Thursday, April 22, 2021

சிந்துவில் சிவவழிபாடு - நீறுபூசிய முகம்

 சிந்து எழுத்தில் 

      திருநீறு  பூசிய முகம் .


     சிவனிய வழிபாட்டின் 

   5000 - ஆண்டுகள்  தொன்மை . 






    வாழ்வின் எதார்த்தம் சில போது நமக்கு நம்ப முடியாத வியப்பைத் தரும் . அப்படி ஒரு வியப்பளிக்கும் தருணம்  என்னை எதிர் கொண்டது . என் குடும்பம் பகுத்தறிவுப் பாதையில் முற்போக்கானஇடதுசாரிச் சிந்தனையுள்ளவர்களைக் கொண்டது . எனக்கு நினைவு தெரிந்து என் வீட்டில் இறை வழிபாடு செய்ததே இல்லை . அப்பா பொதுவுடைமைச் சிந்தனையும் , இறை மறுப்புக் கொள்கையும் கொண்டவர் . அப்போதே மாதத்திற்கு நூற்றுக் கணக்கான உரூபாய் செலவு செய்து பல்துறை நூல்களும் , அரசியல் இலக்கியங்களும் ,  எளிமையான தொல்லியல் , இலக்கிய நூல்களும் எங்களுக்கு வாங்கித் தருவார் . வழிபாடு இறைவணக்கம் தொடர்பான நூல்கள் வாங்கியதே இல்லை .


      சினிமா நடிகர்கள் , இறைவுருவப் படங்கள் எங்கள் வீட்டில் மாட்டக் கூடாது என்பது எங்கள் வீட்டின் எழுதப்படாத சட்டம் . கல்லூரியில் சேரும்வரை  வீரபாண்டியக் கட்டபொம்மன் ,  கப்பலோட்டியத் தமிழன் , சிவகங்கைச் சீமை என்று கைவிட்டு எண்ணக்கூடிய சில திரைப்படங்களே பார்த்துள்ளேன் . ஆனால் தமிழ்நாட்டின் தலையாய எழுத்தாளர்கள் அனைவரது நூல்களையும் வாங்கித் தருவார் . என் திருமணத்திற்குப் பிறகு  எனது மனைவியும் சகோதரர்கள்  இருவரது மனைவியரென்று   எங்கள்  வீட்டு மருமகள்களே எங்கள் வீட்டுக்கு இறைவழிபாட்டைக் கொண்டு வந்தார்கள் . என் மனைவி நான் அவர்  சாமி கும்பிடுவதைத் தடை செய்துவிட்டதாகவும் , தனக்கு அதில் விருப்பம் என்று என் தந்தையிடம் முறையிட்டபோது என்னை அழைத்து " நம் போன்ற நாத்திகர்களே பிறரது கருத்துகளுக்கு மதிப்பளிப்பவர்கள் . இது அவள் உரிமையில் தலையிடுவதாகும் . உன் தனிப்பட்ட கருத்துரிமை போல அவளுக்கும் அவளது கருத்துகளைக் கடைப்பிடிக்க உரிமையுண்டு "  என்று சொல்லி என்னிடம் அவள் உரிமையைப் பெற்றுக் கொடுத்தார் . 


      இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் எனது சிந்து நாகரிக எழுத்தாய்வில்  தமிழ்ச் சிந்து மக்கள் முற்ற முழுக்கத்  தங்கள் வழிபாடு சார்ந்தே முத்திரைகள் வெளியிட்டுள்ளார்கள் என்றறிந்த போது  என மனையாளுக்கு நான் கொடுத்த அதே உரிமையைச் சிந்து மக்களின் வழிபாட்டுரிமையை எத்தடையுமின்றி வெளிப்படுத்தி அவர்களுக்கும் தந்து இந்த  உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற உறுதியேற்றேன் . என் குடும்பச் சூழலறிந்த நண்பர்களுக்கு வியப்பு . என் கருத்துப்போலச் செய்திகளை  எத்தயக்கமும் இன்றி நான் எழுதுவதாகக் கூறுகின்றனர் .   மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனர் .


