைய அரியவகை நெல்லிக்கனியை ஈந்தார், அதனாற்றான் நெடுமானஞ்சி கடையெழுவள்ளல்களில் வைத்துப்போற்றப்பெறுகிறான் என்ற கதை நாம் அனைவருமறிவோம். ஆனால், இக்கதை எங்கு, யாரால் கூறப்பட்டது? உண்மையிலேயே நெடுமானஞ்சி நெல்லிக்கனியை ஒளவைக்கு ஈந்தானா இல்லையா? என்று நாம் அறிந்திலோம். அதற்குச்சான்று ஏதேனுமுண்டா என்றும் தேடினோமல்லோம். அதனால், அச்சான்றைத் தேடலாம் என்று புறநானூற்றில் உலாவினேன்.

சான்றுண்டு. இதற்குச்சான்றாக நெல்லிக்கனியைப்பெற்ற ஒளவையாரே நெடுமானஞ்சியை வாழ்த்தி பாடல்பாடியிருக்கிறார். இதோ அச்செய்யுளை இங்கே பதிந்துள்ளேன். அந்நெல்லிக்கனி சாகாத்தன்மையளிக்கவல்லதென்பர், அஃது அறிவுக்கொவ்வாதது. உண்மையில் அது சாகாத்தன்மையுடைத்தாயின் அதையுண்ட ஒளவையார் இந்நாள்வரை சாகாது இருந்திருக்கவேண்டுமே.!!

ஒருக்கால் நீண்டநாள் வாழவைக்கும் அரிய மருத்துவத்தன்மையள்ளதாய் இருந்திருக்கலாம் அன்றி மிகச்சுவையுடையதாய் இருந்திருக்கலாம்.
எது எவ்வாற்றாயினும் நெல்லிக்கனியை ஈந்து நெடுமானஞ்சி வல்லளெனப் போற்றப்பெற்றான் என்பது உண்மை.

இந்நெல்லிகனியீந்த வரலாற்றை,  சிறுபாணாற்றுபடையில் ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழிநாட்டு நத்தத்தனார் பாடும்போது,

" .................மால்வரை
கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீங்கனி ஒளவைக் கீந்த
வுரவுச்சினங் கனலுமொளிதிகழ் நெடுவேல்
அரவக்கடல் தானை அதிகனும்"

என்று குறிப்பிடுகிறார்.

அதியமான் நெடுமானஞ்சி தகடூரை தலைநகராகக்கொண்டு தகடூர்நாட்டையாண்ட குறுநில மன்னன். தகடூரென்பது தற்போதைய தருமபுரியாகும். இம்மாவட்டத்தில் அதியமான்கோட்டை என்னும் ஊர் தற்போதுமுண்டு.

நன்றி வணக்கம்.

*****************************

புறநானூறு_௯௧(91)

பாடியவர் : ஔவையார்.
பாடப்பட்டோன் : அதியமான் நெடுமானஞ்சி.
திணை : தும்பை.
துறை : வாழ்த்தியல்.




செய்யுள்:

வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை,
ஆர்கலி நறவின், அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.

விளக்கம் :

வெற்றிவாள் ஏந்தி பகைவர் போர்க்களத்திலையே மடியும்படி வென்ற வீரக்கழல் அணிந்தவன் அதியர் கோமான். அதியர் களிப்புக்காக நறவுக்கள்ளை உண்பவர்கள். இவன் போரிலே வென்ற திருவினைப் பொன்மாலையாக்கி அணிந்திருப்பவன். ‘அஞ்சி’ என்னும் பெயர் கொண்டவன். சிவபெருமான் பால்போன்ற வெண்ணிற நெற்றியைக் கொண்டவன். நீலமணி நிறம் கொண்ட தொண்டையை உடையவன். பெருமானே, நீ இந்தச் சிவபெருமான் போல நிலைபெற்று வாழ்வாயாக! தொன்றுதொட்டுப் பெருமலை வெடிப்பு ஒன்றில் பெறுவதற்கு அரிதாக, ‘சிறியிலை நெல்லி’ப் பழம் ஒன்றை, உண்டால் சாகாமல் நீண்டநாள் வாழக்கூடிய அதன் தன்மையை உன் மனத்திலேயே வைத்துப் பூட்டிக்கொண்டு, நான் சாகாமல் நீண்டநாள் வாழவேண்டும் என்று எண்ணி என்னை உண்ணச் செய்தாயே. (அதனால் நீ சிவபெருமானைப் போல வாழ்க).

******************************

உதவி : புறநானூறு மற்றும் சிறுபாணாற்றுப்படை நூல்கள்

தொகுப்பு : தனித்தமிழாளன்

படம் : தகடூர் அதியமான்கோட்டை என்னும் ஊரில் நெடுமானஞ்சி மற்றும் ஒளவையாருக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுமண்டபத்திலுள்ள சிலைகள்.

நன்றி. வணக்கம் 🙏

Monday, July 22, 2019

முருகன் வெறியாடல் வழிபாடு

முருகனுக்குக் குருதிகலந்த தினை தூவி வெறியாடல் - முருகாற்றுப்படுத்துதல்


நெடுவேள் முருகனுக்கு ஆட்டைப் பலிகொடுத்து, அதன் குருதியை செந்தினையில் கலந்து தூவி முருகவேளை ஆற்றுப்படுத்தி வழிபட்ட செய்தியை விளக்கும் பதிவு இது. பலியில்லா வழிபாடே தமிழர் வழிபாட்டுப் பண்பாடு என்று வாதிடுவோர் பார்த்துத்தெளிதற்கு. பேருரையைப் படித்து விளக்கிக்கொள்ள இயலாதவர்கள், என் சிற்றுரையைப் படிக்கவும்.




நூல் :  அகநானூறு_22

பாடியவர் : வெறிபாடிய காமக்கண்ணியார்


அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும்
கணம்கொள் அருவிக் கான்கெழு நாடன்
மணம்கமழ் வியன்மார்பு அணங்கிய செல்லல்
இதுஎன அறியா மறுவரற் பொழுதில்
'படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை 5

நெடுவேட் பேண தணிகுவள் இவள்' என,
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற,
களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி,
வளநகர் சிலம்பப் பாடிப் பலி கொடுத்து,
உருவச் செந்தினை குருதியொடு தூஉய், 10

முருகுஆற்றுப் படுத்த உருகெழு நடுநாள்,
ஆரம் நாற, அருவிடர்த் ததைந்த
சாரல் பல்பூ வண்டுபடச் சூடி,
களிற்று - இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் வயப்புலி போல, 15

நல்மனை, நெடுநகர்க் காவலர் அறியாமை
தன்நசை உள்ளத்து நம்நசை வாய்ப்ப,
இன்உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து,
நக்கனென் அல்லெனோ யானே - எய்த்த
நோய்தணி காதலர் வர, ஈண்டு
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே? 21

துறை :

வரைவிடை வைத்துப் பிரிந்தகாலத்து, தலைமகள் ஆற்றாளாக, தோழி தலைமகனை இயற்பழிப்ப, தலைமகள் இயற்பட மொழிந்தது, தலைமகன் இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாக, தோழியாற் சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொல்லியதூஉமாம்.

பேருரை :


தெய்வத்தை உடைய உயர்ந்த மலையின் உச்சியிலிருந்து விழும் ஊற்றுக் கூட்டங்களைக் கொண்ட அருவியினால் வளர்ந்த காடுகள் பொருந்திய நாடனாகிய தலைவனது, நன்மணம் கமழும் அகன்ற மார்பு வருத்தியதனால் உண்டான துன்பம் இது என்று அறியாத செவிலியும் தாயும் மனஞ்சுழலும் சமயத்தில், பகைவர்களை அழித்த பலவகையான புகழ்களையும் பரந்த கைகளையும் உடைய நெடிய முருகவேளை வழிபட இவள் நோய் தனிவாள் என்று முதுமையான வாயையுடைய பெண்டிர் அதுவே உண்மையாகக் கூற,

அதைக் கேட்ட தாய்மார் வேலனைக் கொண்டு வெறியாடும் களத்தை நன்றாக அமைத்து முருகனுக்குக் கண்ணியைச் சூட்டி வளப்பமுடைய கோயிலில் எதிரொலிக்கும்படி பாடச்செய்து, பலியைக் கொடுத்து அழகிய சிவந்த தினையை இரத்தத்தோடு தூவி முருகனை வழிப்படுத்தி வருவித்த அச்சம் நிரம்பிய நடுயாமத்தில், சந்தனம் மணம் வீச அரிய மலைப்பிளப்பிலே தழைத்துப்பூத்த மலைச்சாரலுக்குரிய பலவகை மலர்களை வண்டுகள் மொய்க்கும்படி தலையில் அணிந்து, யானையாகிய இரையைத் தேடிய பார்வையையும் நடையையும் ஒளித்து இயங்கும் வழக்கத்தையும் வலிமையையும் உடைய புவியைப்போல, நல்ல மனைகளையுடைய நீண்ட ஊரைக் காக்கும் காவலர் அறியாமல், தன்னை விரும்பும் விருப்பத்தை உடைய உள்ளத்தைப் பெற்ற நம்முடைய விருப்பம் நிறைவேறும்படியாக, இனிய உயிர் வாடாமல் தளிர்க்கும் படி  தலைவர் அனையுந்தோறும், உடம்பு பூரித்துச் சிரித்தேன் அல்லனோ யான், என் உடம்பு இளைத்தற்குக் காரணமான காமநோயைத் தணிக்கும் காதலரின் வரவு இங்கு அயலானாகிய வேலனுக்குத் தெரியாமற் போனதைக் கண்டு?

