Monday, December 21, 2020

சோழர் கண்டராதித்தர் பாடிய தில்லைத்திருவிசைப்பா

கண்டராதித்தசோழர் பாடிய திருவிசைப்பா :


முதலாம் பராந்தகருக்குப்பின்னர், அவர் உயிரோடிருக்கும்போதே அரியணை ஏறியவர் பராந்தகரின் மகன் கண்டராதித்தராவார். பராந்தகர் தில்லைச்சிற்றம்பலத்திற்குப் பொன்வேய்ந்தவ சிவநேயச்செல்வர். அவரின் வழியில் கண்டராதித்தரும் சிவநேயச்செல்வராய் விளங்கினார். தில்லை இறைவன்பால் அன்புகொண்டு ஓர் பதிகம் பாடியுள்ளார். அது சைவத்திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பாவாக நம்பியாண்டார்நம்பிகளால் தொகுக்கப்பட்டுள்ளது. சிவஞான கண்டராத்தித்தன் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளார். இவரைப் புகழ்ந்து ஒட்டக்கூத்தர், கண்டன்கோவை மற்றும் கண்டனலங்காரம் என்றும் இருநூல்களைப் பாடியுள்ளார். இவரின் பட்டத்தரசியார் செம்பியன்மாதேவியாரும் சிறந்த சிவநேயச்செல்வியாவார். பல மரத்தளிகளை கற்றளிகளாகக் கட்டுவித்தவர். இவருக்குப்பின்வந்த சோழவரசர்கள் சிவநெறியில் மிகுந்த ஈடுபாடுகொள்ளவும் சிவனுக்குப் பெருங்கோயில்கள் எடுப்பிக்கவும் முதன்மைக்காரணம் இவ்வம்மையேயாவார். இனி, கண்டராதித்தர் பாடிய தில்லைத்திருப்பதிகமாம் அத்திருவிசைப்பாவைக்காண்போம்.




********************************


சிவநெறிமரபில் கோயிலென்னும் திருத்தில்லை

பண்: பஞ்சமம்

ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா




மின்னார் உருவம் மேல்வி ளங்க

வெண்கொடி மாளிகைசூழப்

பொன்னார் குன்றம் ஒன்று வந்து

நின்றது போலும்என்னாத்

தென்னா என்று வண்டு பாடும்

தென்றில்லை யம்பலத்துள்

என்னா ரமுதை எங்கள் கோவை

என்றுகொல் எய்துவதே. 1


ஓவா முத்தீ அஞ்சு வேள்வி

ஆறங்க நான்மறையோர்

ஆவே படுப்பார் அந்த ணாளர்

ஆகுதி வேட்டுயர்வார்

மூவா யிரவர் தங்க ளோடு

முன்னரங் கேறிநின்ற

கோவே உன்றன் கூத்துக் காணக்

கூடுவ தென்றுகொலோ. 2


முத்தீ யாளர் நான்ம றையர்

மூவா யிரவர்நின்னோ

டொத்தே வாழுந் தன்மை யாளர்

ஓதிய நான்மறையைத்

தெத்தே யென்று வண்டு பாடுந்

தென்றில்லை யம்பலத்துள்

அத்தாவுன்றன் ஆடல் காண

அணைவதும் என்றுகொலோ. 3


மானைப் புரையும் மடமென் னோக்கி

மாமலை யாளோடும்

ஆனஞ் சாடுஞ் சென்னி மேல்ஓர்

அம்புலி சூடும்அரன்

றேனைப் பாலைத் தில்லை மல்கு

செம்பொனின் அம்பலத்துக்

கோனை ஞானக் கொழுந்து தன்னைக்

கூடுவ தென்றுகொலோ. 4


களிவான் உலகிற் கங்கை நங்கை

காதலனே அருளென்

றொளிமால் முன்னே வரங்கி டக்க

உன்னடி யார்க்கருளும்

தெளிவா ரமுதே தில்லை மல்கு

செம்பொனின் அம்பலத்துள்

ஒளிவான் சுடரே உன்னை நாயேன்

உறுவதும் என்றுகொலோ. 5


பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப்

பதஞ்சலிக் காட்டுகந்தான்

வாரார் முலையாள் மங்கை பங்கன்

மாமறை யோர்வணங்கச்

சீரால் மல்கு தில்லைச் செம்பொன்

அம்பலத் தாடுகின்ற

காரார் மிடற்றெம் கண்ட னாரைக்

காண்பதும் என்றுகொலோ. 6


இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன்

இருபது தோளும்இற

மலைதான்எடுத்த மற்றவற்கு

வாளொடு நாள்கொடுத்தான்

சிலையால் புரமூன் றெய்த வில்லி

செம்பொனின் அம்பலத்துக்

கலையார் மறிபொற் கையி னானைக்

காண்பதும் என்றுகொலோ. 7


வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும்

ஈழமுங் கொண்டதிறற்

செங்கோற் சோழன் கோழி வேந்தன்

செம்பியன் பொன்னணிந்த

அங்கோல் வளையார் பாடி ஆடும்

அணிதில்லை யம்பலத்துள்

எங்கோன் ஈசன் எம்மி றையை

என்றுகொல் எய்துவதே. 8


நெடியா னோடு நான்மு கன்னும்

வானவரும் நெருங்கி

முடியால் முடிகள் மோதி உக்க

முழுமணி யின்திரளை

அடியார் அலகி னால் திரட்டும்

அணிதில்லை யம்பலத்துக்

கடியார் கொன்றை மாலை யானைக்

காண்பதும் என்றுகொலோ. 9


சீரால்மல்கு தில்லைச் செம்பொன்

அம்பலத் தாடிதன்னைக்

காரார் சோலைக் கோழி வேந்தன்

தஞ்சையர் கோன்கலந்த

ஆராஇன்சொற் கண்டரா தித்தன்

அருந்தமிழ் மாலைவல்லார்

பேரா உலகில் பெருமை யோடும்

பேரின்பம் எய்துவரே. 10


இறைவன் : அழகியகூத்தர்

இறைவி : சிவகாமவழகி


*****************************


நன்றி. வணக்கம் 🙏

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment