Monday, August 12, 2019

கலித்தொகை - தோழிகூற்று

கலித்தொகை - ௧௩௩ 

நெய்தற்கலி - தோழிகூற்று
பாடியவர் : நல்லந்துவனார்


மாமலர் முண்டகந் தில்லையோ டொருங்குடன்
கான லணிந்த வுயர்மண லெக்கர்மேற்
சீர்மிகு சிறப்பினோன் மரமுதற் கைசேர்த்த
நீர்மலி கரகம்போற் பழந்தூங்கு முடத்தாழைப்
பூமலர்ந் தவைபோலப் புள்ளல்குந் துறைவகேள்

ஆற்றுதலென்பதொன் றலந்தவர்க் குதவுதல்
போற்றுத லென்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப்படுவது பாடறிந் தொழுகுத
லன்பெனப் படுவது தன்கிளைசெறாஅமை
யறிவெனப்படுவது பேதையார் சொன்னோன்றல்
செறிவெனப்படுவது கூறியது மறாஅமை
நிறையெனப் படுவது மறைபிறரறியாமை
முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல்
பொறையெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்

ஆங்கதையறிந்தனி ராயினென் றோழி
நன்னுத னலனுண்டு துறத்தல் கொண்க
தீம்பா லுண்பவர் கொள்கலம் வரைத
னின்றலை வருந்தியா டுயரஞ்
சென்றனை களைமோ பூண்கநின் றேரே.

                                                 - நல்லந்துவனார்

'வரைவு உடம்பட்டோர்க் கடாவல் வேண்டினும்' என்பதனால், தலைவன் தெருளாதவனைத் தெருட்டி, வரைவு கடாயது.




தனக்கு வலியைத்தரும் என்று கருதித் தான் வழிபட்ட தெய்வம் தன்னைச் சேர்ந்தவர்கட்கு நெஞ்சழியும் நோய் கைமிகும்படி வருத்தமாகிய தன்மைபோல நின்னைத்தனக்குவலியென்று வழிபட்டஎன்றோழியை நீ செய்த பழி எங்கும்பரந்து அலர்தூற்றுகையினாலே உண்டான மிக்க நினைவு வருத்த, நீங்குதல் கொடிதுகாணெனத் தோழி வரைவுகடாயினாள்.

பொருள்:


முண்டகப் பூ, தில்லைப் பூக்களோடு சேர்ந்து மலர்ந்திருக்கும் கானல் நிலத்தில் உயர்ந்த மணல் மேட்டில், கையில் கரகம் தொங்கவிட்டுக்கொண்டிருக்கும் முனிவன் போல, தாழம்பூ மலர்ந்து தொங்கும் தொங்கும் துறையை உடையவனே, நான் சொல்வதைக் கேள்.

ஆற்றுதல் என்பது அலைக்கழிவோருக்குத் தொண்டாற்றி உதவுதல். போற்றுதல் என்பது தம்மைப் புணர்ந்தவரைப் பிரியாமல் இருத்தல். பண்பு என்று சொல்லப்படுவது பெருமை தரத்தக்கது எது என அறிந்து அதன்படி நடத்தல்.
அன்பு எனப்படுவது தன் உறவுக்காரர்களை விட்டு விலகாமை. அறிவு என்று சொல்லப்படுவது அறியாவர் சொல்லும் சொற்களைப் பொறுத்துக்கொள்ளுதல்.
செறிவு எனப்படுவது சொன்ன சொல்லை மறுத்துப் பேசாமை. நிறை எனப்படுவது தான் மறைக்கவேண்டடிய நிகழ்வுகளை பிறர் அறியாவண்ணம் நடந்துகொள்ளுதல்.
முறை எனப்படுவது குற்றம் செய்தவனுக்கு இரக்கம் காட்டாமல் அரசன் அவன் உயிரை வாங்குதல். பொறை எனப்படுவது. தன்னைப் போற்றாதவர் செய்யும் பிழைகளைப் பொறுத்துக்கொள்ளுதல்.

இவற்றை இப்படி நீர் அறிந்தவர் ஆயின், என் தோழியின் நலத்தை உண்டபின் அவளைக் கைவிடுதல் என்பது, பால் குடிப்பவர் குடித்த பின்னர் பால் இருந்த பாத்திரத்தைத் தூக்கி எறிதல் போன்றது. உனக்காக அவள் வருந்திக்கொண்டிருக்கிறாள். அவளது துன்பத்தை நீ போக்க வேண்டும். அதற்காக நீ செல்ல உன் தேரைப் பூட்டுக.

No comments:

Post a Comment