****************************

சிற்றுரை :


தலைவன் தலைவியை மணஞ்செய்துகொள்வேன் என்றுகூறிவிட்டுச் பணிநிமித்தம் சென்றுவிடுகிறான். தலைவன் வர காலதாமதமாகவே, தலைவி தூயருற்று, பித்துபிடித்தாற்போல் இருக்கிறாள். இதைக்கண்ட தாயும் செவிலித்தாயும், தலைவிக்கு ஏதோ பேய்பிடித்ததாக எண்ணி, முருகனுக்கு வெறியாடல் வழிபாடு செய்தால் சரியாகிவிடும் என்று நினைக்கின்றனர். முதுபெண்டிரும் அதுவே சரி என்கின்றனர்.

வெறியாடற்களம் அமைத்து நெடுவேலை நாட்டி, கண்ணி சூட்டி, பலி கொடுத்து, செந்தினையில் அந்தக்குருதியைக் கலந்து வேலுக்கும் முருகனுக்கும் தூவி வழிபட்டு முருகனை வரவழைக்கின்றனர். இதைக்கண்ட தலைவி, "நான் தலைவனின் பிரிவால் தான் இப்படி இருக்கிறேன் என்ற காரணத்தை அறியாத தாயும் செவிலியும் இப்படி முருகனுக்கு வெறியாடல் நிகழ்த்துகின்றனரே", இதை இவர்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால், முருகனுக்கும் இது தெரியவில்லையா" என்று நினைக்கிறாள். தலைவனின் வருகையே இதற்கு மருந்து என்று நகைத்துக்கொள்கிறாள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தோழி, தலைவனிடம் இவற்றைக்கூறி விரைவாக வந்து தலைவியை மணந்துகொள்க என்று கூறுகிறாள். முருகனுக்கு வெறியாடல் செய்யும் அந்த நடுஇரவு நேரத்தில் தலைவனும் அங்கு வருகிறான்.

**********

இப்பாடலை படித்துவிட்டு, இதெல்லாம் பொய், முருகனுக்கு உயிர்ப்பலி குருதித்தினையைத் தூவியெல்லாம் வழிபாடு நடக்கவில்லை என்று வாதிடுவோர், தக்க சான்றுகளுடன் வரவும். இதை நம்பாதவர்களுக்கு நாளை திருமுருகாற்றுப்படையிலேயே இதற்குச் சான்று காட்டுகிறேன். அப்போதாவது நம்புவீராவென்று பார்ப்போம்.

நன்றி. வணக்கம்.
தொகுப்பு : தனித்தமிழாளன்

***********

மதவலி நிலைஇய மாத்தாட் கொழவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் ளரிச்
சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துனையற அறுத்துக் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியொடு இன்னியம் கறங்க
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகியம் கிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப் படுத்த உருகெழு வியனகர்
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட”

இந்த அகநானுற்றுப் பாடலிலும் திருமுருகாற்றுப் படைப் பகுதியிலும் சொல்லப் பெறும் முருக பூசையில் பல செய்திகள் பொதுவாக இருத்தலைக் காணலாம்.

இப்பாட்டில் அணங்குடை நெடுவரை, சாரல் என்பன குறிஞ்சித் திணைக்குரிய நிலம். உருகெழு நடுநாள் என்பது அதற்குரிய காலம், இவை இரண்டும் முதற் பொருள்.

1. மிக்க வலிமை நிலைபெற்ற பெரிய காலையுடைய கொழுத்த ஆட்டுக்கிடாயின் இரத்தத்தோடு கலந்த தூய வெள்ளையரிசியைச் சிறு பலியாக இட்டு, பல தானியக் கூடைகளை வைத்து, பசிய சிறிய மஞ்சள் நீரோடு மணமுடைய பண்டங்களைத் தெளித்து, தன்மையையுடைய அலரியின் மணமுடைய மாலையை அளவு சரியாக இருக்கும் படி, நறுக்கி, எங்கும் தொங்கப்படி அலங்கரித்து, மணமுடைய தூபம் எடுத்துக் (குறிஞ்சிப் பண்ணைப் பாடி, ஒலிக்கின்ற இசையையுடைய அருவியின் ஓசையோடு இனிய வாத்தியங்கள் முழங்க, பல நிறங்களையுடைய மலர்களைத் தூவி, யாரும் அஞ்சும்படி மிகச் சிவந்த தினையைப் பரவ வைத்து, குறமகளாகிய பூசாரிச்சி முருகனுக்குரிய துடியையும் தொண்டகப் பறையையும் வாசிக்கச் செய்து, தெய்வம் இல்லை யென்பவரும் அஞ்சும்படியாக முருகனை வருவித்த அழகையுடைய விசாலமான கோயிலில், வெறியாடும் இடம் எதிரொலிக்கும்படி பாடி, பலவாகிய கொம்புகளை ஒருங்கே ஊதி, வளைந்த மணியை அடித்து, ஓடாத வீரத்தையுடைய முருகனுடைய வாகனமாகிய பிணி முகம் என்னும் யானையை வாழ்த்தி, வேண்டியவர்கள் வேண்டியபடி யெல்லாம் வந்து முருகனை வழிபட.

Saturday, July 20, 2019

தமிழரின் வேல்வழிபாடு

தமிழரின் வேல்வழிபாடு


என்னடா தைப்பூசம் எல்லாம் முடிந்துவிட்டதே, இப்போது இந்த வேல்வழிபாட்டைப்பற்றி பதிவிடுகிறானே என்று நினைக்கிறீர்களா? என்ன செய்ய இப்போதுதான் நேரம் கிடைத்தது. தைப்பூசத்திற்கு மட்டும் வேலை வணக்குபவர்களல்லர் யாம்.
"வேலை வணங்குவதே வேலை" யாகக்கொண்டோர். எப்போது பதிவிட்டாலென்ன?



௧) #வேல் - பெயர்க்காரணம்:

வெல் = வேல்!
'வெல்' என்ற வினைச்சொல்லே நீண்டு 'வேல்' என்ற பெயர்ச்சொல் ஆகிறது! ஆகவே, வேல் = வெற்றி!

௨) #வேல் - தமிழ்த்தொன்மம்:

ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் = வேல்! ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி-ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப் பாடுறா! வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு! திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு! சங்க காலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது!  பின்னாளில் தான் ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும்! ஆகமம், அது இது-ன்னு நுழைத்த பின்பே, ஒரு சாராரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன! சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்! இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது! வேல் வழிபாடு-ன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, சிலை மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது.

௩) #வேலின்_அமைப்பு:


பொதுவாக, வேல், எஃகினால் செய்யப்படும் போர்க் கருவி!  எஃகு ஒரு கலப்பு உலோகம்! இரும்பு + கரிமம் குறிப்பிட்ட அளவில் கலந்து, உலைக்களத்தில் வடிக்கப்படும் கருவி! மன்னர்களின் வேல் எஃகு என்றால், சில வேடர்களின் வேல் கல்லால் செய்யப்பட்டு, நெடுமரத்தில் பொருத்தப்பட்டும் இருக்கும்! ஆயர்களும், ஆநிரைகளைக் காக்க, வெட்சி/கரந்தைப் பூச்சூடி, கையில் வேல் வைத்து இருப்பார்கள்!

௪) #வேலின்_தோற்றம்!

* வேலின் முகம் = சுடர் இலை போல இருக்காம்!
* வேலின் மெய் = நீண்ட நெடு வேலாம்!

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்;
சினம்மிகு முருகன் தண் பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கதெழு நெடுவரை - (அகநானூறு 59 - மருதன் இளநாகனார்)

* வேலின் தண்டு இலகுவாகவும், தண்டின் உட்புறம் உள்ளீடற்று (hollow) ஆக இருக்கும்!
* வேலின் முகமோ,  பளு+ கூர்மை உடையதாக இருக்கும்!

௫) #வேலும்_ஈட்டியும்_ஒன்றா??

வேலும் ஈட்டியும் வேறு வேறு ஆயுதங்கள்!
* வேலின் முகம் = அகன்று விரிந்து இருக்கும்! ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்!
* வேலின் கீழ் நுனி = வட்டமாக முடியும்! ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்!

வேல் = பெருமை மிக்கது! மன்னர்களும், படைத் தலைவர்களுமே பெரும்பாலும் ஏந்துவார்கள்!
ஈட்டி = அனைத்து போர் வீரர்களிடமும் உண்டு!

வேல் எறிவதும், சிறந்த பகைவர்களை நோக்கியே! எல்லார் மேலேயும் வேல் எறிந்து விடுவதில்லை!

கான முயல் எய்த அம்பினில் - யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது என்ற குறளே இதற்குச் சான்று! முயலுக்கு அம்பு, யானைக்கு வேல்!

௬) #வேல்_வழிபாடு:

சங்க காலத்தில் வேல் வழிபாடு எப்படி இருந்தது?
வேலன் வெறியாட்டு, வெறி அயர்தல்-ன்னு சொல்லுவர். இதில்...."வேல்" ஒரு முக்கியமான பூசைப் பொருள்!

