Wednesday, December 23, 2020

பாவாணர் போற்றிய பெரியார்

தேவநேயப்பாவாணர் போற்றிய பெரியார் : 

தமிழினத்தை முன்னேற்ற மூவர் தோன்றினர். திருவள்ளுவர் தலை, உயர்நிலை மக்கட்குரிய தொண்டாற்றியவர். மறைமலையடிகள் இடைநிலை மக்கட்குரிய தொண்டாற்றியவர். பெரியார் கடைநிலை மக்கட்குரிய தொண்டாற்றியவர்... எனக் கூறிய பாவாணர் இக்கருத்தைக் கீழ்க்கண்டவாறு கவிதையாகவும் வடித்தார்.



தமிழன் விடுதலைத் தலைவர் மூவருள்

அமரும் ஈகையர் அறநூல் வள்ளுவர்

தமியின் மொழியினர் தவநன் மறைமலை

இமிழ்தன் மானியர் இராமசாமியார்


அரிய செயல்களை ஆற்றுவார் தமை

பெரியர் எனச்சொலும் பிறங்கு திருக்குறள்

உரியர் இப்பெயர்க் கொருவர் நேரினே

இரியீ ரோடையர் இராமசாமியார்


இல்லத் திருந்துநல் லின்ப வாழ்வுதும்

செல்வச் சிறப்பினில் சிறிதும் வேட்டிலர்

வல்லைத் தமக்கென வாழ்வு நீக்கினார்

ஒல்லும் வகையெல்லாம் உழைக்க இனவர்க்கே!


மல்லைப் பதவிகொள் மாட்சி யிருப்பினும்

அல்லிற் பகலினில் அடுத்த வழியெலாம்

கல்லிற் சாணியிற் கடுத்த வசவுறுஞ்

சொல்லிற் படும் பொறைச் சூர வாழ்க்கையர்!


மலையெனும் மறை மலையென் அடிகளும்

தலையென் சோமசுந்தரபா ரதியும்பின்

தொலையும் இந்தியைத் தொடர்ந்தொக்கினும்

நிலைசிறந்த திராம சாமியால்!


குடிசெய் வார்க்கிலை கூறும் பருவமே

மடிசெய் தேயவர் மானம் கொளக்கெடும்

இடிசெய் உடம்பு பல்இடும்பைக் கலமெனத்

துடிசெய் தேயவர் தொண்டு பூண்டுளார்!


தானமிட்ட தன் தலைவன் நிலைகெட

ஈனச் சூத்திரன் என்னுந் தீயனை

வானங்காட்டென வணங்குத் தமிழன்தன்

மானங்கெட்டு வழமை கடிந்துளார்!


படிமை மேல்மிகு பாலை ஊற்றலும்

குடுமி மலையெரி கோநெய் கொட்டலும்

கடவுள் தேரினைக் கடத்தலும் முனோர்

கொடை மடம் பகுத்தறிவில் கோளென்றார்!


கட்டுக் கதைகளைக் கடவுள் தொன்மத்தைப்

பாட்டுப் பிட்டவை பிதற்றல் புரட்டலை

வெட்ட வெளிச்சமாய் விளக்கினார் முனம்

பட்டப் படிப்பெலாம் பயனில் குப்பையே!


அடரும் தமிழரோ டணையுந் திரவிடர்

மடமை தவிர்ந்து தன்மான வாழ்வுற

இடர்கொள் ஆர்வலர் இராமசாமியார்

கடவுள் இலையெனக் கழறும் எல்லையே!


                   - (தமிழிலக்கிய வரலாறு  பாவாணர்)


புண்ணூற்றுக் கல்லடியும் சாணக் குண்டும்

                பொறுத்தலருஞ் சொல்லடியும் புகழ்போற்

மண்ணாற்றில் கலஞ்செலுத்தும் கடுஞ்செய்கைபோல்

                கைதூக்கி தென்னவரை கரையிலேற்றி

தொண்ணூற்று மூன்றாண்டு தொடர்ந்தபின்னும்

                துளங்காது துலங்குபகுத் தறிவுத் தொண்டால்

நண்ணூற்றைத் தாண்டவரும் நோற்றலாற்றின்

                நானிலத்துப் பெரியாரை வாழ்த்துவோமே!


                         - (பாவாணர் முதன்மொழி  -1:3:1)


******************








நன்றி. வணக்கம்.

Monday, December 21, 2020

சோழர் கண்டராதித்தர் பாடிய தில்லைத்திருவிசைப்பா

கண்டராதித்தசோழர் பாடிய திருவிசைப்பா :


முதலாம் பராந்தகருக்குப்பின்னர், அவர் உயிரோடிருக்கும்போதே அரியணை ஏறியவர் பராந்தகரின் மகன் கண்டராதித்தராவார். பராந்தகர் தில்லைச்சிற்றம்பலத்திற்குப் பொன்வேய்ந்தவ சிவநேயச்செல்வர். அவரின் வழியில் கண்டராதித்தரும் சிவநேயச்செல்வராய் விளங்கினார். தில்லை இறைவன்பால் அன்புகொண்டு ஓர் பதிகம் பாடியுள்ளார். அது சைவத்திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பாவாக நம்பியாண்டார்நம்பிகளால் தொகுக்கப்பட்டுள்ளது. சிவஞான கண்டராத்தித்தன் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளார். இவரைப் புகழ்ந்து ஒட்டக்கூத்தர், கண்டன்கோவை மற்றும் கண்டனலங்காரம் என்றும் இருநூல்களைப் பாடியுள்ளார். இவரின் பட்டத்தரசியார் செம்பியன்மாதேவியாரும் சிறந்த சிவநேயச்செல்வியாவார். பல மரத்தளிகளை கற்றளிகளாகக் கட்டுவித்தவர். இவருக்குப்பின்வந்த சோழவரசர்கள் சிவநெறியில் மிகுந்த ஈடுபாடுகொள்ளவும் சிவனுக்குப் பெருங்கோயில்கள் எடுப்பிக்கவும் முதன்மைக்காரணம் இவ்வம்மையேயாவார். இனி, கண்டராதித்தர் பாடிய தில்லைத்திருப்பதிகமாம் அத்திருவிசைப்பாவைக்காண்போம்.




********************************


சிவநெறிமரபில் கோயிலென்னும் திருத்தில்லை

பண்: பஞ்சமம்

ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா




மின்னார் உருவம் மேல்வி ளங்க

வெண்கொடி மாளிகைசூழப்

பொன்னார் குன்றம் ஒன்று வந்து

நின்றது போலும்என்னாத்

தென்னா என்று வண்டு பாடும்

தென்றில்லை யம்பலத்துள்

என்னா ரமுதை எங்கள் கோவை

என்றுகொல் எய்துவதே. 1


ஓவா முத்தீ அஞ்சு வேள்வி

ஆறங்க நான்மறையோர்

ஆவே படுப்பார் அந்த ணாளர்

ஆகுதி வேட்டுயர்வார்

மூவா யிரவர் தங்க ளோடு

முன்னரங் கேறிநின்ற

கோவே உன்றன் கூத்துக் காணக்

கூடுவ தென்றுகொலோ. 2


முத்தீ யாளர் நான்ம றையர்

மூவா யிரவர்நின்னோ

டொத்தே வாழுந் தன்மை யாளர்

ஓதிய நான்மறையைத்

தெத்தே யென்று வண்டு பாடுந்

தென்றில்லை யம்பலத்துள்

அத்தாவுன்றன் ஆடல் காண

அணைவதும் என்றுகொலோ. 3


மானைப் புரையும் மடமென் னோக்கி

மாமலை யாளோடும்

ஆனஞ் சாடுஞ் சென்னி மேல்ஓர்

அம்புலி சூடும்அரன்

றேனைப் பாலைத் தில்லை மல்கு

செம்பொனின் அம்பலத்துக்

கோனை ஞானக் கொழுந்து தன்னைக்

கூடுவ தென்றுகொலோ. 4


களிவான் உலகிற் கங்கை நங்கை

காதலனே அருளென்

றொளிமால் முன்னே வரங்கி டக்க

உன்னடி யார்க்கருளும்

தெளிவா ரமுதே தில்லை மல்கு

செம்பொனின் அம்பலத்துள்

ஒளிவான் சுடரே உன்னை நாயேன்

உறுவதும் என்றுகொலோ. 5


பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப்

பதஞ்சலிக் காட்டுகந்தான்

வாரார் முலையாள் மங்கை பங்கன்

மாமறை யோர்வணங்கச்

சீரால் மல்கு தில்லைச் செம்பொன்

அம்பலத் தாடுகின்ற

காரார் மிடற்றெம் கண்ட னாரைக்

காண்பதும் என்றுகொலோ. 6


இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன்

இருபது தோளும்இற

மலைதான்எடுத்த மற்றவற்கு

வாளொடு நாள்கொடுத்தான்

சிலையால் புரமூன் றெய்த வில்லி

செம்பொனின் அம்பலத்துக்

கலையார் மறிபொற் கையி னானைக்

காண்பதும் என்றுகொலோ. 7


வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும்

ஈழமுங் கொண்டதிறற்

செங்கோற் சோழன் கோழி வேந்தன்

செம்பியன் பொன்னணிந்த

அங்கோல் வளையார் பாடி ஆடும்

அணிதில்லை யம்பலத்துள்

எங்கோன் ஈசன் எம்மி றையை

என்றுகொல் எய்துவதே. 8


நெடியா னோடு நான்மு கன்னும்

வானவரும் நெருங்கி

முடியால் முடிகள் மோதி உக்க

முழுமணி யின்திரளை

அடியார் அலகி னால் திரட்டும்

அணிதில்லை யம்பலத்துக்

கடியார் கொன்றை மாலை யானைக்

காண்பதும் என்றுகொலோ. 9


சீரால்மல்கு தில்லைச் செம்பொன்

அம்பலத் தாடிதன்னைக்

காரார் சோலைக் கோழி வேந்தன்

தஞ்சையர் கோன்கலந்த

ஆராஇன்சொற் கண்டரா தித்தன்

அருந்தமிழ் மாலைவல்லார்

பேரா உலகில் பெருமை யோடும்

பேரின்பம் எய்துவரே. 10


இறைவன் : அழகியகூத்தர்

இறைவி : சிவகாமவழகி


*****************************


நன்றி. வணக்கம் 🙏

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

தமிழரின் மானவுணர்வும் வீரமும்

 புறநானூறு ௭௪(74)


நாம் அனைவரும், தமிழரின் வீரத்திற்குச் சான்றாக ஒரு செய்தியை காலங்காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அது, தமிழர்குடியில் ஒரு குழந்தை இறந்துப்பிறந்தாலோ அல்லது பிறந்து குழந்தையாகவே இறந்தாலோ, அதை அப்படியே புதைக்காமல் வீரத்தின் அடையாளமாக அக்குழந்தையின் நெஞ்சை வாளால் கீறி, விழுப்புண்படுத்தியபிறகே புதைப்பராம். அப்பேர்ப்பட்ட வீரஞ்செறிந்தவர்கள் நாங்கள் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறோம். 


ஆம். உண்மைதான். அதற்கு சான்று ஏது? எப்படி இதைச் சொல்கின்றனர்? இவ்வழக்கம் தமிழர் பண்பாட்டில் இருந்ததென்று யார்சொன்னது? வரலாற்றுச்சான்றுகள் எங்குள்ளது? என்ற இந்த வினாக்களைத்தொடுத்தால் நம் யாருக்கும் விடை தெரியாது. ஆனால், இச்செய்தியை மட்டும் சொல்லிக்கொண்டு பெருமைபேசமட்டும் நன்றாகத்தெரியும். சான்றில்லாமல் எதையும் பேசக்கூடாது. 


