Saturday, July 20, 2019

தமிழரின் வேல்வழிபாடு

தமிழரின் வேல்வழிபாடு


என்னடா தைப்பூசம் எல்லாம் முடிந்துவிட்டதே, இப்போது இந்த வேல்வழிபாட்டைப்பற்றி பதிவிடுகிறானே என்று நினைக்கிறீர்களா? என்ன செய்ய இப்போதுதான் நேரம் கிடைத்தது. தைப்பூசத்திற்கு மட்டும் வேலை வணக்குபவர்களல்லர் யாம்.
"வேலை வணங்குவதே வேலை" யாகக்கொண்டோர். எப்போது பதிவிட்டாலென்ன?



௧) #வேல் - பெயர்க்காரணம்:

வெல் = வேல்!
'வெல்' என்ற வினைச்சொல்லே நீண்டு 'வேல்' என்ற பெயர்ச்சொல் ஆகிறது! ஆகவே, வேல் = வெற்றி!

௨) #வேல் - தமிழ்த்தொன்மம்:

ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் = வேல்! ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி-ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப் பாடுறா! வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு! திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு! சங்க காலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது!  பின்னாளில் தான் ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும்! ஆகமம், அது இது-ன்னு நுழைத்த பின்பே, ஒரு சாராரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன! சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்! இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது! வேல் வழிபாடு-ன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, சிலை மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது.

௩) #வேலின்_அமைப்பு:


பொதுவாக, வேல், எஃகினால் செய்யப்படும் போர்க் கருவி!  எஃகு ஒரு கலப்பு உலோகம்! இரும்பு + கரிமம் குறிப்பிட்ட அளவில் கலந்து, உலைக்களத்தில் வடிக்கப்படும் கருவி! மன்னர்களின் வேல் எஃகு என்றால், சில வேடர்களின் வேல் கல்லால் செய்யப்பட்டு, நெடுமரத்தில் பொருத்தப்பட்டும் இருக்கும்! ஆயர்களும், ஆநிரைகளைக் காக்க, வெட்சி/கரந்தைப் பூச்சூடி, கையில் வேல் வைத்து இருப்பார்கள்!

௪) #வேலின்_தோற்றம்!

* வேலின் முகம் = சுடர் இலை போல இருக்காம்!
* வேலின் மெய் = நீண்ட நெடு வேலாம்!

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்;
சினம்மிகு முருகன் தண் பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கதெழு நெடுவரை - (அகநானூறு 59 - மருதன் இளநாகனார்)

* வேலின் தண்டு இலகுவாகவும், தண்டின் உட்புறம் உள்ளீடற்று (hollow) ஆக இருக்கும்!
* வேலின் முகமோ,  பளு+ கூர்மை உடையதாக இருக்கும்!

௫) #வேலும்_ஈட்டியும்_ஒன்றா??

வேலும் ஈட்டியும் வேறு வேறு ஆயுதங்கள்!
* வேலின் முகம் = அகன்று விரிந்து இருக்கும்! ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்!
* வேலின் கீழ் நுனி = வட்டமாக முடியும்! ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்!

வேல் = பெருமை மிக்கது! மன்னர்களும், படைத் தலைவர்களுமே பெரும்பாலும் ஏந்துவார்கள்!
ஈட்டி = அனைத்து போர் வீரர்களிடமும் உண்டு!

வேல் எறிவதும், சிறந்த பகைவர்களை நோக்கியே! எல்லார் மேலேயும் வேல் எறிந்து விடுவதில்லை!

கான முயல் எய்த அம்பினில் - யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது என்ற குறளே இதற்குச் சான்று! முயலுக்கு அம்பு, யானைக்கு வேல்!

௬) #வேல்_வழிபாடு:

சங்க காலத்தில் வேல் வழிபாடு எப்படி இருந்தது?
வேலன் வெறியாட்டு, வெறி அயர்தல்-ன்னு சொல்லுவர். இதில்...."வேல்" ஒரு முக்கியமான பூசைப் பொருள்!

"வெண்மணல் பரப்பி, செந்நெல் தூவி,
பந்தல் இட்டு, பூ பல பெய்து
பசுந்தழை, காந்தள், பூக்குலை கட்டி" என்று அலங்கரித்து (அணி செய்து), வேலை மையமாக நட்டு வழிபடுதல் வழக்கம்!

பொய்யா மரபின் ஊர்முது வேலன்
கழங்கு மெய்ப் படுத்துக் கன்னம் தூக்கி
முருகு என மொழியும் ஆயின்
கெழுதகை கொல்? இவள் அணங்கி யோற்கே -(ஐங்குறுநூறு, கபிலர்)

* எதாச்சும் தலைவியின் காதல் நோய் இன்னதென்று அறியாத தாய், தலைவியின் மேல் ஏதோ பித்து/சூர் இறங்கி விட்டதாக நினைத்து, அதைப் போக்க முருகனுக்கு எடுக்கும் பூசை! இதை ஒரு ஆண் (வேலன்) நிகழ்த்துவான்!