"வெண்மணல் பரப்பி, செந்நெல் தூவி,
பந்தல் இட்டு, பூ பல பெய்து
பசுந்தழை, காந்தள், பூக்குலை கட்டி" என்று அலங்கரித்து (அணி செய்து), வேலை மையமாக நட்டு வழிபடுதல் வழக்கம்!

பொய்யா மரபின் ஊர்முது வேலன்
கழங்கு மெய்ப் படுத்துக் கன்னம் தூக்கி
முருகு என மொழியும் ஆயின்
கெழுதகை கொல்? இவள் அணங்கி யோற்கே -(ஐங்குறுநூறு, கபிலர்)

* எதாச்சும் தலைவியின் காதல் நோய் இன்னதென்று அறியாத தாய், தலைவியின் மேல் ஏதோ பித்து/சூர் இறங்கி விட்டதாக நினைத்து, அதைப் போக்க முருகனுக்கு எடுக்கும் பூசை! இதை ஒரு ஆண் (வேலன்) நிகழ்த்துவான்!

* (அல்லது) தலைவியே, தன் காதலனைச் சேர முடியாது, அவன் ஒதுக்கியதால் அவனையே எண்ணியெண்ணி அன்பு மிகுந்து போய், முருகனை முன்னிட்டு ஆடிய வெறிக் கூத்து!

இதை ஆண்கள்-பெண்கள், இருவருமே வேல் பிடித்து ஆடின செய்திகள், சங்கத் தமிழில் உள்ளன!
* ஆண் ஆடும் போது = பூசை/குறி! கிடா வெட்டிப் பலி குடுத்து, அதன் குருதியை, அரிசியொடு கலந்து தூவுதல்
* பேதுற்ற பெண் ஆடும் போது = காதல் வலி! வெறியில் முருகனையே திட்டிப் பூக்களைத் தூவுவாள்!

தொல்காப்பியரும் இதற்கு ஒரு துறை ஒதுக்கி உள்ளார்! முருகனுக்கு உரிய காந்தள் பூச்சூடி ஆடுவது!

வெறி அறி சிறப்பின் வெவ் வாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தளும் - (தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல்)

காதல் வலி மிகுந்து போய் பெண்கள் ஆடிய வேலன் வெறியாட்டு, மிகவும் மனத்தை வலிக்க வைப்பவை!
ஒரு அழகிய மயில் (மஞ்ஞை), வெறியில் ஆடினா எப்படி இருக்கும்? ஆடி ஆடியே, அழுது அழுது, உள்ளமும் உடலும் தேய்ந்து போனாள்!

கடியுண் கடவுட்கு இட்ட செழுங்குரல் 
அறியாதுண்ட மஞ்ஞை ஆடு மகள் 
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கு
சூர் மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே - (குறுந்தொகை 105, நக்கீரர்)

ஒரு கட்டத்தில், காதல் வலியால், முருகனையே "மடையா"-ன்னு திட்டும் தலைவியின் பெருத்த ஆற்றாமையைக் காணலாம்!

வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே! - (நற்றிணை 34)

"காதலன் திடீரென்று என்னை ஒதுக்கும் போக்கில் துடிச்சிப் போய் நான் வாழுறேன்! இது அறியாமல், வேலன் வெறியாட்டை என் தாய் நடத்துறா. உனக்காவது தெரிய வேணாமா முருகவேளே? இந்தப் பூசைக்கு நீயுமா உடந்தையா?

நீ கடவுளே ஆனாலும் ஆகுக! அது பற்றிக் கவலையில்லை! மடவை முருகா (மடப்பயலே முருகா)...
நீ நல்லா இருடா! = மடவை மன்ற வாழிய முருகே!!"  என்று இவள்....முருகனிடம் திட்டியும் + கெஞ்சியும் + கண்ணீரால் முருகனைக் குளிப்பாட்டும் காட்சி.

௭) #சிலப்பதிகாரத்தில்_வேல்:



பத்துப்பாட்டு நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் வேலைப் பற்றிச் சிறிதளவே சொன்னாலும், அதை ஈடுகட்டவோ என்னவோ.... சிலம்பில், இளங்கோவடிகள், வேலின் பெருமையை மிக அழகாக, குன்றக் குரவையில் விவரிப்பார்!

வேல் கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ!

சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்! -ன்னு முருக பக்தரான நக்கீரர், இரண்டு அடிகளே பாட...

இரண்டே அடிகளா? இளங்கோ அடிகளா?

- என்று வேல் விருத்தமாய், அன்றே பாடினார் சமணச் செல்வரான இளங்கோ! இளங்கோவின் பண்பட்ட உள்ளம் தான் என்னே!!

சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும், 
ஏரகமும், நீங்கா இறைவன் கை "வேல்" அன்றே! -ன்னு தொடங்கும் இளங்கோ, வரிசையாக, "வேல் வேல்"-ன்னு ஒரு வேல் விருத்தத்தை, அருணகிரிக்கும் முன்பே பாடிவிட்டுச் செல்கிறார்!

சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே!
குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடு வேலே!
இணை இன்றித் தான் உடையான் ஏந்திய வேல் அன்றே!
திரு முலைப் பால் உண்டான் திருக் கை வேல் அன்றே!

-ன்னு சிலப்பதிகார வேல் வருணனையில், இசையும் கலந்து, 'பாட்டு மடை'யாகப் பெருகி வரும்!

௮) #முருகன்_வேறு, #வேல்_வேறு_அல்ல!

வேலுக்கு = உடம்பிடித் தெய்வ என்பது ஒரு பெயர்.
(உடன் பிடித் தெய்வம்)

நன்றி வணக்கம்
உதவி : வலைத்தளம்
தனித்தமிழாளன்

நாட்டெல்லைகள்

நாட்டெல்லைகள் :


வடக்குத் திசைபூழி வான்கீழ்தென் காசி
குடக்குத் திசைகோழிக் கோடாம் - கடற்கரையின்
ஓரமே தெற்காகும் உள்ளெண் பதின்காதம்
சேரநாட் டெல்லையெனச் செப்பு.

கடல்கிழக்குத் தெற்குக் கரைபுரள் வெள்ளாறு
குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
ஏணாட்டு வெள்ளா றிருபத்து நாற்காதம்
சோணாட்டுக் கெல்லையெனச் சொல்.

வெள்ளா றதுவடக்காம் மேற்குப் பெருவழியாம்
தெள்ளாற் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
ஆண்ட கடல்கிழக்காம் ஐம்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி.

மேற்குப் பவளமலை வேங்கடம் நேர்வடக்காம்
ஆர்க்கு மூவரி அணிகிழக்கு - பார்க்குளுயர்
தெற்குப் பினாகி திகழிருப தின்காதம்
நற்றொண்டை நாடெனவே நாட்டு.

வடக்குத் தலைமலையாம் வைகாவூர் தெற்குக்
குடக்குவெள் ளிப்பொருப்புக் குன்று - கிழக்கு
கழித்தண் டலைசூழும் காவிரிநன் னாடா
குழித்தண் டலையளவும் கொங்கு.

**************

நன்றி. வணக்கம்
தனித்தமிழாளன்

சங்க இலக்கியத்தில் மாட்டிறைச்சி

சங்கவிலக்கியத்தில் மாட்டிறைச்சி :




பண்டைத்தமிழர்கள் அனைத்திறைச்சிகளையும் உண்டவர்கள்தாம், அதில் மாட்டிறைச்சியும் விதிவிலக்கன்று. கள்ளும் இறைச்சியும் உண்டுகளித்தோரே தமிழர்களென்பது தமிழவைநூல்கள்வல்ல அறிவுடைச்சான்றோரறிவர். இவ்வாவூனுணவு தமிழர்கள் உண்டவற்றுளொன்றென நிறுவ சங்கவிலக்கியத்துளுள்ள மூவிரண்டு குறிப்புகளைத் தக்கசான்றுகளைக்கொண்டு விரித்துவரைகிறேன். சங்கவிலக்கியத்தில் இறைச்சியைப் பற்றிய குறிப்புகள் எண்ணிலடங்கா. அதில், மாட்டிறைச்சியை பற்றிய குறிப்புகளை மட்டும் தேடினேன். நேரங்கிடைக்காத  காரணத்தால் மிகுதியாகத் தேடவியலவில்லை, பொறுப்பீர்.

********************

#_அகநானூறு - 129 :
"கலங்குமுனைச் சீறூர் கைதலை வைப்ப
கொழுப்பா தின்ற கூர்ம்படை மழவர்"

பொருள் : கலங்குதற்குக் காரணமாகியா போர்முனையையுடைய சிறிய ஊரினர் தலையில் கையை வைத்து வருந்தும்படி, அவர்களுடைய கொழுத்த ஆவினை {மாடு} கவர்ந்துசென்று தின்ற கூரிய படையையுடைய மழவர்.