இதையெல்லாம் தெரிந்துவைத்திருக்கவேண்டுமென்று அறிவிலியேன் யான் அவாவுற்றிருந்தேன். பன்னாட்களாகத் தேடியும்வந்தேன். இன்று, புறநானூற்றைப் புரட்டிப்பார்த்துக்கொண்டிருந்தபோது, அவ்வரிய சான்றுடைய பாட்டொன்று என்கண்களில் தென்பட்டது. அதுவே புறநானூற்றுத்தொகுப்பில் 74ஆவதாகிய இப்பாட்டு. இதுபோல் பலபாட்டுகளிருக்கலாம், ஆனால் என்கண்களில்பட்டது இஃதொன்றே.


இதோ நான் கண்ணுற்ற அப்பாட்டை உங்கள் பார்வைக்குப் பதிகிறேன்.


சேரமான் கணைக்காலிரும்பொறை சோழன் செங்கணானோடு போர்புரிந்து குடவாயிற்கோட்டத்துச் சிறையில் கிடந்து, மானமிழந்ததாகவெண்ணி 'தண்ணீர் தா' என்று கேட்காமல் நீர் குடிக்காது தன்னை மாய்த்துக்கொள்வதற்குமுன் பாடிய பாட்டு.






புறம் 74:

பாடியவர் : சேரமான் கணைக்காலிரும்பொறை

திணை : பொதுவியல்

துறை : முதுமொழிக்காஞ்சி 

'தாமே தாங்கிய தாங்கரும் பையுள்' என்னும் துறைக்குக் காட்டுவார் இளம்பூரணர்.


செய்யுள் :

குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,

ஆள் அன்று என்று வாளின் தப்பார்

தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய

கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,

மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,

தாம் இரந்து உண்ணும் அளவை

ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?


விளக்கம் : 

பிறந்த குழந்தை இறந்தாலும், உணவுப் பிண்டமாகக் குழந்தை பிறந்தாலும் பிறந்தது வீரம் உடையதன்று என எண்ணி அதனை வீரமுடையதாக ஆக்க அதனை வாளாள் வெட்டி ஈமக்கடன் செய்வது வழக்கம். நானோ சங்கிலியால் கட்டிய நாய்போல் இழுத்துக் கொண்டுவரப்பட்டேன். மேலும் நெஞ்சில் உரம் இல்லாமல் என் வயிற்றுப்பசி அடங்க சிறுபதம்(தண்ணீர்) கேட்டு உண்ணும் நிலைக்கு ஆளானேன். இந்த ஈன நிலையைப் பெறவேண்டுமா?


(சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது, பற்றுக் கோட்பட்டு, குடவாயில் கோட்டத்துச் சிறையில் கிடந்து, 'தண்ணீர் தா' என்று பெறாது, பெயர்த்துப் பெற்று, கைக் கொண்டிருந்து

உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு)


நன்றி. வணக்கம்

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்


Sunday, December 6, 2020

தமிழ்மொழியால் உலகாண்ட சேரன் செங்குட்டுவன்

தமிழ்மொழிகொண்டு உலகாண்ட சேரன் :


"குமரியொடு வட விமயத்து

ஒருமொழி வைத்து உலகாண்ட

சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச்

சோழன்மகள் ஈன்ற மைந்தன்

கொங்கர் செங்களம் வேட்டுக்

கங்கை பேர்யாற்றுக் கரைப்போகிய

செங்குட்டுவன்"


          -- சிலம்பு - வஞ்சி - வாழ்த்துக்காதை.





