தமிழிலக்கியத்தில் கடற்கோள் குறிப்புகள் :
பண்டைத்தமிழ்நாடு தன்னளவு சுருங்கியதற்கு கடற்கோளே முதற்கரணியம். இந்நாடு நான்கு பெருங்கடற்கோள்களைக் கண்டதென்று கருதுவர். (அதற்குத் தக்கவுறுதிச்சான்றுகள் இல). இருப்பினும், கடற்கோள் நிகழ்ந்தமைக்கு கலித்தொகையின் முல்லைக்கலியும் மற்றும் சிலப்பதிகாரமும் சான்றுகாட்டி நிற்கின்றன. அவற்றை இங்கே பதிவிட்டுள்ளேன். இற்றைக்குப் பதினாறாண்டுகட்கு முன்பு நாமும் நம்வாழ்வில் ஆழிப்பேரலையோடு ஒருசிறிய கடற்கோளையும் கண்டுவிட்டோம்.
நூல் : கலித்தொகை
கலி : முல்லைக்கலி
பாட்டெண் : 104
"மலிதிரை யூர்ந்துதன்மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்றுமேவார் நாடிடம்படப்
புலியோடு வின்னீக்கிப்புகழ்பொறிந்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கியவாடாச்சீர்த் தென்னவன்"
பொருள்:
முற்காலத்தில் கடல்பொங்கிப் பாண்டியனின் நாட்டை விழுங்கியது. ஆனாலும் பாண்டியன் தளர்ந்து விடவில்லை. மேலெசென்று அருகிலுள்ள சேர, சோழ நாடுகளை வென்று புலிக்கொடி, வில்கொடியை நீக்கி புகழுடைய மீன்கொடிநாட்டி பாண்டிய நாட்டுடன் சேர்த்துக் கொண்டான்.
*****************
நூல் : சிலப்பதிகாரம்
காண்டம் : மதுரைக்காண்டம்
காதை : காடுகாண்காதை
அடிகள் : 19 - 22
"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையுமிமயமுங் கொண்டு
தென்னிசை யாண்ட தென்னவன்வாழி"
பொருள் :
கொடுங்கடல் சினந்தெழுந்து பஃறுளியாற்றுடனே பல பக்க மலைகளையுடைய குமரிமலையினையும் கொண்து. அதற்குப் பின்னர் பாண்டிய மன்னன் வடதிசைக்குச் சென்று கங்கை ஆற்றையும் இமயமலையையும் வெற்றி கொண்டான்.
உதவி : கலித்தொகை மற்றும் சிலப்பதிகாரம்
தொகுப்பு : தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்
*********************
நன்றி. வணக்கம்
No comments:
Post a Comment