*****************

அகநானூறு -249 :
"தோகைத் தூவித் தொடைத்தார் மழவர்
நாகா வீழ்த்துத் திற்றி தின்ற
புலவுக்களந் துழைஇயத் துகள்வாய்க் கோடை"

பொருள் : மயிலின் தோகையிலுடைய இறகுகளை மாலையாகத் தொடுத்து அணிபவர்கள் மழவர்கள். அவர்கள், கன்றினையுடைய பசுவைக் கொன்று அதன் ஊனைச்சுட்டுத்தின்பார்கள். புலால்மணம் வீசும் அந்த இடத்தைத் துழாவியவாறு, புலால் துணுக்குகள் கலந்த புழுதியைத் தன்பால் கொண்டதாக, மேல்காற்று எழுந்து வீசும். {நாகா-நாகு+ஆ.|| நாகு-இளம்பசு,கன்று. ஆ-பசு}

*****************

அகநானூறு - 309 :
"வயவா ளெறிந்து வில்லி னீக்கி
பயநிரை தழீஇய கடுங்கண் மழவ
ரம்புசேட் படுத்து வன்புலத் துய்த்தெனத்
தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்
கொழுப்பா வெறிந்து குருதி தூஉய்ப்
புலவுப் புழுக்குண்ட வான்க ணகலறைக்"

பொருள் : வெற்றிவாளினாலே வெட்டிக்கொன்றும், வில்வினைத்தொழினாலே அடித்து வெருட்டியும், பசு மந்தைகளைக் கைகொண்ட அஞ்சாமையாளர்களான மறவர்கள், அம்புகளை தொலைவிற்குச் செல்லுமாறு செலுத்தி நிரைகாவலரை விரட்டியபின், அந்த நிரைகளோடு வன்மையான காட்டு நிலத்தையடைந்தனர்.

அங்கு, தெய்வம் குடிகொண்டிருக்கும் பருத்த அடியினையுடைய வேம்பிற்கு {வேப்பமரம்} ஒரு பசுவினைக் கொன்று பலியிட்டனர். அதன் குருதியைத் தூவித் தெய்வத்தைப் போற்றி வழிபட்டனர். பின், அப்பசுவின் ஊனைப் புழுக்கி உண்டுவிட்டுச்சென்றனர்.

*****************

#_நற்றிணை - 310 :
"...........வல்லை
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை
வள்ளுமைத் தண்ணுமை போல"

பொருள் : விரைவாக ஆன் கன்றை உரித்து உணவாகக் கொள்ளுகின்ற பாணனின் கையிலிருப்பதாகியதும், பெரியதாக உயிர்த்தலை உடையதுமாகிய தண்ணுமைப்போல. {தண்ணுமை - தோலிசைக்கருவி}

*****************

#_சிறுபாணாற்றுப்படை -175-177 :

"எயிற்றியர் சுட்ட இன்புளி வெண்சோறு தேமா
மேனிச் சில் வளையாய மொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவீர்”

பொருள் : முல்லை நிலத்தில் பாணர்களுக்கு எயினர்குலப் பெண்கள்  புளியங்கறியிட்ட சோற்றுடன் ஆமானின் இறைச்சியையும் தந்து அவர்களுடைய  பசியைத் தீர்ததனர்.
{ஆமான் - ஆ+மான் - பசுவும் மானும் கலந்ததுபோல ஒரு விலங்கு - இங்கு முல்லைநிலம் என்பதால் அது ஒருவகை பசுவாகத்தான் இருக்கவேண்டும்}

******************

மற்றும் பிற்காலத்தில் இது கீழ்மையாகப் பார்க்கப்பட்டது. தேவாரத்தில் "ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்" - மாட்டையுரித்துத் தின்று அலையும் புலையர்கள் என்று குறிப்பிடுகிறார் நாவுக்கரசர்.

சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் மாக்கதையுள், நந்தனார் என்பவர் சிவபெருமான் கோயிலுக்குத் தோல்பறை செய்துகொடுத்தார் என்றும் குறிப்பிடுகிறார். நந்தனார் பறைக்குடியார் ஆகையால், அவர் செய்துகொடுத்த தோல்பறை, மாட்டைக்கொன்று தின்று அதன் தோல்பறையாகவே இருக்கவேண்டும்.

*******************

இதைப்படித்துவிட்டு, தமிழாலேயே இதை மறுக்கவேண்டுமென அறிவுடையோர் சிலர்,  திருவள்ளுவர் புலான்மறுத்தல், கொல்லாமை என்று அறிவுறுத்தியுள்ளாரென எதிர்ப்பர். அவர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்கிறேன், இவ்விரு அதிகாரங்களையும் துறவறவியலின்கண் வைத்தார் வள்ளுவர். நாங்கள் இல்லறம் நடாத்துகிறோம், துறவு பூணவில்லை. துறவுபூணுங்கால் இவற்றைக் கடைபிடித்துக்கொள்கிறோம்.

வடவர்கள் பசுவைக்கொன்று தின்னவில்லையென்றும் என்னிடம் வாதிடவேண்டாம். யாகம் என்னும் பெயரில் மாட்டிறைச்சி தின்றவர்கள் அவர்கள்.

*************

மேலே குறிப்பிட்ட சங்கவிலக்கிய குறிப்புகளைக் கொண்டெழுதிய இம்மறுப்புப்பதிவை அறுப்போர் தக்கசான்றுகளுடன் அறுக்கலாம். மறுப்பறுப்புகள் வரவேற்கப்படுகின்றன.

நன்றி. வணக்கம்.

பதிவிற்குதவிய நூல்கள்:
1. அகநானூறு
2. நற்றிணை
3. சிறுபாணாற்றுப்படை
4. தேவாரம்
5. திருத்தொண்டர் மாக்கதை

தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்

Thursday, July 11, 2019

புறநானூறு பாடினோரும் பாடப்பட்டோரும்

புறநானூறு பாடினோரும் பாடப்பட்டோரும்


(யார் யாரைப்பாடியது என்னும் பெயர்த்தொகுப்பு)


அன்புடைத் தமிழர்களே வணக்கம்.
தன்னிகரில்லாத் தமிழரின் புறவாழ்வின் சிறப்பைப்பேசும் பழந்தமிழ்க்கருவூலம் புறநானூறு. புலவர்கள் பலர் பலரைப்பாடிய ஒப்பற்ற இந்நூல் நானூறு செய்யுட்களைக்கொண்டது. அவர்களின் பெயர்களை புறநானூறு பாடியோர் என்றும் புறநானூறு பாடப்பட்டோர் என்றும் பன்னாட்களுக்கு முன்னமே தனித்தனியே அடியேனின் முகநூலில் பதிவிட்டிருந்தது தாமனைவரும் அறிந்ததே. இருப்பினும், இப்பாக்கள் யார் யாரைப்பாடியது என்பதை தேடியறிவது அரிதான செயல். ஆகையால், அதனைத்தொகுத்து ஒரே பதிவில் கொண்டுவரவேண்டும் என்பது என்னுடைய பன்னாள் அவா. அதனால், அதைத்தொகுக்கும் பணியை மேற்கொண்டு ௪ நாட்களில் முடித்தேன்.

புறநானூறு என்பது பலரால் பலகாலங்களில் பலரைப்பாடிய தொகுப்பாகும். எனவே, இதில் தமிழவைக்கால பாக்களும் அதற்குப்பின்னே தோன்றிய பாக்களும் என்று இப்புறநானூற்றுநூல் தொகுக்கப்பட்ட காலத்திற்கு முன்புவரை தோன்றிய செய்யுள்கள் அடங்கி இருக்கும். இதில் பழந்தமிழ்ப்பாக்களும் ஆரியக்கதைகளும் அதன் குறிப்புகளுள்ள பாக்களும் என சேர்ந்தே இருக்கும். பாடிய பாடப்பட்டவர்களின் பெயர்களுள் சிலவும் அச்சார்புடையதாகவும் இருக்கும். உள்ளதை உள்ளவாறே தொகுத்துள்ளேன்.

செய்யுட்களை பாடினோர் பாடப்பட்டோர் பெயர்களை மட்டும் அறிவதோடமையாது. புறநானூறு நூலையும் குற்றமறக்கற்று தமிழறத்தோடு வாழ்க.

இப்பெயர்த்தொகுப்பு புறநானூறு நூலில் பயின்றுவரும் பண்டைத்தமிழ்ப்பெயர்களை அறியவிரும்புவோர்க்கு துணைபுரியும் அன்றி, குறிப்பிட்ட செய்யுள் யாரால் யாரைப்பாடியது என்று எளிதில் அறியவியலும்.

பாக்களின் எண்களை தமிழில் இட்டு, அச்செய்யுள் யாரை யார் பாடியது என்பதையும் பொதுப்பாகளுக்கு பாடியவர் பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.  விருப்புளோர் படித்தறிக, வெறுப்புளோர் விடுத்தொழிக. நன்றி. வணக்கம்.

(0-०, 1-௧, 2-௨, 3-௩, 4-௩, 5-௫, 6-௬, 7-௭, 8-௮, 9-௯, 10-௰)

*********************************************

௧) இறைவனை பெருந்தேவனார் பாடியது.

௨) சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியது.

௩) பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர்வழுதியை இரும்பிடர்த்தலையார் பாடியது.

௪) சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியை பரணர் பாடியது.

௫) சேரமான் கருவூரேறிய ஒள்வாட்கோப்பெருஞ்சேரலை நரிவெரூஉத் தலையார் பாடியது.

௬) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியை காரிக்கிழார் பாடியது.

௭) சோழன் கரிகாற்பெருவளத்தானை கருங்குழல் ஆதனார் பாடியது.

௮) சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனை கபிலர் பாடியது.

௯) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

௰) சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதிபசுங்குடையார் பாடியது.

௧௧) சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோவை பேய்மகள் இளவெயினியார் பாடியது.

௧௨) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

௧௩) சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

௧௪, ௧௫) சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனை கபிலர் பாடியது.

௧௬) சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியை பாண்டரங்கண்ணனார் பாடியது.

௧௭) சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை குறுங்கோழியூர்கிழார் பாடியது.

