Monday, July 22, 2019

முருகன் வெறியாடல் வழிபாடு

முருகனுக்குக் குருதிகலந்த தினை தூவி வெறியாடல் - முருகாற்றுப்படுத்துதல்


நெடுவேள் முருகனுக்கு ஆட்டைப் பலிகொடுத்து, அதன் குருதியை செந்தினையில் கலந்து தூவி முருகவேளை ஆற்றுப்படுத்தி வழிபட்ட செய்தியை விளக்கும் பதிவு இது. பலியில்லா வழிபாடே தமிழர் வழிபாட்டுப் பண்பாடு என்று வாதிடுவோர் பார்த்துத்தெளிதற்கு. பேருரையைப் படித்து விளக்கிக்கொள்ள இயலாதவர்கள், என் சிற்றுரையைப் படிக்கவும்.




நூல் :  அகநானூறு_22

பாடியவர் : வெறிபாடிய காமக்கண்ணியார்


அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும்
கணம்கொள் அருவிக் கான்கெழு நாடன்
மணம்கமழ் வியன்மார்பு அணங்கிய செல்லல்
இதுஎன அறியா மறுவரற் பொழுதில்
'படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை 5

நெடுவேட் பேண தணிகுவள் இவள்' என,
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற,
களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி,
வளநகர் சிலம்பப் பாடிப் பலி கொடுத்து,
உருவச் செந்தினை குருதியொடு தூஉய், 10

முருகுஆற்றுப் படுத்த உருகெழு நடுநாள்,
ஆரம் நாற, அருவிடர்த் ததைந்த
சாரல் பல்பூ வண்டுபடச் சூடி,
களிற்று - இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் வயப்புலி போல, 15

நல்மனை, நெடுநகர்க் காவலர் அறியாமை
தன்நசை உள்ளத்து நம்நசை வாய்ப்ப,
இன்உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து,
நக்கனென் அல்லெனோ யானே - எய்த்த
நோய்தணி காதலர் வர, ஈண்டு
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே? 21

துறை :

வரைவிடை வைத்துப் பிரிந்தகாலத்து, தலைமகள் ஆற்றாளாக, தோழி தலைமகனை இயற்பழிப்ப, தலைமகள் இயற்பட மொழிந்தது, தலைமகன் இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாக, தோழியாற் சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொல்லியதூஉமாம்.

பேருரை :


தெய்வத்தை உடைய உயர்ந்த மலையின் உச்சியிலிருந்து விழும் ஊற்றுக் கூட்டங்களைக் கொண்ட அருவியினால் வளர்ந்த காடுகள் பொருந்திய நாடனாகிய தலைவனது, நன்மணம் கமழும் அகன்ற மார்பு வருத்தியதனால் உண்டான துன்பம் இது என்று அறியாத செவிலியும் தாயும் மனஞ்சுழலும் சமயத்தில், பகைவர்களை அழித்த பலவகையான புகழ்களையும் பரந்த கைகளையும் உடைய நெடிய முருகவேளை வழிபட இவள் நோய் தனிவாள் என்று முதுமையான வாயையுடைய பெண்டிர் அதுவே உண்மையாகக் கூற,

அதைக் கேட்ட தாய்மார் வேலனைக் கொண்டு வெறியாடும் களத்தை நன்றாக அமைத்து முருகனுக்குக் கண்ணியைச் சூட்டி வளப்பமுடைய கோயிலில் எதிரொலிக்கும்படி பாடச்செய்து, பலியைக் கொடுத்து அழகிய சிவந்த தினையை இரத்தத்தோடு தூவி முருகனை வழிப்படுத்தி வருவித்த அச்சம் நிரம்பிய நடுயாமத்தில், சந்தனம் மணம் வீச அரிய மலைப்பிளப்பிலே தழைத்துப்பூத்த மலைச்சாரலுக்குரிய பலவகை மலர்களை வண்டுகள் மொய்க்கும்படி தலையில் அணிந்து, யானையாகிய இரையைத் தேடிய பார்வையையும் நடையையும் ஒளித்து இயங்கும் வழக்கத்தையும் வலிமையையும் உடைய புவியைப்போல, நல்ல மனைகளையுடைய நீண்ட ஊரைக் காக்கும் காவலர் அறியாமல், தன்னை விரும்பும் விருப்பத்தை உடைய உள்ளத்தைப் பெற்ற நம்முடைய விருப்பம் நிறைவேறும்படியாக, இனிய உயிர் வாடாமல் தளிர்க்கும் படி  தலைவர் அனையுந்தோறும், உடம்பு பூரித்துச் சிரித்தேன் அல்லனோ யான், என் உடம்பு இளைத்தற்குக் காரணமான காமநோயைத் தணிக்கும் காதலரின் வரவு இங்கு அயலானாகிய வேலனுக்குத் தெரியாமற் போனதைக் கண்டு?

