Tuesday, June 30, 2020

பரிமேலழகருரை

திருக்குறள் பரிமேலழகருரை:


பண்டே திருக்குறளுக்குப் பதின்மர் உரைகண்டுள்ளனர். அவர்கள்,

"தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிதி பரிமே லழகர் - திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர்நூற்கு எல்லையுரை செய்தார் இவர்." ஆவர்.

இப்பதின்மருள் ஐவருரைகள் மட்டுமே கிடைத்து வெளிவந்துள்ளன. இவற்றுள் காலத்தால் முந்தியது, பத்தாம் நூற்றாண்டிலெழுந்த மணக்குடவருரையாகும். காலத்தால் பிந்தியது, பதின்மூன்றாம் நூற்றாண்டிற்றோன்றிய பரிமேலழகருரையாகும். இது, 1847ஆம் ஆண்டு முதன்முதலில் அச்சேறி வெளியானது. {கீழே இணைக்கப்பட்டுள்ள படம் 1885ல் பதிப்பிக்கப்பெற்ற உரைநூலின் ஒருபக்கம் }

மணக்குடவருரையின் அறத்துப்பாலை மட்டும், 1917ஆம் ஆண்டு ஐயா வ.உ.சிதம்பரனார் வெளியிட்டார். பிறகு, 1925ஆம் ஆண்டு மணக்குடவருரையை முழுவதும் ஐயா கா.பொன்னுசாமி என்பவர் பதிப்பித்தார். ஆனால், பிந்திய பரிமேலழகருரையே மக்களிடம் மிகுந்து பரவியது. இவர்தம்முறையில் வைதீகக்கருத்துகளை புகுத்தியிருந்தாரென்றும், மணக்குடவர் தம்முரையில் வடமொழிக்கருத்துகளைக் கூறாது, தமிழ்ச்சார்பாகவே எழுதிஇருப்பாரென்றும் இவ்வுரைநூல்கள்வல்ல தமிழறிஞர்கள் கருதுவர். மணக்குடவருரையையே சிறந்ததென்பர். இவ்வரலாறுகள் நிற்க.

************

ஈண்டு, 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய பரிமேலழகருரையின் முதற்குறளை பதிந்துள்ளேன். இது 715 பக்கங்களைக்கொண்ட திருக்குறளுரைநூல். இவ்வுரையைத் திக்கித்திணறாமல் நம்மால் படிக்கவியலுகிறதாவென்று காண்க. தவறின்றி படித்துப்பொருளுணர்ந்துகொள்ளவே மிகவுஞ்சிக்கல். தமிழாசிரியர்களுக்கே இது கடினமெனவெண்ணுகிறேன். அவர்களுக்கே கடினமெனின் தமிழ்படிக்காத இவ்வறிவிலியேனின் நிலையென்ன? நீங்களும் இதைத் தங்குதடையின்றி தவறின்றிபடித்துப்பொருளுணர முயலுங்கள். தமிழில் எழுதியிருப்பதையே நம்மால் படித்து விளக்கிக்கொள்ளமுடியவில்லையே. இவ்வுரைநூலுக்கே உரைநூல்கேட்டு, அவ்வுரைநூலுக்கும் மூன்றாமெளியவுரைநூல் கேட்குமளவிற்கு அறிவிலிகளாயுள்ளோம். ஆனால், தமிழர்களென்று வாய்கிழியக்கூறி வெற்றுப்பெருமை பேசிக்கொள்கிறோம். இவ்விழிநிலைக்குக்காரணம் நம்மிடை பழநூல்கள் ஓதும்பழக்கம் மறைந்து இலக்கணங்கல்லாமையேயாகும். இலக்கணமும் மறந்தோம், எழுத்துப்புணர்ச்சியை அறவே விடுத்தோம். பிரித்துப்பிரித்தெழுதி புணர்ச்சியிலக்கணந்தவறினோம். மொழியுஞ்சிதைந்தழகுங்கெட்டது.



இலக்கணங்கற்போம் பழநூல்களோதுவோம் மொழியின்தொல்வழக்கங்காப்போம்.

வாழ்க தொல்லிலக்கணப்பழந்தமிழ்

நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

Sunday, June 28, 2020

சோழப்பெருங்கோயில்கள்

சோழவரசர்களின் பெருங்கோயில்கள் :


சோழவேந்தர்கள் சிவனையே பெருங்கடவுளாகப் போற்றிப்பரவி சிவனுக்குப் பெருங்கோயில்களைக் கட்டியுள்ளனர். இராசராசனின் பாட்டனார் கண்டராதித்தசோழர் தில்லை இறைவன்மீது ஒரு பதிகத்தைப்பாடியுள்ளார். அது சைவத்திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையுள் வைக்கப்பட்டுள்ளது. கண்டராதித்தனாரின் மனைவியார் பேரரசி செம்பியன்மாதேவியாரே சோழர்க்குடியினருக்கு சிவநேயஞ்சொல்லி வளர்த்தவர். அச்சிவநேயத்தினாலேயே இவர்கள் சிவனுக்குப் பெருங்கோயில்கள் கட்டுவராயினர்.


இராசராசேச்சரம்

கட்டுவித்தவன் : முதலாம் இராசராசன் - 985 - 1014

கங்கைகொண்டசோளேச்சரம்

கட்டுவித்தவன் : இராசேந்திரன் - 1012 - 1044

இராசராசேச்சரம்

கட்டுவித்தவன் :
இரண்டாம் இராசராசன் - 1146 - 1173

மூவுலகேச்சரம் {திரிபுவனேச்சரம்}

கட்டுவித்தவன் :
மூன்றாம் குலோத்துங்கன் -1178 - 1218

நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

Friday, June 26, 2020

ஆய்தம் என்ற முப்பாற்புள்ளி

நம் கண்முன்னே வழக்கொழிந்த ஓரெழுத்து "ஃ".

இஃதை,

௧) ஆய்தம்
௨) முப்பாற்புள்ளி
௩) முப்புள்ளி
௪) அஃகான்
௫) அஃகேனம்
௬) தனிநிலை
௭) ஒற்று
என்றும் அழைப்பர்.



இஃது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.

எ.கா: அஃது, இஃது, பஃறி, எஃகு, அஃறிணை, வெஃகாமை

௧) சொல் ஒலியை நுண்மையாக்கி அதாவது மென்மையாக்கிக் காட்டுவதால் ஆய்தம்

(ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்.
 - தொல்காப்பியம்-உரியியல். - மேற்சொன்னதற்கு இலக்கணம்.)

௨) மூன்று புள்ளிகளால் குறிக்கப்படுவதால் முப்பாற்புள்ளி மற்றும் முப்புள்ளி

௩) கான் என்னும் எழுத்துச்சாரியை பெற்று அஃகான்

௪) உயிரெழுத்துமல்லாமல் மெய்யெழுத்துமல்லாமல் உயிர்மெய்யெழுத்துமல்லாமல் தனியாக நிற்பதால் தனிநிலை

(ஒலிப்பு மாத்திரையளவில் சிலவிடங்களில் அரைமாத்திரையாகவும் சிலவிடங்களில் ஒரு மாத்திரையாகவும் ஒலிக்கும். ஆகையால், தமிழெழுத்து நெடுங்கணக்கில் உயிரெழுத்திற்கும் மெய்யெழுத்திற்கும் இடையில் பொதுவாய் வைக்கப்பட்டிருக்கும்)

௫) ஒற்றாகவும் கொள்வதால் ஒற்று

௬) நன்னூல் இஃதை அஃகேனம் என்று குறிக்கிறது.

முப்பாற்புள்ளியாம் (ஃ) இவ்வெழுத்து வழக்கொழிந்தாற்போல் ஐ மற்றும் ஔ ஆகியவற்றை ஒழிக்க, பலரும் ஐயை #அய் என்றும் ஔவை அவ் என்றும் எழுதி தமிழின் எழுத்துகளை சீர்குலைக்கப்பார்க்கின்றனர். தமிழர்களே மயங்காதீர். அஃகானை மீண்டும் புழங்குவோம். ஐயையும் ஔவையும் சரியாக எழுதுவோம்.



************************************************
உதவி : இணையம்
தமிழ் கோ விக்ரம்

Sunday, June 21, 2020

தமிழிசையாய்வு நூல்கள் சில

தமிழிசை ஆய்வுநூல்கள்சில :


உலக இசைநாளாகிய இன்று, உலகமுதலிசையாம் தமிழிசையைப்பற்றிய ஆய்வுநூல்கள் சிலவற்றையறிவோம்.

உலகின் முதலிசை தமிழரிசையாம் தமிழிசையே. அதில் யாதொரு ஐயமும் வேண்டா. ஆரியர் நம்மிசையைக் களவாடி கர்நாடக இசையென்று பெயரிட்டுத் தமதாக்கிக்கொண்டனர். நம்மவர் நம்மிசையினை மறந்தேபோயினர். நம்மிசையை நாம் மீட்டெடுக்க நம்முன்னோர்களும் தமிழிசையறிஞர்களும் பலவாறு பாடுபட்டு பல்லாய்வுகளை மேற்கொண்டு தெள்ளத்தேறிய முடிவுகளை நூல்களாக வெளியிட்டுள்ளனர். அவற்றை நாம் யாரும் தேடிப்பார்ப்பதே இல்லை. அறியவேண்டுமென்ற எண்ணமுமில்லை நமக்கு.

நம்மிசையை நாமறிந்துகொள்ள நமக்குதவும் ஆய்வுநூல்கள் பலவுள. ஆனால், சிலவற்றை மட்டும் இங்கே பதிந்துள்ளேன். வாய்ப்புள்ளோர் படித்தறிந்து பழந்தமிழிசையை மீட்கும்பணியில் ஈடுபடவேண்டும்.
இசைவல்லோர் தமிழிசையை தமிழ்வழியிலேயே பாடவேண்டும். தமிழ்வழியிலேயே கற்பிக்கவேண்டும். இசைகற்போர் தமிழ்வழியிலேயே இசைகற்கவேண்டும்.

தமிழிசையாய்வு நூல்கள் சில :


இவற்றில் தலையாயது நம் ஆபிரகாம் பண்டிதர் எழுதிய "கருணாமிர்தசாகரம்" நூலின் இருதொகுதிகள்.

௧) கருணாமிர்தசாகரம் - 1
௨) கருணாமிர்தசாகரம் - 2
௩) பாணர் கைவழி என்னும் யாழ்நூல்
௪) யாழ்நூல்
௫) இசைத்தமிழ்
௬) பழந்தமிழிசை
௭) தமிழிசையியல்
௮) கருநாடக சங்கீதம் தமிழிசை
௯) தமிழிசைக்களஞ்சியம் - 4 தொகுதிகள்
௰) தமிழிசைப் பேரகராதி
௧௧) அமுதத்தமிழிசை
௧௨) தமிழிசை இலக்கண மரபு
௧௩) தொல்காப்பியத்தில் இசைக்குறிப்புகள்
௧௪) தொல்காப்பியத்தில் இசை
௧௫) தமிழிசை வளம்
௧௬) சங்கத்தமிழிசை
௧௭) சங்க இலக்கியத்தில் இசை
௧௮) சிலப்பதிகாரத்து இசைநுணுக்க விளக்கம்
௧௯) காரைக்கால் அம்மையார் தென்னிந்திய இசையின் தாய்
௨௰) சேக்கிழாரும் இசைத்தமிழும்
௨௧) இசைத்தமிழ் இலக்கண விளக்கம்
௨௨) பண்ணாராய்ச்சியும் அதன் முடிவுகளின் தொகுப்பும்
























இவ்வாய்நூல்களின் பக்கங்கள் மட்டும் 15000க்கும் மிகுதியாக இருக்கலாம். இன்னும் பல ஆய்வுநூல்கள் உள்ளன. இசைவல்லோர் இவற்றைப்படித்து தமிழிசையை மீட்டெடுக்கவேண்டுமென்று அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.

நன்றி. வணக்கம் 🙏
தமிழ் கோ விக்ரம்

Sunday, June 14, 2020

செல்வத்துப்பயனே ஈதல்

புறநானூறு -  ௧௮௯


"உண்பது நாழி உடுப்பது இரண்டே. ஆகையால்,
செல்வத்துப்பயனே ஈதல்"

செல்வர்களிடம் செல்வம் இருப்பதே ஈகை என்னும் அறத்தை மேற்கொள்ளவே.

பாடியவர்: மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
(செல்வத்துப் பயனே ஈதலென்பதை வலியுறுத்தும் செய்யுள் இது.)



பா:

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.

உரை:

ஒருவன் தெளிந்த கடல் சூழ்ந்திருக்கும் உலகம் அனைத்தையும் பிறருக்கு உரிமை இல்லாமல் தனக்கே உரியதாய் தன் வெண்கொற்றக் குடைக்கீழ்க் கொண்டுவந்து ஆண்டு ஆனுபவித்துக் கொண்டிருக்கிறான். மற்றொருவன் பகல் இரவு என்று பாராமல் நள்ளிரவிலும் உணவுக்கு வேட்டையாட விலங்கினைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

இப்படிப்பட்ட வெவ்வேறுவகை மக்கள், யாராய் இருந்தால் என்ன? அவன் உண்பது ஒரு படி உணவு. உடுத்திருப்பவை மேலாடை, கீழாடை என்று இரண்டே துணி. பிறவற்றை எண்ணிப் பார்த்தாலும் இருவர் நுகர்வும் ஒன்றாகவே உள்ளது. அப்படி இருக்கும்போது செலவத்தைச் சேர்த்துவைத்து என்ன செய்யப் போகிறோம். துய்க்கலாம் என்றால் மிஞ்சித் தப்பிவிடுமே. அதனால் செல்வத்துப் பயன் ஈதல் ஒன்றே.

நன்றி, வணக்கம்
தமிழ் கோ விக்ரம்

Friday, June 12, 2020

தமிழரின் விருந்தோம்பல்

தமிழரின் தன்னிகரற்ற விருந்தோம்பும் பண்பிற்கு ஓர் எடுத்துக்காட்டு இளையான்குடிமாறனாரும் அவர்தம் இல்லாளும்🙏


(இக்கதையில் இறைவன், சிவனடியார் என்னும் சமயநோக்குள்ள கதைமாந்தர்களை விடுத்து, இக்கதை கூறும் தமிழர்தம் விருந்தோம்பலின் பெருமையை மட்டும் பகுத்துணர்க. நன்றி)



இளையான்குடி என்னும் சிற்றூரில் மாறனார் என்ற வேளாண் சிவனடியார் தன் மனைவியோடு, 'இல்லறமல்லது நல்லறமன்று’ என்ற முதுமொழிக்கேற்ப வாழ்ந்து வந்தனர். தன்னைத் தேடிவரும் சிவனடியார் யாராக இருந்தாலும் அவர்களை அன்போடு அழைத்து விருந்தோம்புவர். இவர்களுடைய மேன்மையை உலகுக்கு அறிவிக்க எண்ணம் கொண்டார் தில்லையெம்பெருமான். குன்றுபோலிருந்த செல்வடத்தைக் குன்றிமணியாக்கினார்.

"இன்னவாறு வளம் சுருங்கவும் எம்பிரான் இளையான் குடி
மன்னன் மாறன் மனம் சுருங்குதல் இன்றி உள்ளன மாறியும்
தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் தக்கன கொண்டு பின்
முன்னை மாறில் திருப்பணிக் கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினார்"
--- (திருத்தொண்டர் மாக்கதை - 446)

பணம் போனால் என்ன? மனம் போகவில்லையே! தனம் சுருங்கியது. மனம் சுருங்கவில்லை. எந்தெந்தப் பொருட்களை விற்க முடியுமோ அதை விற்கிறார்கள். அடகு வைக்க முடிந்ததை அடகு வைக்கிறார்கள் தன்னையே அடகு வைக்கவும் தயங்கவில்லை.

இவர்களை மேலும் சோதிக்க எண்ணுகிறார் ஈசன். இறைவன் நற்றவர் வேடம் பூண்டு கொண்டு நடு இரவில் வருகிறார். நல்ல மழையில் இரவு நேரத்தில் இளையான்குடி மாறனின் கதவைத் தட்டுகிறார். கதவைத் திறக்கிறார் மாறனார். வந்த விருந்தினரை ஈரம் போகத் துடைத்து விட்டு மாற்றுடை கொடுத்து, மனைவியிடம், ”இவரின் அரும்பசியைத் தீர்க்க என்ன செய்யலாம்?” என்று கேட்கிறார்.

வீட்டிலே உணவில்லை என்பது அவருக்கும் தெரியும். என்றாலும் மனைவி யிடம் யோசனை கேட்கிறார். நேரமோ இருட்டி விட்டது. மழையும் பெய் கிறது. வீட்டிலும் ஒன்றுமில்லை. அண்டை வீட்டுக் காரகளிடம் இனியும் கடன் கேட்க முடியாது. ஏற்கனவே நிறையக் கடன் வாங்கியாகி விட்டது என்ன செய்யலாம்? சட்டென்று ஒரு வழி கண்டு பிடித்து விடுகிறாள். இந்தச் சிக்கல்தீரவேண்டுமானால் ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. "இன்று காலை விதைத்த நெல் இந்நேரம் மழையில் மிதந்து கொண்டிருக்கும் நீங்கள் சென்று அதை அரித்து வாரிக்கொண்டு வந்தால் அதை என்னால் முடிந்த அளவு பக்குவப் படுத்தி சமைத்துத் தருகிறேன். இதைத் தவிர வேறு வழி ஒன்றும் தெரியவில்லை" என்கிறாள்.

’செல்லல் நீங்கப் பகல் வித்திய செந்நெல்
மல்லல் நீர்முளை வாரிக்கொடு வந்தால்
வல்லவாறு அமுதாக்கலும் ஆகும் மற்(று)
அல்லது ஒன்றறியேன் என்று அயர்வுற".
-- (திருத்தொண்டர் மாக்கதை - 452)

என்கிறாள். இதைக் கேட்ட மாறனார், மனைவியின் நல்ல யோசனையை ஏற்றுக் கொண்டு வயலுக்குச் செல்லப் புறப்படுகிறார். மழை வேறு. இருள் வேறு, மாறனார் ஒரு கூடையைத் தன் தலையில் கவிழ்த்துக் கொண்டு செல்கிறார். மெது வாகக் காலால் தடவித் தடவிச் சென்று கைகளால் அந்த விதைகளை அரித்து எடுத்துக் கூடையில் போட்டுச் சுமந்து கொண்டு விரைந்து வருகிறார்.

"வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கிச்
சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி
வெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை என்ன மேலோர்
அந்தமில் மனையில் நீடும் அலகினை அறுத்து வீழ்த்தார்"
--  (திருத்தொண்டர் மாக்கதை - 458)

வந்தவரை வாயிலில் எதிர் கொண்ட அவர் மனைவி அவ்விதைகளை வாங்கி அதிலிருந்த சேறு சகதிகளையெல்லாம் போகும்படி நன்கு கழுவி எடுக்கிறாள் நெல் வந்து விட்டது. அதைச் சமைக்க விறகு வேண்டுமே! தயங்கிய படியே மாறனாரிடம் சொல்கிறாள்.

மாறனார் சிறிதும் தாமதிக்காமல் #வீட்டின்_கூரையிலிருந்த_வரிச்சுகளை_வாளால்_வெட்டி_எடுக்கிறார். (வரிச்சு - புற்களால் வேய்ந்த கூரை) அதைக் கொண்டு ஒருவாறு அடுப்பைப் பற்றவைத்துப் பின் ஈரநெல்லை வறுக்கிறாள். அதை அரிசியாக்கி உலையில் போட்டு சோறாக்கு கிறாள். சரி, உணவு தயாராகி விடும். வந்த விருந்தினருக்கு வெறும் சோற்றை மட்டும் எப்படிக் கொடுப்பது? யோசிக்கிறாள். மறுபடியும் கணவரிடம் போய் காய்கறி ஒன்றும் இல்லையே, என்ன செய்யலாம்? என்று இருவரும் சேர்ந்து யோசிக்கிறார்கள்

’வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய பசியினாலே
அழிவுறும் ஐயன் என்னும் அன்பினில் பொலிந்து சென்று
குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர் தடவிப் பாசப்
பழி முதல் பறிப்பார் போலப் பறித்து அவை கறிக்கு நல்க
-- (திருத்தொண்டர் மாக்கதை - 460)

வந்த விருந்தினர் வழி நடந்த களைப்பால் மிகவும் களைத்திருப்பார். அவருக்கு வெறும் சோறு மட்டும் கொடுத்தால் போதாது என்று நினைக்கின்றனர்.

அதை வாங்கிக் கொண்ட மாறனார் மனைவி அக்கீரையை நன்குகழுவி விதவிதமாகச் சமைக்கிறாள். பின் மாறனாரிடம் சென்று, ‘நம் இல்லத்திற்கு எழுந்தருளி யிருக்கும் ஈடு இணையற்ற சிவனடியாரை அழைத்து வாருங்கள் அவருக்கு விருந்து படைப்போம்” என்கிறாள். நடந்து வந்த களைப்பினால் உறங்கிக் கொண்டிருந்த அடியவரிடம் சென்று, ”அடியனேன் உய்ய என்பால் எழுந்தருளிய பெரியோய்! அமுது செய்யுங்கள்” என்று அழைக்கிறார். அடியவர் மறைந்து விடுகிறார். சோதி தோன்றுகிறது.மாறனாரும் அவர் மனைவியும் திகைத்து நிற்கிறார்கள்.

இறைவன் இளையான்குடிமாறனாரை நோக்கி

”அன்பனே அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடும்
என் பெரும் உலகம் எய்தி இருநிதிக் கிழவன் தானே
முன் பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப
இன்பம் ஆர்ந்து இருப்பீ ராமென் றருள் செய்தான் எவர்க்கு மிக்கான்"
--- (திருத்தொண்டர் மாக்கதை - 465)

என்று வரமளிக்கிறார்.

உதவி : சேக்கிழாரருளிய திருத்தொண்டர் மாக்கதை

நன்றி வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

Wednesday, June 10, 2020

பெருஞ்சித்திரனார்

தனித்தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் தனித்தமிழ்நாட்டுக்கொள்கை :


"இந்தியா ஒன்றாக இருக்கும் வரை இந்து மதம் இருக்கும், இந்துமதம் இருக்கும் வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும் வரை மதப் பூசல்களும், குலக் கொடுமைகளும், அவர்களை விட்டு விலகவே முடியாது. மதப் பூசல்களும், குலக்கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாதவரை, ஆரியப் பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும், மேலாளுமையிலினின்றும் தமிழன் மீளவே முடியாது.

அத்தகைய பார்ப்பனியப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாதவரை, தமிழ்மொழி தூய்மையுறாது. தமிழினம் தலைதூக்காது; தமிழ்நாடு தன்னிறைவு அடையமுடியாது. எனவே இந்து மதத்தினின்றும், மதப்பூசல்களினின்றும், ஆரியப்பார்ப்பனியத்தினின்றும் விடுபடவேண்டுமானால், நாம் இந்திய அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாகவேண்டும். ஆகவே தமிழக விடுதலைதான் நம் முழுமூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்". என்று தன் கொள்கையை அறிவித்தார்.

                             -- தென்மொழி இதழின் முகப்பில் நம்மூச்சு, செயல், நோக்கம் எனும் தலைப்பில்.



பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் :




01. ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
02. இலக்கியத்துறையில் தமிழ்வளர்ச்சிக்குரிய ஆக்கப்பணிகள்
03. உலகியல் நூறு
04. ஐயை (பாவியம்)
05. ஓ! ஓ! தமிழர்களே
06. கழுதை அழுத கதை
07. கொய்யாக்கனி (பாவியம்)
08. சாதியொழிப்பு
09. செயலும் செயல்திறனும்
10. தன்னுணர்வு
11. திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி -1
12. திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-2
13. திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-3
14. திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-4
15. நூறாசிரியம்
16. பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)
17. பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-1
18. பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-2
19. பாவியக்கொத்து (பாவியம்)
20. பாவேந்தர் பாரதிதாசன்
21. வேண்டும் விடுதலை



நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்

Sunday, June 7, 2020

புறநானூறு விளக்கம்

புறநானூற்றுப் பாட்டு விளக்கம்

https://www.facebook.com/media/set/?set=a.525913584100224&type=3

https://www.facebook.com/media/set/?set=a.525913584100224&type=3

தமிழரின் பிறன்மனைநோக்கா அறம்

தமிழரின் பிறன்மனைநோக்கா அறத்திறத்திற்கு ஓர் சான்று:


நூல் : திருக்கோவையார்
இயற்றியவர் : மணிமொழியார் (மணிவாசகர்)
தலைப்பு : உடன்போக்கு
பாட்டு : ௫௧ ஆம் பாட்டு


புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல்


மீண்டா ரெனஉவந் தேன்கண்டு
    நும்மையிம் மேதகவே
பூண்டா ரிருவர்முன் போயின
    ரேபுலி யூரெனைநின்
றாண்டான் அருவரை ஆளியன்
    னானைக்கண் டேனயலே
தூண்டா விளக்கனை யாயென்னை
    யோஅன்னை சொல்லியதே.

கொளு:

புணர்ந்து டன்வரும் புரவலன் ஒருபால்
அணங்கமர் கோதையை ஆராய்ந்தது.

*******************************

உரை:

நும்மைக்கண்டு என்னால் தேடப்படுகின்றவர்கள் மீண்டாரென்றுகருதி மகிழ்ந்தேன். இவ்வாறு நும்மோடொத்த மேதகவையுடைத்தாகிய இவ்வொழுக் கத்தையே பூண்டார் இருவர் முன்னே போயினரோ? உரைமின் என்று கேட்க,

புலியூர்க்கண் ஒரு பொருளாக மதித்து என்னை நின்றாண்டவனது கிட்டுதற்கரிய மலையில் ஆளியை யொப்பானை யான் கண்டேன். தூண்ட வேண்டாத விளக்கையொப்பாய், அவனதயல் அன்னைசொல்லியதி யாது? அதனையவட்குச் சொல்லுவாயாக.

*******************************

மேற்கண்ட உரையை விளக்கிக்கொள்ளவே நமக்கு மற்றோருரை வேண்டியநிலையில் அறிவிலிகளாய் நாமுளோம். ஆகையால், அடியேனின் சிற்றறிவிற்கெட்டிய சிறுவிளக்கம் தருகிறேன்.

பாட்டின் பின்னணி:

தலைவனும் தலைவியும் உடன்போக்கு(ஓடிப்போதல்) நிகழ்த்திவிட்டனர். தலைவியின் செவிலித்தாய் அவர்களைத்தேடி பாலைநிலத்திற்கு செல்கிறாள். வழியில் எதிர்ப்படுவோரையெல்லாம், இவ்வழியில் யாராவது இருவரை கண்டீர்களா என்று கேட்கிறாள். புறா, குறவு, முக்கோல்பகவர்(துறவியர்), பிறகு தன்மகளைப்போன்றே உடன்போக்கு நிகழ்த்தி புணர்ந்துவிட்டு வேறொரு தலைவனும் தலைவியும் எதிரேவருகின்றனர் அவர்களையணுகி  கேட்கிறாள் செவிலித்தாய்.


பாட்டின் பொருள்:

உங்களைக்கண்டு, நான் தேடுகின்ற உடன்போக்கு நிகழ்த்திய என்மகள்தான் மீண்டு வந்துவிட்டாளென்று மகிழ்ந்தேன். உங்களைப்போலவே காதற்கொண்டு உடன்போக்கு நிகழ்த்திய யாராவது இருவரை முன்னே கண்டீர்களா சொல்லுங்கள் என்று செவிலித்தாய் கேட்கிறாள்.

அதற்கு தலைவன் சொல்கிறான்,

மலையில் வாழுகின்ற அரிமாவைப்போல் (சிங்கம்) இருந்த ஒருவனை யான் கண்டேன்.

"அவனின் அருகில் யாரோ ஒருவர் இருந்ததாக இந்த அன்னை சொல்கிறாளே, அது யாரென்று இச்செவிலித்தாய்க்கு சொல்வாயாக" என்று தன் தலைவியைப்பார்த்து சொல்கிறான்.

*******************************

இப்போது விளங்கியதா, தமிழரின் பிறன்மனைநோக்காத்திறமாகிய அறப்பண்பு.

எதிரே ஒரு ஆணும் பெண்ணும் வந்திருக்கின்றனர். ஆனாலும், இவன் அந்த ஆண்மகனை மட்டும் ஏறிட்டு நோக்கி இருக்கிறான். அவனின் அருகிலிருந்த அவனின் காதலியை பார்க்கவேயில்லை. ஏனெனில், தமிழர் பிறனில்விழையா அறப்பண்புகொண்டோர். தம் தலைவியைத்தவிர பிறரின் இல்லாட்களை நோக்காதவர்கள். இவ்வொருபண்பு போதுமே நம்தமிழர் எத்தகைய அறமுடையோரென்று உணர. சங்கவிலக்கியங்களில் இதைப்போல் பலவிடங்களில் பிறனில்விழையா அறப்பண்பு விளக்கப்பட்டிருக்கும் என்று தமிழைக்கற்றறிந்தார் கூறுவர்.

உதவி : மணிவாசகரின் திருக்கோவையார் நூல். இதை வெறும் அன்பிலக்கியம் (பக்தி இலக்கியம்) என்று தமிழறிஞர்கள் ஒதுக்குதல் முறையோ?

நன்றி, வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

கதிரவனுக்குச் சென்றார்களோ தமிழர்!!!

தமிழர் கதிரவனுக்குச் சென்றுவந்தார்களோ?