 ௧௮) பாண்டியன் நெடுஞ்செழியனை குடபுலவியனார் பாடியது.

௧௯) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை குடபுலவியனார் பாடியது.

௨०) சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை குறுங்கோழியூர்கிழார் பாடியது.

௨௧) கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதியை ஐயூர் மூலங்கிழார் பாடியது.

௨௨) சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையை குறுங்கோழியூர் கிழார் பாடியது.

௨௩) பாண்டியன் தலையாலங் கானத்து நெடுஞ்செழியனை கல்லாடனார் பாடியது.

௨௪) பாண்டியன் தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியனை மங்குடிக்கிழார் பாடியது.

௨௫) பாண்டியன் தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியனை கல்லாடனார் பாடியது.

௨௬) பாண்டியன் தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியனை மங்குடிக்கிழார் பாடியது.

௨௭ முதல் ௩௩ வரை) சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.

௩௪) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.

௩௫) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை வெள்ளைக்குடி நாகனார் பாடியது.

௩௬) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.

௩௭) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௩௮) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௩௯)  சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௪०) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௪௧) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை கோவூர்க்கிழார் பாடியது.

௪௨) ௩௭) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை இடைக்காடனார் பாடியது.

௪௩) சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானை தாமப்பல் கண்ணனார் பாடியது.

௪௪) சோழன் நெடுங்கிள்ளியை கோவூர்க்கிழார் பாடியது.

௪௫) சோழன் நலங்கிள்ளியையும் நெடுங்கிள்ளியையும் கோவூர்க்கிழார் பாடியது.

௪௬) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை கோவூர்க்கிழார் பாடியது.

௪௭) காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளியை கோவூர்க்கிழார் பாடியது.

௪௮, ௪௯) சேரமான் கோக்கோதை மார்பனை பொய்கையார் பாடியது.

௫०) சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையை மோசிகீரனார் பாடியது.

௫௧) பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன்வழுதியை ஐயூர் முடவனார் பாடியது.

௫௨) பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன்வழுதியை மருதனிளநாகனார் பாடியது.

௫௩) சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறையை பொருந்தில் இளங்கீரனார் பாடியது.

௫௪) சேரமான் குட்டுவன்கோதையை கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

௫௫) பாண்டியன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறனை மதுரை மருதனிளநாகனார் பாடியது.

௫௬) பாண்டியன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது. (மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்).

௫௭) பாண்டியன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறனை காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

௫௮) சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனையும்
பாண்டியன் வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதியையும் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

௫௯) பாண்டியன் சித்திரமாடத்துத்துஞ்சிய நன்மாறனை மதுரைக்கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் பாடியது.

௬०) சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

௬௧) சோழன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய
நலங்கிள்ளி சேட்சென்னியை கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது.

௬௨) சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனையும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியையும் கழாத்தலையார் பாடியது.

௬௩) சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனையும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியையும் பரணர் பாடியது.

௬௪) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியை நெடும்பல்லியத்தனார் பாடியது.

௬௫) சேரமான் பெருஞ்சேரலாதன், இவன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது
புறப்புண்பட்டு, வடக்கிருந்தபோது கழாத்தலையார் பாடியது.

௬௬) சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் பாடியது.

௬௭) கோப்பெருஞ்சோழனை பிசிராந்தையார் பாடியது.

௬௮) சோழன் நலங்கிள்ளியை கோவூர்க்கிழார் பாடியது.

௬௯) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆலந்தூர் கிழார் பாடியது.

௭०) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆலந்தூர் கிழார் (கோவூரழகியார்) பாடியது.

௭௧) ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பாடியது.

௭௨) பாண்டியன் தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியன் பாடியது.

௭௩) சோழன் நலங்கிள்ளி பாடியது. (நல்லுருத்திரன் பாட்டு எனவும் பாடம்)

௭௪) சேரமான் கணைக்காலிரும்பொறை பாடியது.

௭௫) சோழன் நலங்கிள்ளி பாடியது.

௭௬, ௭௭, ௭௮, ௭௯) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது.

௮०, ௮௧, ௮௨) சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளியை சாத்தந்தையார் பாடியது.

௮௩, ௮௪, ௮௫) சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளியை பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார் பாடியது.

௮௬) காவற்பெண்டு பாடியது (காதற்பெண்டு)

௮௭ முதல் ௧०௧ வரை) அதியமான் நெடுமானஞ்சியை ஔவையார் பாடியது.

௧०௨) அதியமான் நெடுமானஞ்சியின் மகன் பொகுட்டெழினியை ஔவையார் பாடியது.

௧०௩, ௧०௪) அதியமான் நெடுமானஞ்சியை ஔவையார் பாடியது.

௧०௫ முதல் ௧௧௧ வரை) வேள்பாரியை கபிலர் பாடியது.

௧௧௨) பாரி மகளிர் பாடியது.

௧௧௩ முதல் ௧௨० வரை) கபிலர் பாடியது.

௧௨௧, ௧௨௨, ௧௨௩, ௧௨௪) மலையமான் திருமுடிக்காரியை கபிலர் பாடியது.

௧௨௫) தேர்வண் மலையனை வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார் பாடியது.

௧௨௬) மலையமான் திருமுடிக்காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௧௨௭ முதல் ௧௩௫ வரை) ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

௧௩௬) ஆய் அண்டிரனை துறையூர் ஓடைக்கிழார் பாடியது.

௧௩௭) நாஞ்சில் வள்ளுவனை ஒருசிறைப் பெரியனார் பாடியது.

௧௩௮, ௧௩௯) ஆய் அண்டிரனை மருதனிளநாகனார் பாடியது.

௧௪०) ஆய் அண்டிரனை ஔவையார் பாடியது.

௧௪௧, ௧௪௨) வையாவிக் கோப்பெரும் பேகனை பரணர் பாடியது.

௧௪௩, ௧௪௪, ௧௪௫) வையாவிக் கோப்பெரும் பேகனை கபிலர் பாடியது.

௧௪௬) வையாவிக் கோப்பெரும் பேகனை அரிசில்கிழார் பாடியது.

௧௪௭) வையாவிக் கோப்பெரும் பேகனை பெருங்குன்றூர்க்கிழார் பாடியது.

௧௪௮, ௧௪௯, ௧௫०) கண்டீரக்கோப்பெருநள்ளி வன்பரணர் பாடியது.

௧௫௧) இளவிச்சிக்கோவை பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

௧௫௨, ௧௫௩)
வல்வில்லோரியை வன்பரணர் பாடியது.

௧௫௪, ௧௫௫, ௧௫௬) கொண்கானங் கிழானை மோசிகீரனார் பாடியது.

௧௫௭) ஏறைக்கோனை குறமகள் இளவெயினியார் பாடியது.

௧௫௮, ௧௫௯, ௧௬०, ௧௬௧) குமணனை பெருஞ்சித்திரனார் பாடியது.

௧௬௨) இளவெளிமானை பெருஞ்சித்திரனார் பாடியது.

௧௬௩) பெருஞ்சித்திரனாரின் மனைவியை பெருஞ்சித்திரனார் பாடியது.

௧௬௪, ௧௬௫) குமணனை பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

௧௬௬) சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௧௬௭) சோழன் கடுமான்கிள்ளியை கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது.

௧௬௮) பிட்டங்கொற்றனை கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.

௧௬௯) பிட்டங்கொற்றனை காவிரிபூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

௧௭०) பிட்டங்கொற்றனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

௧௭௧) பிட்டங்கொற்றனை காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

௧௭௨) பிட்டங்கொற்றனை வடமண்ணக்கன் தாமோதரனார் பாடியது.

௧௭௩) சிறுகுடிக்கிழான் பண்ணனை சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் பாடியது.

௧௭௪) மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௧௭௫) ஆதனுங்கனை கள்ளில் ஆத்திரையனார் பாடியது.

௧௭௬) ஓய்மான் நல்லியக் கோடானை புறத்திணை நன்னாகனார் பாடியது.

௧௭௭) மல்லி கிழான் காரியாதியை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௧௭௮) பாண்டியன் கீரஞ்சாத்தனை (பாண்டிக் குதிரைச்சாக்கையன்) ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௧௭௯) நாலைக்கிழவன் நாகனை வடநெடுந்தத்தனார் பாடியது.

௧௮०) ஈர்ந்தூர்க்கிழான் தோயனை கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது.

௧௮௧) வல்லார் கிழான் பண்ணனை சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் பாடியது.

௧௮௨) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடியது.

௧௮௩) ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் பாடியது.

௧௮௪) பாண்டியன் அறிவுடை நம்பியை பிசிராந்தையார் பாடியது.

௧௮௫) தொண்டைமான் இளந்திரையன் பாடியது.

௧௮௬) மோசிகீரனார் பாடியது.

௧௮௭) ஔவையார் பாடியது.

௧௮௮) பாண்டியன் அறிவுடைநம்பி பாடியது.

௧௮௯) மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

௧௯०) சோழன் நல்லுருத்திரன் பாடியது.

௧௯௧) பிசிராந்தையார் பாடியது.

௧௯௨) கணியன் பூங்குன்றன் பாடியது.

௧௯௩) ஓரேருழவர் (ஓர் ஏர் உழவர்) பாடியது.

௧௯௪) பக்குடுக்கை நன்கணியார் பாடியது.

௧௯௫) நரிவெரூஉத் தலையார் பாடியது.

௧௯௬) பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௧௯௭) சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனை கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது.

௧௯௮) பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனை வடமவண்ணக்கண் பேரிசாத்தனார் பாடியது.

௧௯௯) பெரும்பதுமனார் பாடியது.

௨००) கபிலர் பாடியது.

௨०௧, ௨०௨) இருங்கோவேளை கபிலர் பாடியது.

௨०௩) சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

௨०௪) வல்வில் ஓரியை கழைதின் யானையார் பாடியது.

௨०௫) கடிய நெடுவேட்டுவனை பெருந்தலைச்சாத்தனார் பாடியது.

௨०௬) அதியமான் நெடுமானஞ்சியை ஔவையார் பாடியது.

௨०௭) இளவெளிமானை பெருஞ்சித்திரனார் பாடியது.

௨०௮) அதியமான் நெடுமானஞ்சியை பெருஞ்சித்திரனார் பாடியது.

௨०௯) மூவனை பெருஞ்சித்திரனார் பாடியது.

௨௧०, ௨௧௧) சேரமான் குடக்கோச் சேரலிரும்பொறையை பெருங்குன்றூர் கிழார் பாடியது.

௨௧௨) கோப்பெருஞ்சோழனை பிசிராந்தையார் பாடியது.

௨௧௩) கோப்பெருஞ்சோழனை புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியது. (கோப்பெருஞ்சோழன் தன் மக்கள்மேற் போருக்கு எழுந்தகாலைப்பாடிச் சந்து செய்தது)

௨௧௪) கோப்பெருஞ்சோழன் பாடியது.

௨௧௫) கோப்பெருஞ்சோழன் பாடியது. (சோழன் வடக்கிருந்தான், பிசிராந்தையார் வருவார் என்றான். 'அவர் வாரார்' என்றனர் சான்றோருட் சிலர். அவர்க்கு அவன் கூறிய செய்யுள் இது)

௨௧௬) கோப்பெருஞ்சோழன் பாடியது. (வடக்கிருந்த சோழன், பிசிராந்தையாருக்கும் தன்னருகே இடன் ஒழிக்க என்று கூறிய செய்யுள் இது.)

௨௧௭) பொத்தியார் பாடியது. (கோப்பெருஞ் சோழன் சொன்னவாறே பிசிராந்தையார் அங்கு வந்தனர். அதனைக் கண்டு வியந்த பொத்தியார் பாடிய செய்யுள் இது)

௨௧௮) கண்ணகனார் (நத்தத்தனார்) பாடியது. (பிசிராந்தையார் வடக்கிருந்தார், அதனைக் கண்டு பாடியது)

௨௧௯) கோப்பெருஞ் சோழனை பெருஞ்கருவூர்ச்சதுக்கத்துப் பூதநாதனார் பாடியது.

௨௨०) பொத்தியார் பாடியது. (சோழன் வடக்கிருந்தான். அவன்பாற் சென்ற பொத்தியார், அவனால் தடுக்கப்பட்டு உறையூர்க்கு மீண்டார், சோழன் உயிர் நீத்தான். அவனன்றி வறிதான உறையூர் மன்றத்தைக் கண்டு இரங்கிப் பொத்தியார் பாடிய செய்யுள் இது).

௨௨௧) கோப்பெருஞ்சோழனை பொத்தியார் பாடியது. (சோழனது நடுகற்கண்டு பாடிய செய்யுள் இது)

௨௨௨) கோப்பெருஞ்சோழனை பொத்தியார் பாடியது. (தன்மகன் பிறந்தபின், சோழனது நடுகல் நின்ற இடத்திற்குச்சென்று, தாமும் உயிர்விடத்துணிந்த பொத்தியார், 'எனக்கும் இடம் தா' எனக்கேட்டுப் பாடியது இச்செய்யுள்).

௨௨௩) கோப்பெருஞ்சோழனை பொத்தியார் பாடியது.

௨௨௪) சோழன் கரிகாற்பெருவளத்தானை கருங்குழல் ஆதனார் பாடியது.

௨௨௫) சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர் கிழார் பாடியது.

௨௨௬) சோழன் குளுமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௨௨௭) சோழன் குளுமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆடுதுறை மாசாத்தனார் பாடியது.

௨௨௮) சோழன் குளுமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஐயூர் முடவனார் பாடியது.

௨௨௯) கோச்சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை கூடலூர்க்கிழார் பாடியது. (அவன் இன்ன நாளில் துஞ்சுமென அஞ்சி, அவன் அவ்வாறே துஞ்சிய போது பாடியது).

௨௩०) அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில் கிழார் பாடியது.

௨௩௧, ௨௩௨) அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

௨௩௩, ௨௩௪) வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.

௨௩௫) அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

௨௩௬) கபிலர் பாடியது. (வேள்பாரி துஞ்சியபின், அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்தபோது, பாடியது).

௨௩௭) இளவெளிமானை பெருஞ்சித்திரனார் பாடியது. (வெளிமானிடம் சென்றனர் புலவர். அவன் துஞ்ச, இளவெளிமான் சிறிது கொடுக்கின்றான். அதனைக் கொள்ளாது வெளிமான் துஞ்சியதற்கு இரங்கிப் பாடிய செய்யுள் இது).

௨௩௮) இளவெளிமானை பெருஞ்சித்திரனார் பாடியது. (வெளிமான் துஞ்சியமைக்கு வருந்திக் கூறியது இது. கரைகாண வியலாத் துயரத்தைக், 'கண்ணில் ஊமன் கடற் பட்டாங்கு' எனக் கூறுதலைக் கவனிக்க.)

௨௩௯) நம்பி நெடுஞ்செழியனை பேரெயின் முறுவலார் பாடியது.

௨௪०) ஆயை குட்டுவன் கீரனார் பாடியது.

௨௪௧) ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

௨௪௨) ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனை குடவாயிற்தீரத்தனார் (கடவாயில் நல்லாதனார்) பாடியது.

௨௪௩) தொடித்தலை விழுத்தண்டினார் பாடியது.

௨௪௪) பாடப்பட்டோரும் பாடினோரும் அறியவியலாவளவிற்கு சிதைந்தே கிடைத்தது இப்பா.

௨௪௫) சேரமான் கோட்டம்பலத்துத்துஞ்சிய மாக்கோதை பாடியது.

௨௪௬) பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு பாடியது.

௨௪௭) பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டை மதுரைப் பேராலவாயர் பாடியது.

௨௪௮) ஒக்கூர் மாசாத்தனார் பாடியது.

௨௪௯) தும்பி சொகினனார் (தும்பிசேர் கீரனார்) பாடியது.

௨௫०) தாயங்கண்ணியார் பாடியது.

௨௫௧, ௨௫௨) மாற்பித்தியார் பாடியது.

௨௫௩) குளம்பாதாயனார் பாடியது.

௨௫௪) கயமனார் பாடியது.

௨௫௫) வன்பரணர் பாடியது.

௨௫௬, ௨௫௭) பாடியவர் பெயர் தெரிந்திலது.

௨௫௮) உலோச்சனார் பாடியது.

௨௫௯) கோடை பாடிய பெரும்பூதனார் பாடியது.

௨௬०) வடமோதங்கிழார் பாடியது.

௨௬௧) ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௨௬௨) மதுரைப் பேராலவாயர் பாடியது.

௨௬௩) பாடியவர் பெயர் தெரிந்திலது.

௨௬௪) உறையூர் இளம்பொன் வாணிகனார் பாடியது.

௨௬௫) சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் பாடியது.

௨௬௬) சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியை பெருங்குன்றூர் கிழார் பாடியது.

௨௬௭, ௨௬௮) இப்பாக்களின் படிகள் கிடைத்தில.

௨௬௯) ஒளவையார் பாடியது.

௨௭०) கழாத்தலையார் பாடியது.

௨௭௧) வெறிபாடிய காமக்கண்ணியார் பாடியது.

௨௭௨) மோசிசாத்தனார் பாடியது.

௨௭௩) எருமை வெளியனார் பாடியது.

௨௭௪) உலோச்சனார் பாடியது.

௨௭௫) ஒரூஉத்தனார் பாடியது.

௨௭௬) மாதுரைப் பூதனிளநாகனார் பாடியது.

௨௭௭) பூங்கணுத்திரையார் பாடியது.

௨௭௮) காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது.

௨௭௯) ஒக்கூர் மாசாத்தியார் பாடியது.

௨௮०) மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௨௮௧) அரிசில் கிழார் பாடியது.

௨௮௨) பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியது.

௨௮௩) அடைநெடுங் கல்வியார் பாடியது.

௨௮௪) ஓரம் போகியார் பாடியது.

௨௮௫) அரிசில் கிழார் பாடியது.

௨௮௬) ஒளவையார் பாடியது.

௨௮௭) சாத்தந்தையார் பாடியது.

௨௮௮, ௨௮௯) கழாத்தலையார் பாடியது.

௨௯०) ஒளவையார் பாடியது.

௨௯௧) நெடுங்கழுத்துப்பரணர் பாடியது.

௨௯௨) விரிச்சியூர் நன்னாகனார் பாடியது.

௨௯௩) நொச்சி நியமங்கிழார் பாடியது.

௨௯௪) பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

௨௯௫) ஔவையார் பாடியது.

௨௯௬) வெள்ளை மாளர் பாடியது.

௨௯௭) பாடியவர் பெயர் கிடைத்தில.