****************************

சிற்றுரை :


தலைவன் தலைவியை மணஞ்செய்துகொள்வேன் என்றுகூறிவிட்டுச் பணிநிமித்தம் சென்றுவிடுகிறான். தலைவன் வர காலதாமதமாகவே, தலைவி தூயருற்று, பித்துபிடித்தாற்போல் இருக்கிறாள். இதைக்கண்ட தாயும் செவிலித்தாயும், தலைவிக்கு ஏதோ பேய்பிடித்ததாக எண்ணி, முருகனுக்கு வெறியாடல் வழிபாடு செய்தால் சரியாகிவிடும் என்று நினைக்கின்றனர். முதுபெண்டிரும் அதுவே சரி என்கின்றனர்.

வெறியாடற்களம் அமைத்து நெடுவேலை நாட்டி, கண்ணி சூட்டி, பலி கொடுத்து, செந்தினையில் அந்தக்குருதியைக் கலந்து வேலுக்கும் முருகனுக்கும் தூவி வழிபட்டு முருகனை வரவழைக்கின்றனர். இதைக்கண்ட தலைவி, "நான் தலைவனின் பிரிவால் தான் இப்படி இருக்கிறேன் என்ற காரணத்தை அறியாத தாயும் செவிலியும் இப்படி முருகனுக்கு வெறியாடல் நிகழ்த்துகின்றனரே", இதை இவர்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால், முருகனுக்கும் இது தெரியவில்லையா" என்று நினைக்கிறாள். தலைவனின் வருகையே இதற்கு மருந்து என்று நகைத்துக்கொள்கிறாள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தோழி, தலைவனிடம் இவற்றைக்கூறி விரைவாக வந்து தலைவியை மணந்துகொள்க என்று கூறுகிறாள். முருகனுக்கு வெறியாடல் செய்யும் அந்த நடுஇரவு நேரத்தில் தலைவனும் அங்கு வருகிறான்.

**********

இப்பாடலை படித்துவிட்டு, இதெல்லாம் பொய், முருகனுக்கு உயிர்ப்பலி குருதித்தினையைத் தூவியெல்லாம் வழிபாடு நடக்கவில்லை என்று வாதிடுவோர், தக்க சான்றுகளுடன் வரவும். இதை நம்பாதவர்களுக்கு நாளை திருமுருகாற்றுப்படையிலேயே இதற்குச் சான்று காட்டுகிறேன். அப்போதாவது நம்புவீராவென்று பார்ப்போம்.

நன்றி. வணக்கம்.
தொகுப்பு : தனித்தமிழாளன்

***********

மதவலி நிலைஇய மாத்தாட் கொழவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் ளரிச்
சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துனையற அறுத்துக் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியொடு இன்னியம் கறங்க
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகியம் கிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப் படுத்த உருகெழு வியனகர்
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட”

இந்த அகநானுற்றுப் பாடலிலும் திருமுருகாற்றுப் படைப் பகுதியிலும் சொல்லப் பெறும் முருக பூசையில் பல செய்திகள் பொதுவாக இருத்தலைக் காணலாம்.

இப்பாட்டில் அணங்குடை நெடுவரை, சாரல் என்பன குறிஞ்சித் திணைக்குரிய நிலம். உருகெழு நடுநாள் என்பது அதற்குரிய காலம், இவை இரண்டும் முதற் பொருள்.

1. மிக்க வலிமை நிலைபெற்ற பெரிய காலையுடைய கொழுத்த ஆட்டுக்கிடாயின் இரத்தத்தோடு கலந்த தூய வெள்ளையரிசியைச் சிறு பலியாக இட்டு, பல தானியக் கூடைகளை வைத்து, பசிய சிறிய மஞ்சள் நீரோடு மணமுடைய பண்டங்களைத் தெளித்து, தன்மையையுடைய அலரியின் மணமுடைய மாலையை அளவு சரியாக இருக்கும் படி, நறுக்கி, எங்கும் தொங்கப்படி அலங்கரித்து, மணமுடைய தூபம் எடுத்துக் (குறிஞ்சிப் பண்ணைப் பாடி, ஒலிக்கின்ற இசையையுடைய அருவியின் ஓசையோடு இனிய வாத்தியங்கள் முழங்க, பல நிறங்களையுடைய மலர்களைத் தூவி, யாரும் அஞ்சும்படி மிகச் சிவந்த தினையைப் பரவ வைத்து, குறமகளாகிய பூசாரிச்சி முருகனுக்குரிய துடியையும் தொண்டகப் பறையையும் வாசிக்கச் செய்து, தெய்வம் இல்லை யென்பவரும் அஞ்சும்படியாக முருகனை வருவித்த அழகையுடைய விசாலமான கோயிலில், வெறியாடும் இடம் எதிரொலிக்கும்படி பாடி, பலவாகிய கொம்புகளை ஒருங்கே ஊதி, வளைந்த மணியை அடித்து, ஓடாத வீரத்தையுடைய முருகனுடைய வாகனமாகிய பிணி முகம் என்னும் யானையை வாழ்த்தி, வேண்டியவர்கள் வேண்டியபடி யெல்லாம் வந்து முருகனை வழிபட.

No comments:

Post a Comment