Monday, August 12, 2019

குறுந்தொகையில் நற்றலைவனின் உறுதிமொழி

குறுந்தொகையின்கண் ஓர் தலைவிக்கு ஓர் நற்றலைவனின் உறுதிமொழி :


நூல் : குறுந்தொகை - 40
திணை : குறிஞ்சி
பாடியவர் : செம்புலப்பெயல்நீரார்

"இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர்ப் பிரிவரெனக்கருதி அஞ்சிய தலைமகளது குறிப்புவேறுபாடுகண்டு தலைமகன் கூறியது".





மூலப்பா:


யாயு ஞாயும் யாரா கியரோ
வெந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதுஞ்
செம்புலப் பெயனீர் போல
வன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.

சீர்பிரித்த எளியவடிவப்பா:


யாயும் யாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

பொருள் : 


தலைவனும் தலைவியும் இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த பின்னர், தலைவன் தன்னைவிட்டுப்பிரிந்துவிடுவானோ எனவெண்ணி அஞ்சுகிறாள் தலைவி. தலைவியின் செயல்குறிப்புகளால் அதை உணர்ந்த தலைவன், தலைவிக்குத் 'தான் பிரியமாட்டேன்' என்பதை இப்பாடலால்  உறுதிகூறுகிறான்.

என் தாயும் நின் தாயும் யார்யாரோ. என் தந்தையும் நின் தந்தையும் எம்முறையில் உறவினர்கள்? இதற்கு முன்பு யானும் நீயும் எவ்வழியில் அறிந்தவர்கள்? செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் இயற்கையாக கலந்தது போல, அன்புடைய நம் இருவர் நெஞ்சமும் தாமாகக் கலந்துவிட்டன இப்போது.

இப்படி இயற்கையாகக் கலந்த மண்ணையும் நீரையும் எவ்வாறு பிரிக்கமுடியாதோ, அதுபோல இயற்கையான அன்பால் இணைந்த நம்மிருவரிடையே பிரிவு உண்டாகாது என்று தலைமகளுக்கு மண்ணையும் நீரையும் உவமைகாட்டி மறைபொருளாக உறுதிகூறுகிறான் நற்றலைவன்.

***************

இதைவிட நல்ல அறவுறுதியை நல்லுவமைகூறி புலமையுடனாகிய பாவால் ஈராயிரமாண்டுகளுக்கு முன்பு உலகில் வேறு எம்மொழியாலும் கூறிவிடவியலுமா? இப்பாவை இயற்றிய புலவரின் பெயர் அறியக்கிடைக்கவில்லை. இப்பாட்டின்கண் வரும் "செம்புலப்பெயல்நீர்" என்னும் செவ்வுவமைச்சொல்லால் "செம்புலப்பெயல்நீரார்" என்னும் பெயரால் அடையாளங்காட்டப்படுகிறார். {செம்புலப்பெய்ந்நீர் என்றும் பாடவேறுபாடுண்டு}

பாடியவர் : செம்புலப்பெயல்நீரார்
உரை : தனித்தமிழாளன்

நன்றி. வணக்கம்.

No comments:

Post a Comment