Wednesday, December 23, 2020

பாவாணர் போற்றிய பெரியார்

தேவநேயப்பாவாணர் போற்றிய பெரியார் : 

தமிழினத்தை முன்னேற்ற மூவர் தோன்றினர். திருவள்ளுவர் தலை, உயர்நிலை மக்கட்குரிய தொண்டாற்றியவர். மறைமலையடிகள் இடைநிலை மக்கட்குரிய தொண்டாற்றியவர். பெரியார் கடைநிலை மக்கட்குரிய தொண்டாற்றியவர்... எனக் கூறிய பாவாணர் இக்கருத்தைக் கீழ்க்கண்டவாறு கவிதையாகவும் வடித்தார்.



தமிழன் விடுதலைத் தலைவர் மூவருள்

அமரும் ஈகையர் அறநூல் வள்ளுவர்

தமியின் மொழியினர் தவநன் மறைமலை

இமிழ்தன் மானியர் இராமசாமியார்


அரிய செயல்களை ஆற்றுவார் தமை

பெரியர் எனச்சொலும் பிறங்கு திருக்குறள்

உரியர் இப்பெயர்க் கொருவர் நேரினே

இரியீ ரோடையர் இராமசாமியார்


இல்லத் திருந்துநல் லின்ப வாழ்வுதும்

செல்வச் சிறப்பினில் சிறிதும் வேட்டிலர்

வல்லைத் தமக்கென வாழ்வு நீக்கினார்

ஒல்லும் வகையெல்லாம் உழைக்க இனவர்க்கே!


மல்லைப் பதவிகொள் மாட்சி யிருப்பினும்

அல்லிற் பகலினில் அடுத்த வழியெலாம்

கல்லிற் சாணியிற் கடுத்த வசவுறுஞ்

சொல்லிற் படும் பொறைச் சூர வாழ்க்கையர்!


மலையெனும் மறை மலையென் அடிகளும்

தலையென் சோமசுந்தரபா ரதியும்பின்

தொலையும் இந்தியைத் தொடர்ந்தொக்கினும்

நிலைசிறந்த திராம சாமியால்!


குடிசெய் வார்க்கிலை கூறும் பருவமே

மடிசெய் தேயவர் மானம் கொளக்கெடும்

இடிசெய் உடம்பு பல்இடும்பைக் கலமெனத்

துடிசெய் தேயவர் தொண்டு பூண்டுளார்!


தானமிட்ட தன் தலைவன் நிலைகெட

ஈனச் சூத்திரன் என்னுந் தீயனை

வானங்காட்டென வணங்குத் தமிழன்தன்

மானங்கெட்டு வழமை கடிந்துளார்!


படிமை மேல்மிகு பாலை ஊற்றலும்

குடுமி மலையெரி கோநெய் கொட்டலும்

கடவுள் தேரினைக் கடத்தலும் முனோர்

கொடை மடம் பகுத்தறிவில் கோளென்றார்!


கட்டுக் கதைகளைக் கடவுள் தொன்மத்தைப்

பாட்டுப் பிட்டவை பிதற்றல் புரட்டலை

வெட்ட வெளிச்சமாய் விளக்கினார் முனம்

பட்டப் படிப்பெலாம் பயனில் குப்பையே!


அடரும் தமிழரோ டணையுந் திரவிடர்

மடமை தவிர்ந்து தன்மான வாழ்வுற

இடர்கொள் ஆர்வலர் இராமசாமியார்

கடவுள் இலையெனக் கழறும் எல்லையே!


                   - (தமிழிலக்கிய வரலாறு  பாவாணர்)


புண்ணூற்றுக் கல்லடியும் சாணக் குண்டும்

                பொறுத்தலருஞ் சொல்லடியும் புகழ்போற்

மண்ணாற்றில் கலஞ்செலுத்தும் கடுஞ்செய்கைபோல்

                கைதூக்கி தென்னவரை கரையிலேற்றி

தொண்ணூற்று மூன்றாண்டு தொடர்ந்தபின்னும்

                துளங்காது துலங்குபகுத் தறிவுத் தொண்டால்

நண்ணூற்றைத் தாண்டவரும் நோற்றலாற்றின்

                நானிலத்துப் பெரியாரை வாழ்த்துவோமே!


                         - (பாவாணர் முதன்மொழி  -1:3:1)


******************








நன்றி. வணக்கம்.

No comments:

Post a Comment