புறநானூறு ௭௪(74)
நாம் அனைவரும், தமிழரின் வீரத்திற்குச் சான்றாக ஒரு செய்தியை காலங்காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அது, தமிழர்குடியில் ஒரு குழந்தை இறந்துப்பிறந்தாலோ அல்லது பிறந்து குழந்தையாகவே இறந்தாலோ, அதை அப்படியே புதைக்காமல் வீரத்தின் அடையாளமாக அக்குழந்தையின் நெஞ்சை வாளால் கீறி, விழுப்புண்படுத்தியபிறகே புதைப்பராம். அப்பேர்ப்பட்ட வீரஞ்செறிந்தவர்கள் நாங்கள் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறோம்.
ஆம். உண்மைதான். அதற்கு சான்று ஏது? எப்படி இதைச் சொல்கின்றனர்? இவ்வழக்கம் தமிழர் பண்பாட்டில் இருந்ததென்று யார்சொன்னது? வரலாற்றுச்சான்றுகள் எங்குள்ளது? என்ற இந்த வினாக்களைத்தொடுத்தால் நம் யாருக்கும் விடை தெரியாது. ஆனால், இச்செய்தியை மட்டும் சொல்லிக்கொண்டு பெருமைபேசமட்டும் நன்றாகத்தெரியும். சான்றில்லாமல் எதையும் பேசக்கூடாது.
இதையெல்லாம் தெரிந்துவைத்திருக்கவேண்டுமென்று அறிவிலியேன் யான் அவாவுற்றிருந்தேன். பன்னாட்களாகத் தேடியும்வந்தேன். இன்று, புறநானூற்றைப் புரட்டிப்பார்த்துக்கொண்டிருந்தபோது, அவ்வரிய சான்றுடைய பாட்டொன்று என்கண்களில் தென்பட்டது. அதுவே புறநானூற்றுத்தொகுப்பில் 74ஆவதாகிய இப்பாட்டு. இதுபோல் பலபாட்டுகளிருக்கலாம், ஆனால் என்கண்களில்பட்டது இஃதொன்றே.
இதோ நான் கண்ணுற்ற அப்பாட்டை உங்கள் பார்வைக்குப் பதிகிறேன்.
சேரமான் கணைக்காலிரும்பொறை சோழன் செங்கணானோடு போர்புரிந்து குடவாயிற்கோட்டத்துச் சிறையில் கிடந்து, மானமிழந்ததாகவெண்ணி 'தண்ணீர் தா' என்று கேட்காமல் நீர் குடிக்காது தன்னை மாய்த்துக்கொள்வதற்குமுன் பாடிய பாட்டு.
புறம் 74:
பாடியவர் : சேரமான் கணைக்காலிரும்பொறை
திணை : பொதுவியல்
துறை : முதுமொழிக்காஞ்சி
'தாமே தாங்கிய தாங்கரும் பையுள்' என்னும் துறைக்குக் காட்டுவார் இளம்பூரணர்.
செய்யுள் :
குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?
விளக்கம் :
பிறந்த குழந்தை இறந்தாலும், உணவுப் பிண்டமாகக் குழந்தை பிறந்தாலும் பிறந்தது வீரம் உடையதன்று என எண்ணி அதனை வீரமுடையதாக ஆக்க அதனை வாளாள் வெட்டி ஈமக்கடன் செய்வது வழக்கம். நானோ சங்கிலியால் கட்டிய நாய்போல் இழுத்துக் கொண்டுவரப்பட்டேன். மேலும் நெஞ்சில் உரம் இல்லாமல் என் வயிற்றுப்பசி அடங்க சிறுபதம்(தண்ணீர்) கேட்டு உண்ணும் நிலைக்கு ஆளானேன். இந்த ஈன நிலையைப் பெறவேண்டுமா?
(சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது, பற்றுக் கோட்பட்டு, குடவாயில் கோட்டத்துச் சிறையில் கிடந்து, 'தண்ணீர் தா' என்று பெறாது, பெயர்த்துப் பெற்று, கைக் கொண்டிருந்து
உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு)
நன்றி. வணக்கம்
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment