சிந்து எழுத்தில்
திருநீறு பூசிய முகம் .
சிவனிய வழிபாட்டின்
5000 - ஆண்டுகள் தொன்மை .
வாழ்வின் எதார்த்தம் சில போது நமக்கு நம்ப முடியாத வியப்பைத் தரும் . அப்படி ஒரு வியப்பளிக்கும் தருணம் என்னை எதிர் கொண்டது . என் குடும்பம் பகுத்தறிவுப் பாதையில் முற்போக்கானஇடதுசாரிச் சிந்தனையுள்ளவர்களைக் கொண்டது . எனக்கு நினைவு தெரிந்து என் வீட்டில் இறை வழிபாடு செய்ததே இல்லை . அப்பா பொதுவுடைமைச் சிந்தனையும் , இறை மறுப்புக் கொள்கையும் கொண்டவர் . அப்போதே மாதத்திற்கு நூற்றுக் கணக்கான உரூபாய் செலவு செய்து பல்துறை நூல்களும் , அரசியல் இலக்கியங்களும் , எளிமையான தொல்லியல் , இலக்கிய நூல்களும் எங்களுக்கு வாங்கித் தருவார் . வழிபாடு இறைவணக்கம் தொடர்பான நூல்கள் வாங்கியதே இல்லை .
சினிமா நடிகர்கள் , இறைவுருவப் படங்கள் எங்கள் வீட்டில் மாட்டக் கூடாது என்பது எங்கள் வீட்டின் எழுதப்படாத சட்டம் . கல்லூரியில் சேரும்வரை வீரபாண்டியக் கட்டபொம்மன் , கப்பலோட்டியத் தமிழன் , சிவகங்கைச் சீமை என்று கைவிட்டு எண்ணக்கூடிய சில திரைப்படங்களே பார்த்துள்ளேன் . ஆனால் தமிழ்நாட்டின் தலையாய எழுத்தாளர்கள் அனைவரது நூல்களையும் வாங்கித் தருவார் . என் திருமணத்திற்குப் பிறகு எனது மனைவியும் சகோதரர்கள் இருவரது மனைவியரென்று எங்கள் வீட்டு மருமகள்களே எங்கள் வீட்டுக்கு இறைவழிபாட்டைக் கொண்டு வந்தார்கள் . என் மனைவி நான் அவர் சாமி கும்பிடுவதைத் தடை செய்துவிட்டதாகவும் , தனக்கு அதில் விருப்பம் என்று என் தந்தையிடம் முறையிட்டபோது என்னை அழைத்து " நம் போன்ற நாத்திகர்களே பிறரது கருத்துகளுக்கு மதிப்பளிப்பவர்கள் . இது அவள் உரிமையில் தலையிடுவதாகும் . உன் தனிப்பட்ட கருத்துரிமை போல அவளுக்கும் அவளது கருத்துகளைக் கடைப்பிடிக்க உரிமையுண்டு " என்று சொல்லி என்னிடம் அவள் உரிமையைப் பெற்றுக் கொடுத்தார் .
இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் எனது சிந்து நாகரிக எழுத்தாய்வில் தமிழ்ச் சிந்து மக்கள் முற்ற முழுக்கத் தங்கள் வழிபாடு சார்ந்தே முத்திரைகள் வெளியிட்டுள்ளார்கள் என்றறிந்த போது என மனையாளுக்கு நான் கொடுத்த அதே உரிமையைச் சிந்து மக்களின் வழிபாட்டுரிமையை எத்தடையுமின்றி வெளிப்படுத்தி அவர்களுக்கும் தந்து இந்த உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற உறுதியேற்றேன் . என் குடும்பச் சூழலறிந்த நண்பர்களுக்கு வியப்பு . என் கருத்துப்போலச் செய்திகளை எத்தயக்கமும் இன்றி நான் எழுதுவதாகக் கூறுகின்றனர் . மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனர் .