இப்புறநானூற்றுப்பாடல் நமக்கு பெருவியப்பை ஏற்படுத்துகிறது. சூரியனுக்குச் சென்று அதன் விவரங்களையும் கூறுவாறும் உளர். ஆனால், நின்(நலங்கிள்ளி) புகழளவை பாடமுடியாதவர்கள் புலவர்கள், என்று குறிப்பிடுகிறார் சாத்தனார். ஞாயிறு என்பது சென்றுவரக்கூடிய இடமா என்ன? ஒருவேளை இது மிகுதியாக ஏற்றிக்கூறப்பட்டதாகவிருந்தாலும் சூரியனில் இருக்கும் மண்டலங்கள் அது தாங்கும் சுமை, காற்று திரியும் திசை என்றெல்லாம் கூறுகிறார்களென்றால் தமிழர்கள் எந்த தொழில்நுட்ப விண்வெளி ஆய்வகத்தில் இதை ஆய்ந்தார்கள்? அடியேனுக்கு பெருவியப்பும் மாசிலிர்ப்புமாயுள்ளது.



பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை : பாடாண்.
துறை : இயன்மொழி.
சிறப்பு : தலைவனின் இயல்பு கூறுதல்.

செஞ்ஞா யிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,
பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்,
வளி திரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்றிவை

சென்றளந்து அறிந்தார் போல, என்றும்
இனைத்து என்போரும் உளரே அனைத்தும்
அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக்,
களிறுகவுள் அடுத்த எறிகல் போல
ஒளித்த துப்பினை ஆதலின், வெளிப்பட

யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு
மீப்பாய் களையாது, மிசைப் பரந் தோண்டாது,
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே!

#உரை:

ஞாயிறு செல்லும் பாதையையும், அந்த ஞாயிறு தாங்கிக்கொண்டிருக்கும் சுமைகளையும், அந்தச் சுமைக்குள் சூழ்ந்திருக்கும் உருண்டை மண்டலங்களையும், காற்று திரியும் திசையையும், ஒன்றுமில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் ஆகாயத்தையும் தாமே நேரில் சென்று அளந்து அறிந்தவர் போல இனைத்து என்று அளவு கூறுவாரும் உளர். அவர்களாலும் அளவிட்டுக் கூறமுடியாத அடக்கம் கொண்டவன் நீ. எறிகல் = விளாம்பழம் யானை வாயில் பட்ட விளாம்பழம் போலச் செரிக்கும் வலிமையை மறைத்துக்கொண்டிருப்பவன் நீ. இப்படிப்பட்ட உன்னைப் புலவர் எப்படிப் பாடமுடியும்? கூம்பின் பாய்மரத்தைத் தொய்ய விடாமல் புகார் நகரத்தில் புகுந்த பெருங்கலத்தை (பெருங்கப்பலை)த் தடுத்து நிறுத்தி அதிலுள்ள பண்டங்களை உள்நாட்டுப் பகுதிகளுக்குக் கொண்டுவந்து கொடுக்கும் கடல்பஃறாரம் (கடல்படு செல்வம்) நிறைந்த நாட்டுக்கு உரியவன் நீ.

உதவி : புறநானூறு நூல்

நன்றி. வணக்கம்

  • தமிழ் கோ விக்ரம்

சம்பந்தர் செய்தவை

௧) சூழொளிய கோதைவேல் தென்னன்தன் கூடல் குலநகரில் வாதில் அமணர் வலிதொலையக் காதலால் புண்கெழுவு செம்புனலா றோடப் பொருதவரை வண்கழுவில் தைத்த மறையோனை

௨) ஒண்கெழுவு ஞாலத் தினர்அறிய மன்னுநனி பள்ளியது பாலை தனைநெய்தல் ஆக்கியும்

௩) காலத்து நீரெதிர்ந்து சென்று

௪) நெருப்பிற் குளிர்படைத்தும்

௫) பாரெதிர்ந்த பல்விடங்கள் தீர்த்து

௬) முன் நேரெழுந்த யாழை முரித்தும்

௭) இருங்கதவம் தான்அடைத்தும்

௮) சூழ்புனலில் ஓடத் தொழில்புரிந்தும்

௯) தாழ்பொழில்சூழ் கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும்

௰) துங்கப் புரிசை தொகுமிழலை அங்கதனில் நித்தன் செழுங்காசு கொண்டு

௧௧) நிகழ் நெல்வாயில்
முத்தின் சிவிகை முதற்கொண்டும்

௧௨) அத்தகுசீர் மாயிரு ஞாலத்து மன்னா வடுதுறைபுக்
காயிரஞ் செம்பொன் அதுகொண்டும்

௧௩) மாய்வரிய மாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு வோத்தூரில்
ஆண்பனைகள் பெண்பனைகள் ஆக்கியும்

௧௪) பாண்பரிசில்
கைப்பாணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற்
சப்பாணி கொண்டு

--- நம்பியாண்டார் நம்பிகள்