கலித்தொகை ௫௧(51) குறிஞ்சிக்கலி - கபிலர்
கலித்தொகையில் ஓர் கவின்மிகு காதற்காட்சி:
சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி,
நோ தக்க செய்யும் சிறுபட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே!
உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை,
'அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள் என, யானும்
தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை
வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு,
'அன்னாய்! இவனொருவன் செய்தது காண்' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி,
நகைக் கூட்டம் செய்தான், அக் கள்வன் மகன்.
‘புகாஅக் காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி, பகாஅ விருந்தின் பகுதிக்கண்’ தலைவி, தோழிக்குக் கூறியது.
உரை :
தலைவி தன்தோழியிடம் கூறியதாக அமைந்துள்ளது இப்பா.ஒளிபொருந்திய வளையலை அணித்தவளே, கேள். ஒருநாள், நானும் என் தாயும் வீட்டில் இருந்தோம். அப்போது, வாசலிலிருந்து ஒரு குரல் கேட்டது. "அம்மா, தாகத்திற்கு தண்ணீர்" என்று. அதைக்கேட்ட என் தாய், யாரோ தண்ணீர் கேட்கிறார்கள், போய்க்கொடு என்றாள்.
தண்ணீர் எடுத்துவந்தேன், வாசலில் நின்ற இளைஞனிடம் செம்பைக்கொடுத்தேன். செம்பை வாங்கியதோடு நிற்காமல் என் செங்கையையும் பற்றி இழுத்தான். "அம்மா", என்று அலறினேன்.
கரம் பற்றி இழுத்தவன் யாரென்று பார்த்தேன். அவன் தான் அந்த சுட்டிப்பயல், நாம் சிறுவயதில் மணல்வீடு கட்டி விளையாடும்போது அதை காலால் உதைத்து சிதைத்து விளையாடுவானே. நம் வரிப்பந்தையையும் எடுத்துக்கொண்டு ஓடுவானே, அந்த நாய்ப்பயல், அவன்தான். கண்ணையும் கருத்தையும் கவரும் கட்டிளம் காளையாகி வந்துநின்றான். கண்டேன் அவனை, உள்ளம் பறிகொடுத்தேன்.
"அம்மா, இவன் செய்வதைப் பார்" என்று நான் அலறியதைக்கேட்ட என் தாய் ஓடிவந்து, என்ன என்று கேட்டாள். என்னசொல்வதென்று விழித்தேன். கையைப்பிடித்து இழுத்தான் என்று சொல்லமுடியுமா. அப்படிச்சொன்னால் அவனை நையப்புடைத்து விரட்டிவிடுவார்களே. அப்படிச்சொல்லக்கூடாது என்று, ஒரு பொய்யைக்கூறினேன்.
"மடமடவென்று தண்ணீர் குடித்தான், அவனுக்கு புரையேறிற்று. எங்கே இவன் இறந்துவிடுவானோ என்று உன்னை அழைத்தேன்" என்று பொய் கூறினேன்.
அதற்கு தாயும், "அப்படியா, என்னப்பா அவசரம்? மெதுவாக தண்ணீர் குடிக்கக்கூடாதா" என்றுகூறி அவன் முதுகில் தடவிக்கொடுத்தாள்.
"அப்போது அந்த திருட்டுப்பயல் என்னசெய்தான் தெரியுமா? என்னைப்பார்த்து கண்ணைச்சிமிட்டினான். புன்முறுவல் பூத்தான்".
*******************************
நன்றி. வாழி
தனித்தமிழாளன்
No comments:
Post a Comment