மனுநூல் எரிப்புநாள் இன்று (25.12.1927)
"மனுசுமிருதியிலும் இவை போன்ற நூல்களிலும் கூறப்பட்டுள்ள செய்திகள் நாகரிகமற்றவையாகவும் இழிவினும் இழிவானவையாகவும் உள்ளன. இதைக் கணக்கிலெடுத்துக் கொண்டு அவற்றை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தக் கண்டனத்துக்கு அறிகுறியாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தத் தீர்மானிக்கிறோம்" என்று முழக்கமிட்டு மகாராட்டிரா மாநிலம் மகத் நகரில் கூடிய சத்யாகிரகிகளின் மாநாட்டில் அம்பேத்கர் தலைமையில் மனுசுமிருதியை எரித்த நாள் 1927 டிசம்பர் 25.
சகஸ்திரபுத்தே என்கிற பார்ப்பனர், சூத்திரர்களுக்கான நியதிகள் குறித்து மனு(அ)நீதியில் கூறப்பட்டுள்ளதை படித்துக்காட்டி அம்பேத்கரின் கருத்துக்கு வலுசேர்த்தார். இந்தப் பின்னணியிலேயே மனு(அ)தர்மம் நூல் எரிக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு முன்பே, மனுசுமிருதியை கொளுத்தி சாம்பலை கடலில் கரைத்துவிட வேண்டும் என்கிற முதல் கலகக்குரல் 17.10.1927இல் காட்பாடியில் நடந்த ஆதிதிராவிடர் மாநாட்டில் ம.சி.ராசாவிடமிருந்து வெடித்தது. மகத்துக்கும் முன்னதாகவே 4.12.1927இல் குடியாத்தத்தில் கூடிய சுயமரியாதைக்காரர் மாநாட்டில் ஜே.எஸ்.கண்ணப்பர் மனுசுமிருதியைக் கொளுத்தினார். ஆனால், மகத்தில் மனுசுமிருதி எரிக்கப்பட்டதால் நாடே அதிர்ந்தது.
வெறும் நூலை நாம் எரிக்கிறோம். ஆனால், மக்களின் மனங்களில் இந்த இழிநால்வண்ணக்கோட்பாட்டையும், அதன் கொடுமைகளையும் இன்னும் எரிக்கமுடியவில்லை.
No comments:
Post a Comment