தென்குமரியோடு வடபனிமலை வரையில் ஒரேமொழியாம் தமிழைக்கொண்டு ஆண்டானாம் சேரன் செங்குட்டுவன். ஆனால் இன்று, நம்மையே இந்தி படிக்கச்சொல்கிறார்கள். நம்மரசு இந்தியை வளர்க்கிறது. 😡😡😡


நன்றி. வணக்கம்

தனித்தமிழாளன்



Thursday, December 3, 2020

ஒன்பான் புலவரும் புரவலரும்

 புரவலரும் புலவரும் :


புலவர்: 

புலவர் என்போர், செய்யுள்களை (நூல்கள்) இயற்றும் புலமையுடையோர்.


புரவலர்: 

புரவலரென்போர் அந்த நூல்களை இயற்றும் புலவர்களுக்கு பொருளுதவியோடு பிறவுதவிகளனைத்தும் செய்வோர். (ஒரு அமைப்பிற்கோ நற்செயலுக்கோ அவற்றின் வளர்ச்சிக்கு உதவுபவர்). கொடையாளர், புரப்போர், பாதுகாப்பவர், ஆதரவாளர் என்பன புரவலரைக்குறிக்கும் பிறசொற்கள்.


"கையது கடன் நிறை யாழே மெய்யது புரவலர் இன்மையின் பசியே" (புற:69-2).


"அரவு உறை புற்றத்து அற்றே நாளும் புரவலர் புன்கண் நோக்காது" (புற:329:7).






புரவலரும் புலவரும் :


௧) பெருஞ்சேரலிரும்பொறையும் அரசில்கிழாரும்



௨) கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும்



௩) கணைக்காலிரும்பொறையும் பொய்கையாரும்


௪) பாரியும் கபிலரும்




௫) அதியமான் நெடுமானஞ்சியும் ஔவையாரும்




௬) சிறுகுடிபண்ணனும் கிள்ளிவளவனும்




௭) குமணனும் பெருந்தலைச்சாத்தனாரும்




௮) சடையப்பனும் கம்பரும்




௯) அநபாயனும் சேக்கிழாரும்




***************************************************


சிறியேன் பிறந்தவாண்டில் அதாவது ௧௯௮௯(1989) ஆம் ஆண்டு ஏழாம் வகுப்பிற்கான துணைப்பாடத்திட்டத்தில் ஒன்பது புலவர்கள் மற்றும் அப்புலவரைப்புரந்த புரவலரைப்பற்றிய கதையைப் பாடமாக வைத்திருந்தனர். வீட்டிலிருந்த பழையநூல்களை எடுத்து தூசிதட்டியபோது காணக்கிடைத்தது. 


சொற்கள் நல்லதமிழில் அமைந்திருந்தன. தனிசொற்றொடர்களாகவல்லாமல் பெரும்பாலும் தொடர் மற்றும் கலப்பு சொற்றொடர்களாவே இருந்தன. குறிப்பாக பிறமொழிக்கலப்பில்லை அந்நூலில். அதற்கும் மேலாக அறத்தன்மையும் கொடைத்தன்மையுடைய வரலாறுகளைப்பாடமாக வைத்திருந்தனர்.


 அவ்வாண்டுவரைகூட தமிழ்நாட்டுப்பள்ளிப்பாடநூல்களில் இத்தகைய பிறமொழிக்கலப்பில்லா நல்லதனித்தமிழில் அமைந்திருந்த அறம் சார்ந்த பாடங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் தற்போதோ பிறமொழிச்சொற்களை தமிழ்ச்சொற்களாகவே எண்ணுமளவிற்கு கலப்புடைய நூல்கள் தமிழ்நாட்டுப்பாடநூல் கழகத்தால் தயாரிப்படுகிறது. பள்ளிகளிலேயே இவ்வாறு நிகழ்ந்தால் அதைப்படித்து வளரும் பிள்ளைகளும் அதையே தமிழென்று நினைத்துக்கொண்டு அந்த பிறமொழிகலந்த தமிழையே பேசும்.


தற்போதைய இழிநிலையை மாற்றவேண்டிய கடமை தமிழ்நாட்டரசுக்கேயுரியது. இனத்தின் விழியாம் மொழியைக்காக்க அரசு பாடநூல்க்கழகமும் மக்களும் பாடுபடவேண்டியது இன்றியமையாதது. இதைச்செய்தோமானால் இனிவரும் பிள்ளைகள் பிறமொழிக்கலப்பின்றி நற்றமிழில் பேசும். மொழியும் இனமும் காக்கப்பட்டு நல்லறமும் இலக்கியவளமும் பெருகி பல்லாயிரமாண்டுகள் செழித்தோங்கும். 

நன்றி, வணக்கம்.

தனித்தமிழாளன்

Wednesday, November 18, 2020

சீற்றமுடை முருகன்

 முருகன் சீற்றத்தான் 💪


முருகனை அழகனென்றும், இளைஞனென்றும், மறவனென்றும் கேள்வியுற்றிருப்போம். ஆனால், அவன் பெருஞ்சினமுடையவனென்றும் பகர்கின்றன தமிழவை இலக்கியங்கள்.




"முருகற் சீற்றத் துருகெழு குருசில்"

   --- புறநானூறு - 16


"முருகற் சீற்றத் துருகெழு குருசில்"

   --- பொருநராற்றுப்படை - 131


"முருகி னன்ன சீற்றத்துக் கடுந்திறல்"

   --- அகநானூறு - 158


இன்னும் மிகுதியான சான்றுகளிருக்கும். ஆனால், அடியேன் படிக்கும்போது கிடைத்தவை இம்மூன்று சான்றுகள்.


நன்றி. வணக்கம்.


மாயோள் 🖤


"மாயோள்முன்கை யாய்தொடி"

(பொருநராற்றுப்படை 14)


"மாயோள் பசலை நீக்கினன்"

(ஐங்குறுநூறு - 145)


"ஒடுங்கீ ரோதி மாஅயோளே"

(அகநாநூறு - 86).

Monday, November 16, 2020

புறம் 330 - மதுரை கணக்காயனார்

 புறநானூறு 330 : 🌺


மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர் பாடிய தமிழவைப் பாடல்களை நாம் கண்டுள்ளோம். ஆனால், அந்த நக்கீரரின் தந்தையார் மதுரை கணக்காயனார் பாடிய பாட்டைக் கேள்வியுறவில்லை. இதோ அவர் பாடிய ஓர் புறப்பாட்டு.




பாடியவர் : மதுரை_கணக்காயனார்

திணை : வாகை

துறை : மூதின் முல்லை


வேந்துடைத் தானை முனைகெட நெரிதர

ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்,

தன்இறந்து வாராமை விலக்கலின், பெருங்கடற்கு

ஆழி அனையன் மாதோ; என்றும்

பாடிச் சென்றோர்க்கு அன்றியும், வாரிப்

புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்

தொன்மை சுட்டிய வண்மை யோனே.


விளக்கம் :

அவன் ஒருவனே அவனுக்கு ஈடு. வேந்தும் அவனது படையும் முனைந்து முன்னேறிக்கொண்டிருந்தன. அவன் எதிர்த்து நின்றான். தன்னைக் கடந்து வரமுடியாதபடி எதிர்த்து நின்றான். கடல் சீற்றத்ததைத் தடுக்கும் ஆழிச்சக்கரம் போல நின்றான். அவன் இப்படி என்றால், அவன் ஊரும் இப்படித் திகழ்ந்தது. பாடிச் சென்றோர்கெல்லாம் கொடுத்தும், வாரி வழங்குவதற்கெல்லாம் ஈடுகொடுத்தும் திகழ்வது அவன் சிற்றூர்.


நன்றி. வணக்கம் 🙏