௨௯௮) ஆவியார் பாடியது.

௨௯௯) பொன்முடியார் பாடியது.

௩००) அரிசில் கிழார் பாடியது.

௩०௧) ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௩०௨) வெறிபாடிய காமக் கண்ணியார் பாடியது.

௩०௩) எருமை வெளியனார் பாடியது.

௩०௪) அரிசில்கிழார் பாடியது.

௩०௫) மதுரை வேளாசானார் பாடியது.

௩०௬) அள்ளூர் நன்முல்லையார் பாடியது.

௩०௭) பெயர் கிடைத்தில.

௩०௮) கோவூர்க்கிழார் பாடியது.

௩०௯) மதுரை இளங்கண்ணிக்கௌசிகனார் பாடியது.

௩௧०) பொன்முடியார் பாடியது.

௩௧௧) ஒளவையார் பாடியது.

௩௧௨) பொன்முடியார் பாடியது.

௩௧௩) மாங்குடி மருதனார் பாடியது.

௩௧௪) ஐயூர் முடவனார் பாடியது.

௩௧௫) அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

௩௧௬) மதுரைக் கள்ளிற்கடையத்தன் வெண்ணாகனார் பாடியது.

௩௧௭) வெம்பற்றூர்க்குமரனார் பாடியது.

௩௧௮) பெருங்குன்றூர் கிழார் பாடியது.

௩௧௯) ஆலங்குடி வங்கனார் பாடியது.

௩௨०) வீரை வெளியனார் பாடியது.

௩௨௧) உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

௩௨௨) ஆவூர்கிழார் பாடியது.

௩௨௩) பெயர்கள் கிடைத்தில

௩௨௪) ஆலத்தூர் கிழார் பாடியது.

௩௨௫) உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.

௩௨௬) தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் பாடியது.

௩௨௭, ௩௨௮) பெயர்கள் கிடைத்தில.

௩௨௯) மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடியது.

௩௩०) மதுரை கணக்காயனார் பாடியது.

௩௩௧) உறையூர் முதுகூத்தனார் (உறையூர் முது கூற்றனார்) பாடியது.

௩௩௨) விரியூர் கிழார் பாடியது.

௩௩௩) பெயர்கள் கிடைத்தில.

௩௩௪) மதுரைத் தமிழக்கூத்தனார் பாடியது.

௩௩௫) மாங்குடிக்கிழார் பாடியது.

௩௩௬) பரணர் பாடியது.

௩௩௭) கபிலர் பாடியது.

௩௩௮) குன்றூர்க்கிழார் மகனார் பாடியது.

௩௩௯, ௩௪०) பெயர்கள் கிடைத்தில.

௩௪௧) பரணர் பாடியது.

௩௪௨) அரிசில் கிழார் பாடியது.

௩௪௩) பரணர் பாடியது.

௩௪௪, ௩௪௫) அடைநெடுங்கல்வியார் பாடியது. பாடப்பட்டோன் பெயர் கிடைத்தில.

௩௪௬) அண்டர்மகன் குறுவழுதி பாடியது.

௩௪௭) கபிலர் பாடியது.

௩௪௮) பரணர் பாடியது.

௩௪௯) மதுரை மருதனிளநாகனார் பாடியது.

௩௫०) மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தார் ஆயத்தனார் பாடியது.

௩௫௧) மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது.

௩௫௨) பரணர் பாடியது.

௩௫௩) காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

௩௫௪) பரணர் பாடியது.

௩௫௫) பெயர்கள் கிடைத்தில.

௩௫௬) தாயங்கண்ணனார் பாடியது.

௩௫௭) பிரமனார் பாடியது.

௩௫௮) வான்மீகியார் பாடியது.

௩௫௯) கரவட்டனார் பாடியது.

௩௬०) சங்க வருணர் என்னும் நாகரியர் பாடியது.

௩௬௧) பெயர்கள் கிடைத்தில.

௩௬௨) சிறுவெண்டேரையார் பாடியது.

௩௬௩) ஐயாதிச் சிறுவெண்டேரையார் பாடியது.

௩௬௪) கூகைக் கோரியார் பாடியது.

௩௬௫) மார்க்கண்டேயனார் பாடியது.

௩௬௬) தருமபுத்திரனை கோதமனார் பாடியது.

#_௩௬௭) சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரை ஔவையார் பாடியது. (மூவேந்தரையும் ஒருங்கே பாடிய சிறப்புடையது இப்பா)

௩௬௮) சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் கழாத் தலையார் பாடியது.

௩௬௯) சேரமான் கடலோட்டிய வெல்கெழுகுட்டுவனை பரணர் பாடியது.

௩௭०) சோழன் செரப்பாழி இறிந்த இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

௩௭௧) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை கல்லாடனார் பாடியது.

௩௭௨) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை மாங்குடிக்கிழார் பாடியது.

௩௭௩) சோழன் குராப்பள்ளித்துஞ்சிய கிள்ளிவளவனை கோவூர்கிழார் பாடியது.

௩௭௪, ௩௭௫) ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேர் முடமோசியார் பாடியது.

௩௭௬) ஓய்மான் நல்லியாதனை புறத்திணை நன்னாகனார் பாடியது.

௩௭௭) சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியை உலோச்சனார் பாடியது.

௩௭௮) சோழன் செரப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

௩௭௯) ஓய்மான்வில்லியாதனை புறத்திணை நன்னாகனார் பாடியது.

௩௮०) நாஞ்சில் வள்ளுவனை கருவூர்க்கதப்பிள்ளை பாடியது.

௩௮௧) கரும்பனூர் கிழானை புறத்திணை நன்னகனார் பாடியது.

௩௮௨) சோழன் நலங்கிள்ளியை கோவூர் கிழார் பாடியது.

௩௮௩) மாறோக்கத்து நப்பசலையார் பாடியது. பாடப்பட்டோன் பெயர் கிடைத்தில. (கடுந்தேர் அவியனென ஒருவனை உடையேன்' என்று குறித்தது கொண்டு,அவனைப் பாடியதாகக் கொள்ளலும் பொருந்தும்).

௩௮௪) கரும்பனூர் கிழானை புறத்திணை நன்னாகனார் பாடியது.

௩௮௫) அம்பர்கிழான் அருவந்தையை கல்லாடனார் பாடியது.

௩௮௬) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை கோவூர் கிழார் பாடியது.

௩௮௭) சேரமான் சிக்கற்பள்ளித்துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனை குண்டுகட் பாலியாதனார் பாடியது.

௩௮௮) சிறுகுடிகிழான் பண்ணனை மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் பாடியது.

௩௮௯) நல்லேர் முதியன் ஆதனுங்கனை கள்ளில் ஆத்திரையனார் பாடியது.

௩௯०) அதியமான் நெடுமானஞ்சியை ஔவையார் பாடியது

௩௯௧) பொறையாற்றுக் கிழானை கல்லாடனார் பாடியது.

௩௯௨) அதியமான் நெடுமானஞ்சியின்மகன் பொகுட்டெழினியை ஒளவையார் பாடியது.

௩௯௩) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை நல்லிறையனார் பாடியது.

௩௯௪) சோழிய ஏனாதி திருக்குட்டுவனை கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது.

௩௯௫) சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரனார் பாடியது.

௩௯௬) வாட்டாற்று எழினியாதனை மாங்குடி கிழார் பாடியது.

௩௯௭) கோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனனை எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் பாடியது.

௩௯௮) சேரமான் வஞ்சனை திருத்தாமனார் பாடியது.

௩௯௯) தாமான் தோன்றிக்கோனை ஐயூர் முடவனார் பாடியது.

௪००) சோழன் நலங்கிள்ளியை கோவூர்க்கிழார் பாடியது.

**********************************************

உதவி : பல பதிப்பகத்துப் புறநானூறு நூல் பதிப்புகள் மற்றும் இணையம்

தொகுப்பு : தனித்தமிழாளன்

Tuesday, July 9, 2019

உயிர்நண்பர்கள் - கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும்

கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் பொத்தியாரும் பிறசான்றோரும்


உயிர்நண்பன் என்பதற்குப்பொருள்:

காணாமலே நட்பு பூண்டு, இருவரும் சேர்ந்தே உயிர் துறந்ததால், நம்நாட்டில் நன்நட்பிற்கு எடுத்துக்காட்டாக கோப்பெருஞ்சோழனையும் பிசிராந்தையாரையும் புகழ்கிறோம். ஆனால், இதற்குச் சிறிதும் குறையாது கோப்பெருஞ்சோழனோடே உயிர்துறந்த பொத்தியார் இன்னபிற புலவர்கள் மற்றும் சான்றோர்களையும் நினைவுகூற மறந்துவிட்டோம். இங்கு அவ்வரலாற்றை சுருக்கமாகப் பதிகிறேன்.




உறையூரைத் தலைநகராகக்கொண்டு சோணாட்டையாண்ட மன்னருள் ஒருவன் கோப்பெருஞ்சோழன். சிறந்த தமிழ்ப்பற்றும் வள்ளன்மையும் தமிழ்ப்புலவர்கள்பால் பேரன்பும் கொண்டவன்.