* (அல்லது) தலைவியே, தன் காதலனைச் சேர முடியாது, அவன் ஒதுக்கியதால் அவனையே எண்ணியெண்ணி அன்பு மிகுந்து போய், முருகனை முன்னிட்டு ஆடிய வெறிக் கூத்து!

இதை ஆண்கள்-பெண்கள், இருவருமே வேல் பிடித்து ஆடின செய்திகள், சங்கத் தமிழில் உள்ளன!
* ஆண் ஆடும் போது = பூசை/குறி! கிடா வெட்டிப் பலி குடுத்து, அதன் குருதியை, அரிசியொடு கலந்து தூவுதல்
* பேதுற்ற பெண் ஆடும் போது = காதல் வலி! வெறியில் முருகனையே திட்டிப் பூக்களைத் தூவுவாள்!

தொல்காப்பியரும் இதற்கு ஒரு துறை ஒதுக்கி உள்ளார்! முருகனுக்கு உரிய காந்தள் பூச்சூடி ஆடுவது!

வெறி அறி சிறப்பின் வெவ் வாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தளும் - (தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல்)

காதல் வலி மிகுந்து போய் பெண்கள் ஆடிய வேலன் வெறியாட்டு, மிகவும் மனத்தை வலிக்க வைப்பவை!
ஒரு அழகிய மயில் (மஞ்ஞை), வெறியில் ஆடினா எப்படி இருக்கும்? ஆடி ஆடியே, அழுது அழுது, உள்ளமும் உடலும் தேய்ந்து போனாள்!

கடியுண் கடவுட்கு இட்ட செழுங்குரல் 
அறியாதுண்ட மஞ்ஞை ஆடு மகள் 
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கு
சூர் மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே - (குறுந்தொகை 105, நக்கீரர்)

ஒரு கட்டத்தில், காதல் வலியால், முருகனையே "மடையா"-ன்னு திட்டும் தலைவியின் பெருத்த ஆற்றாமையைக் காணலாம்!

வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே! - (நற்றிணை 34)

"காதலன் திடீரென்று என்னை ஒதுக்கும் போக்கில் துடிச்சிப் போய் நான் வாழுறேன்! இது அறியாமல், வேலன் வெறியாட்டை என் தாய் நடத்துறா. உனக்காவது தெரிய வேணாமா முருகவேளே? இந்தப் பூசைக்கு நீயுமா உடந்தையா?

நீ கடவுளே ஆனாலும் ஆகுக! அது பற்றிக் கவலையில்லை! மடவை முருகா (மடப்பயலே முருகா)...
நீ நல்லா இருடா! = மடவை மன்ற வாழிய முருகே!!"  என்று இவள்....முருகனிடம் திட்டியும் + கெஞ்சியும் + கண்ணீரால் முருகனைக் குளிப்பாட்டும் காட்சி.

௭) #சிலப்பதிகாரத்தில்_வேல்:



பத்துப்பாட்டு நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் வேலைப் பற்றிச் சிறிதளவே சொன்னாலும், அதை ஈடுகட்டவோ என்னவோ.... சிலம்பில், இளங்கோவடிகள், வேலின் பெருமையை மிக அழகாக, குன்றக் குரவையில் விவரிப்பார்!

வேல் கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ!

சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்! -ன்னு முருக பக்தரான நக்கீரர், இரண்டு அடிகளே பாட...

இரண்டே அடிகளா? இளங்கோ அடிகளா?

- என்று வேல் விருத்தமாய், அன்றே பாடினார் சமணச் செல்வரான இளங்கோ! இளங்கோவின் பண்பட்ட உள்ளம் தான் என்னே!!

சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும், 
ஏரகமும், நீங்கா இறைவன் கை "வேல்" அன்றே! -ன்னு தொடங்கும் இளங்கோ, வரிசையாக, "வேல் வேல்"-ன்னு ஒரு வேல் விருத்தத்தை, அருணகிரிக்கும் முன்பே பாடிவிட்டுச் செல்கிறார்!

சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே!
குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடு வேலே!
இணை இன்றித் தான் உடையான் ஏந்திய வேல் அன்றே!
திரு முலைப் பால் உண்டான் திருக் கை வேல் அன்றே!

-ன்னு சிலப்பதிகார வேல் வருணனையில், இசையும் கலந்து, 'பாட்டு மடை'யாகப் பெருகி வரும்!

௮) #முருகன்_வேறு, #வேல்_வேறு_அல்ல!

வேலுக்கு = உடம்பிடித் தெய்வ என்பது ஒரு பெயர்.
(உடன் பிடித் தெய்வம்)

நன்றி வணக்கம்
உதவி : வலைத்தளம்
தனித்தமிழாளன்

No comments:

Post a Comment