இப்போது நான் படித்துக் காட்டப்போகும் முத்திரையும் அப்படி வியப்புக்குரியதுதான் . சிந்து எழுத்தில் படவுருக்கள் லோகோகிராபிக் சொல் வடிவங்களாக உள்ளன என்பதும் நாமறிவோம் . அவை ஒலிநிலை வடிவங்களுக்குத் துணையாக இயங்குகின்றன . இந்த முத்திரையும் அத்தகைய மூன்று படவுருக்களை - சொல்லசையன் வடிவங்களை மட்டுமே கொண்டு எழுதப்பட்டுள்ளது . மூன்று வடிவங்களையும் நீங்கள் எளிதாக அடையாளம் கண்டு பொருளுணரலாம் . வலமிருந்து முதல் வடிவம் தேள் வடிவமும் , அதனோடு இணைந்த இரண்டு அசைகளுடன் ண்(ன்) - அ இணைந்து தேளண்அ = தேளன - தேள் அன்ன என்னும் சொல்லசையனாக - Logosyllabic - சொல் வடிவமாகவும் , இரண்டாவது முக ( முகம் ) என்னும் சொல்வடிவமாகவும் , மூன்றாவது வடிவம் வாவல் ( வௌவால் ) என்னும் சொல் வடிவமாகவும் இணைந்து = தேளன்ன முக வாவன் . என்று எழுதப் பட்டுள்ளது .
இது மறைபொருட் குறியீட்டு முத்திரை . இதன் பொருள் தேள் ஓரையின் முகம் போன்ற முகம் கொண்ட வாவன் = தாண்டவன் என்று பொருள் . வாவல் என்ற சொல்லுக்கு தாண்டுதல் , கூத்து என்று பொருளுண்டு . தாண்டி அல்லது குதித்துக் குதித்து சிவன் ஆடும் நடனமே தாண்டவம் . இதனை ஊர்த்துவ தாண்டவம் என்பர் . காலை உயயரத் தூக்கி ஆடுவது . விருச்சிகம் செவ்வாயை அதிபதியாகக் கொண்டது . இது முருகனின் விண்மீன் . எனவே இவை சிவ - முருக வழிபாட்டுடன் தொடர்புடையவையாகும் . விருச்சிகன் என்று சூரியனும் பிற்காலத்தில் அழைக்கப்பட்டான் . சிந்து மக்கள் தேளையும் வழிபட்டனர் . தேளன் , தேளண்ண என்னும் சொற்கள் பேரளவில் காணப்படுவதோடு , தேளின் படமுள்ள முத்திரைகளும் மிகுதியாக உள்ளன .
முக வடிவைப் பாருங்கள் . முகம் என்பது நெற்றி , மூக்கு ஆகியவை இணைந்த படவுருவாக எழுதப்படுகிறது . இம்முத்திரை சிவனியம் சார்ந்தது என்று எளிதாகத் தெரிகிறது . முகத்தை வரைந்த எழுத்துக் கலைஞன் முகத்தின் நெற்றியில் மூன்று கோடுகளை இட்டுள்ளான் . இது திருநீறு பூசிய நெற்றி என்றே கருத வேண்டியுள்ளது .
மொக 1226 : வாவ - முக - தேளண
= தேளன்ன முக வாவன் .
தேள் போன்ற முகத்தோற்றமுடைய வாவன் ஆகிய சிவன் என்பது பொருள் .
இம்முத்திரை வடிவம் நெற்றியில் முக்கோடாகத் திருநீறு இட்டுள்ளது என்பது தெளிவு . உள்ள இரண்டொரு முகப் படவுருவனிலும் ஒன்றிரண்டில் மட்டுமே திருநீறு பூசிய நெற்றியுள்ளது . சிந்து எழுத்தில் ஒரு சிறு கோடு மாறுவதுகூட பொருள் மாற்றம் தரும் . வாவன் என்பவர் சிவன் என்று குறிக்கவே இத்திருநீறு பூசிய நெற்றியை அம்மக்கள் பதிவிட்டுள்ளனர் என்பதே உண்மை . எனவே நெற்றியில் திருநீறு இடும் வழக்கம் சிந்துவெளி நாகரிகக் காலத்துக்கும் முன்பிருந்தே வழக்கில் உள்ளதென உறுதிபடக் கூறலாம் . குறைந்தது இக்காலம் 5000 ஆண்டுகள் என்று உறுதிபடக் கூறலாம் . சிவனியம் இந்தியாவின் மிகத் தொன்மையான சமயமென்று உறுதிபடுகிறது . தமிழர்கள் திருநீறு இடும் இவ்வழக்கத்தைப் பழங்காலம் தொட்டே கடைப்பிடித்து வருகின்றனர் .