பாண்டிநாட்டுப் புலவரொருவரின் வாயிலாக பிசிராந்தையாரைப்பற்றி அறிந்தான் சோழன். தென்பாண்டிநாட்டில் பிசிர் என்னும் ஊரில் (தற்போது பிசுக்குடி என்றழைக்கப்படுகிறது) வாழ்ந்தவர் ஆந்தையார் என்னுந்தமிழ்ப்புலவர். இல்லறமாகிய நல்லறத்தை இனிது நடத்தும் இல்லாளையும் நன்மக்களையும் சிறந்த மன்னனையும் பெற்று, கவலையின்றி என்றும் இளமையோடு இனிது வாழ்ந்தவர்.

இருவரும் ஒருவரையொருவர் காணாமலேயே அறியப்பெற்று நட்புபூண்டனர். உள்ளுணர்வு ஒத்து நட்பு மேலும் வளர்ந்தது.

கோப்பெருஞ்சோழனுக்கு இருமகன்கள், இருவரும் அரியணைக்கு அவாவுற்று, தந்தையின்மீதே போர்தொடுக்க எண்ணினர்.  அஃதறிந்த மன்னன் கடுஞ்சினமுற்று, இவ்வாறு அரியணைக்கு விருப்புற்றுப் போர்தொடுக்க முனைந்த இவர்களிடம் சிக்கி சோணாட்டுமக்கள் எத்தகைய அல்லல்களுற நேரிடுமோ, குடிப்பெருமை குலையுமோ என்றஞ்சி, நாட்டு மக்களைக்காக்க தன்மகன்களை எதிர்த்தே போர்புரியத் துணிந்தான்.

இதையறிந்த புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும்புலவர் சோழனிடம், "நீயும் நின் மக்களிருவரும் பகைவர்களல்லர். போரில் உன்மகன்கள் வெற்றிபெற்றால் உன் மானத்திற்கே இழுக்கு. நீ வெற்றிபெற்றால், பிறகு உன்செல்வத்தை எல்லாம் யாருக்குக்கொடுப்பாய்? தந்தை மகன்களே போரிட்டால் உம்குடிக்கன்றோ இழுக்கு. நீ வானுலகு சென்றபிறகு உன் அரியணை உன்மக்களுக்கு தானே! எப்படிப்பார்த்தாலும் இப்போர் நன்றன்று. போரை விட்டுவிடுக" என்று அறங்கூறுகிறார். மன்னனும் அரசுரிமையை மகன்களுக்குக்கொடுத்துவிட்டு, மானக்குறைவு நேர்ந்ததாக நினைத்து வடக்கிருந்து உயிர்விட எண்ணினான்.

சோழனின் மனவுறுதியை மாற்ற முடியாமல் பொத்தியார் என்னும் புலவரும் நட்பாய் இருந்த பிற சான்றோரும் சோழனோடு வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தனர்.

அப்போது கோப்பெருஞ்சோழன், "நண்பர்களே சான்றோரே, என் ஆருயிர் நண்பன் பிசிராந்தையார் நான் நன்றாக இருந்த காலத்தில் வரவில்லை என்றாலும் நான் துன்பமெய்திய இப்போது வருவார்" என்றான். அதற்கு அச்சான்றோர் சிலர், பிசிராந்தையார் வாரார். பாண்டிநாட்டுப் பிசிர் நெடுந்தொலைவிலுள்ளது. நம்முடனேயே பழகியவர்கள்கூட இப்படிப்பட்ட நிலையில் வாரார் இக்காலத்தில். அப்படியிருக்க, காணாமலேயே நட்பான ஆந்தையார் எப்படி வருவார்? என்றனர்.

அதற்குச் சோழன், "உறுதியாக ஆந்தையார் வருவார். நாங்கள் இருவரும் உணர்வால் நண்பர்களானவர்கள். இப்போது நான்படும் இத்துன்பம் அவருக்குத் தெரிந்திருக்கும், உறுதியாக வருவார்.  என்னருகில் அவருக்கும் வடக்கிருக்க ஒரு இடம் ஒதுக்குங்கள்." என்று சொல்லிமுடிப்பதற்குள் பிசிராந்தையார் அங்கே வந்தடைந்தார்.

அவரின் வரவைக்கண்டு அங்கிருந்த சான்றோர் பெருவியப்புற்றனர்.

முதன்முறையாக சோழனும் ஆந்தையாரும் நேரில் பார்த்து இருவரும் கண்ணீர்மல்க ஆரத்தழுவிக்கொள்கின்றனர்.

பொத்தியார், இவ்வுலகில் இத்தகைய நட்பும் உண்டோ என்று வியப்புறபாடுகிறார். இப்படிப்பட்ட சான்றோரையிழந்து உலகம் என்னாகுமோ என்றும் வருந்துகிறார்.

கண்ணகனார் என்னும் புலவர் பொன்னும், பவளமும், முத்தும், மணியும் வெவ்வேறு இடங்களிலிருந்துவந்து அழகான அணிகலனாயாகும். சான்றோர் சான்றோர் பக்கமும், சால்பில்லார் சால்பில்லார் பக்கமும் இணைந்துவிடுவது உலகியல்பு. அதைப்போல், வெவ்வேறு இடத்தில் இருந்த சான்றோர்கள் ஒன்றாக சேர்ந்தனர் என்று பாடி ஏத்துகிறார்.

பெருஞ்கருவூர்ப்சதுக்கத்துப் பூதநாதனார் என்னும் புலவர், கோப்பெருஞ்சோழனே! உன்னைப் பின்பற்றி உன்னுடன் சேர்ந்து வடக்கிருக்கும் பலர்மீது நீ, மனைவி கணவனிடம் மாறுபட்டுப் பேசுவது போல் பேசி அவர்களின் செயலைத் தடுக்கக்கூடாதா? என்று பாடுகிறார்.

அங்கிருந்த புலவர்கள் பலர் பிசிராந்தையாரை நோக்கி புலவரே, நாங்கள் சிறுவர்களாய் இருந்தபோதிலிருந்தே உங்களைப்பற்றி கேள்வியுற்று வருகிறோம். எங்களுக்கெல்லாம் நரை, திரை, மூப்பு வந்துவிட்டது. ஆனால், நீரோ இன்னும் இளமையாகவுள்ளீரே, யாது கரணியம்? என்று வினவினர்.

அதற்குப் பிசிராந்தையார், "நல்வாழ்க்கைத்துணையையும் நன்மக்களையும் நல்லறவரசனையும் பெற்று இன்புற்று வாழ்கிறேன். அதனாலேயே நரை, திரை, மூப்பு தோன்றாது இளமையோடு இருக்கிறேன்" என்றார்.

மன்னரும் பிறரும் வடக்கிருந்து உண்ணாநோன்பிருந்து உயிர்விட அமர்ந்தனர். பொத்தியாருக்கு மகன் இல்லாத காரணத்தால், சோழன் அவரை வடக்கிருக்க அனுமதிக்கவில்லை. அவர் உறையூருக்குத் திரும்பினார். கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் பிறரும் உயிர்நீத்தனர்.

அனைவருக்கும் நடுகற்கள் நடப்பட்டன. சோழன் இல்லாத உறையூரையும், சோழனின் நடுகல்லையும் கண்டு பொத்தியார் துயருற பாடித்தீர்க்கிறார்.

பொத்தியாருக்கு மகன் பிறந்தவுடனே, சோழனது நடுகல் நின்ற இடத்திற்குச் சென்று, தாமும் உயிர்விடத் துணிந்த பொத்தியார், 'எனக்கும் இடம் தா' எனக்கேட்டுப்பாடி கோப்பெருஞ்சோழனின் நடுகல்லுக்கு அருகில் தாமும் வடக்கிருந்து உண்ணாது உயிர்விடுகிறார்.

கண்டீரா இந்நட்பை? இத்தகைய நட்பு சான்றோர் இத்தமிழ்நாட்டில் வாழ்ந்தனர் என்னும்போது பெருமையாயும் வியப்பாயும் உள்ளது.

கதையைப்படிக்கும்போது என்னையறியாது என் கண்கள் கண்ணீர் உகுத்தன.

கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் மற்றும் பிறரின் நட்பு சிறந்ததுதான், மறுப்பதற்கில்லை. ஆனாலும், பொத்தியாரை நான் ஏன் இப்போது பேசுகிறேனென்றால், சோழனும், ஆந்தையாரும் பிறரும் உயிர்நீத்த பின்பு, பொத்தியாருக்கு மகன் பிறக்கும் வரையிலும், பிறந்தபின்பும் அவரின் மனத்தை மாற்றிக்கொண்டிருக்கலாம். வடக்கிருக்காமால் இருந்திருக்கலாம். அப்படிச்செய்யாது, பொத்தியாருக்கு மகன் பிறந்த உடனே சென்று மன்னனின் நடுகல்லுக்கு அருகிலேயே வடக்கமர்ந்து உயிர்நீத்தார்.

இக்காலத்தில் உயிர்நண்பன் உயிர்நண்பன் என்று சொல்லிக்கொள்வோர் இவ்வரலாற்றைப்படித்து உயிர்நண்பன் என்பதன் பொருளை அறிந்துகொள்க.

நன்றி. வணக்கம்.

*******************************

இவ்வரலாறு, புறநானூற்றில் 212 முதல் 223 வரை உள்ள பாடல்களில் வரிசையாக தொகுக்கப்பட்டுள்ளது.

இக்கதை, 1988ஆம் ஆண்டு ஏழாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு துணைப்பாடமாக வைக்கப்பட்டிருந்தது. அப்போதெல்லாம் இத்தகைய அறங்கூறும் தமிழ் வரலாறுகளே பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன பாருங்கள்.

நன்றி. வணக்கம்
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்