Saturday, December 26, 2020

தொல்காப்பியம் - மொழிமுதல் மொழியீறு விதிகள்

தொல்காப்பியம் - மொழிமுதலாகும் மற்றும் மொழியீறாகும்


தொல்காப்பியத்தில் மொழிமுதலாகும் மற்றும் மொழியீறாகும் எழுத்துகள் அதாவது சொற்கள் தொடங்கும் மற்றும் முடியும் எழுத்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன் விரிவு பின்வருமாறு.


நூல் : தொல்காப்பியம்

அதிகாரம் : எழுத்து

இயல் : மொழிமரபு


மொழிமுதலாகும் எழுத்துகள் : முதனிலை





பன்னீர் உயிரும் மொழி முதல் ஆகும். 26 

உயிர் மெய் அல்லன மொழி முதல் ஆகா. 27 

க த ந ப ம எனும் ஆவைந்து எழுத்தும் 

எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே. 28

சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே 

அ ஐ ஔ எனும் மூன்று அலங்கடையே. 29

உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர் 

வ என் எழுத்தொடு வருதல் இல்லை. 30

ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய. 31

ஆவொடு அல்லது யகரம் முதலாது. 32

முதலா ஏன தம் பெயர் முதலும். 33

குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் 

ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். 34

முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது 

அப் பெயர் மருங்கின் நிலையியலான. 35


மொழியீறாகும் எழுத்துகள் : இறுதிநிலை




உயிர் ஔ எஞ்சிய இறுதி ஆகும். 36

க வவொடு இயையின் ஔவும் ஆகும். 37

எ என வரும் உயிர் மெய் ஈறாகாது. 38

ஒவ்வும் அற்றே ந அலங்கடையே. 39

ஏ ஒ எனும் உயிர் ஞகாரத்து இல்லை. 40

உ ஊகாரம் ந வவொடு நவிலா. 41

உச் சகாரம் இரு மொழிக்கு உரித்தே. 42

உப் பகாரம் ஒன்று என மொழிப 

இரு வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே. 43

எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இலவே. 44

ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் 

அப் பதினொன்றே புள்ளி இறுதி. 45

உச் சகாரமொடு நகாரம் சிவணும். 46

உப் பகாரமொடு ஞகாரையும் அற்றே 

அப் பொருள் இரட்டாது இவணையான. 47

வகரக் கிளவி நான் மொழி ஈற்றது. 48

மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த

னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப 

புகர் அறக் கிளந்த அஃறிணை மேன. 49


இக்கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் பின்வரும் நூற்பாக்களையும் யாத்தார் தொல்காப்பியர்


தொல்காப்பியம் - எழுத்து - புணரியல்


மூன்று தலை இட்ட முப்பதிற்று எழுத்தின்,

இரண்டு தலை இட்ட முதல் ஆகு இருபஃது,

அறு-நான்கு ஈ-ற்றொடு நெறி நின்று இயலும்

எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்,

மெய்யே, உயிர், என்று ஆயீர் இயல.1

அவற்றுள், 

மெய் ஈறு எல்லாம் புள்ளியொடு நிலையல். 2


பொருள்:

நூன்மரபினுட் கூறப்பெற்ற முப்பத்து மூன்று எழுத்துக்களுள் இருபத்திரண்டு எழுத்துக்களை முதலாகவும், இருபத்து நான்கு எழுத்துக்களை ஈ-றாகவும் கொண்டு நெறியாக இயங்கும் எல்லா மொழிகட்கும், இறுதியும் முதலுமாக நிற்கும் எழுத்துக்கள் (தொகுத்துநோக்கின்) மெய்யும் உயிரும் என்று சொல்லப்பட்ட அவ்இரண்டு இலக்கணத்தனவாகும்.


எழுத்துவகையான் இருபத்திரண்டும் இருபத்து நான்கும் என நின்றவை இனக்குறியீட்டு வகையான் இரண்டாக நிற்கும் என்றவாறு.


முதலாகும் இருபத்திரண்டாவன:

உயிர் பன்னிரண்டு,

மெய் ஒன்பது,

மொழி முதற் குற்றுகரம் ஒன்றுமாம்.


ஈறாகும் இருபத்துநான்காவன:

உயிர் பன்னிரண்டு,

மெய் பதினொன்று,

மொழியிறுதிக் குற்றியலுகரம் ஒன்றுமாம்.


முதனிலையும் இறுதி நிலையும் நோக்கி மெய்யெனப் பொதுப்படக் கூறினாராயினும் "அப்பதி னொன்றே புள்ளி யிறுதி"எனவும், “மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்"எனவும், "உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா"எனவும் கூறுதலான். இறுதி நிற்பது புள்ளிமெய் என்றும், முதல் நிற்பது உயிர்மெய் என்றும் உணர்ந்துகொள்க.


மேலும் புணரியலில்,


குற்றியலுகரமும் அற்று என மொழிப. 3

உயிர்மெய் ஈறும் உயிர் ஈற்று இயற்றே. 4

உயிர் இறு சொல் முன் உயிர் வரு வழியும்

உயிர் இறு சொல் முன் மெய் வரு வழியும்

மெய் இறு சொல் முன் உயிர் வரு வழியும்

மெய் இறு சொல் முன் மெய் வரு வழியும் என்று 

இவ் என அறியக் கிளக்கும் காலை 

நிறுத்த சொல்லே குறித்து வரு கிளவி என்று 

ஆயீர் இயல புணர் நிலைச் சுட்டே. 5


என்றும் நிறுவுகிறார்.


நன்றி. வணக்கம்.

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்


நன்றி. வணக்கம்

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்


உதவி: தொல்காப்பியம் நூல் மற்றும் வலைத்தளம்

No comments:

Post a Comment