      இப்போது நான் படித்துக் காட்டப்போகும் முத்திரையும் அப்படி வியப்புக்குரியதுதான் . சிந்து எழுத்தில் படவுருக்கள்  லோகோகிராபிக் சொல் வடிவங்களாக உள்ளன என்பதும் நாமறிவோம் . அவை  ஒலிநிலை வடிவங்களுக்குத் துணையாக இயங்குகின்றன .  இந்த முத்திரையும்  அத்தகைய  மூன்று  படவுருக்களை -  சொல்லசையன்   வடிவங்களை மட்டுமே  கொண்டு எழுதப்பட்டுள்ளது .  மூன்று வடிவங்களையும் நீங்கள் எளிதாக அடையாளம் கண்டு பொருளுணரலாம் . வலமிருந்து முதல் வடிவம் தேள் வடிவமும் ,  அதனோடு இணைந்த இரண்டு அசைகளுடன் ண்(ன்) - அ இணைந்து தேளண்அ =  தேளன -  தேள் அன்ன  என்னும்  சொல்லசையனாக -  Logosyllabic -  சொல் வடிவமாகவும் ,  இரண்டாவது முக ( முகம் ) என்னும் சொல்வடிவமாகவும் ,  மூன்றாவது வடிவம் வாவல் ( வௌவால் ) என்னும் சொல் வடிவமாகவும்  இணைந்து               =  தேளன்ன  முக  வாவன்  .  என்று எழுதப் பட்டுள்ளது .


      இது  மறைபொருட் குறியீட்டு முத்திரை . இதன் பொருள்  தேள்  ஓரையின் முகம் போன்ற முகம் கொண்ட  வாவன்  = தாண்டவன் என்று பொருள் . வாவல் என்ற சொல்லுக்கு  தாண்டுதல் ,  கூத்து என்று பொருளுண்டு . தாண்டி அல்லது குதித்துக் குதித்து சிவன் ஆடும் நடனமே  தாண்டவம் .  இதனை ஊர்த்துவ தாண்டவம் என்பர் . காலை உயயரத் தூக்கி ஆடுவது .  விருச்சிகம் செவ்வாயை அதிபதியாகக் கொண்டது .  இது  முருகனின் விண்மீன் . எனவே     இவை சிவ  -  முருக  வழிபாட்டுடன் தொடர்புடையவையாகும் .  விருச்சிகன் என்று சூரியனும் பிற்காலத்தில் அழைக்கப்பட்டான் . சிந்து மக்கள் தேளையும் வழிபட்டனர் .  தேளன் ,  தேளண்ண என்னும் சொற்கள் பேரளவில் காணப்படுவதோடு ,  தேளின் படமுள்ள முத்திரைகளும் மிகுதியாக உள்ளன .  


      முக வடிவைப் பாருங்கள் . முகம் என்பது  நெற்றி , மூக்கு ஆகியவை இணைந்த  படவுருவாக எழுதப்படுகிறது .  இம்முத்திரை  சிவனியம்  சார்ந்தது என்று  எளிதாகத் தெரிகிறது .  முகத்தை வரைந்த  எழுத்துக் கலைஞன்  முகத்தின் நெற்றியில்  மூன்று  கோடுகளை இட்டுள்ளான் . இது திருநீறு பூசிய நெற்றி என்றே கருத  வேண்டியுள்ளது . 


   மொக 1226 :   வாவ  -  முக  -  தேளண 

       =   தேளன்ன  முக வாவன் . 


தேள் போன்ற முகத்தோற்றமுடைய  வாவன் ஆகிய  சிவன்  என்பது பொருள் .  


      இம்முத்திரை வடிவம் நெற்றியில் முக்கோடாகத் திருநீறு  இட்டுள்ளது என்பது தெளிவு .  உள்ள இரண்டொரு  முகப்  படவுருவனிலும்  ஒன்றிரண்டில் மட்டுமே  திருநீறு  பூசிய நெற்றியுள்ளது .  சிந்து எழுத்தில்  ஒரு சிறு  கோடு  மாறுவதுகூட  பொருள் மாற்றம் தரும் . வாவன் என்பவர் சிவன் என்று குறிக்கவே  இத்திருநீறு  பூசிய  நெற்றியை  அம்மக்கள் பதிவிட்டுள்ளனர்  என்பதே உண்மை .  எனவே  நெற்றியில்   திருநீறு  இடும் வழக்கம்  சிந்துவெளி நாகரிகக் காலத்துக்கும் முன்பிருந்தே வழக்கில் உள்ளதென உறுதிபடக் கூறலாம் . குறைந்தது இக்காலம்  5000  ஆண்டுகள் என்று உறுதிபடக் கூறலாம் . சிவனியம்  இந்தியாவின் மிகத் தொன்மையான  சமயமென்று  உறுதிபடுகிறது  .  தமிழர்கள்  திருநீறு  இடும்  இவ்வழக்கத்தைப் பழங்காலம் தொட்டே கடைப்பிடித்து வருகின்றனர் .

Friday, April 9, 2021

வேத எதிர்ப்பே சித்தர் மரபு

 சித்தர்மரபு என்னும் வேத எதிர்ப்பு மரபு ❤️


சதுர்வேதம் ஆறுவகைச் சாத்திரம் பல

தந்திரம் புராணங்கலை சாற்றும் ஆகமம்

விதம் வித மானவனான வேறு நூல்களும்

வீணான நூல்களை என்று ஆடு பாம்பே.


                                     - (பாம்பாட்டிச் சித்தர்)


பொய் வேதம் தன்னைப் பாராதே - அந்தப்

போதகர் சொற்புத்தி போத வாராதே


                                      - (கடுவெளிச் சித்தர்)


பார்ப்பனர்கள் கட்டிய பாழான வேதத்தைச்

சோதித்துத் தள்ளடி - குதம்பாய்

சோதித்துத் தள்ளடி            


                                      - (குதம்பைச் சித்தர்)


நேமங்கள் நிட்டைகள் 'வேதங்கள்' ஆகம நீதிநெறி ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செபமந்திர யோக நிலை நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே

சாமங்கள் தோறும் இவர்செய்யும் பூசைகள் சர்ப்பனையே


                                     - (பட்டினத்தார்)


சாத்திரத்தைச் சுட்டு சதுர்மறையப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்


                                      - (பத்திரகிரியார்)




Monday, March 8, 2021

பெண்மையைப்பற்றி சிவவாக்கியர்

பெண்மையைப்பற்றி சிவவாக்கியர் :


பெண்களை தீட்டென்றும், தீண்டத்தகாதவர்களென்றும், பாவ யோனியில் பிறந்தவர்களென்றும், இழிபிறப்பாளர்களென்றும் ஆரிய வேதங்களும் பகவத்கீதையும் இழித்துரைக்கின்றன.


இதோ எம் தமிழ்ச்சிவவாக்கியம் யாரை எதைத்தீட்டென்கிறாய் என்று மூடர்களை இடித்துரைக்கிறார்.





அறையினில் கிடந்தபோது அன்றுதூய்மை என்றிலீர்,

துறைஅறிந்து நீர்குளித்த அன்றுதூமை என்றிலீர்,

பறையறிந்து நீர்பிறந்த அன்றுதூமை என்றிலீர்,

புரைஇலாத ஈசரோடு பொருந்துமாறது எங்ஙனே.


48


தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்!

தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்?

ஆமைபோல முழுகிவந்து அனேகவேதம் ஓதுறீர்

தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.


49


சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்

மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்

சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்

செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே.


50


மாதாமாதம் தூமைதான், மறந்துபோன தூமைதான்

மாதம்அற்று நின்றுலோ வளர்ந்துரூபம் ஆனது?

நாதம்ஏது, வேதம்ஏது, நற்குலங்கள் ஏதடா?

வேதம்ஓதும் வேதியர் விளைந்தவாறு பேசடா?


134


தூமைஅற்று நின்றலோ சுதீபமுற்று நின்றது?

ஆண்மைஅற்று நின்றலோ வழக்கமற்று நின்றது?

தாண்மைஅற்று ஆண்மைஅற்று சஞ்சலங்கள் அற்றுநின்ற

தூமைதூமை அற்றகாலம் சொல்லும்அற்று நின்றதே!


135


ஊறிநின்ற தூமையை உறைந்துநின்ற சீவனை

வேறுபேசி மூடரே விளைந்தவாறது ஏதடா?

நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்கள் ஆவன?

சீறுகின்ற மூடனே அத்தூமைநின்ற் கோலமே.


136


தீமைகண்டு நின்றபெண்ணின் தூமைதானும் ஊறியே

சீமைஎங்கும் ஆணும்பெண்ணும் சேர்ந்துலகம் கண்டதே.

தூமைதானும் ஆசையாய் துறந்திருந்த சீவனை

தூமைஅற்று கொண்டிருந்த தேசம்ஏது தேசமே?


137


ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்;

கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே

மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்

துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே.


205


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


நன்றி. வணக்கம்.

கீதையிலும் மனுநீதியிலும் பெண்கள்

 மனுஅநீதியில் பெண்கள்


மகளிர்நாளை யார் கொண்டாடலாம்? தமிழர்கள் கொண்டாடலாம், இரசிய, ஐரோப்ப, செர்மானியர்கள் கொண்டாடலாம். பெண்மையை மதிக்கும் எந்த இனமும் கொண்டாடலாம். ஆனால், ஆரியமும் ஆரியச்சார்பும் உடையவர்கள் கொண்டாடலாமா? பெண்ணை இழிபிறவி என்று கூறி ஒடுக்கியது ஆரியம். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது மகளிர்நாளைக் கொண்டாட? 😡😡😡


பெண்களைப்பற்றி_பகவான்_கிருட்டிணர்:😡




பகவத்கீதையின் 9ஆவது அத்தியாயத்தில் சுலோகம் 32 இப்படிச் சொல்கிறது.


"மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்யயே அபிஸ்யு பாப யோனய ஸ்திரியோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்தே அபியாந்திபராம் கதிம்"


அதாவது பெண்களும் சூத்திரர்களும் வைசிகர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள். தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பகவத்கீதைகளில் "பாவ யோனி" என்பதை "கீழான பிறப்பு", "இழி பிறப்பு" என்று மொழி பெயர்த்துள்ளார்கள். ஆங்கிலத்தில் நேரடியாகவே "born out of the womb of sin" என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள்.


பகவத் கீதையின் பார்வையிலும் பெண் என்பவள் இழி பிறப்புத்தான். அவள் ஒரு பார்ப்பன வீட்டில் பிறந்திருந்தாலும், அது செல்லுபடியாகாது.


கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும். சூத்திரர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான உரிமைகள் பெண்களுக்கும் மறுக்கப்பட்டுள்ளது.


முற்பிறப்பில் செய்த பாவத்தின் பயனாகத்தான் ஒருவன் பெண்ணாகவோ சூத்திரனாகவோ பிறக்கிறான் என்றுதான் இந்துமத வேதங்கள் சொல்கின்றன. அந்த வகையில் சூத்திரர்களை இழிவுபடுத்துகின்ற வேதங்கள், சாத்திரங்கள், மந்திரங்கள் போன்றவை பெண்களையும் இழிவுபடுத்துவதில் வியப்பு ஒன்றும் இல்லை.


கீதையில் 4, 5 இடங்களில் மட்டுமே பெண்களைப் பற்றி குறிப்பிடுகின்றனர். அத்தனை இடங்களிலும் பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள், இழிபிறவிகள், ஆணுக்கு அடிமையானவள் என்றே இழித்துக்கூறப்படுகிறாள்.


இவ்விழிநூல் கீதை இப்படி பெண்களை இழிவுபடுத்தும் நிலையில் பெண்களே தற்காலத்தில் இந்நூலை புனிதனமானதென்று கருதி படித்துக்கொண்டிருப்பதுதான் பேரவலம். அறமுடைய எவரும் இவ் இழிநூலைப் புனிதநூலென்று கருதலாகுமா?

மகளிர்நாள் வரலாறு

உலக_மகளிர்நாள்_உருவான_வரலாறு:





1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர்.


புயலாகக் கிளம்பிய பூவையரைத் துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது. அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடி துறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.


தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் #அனைத்துலகப்_பெண்கள்_நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.


#அமெரிக்கப்_பெண்கள்_புரட்சி:


அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.[3] 1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.


இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்!


பெப்ரவரி 28, 1909 இல் அமெரிக்க சோஷலிஸ்ட கட்சியின் ஒப்புதலுடன் முதன் முதலாக அந்த நாட்டில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் 1913 வரை பெப்ரவரி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் நாளைக் கடைப்பிடித்து வந்தனர். மார்ச் 25 1911 இல் நியூயோர்க்கில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சுமார் 140 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிகழ்வே அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தைக் கொண்டுவர மிக முக்கிய நிகழ்வானது. தொடர்ந்து அனைத்துலகப் பெண்கள் நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படலாயிற்று.


#_ரஷ்யாவில்_பெண்கள்_எழுச்சி:

1913–1914-களில் முதல் உலகப் போரின் போது ரஷ்யப் பெண்கள் அமைப்பினர் போருக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பெண்கள் நாள் பேரணிகளை நடத்தினார்கள். இதே ஆண்டில் மார்ச் 8 ஆம் திகதியில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.


#ஐநா_பேரறிவிப்பு:

பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலகப் பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.


நன்றி : Wikipedia தமிழ்

Monday, March 1, 2021

அவாவறுத்தலை சான்றோர் சொன்னவை

 அவாவறுத்தல்




அவாவறுத்தலைப்பற்றி சான்றோர் உரைத்தவை:


திருவள்ளுவர்-369


இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்.


விளக்கம்:

ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.


புத்தர் :


ஆசையே துன்பத்திற்குக் காரணம், ஆசையைத் துறந்தால் துன்பத்திலிருந்து விடுபடலாம்.


திருமூலர் - 2615


ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்

ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்

ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்

ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.

Saturday, February 20, 2021

உலகமொழிகளின் தாய்மொழி தமிழே

 








உலகத்தாய்மொழி நாள் 21.02.1940

உலகத்தாய்மொழி_நாள் 21.02.1940 வரலாறு:

(உலகத்தமிழ்மொழிநாள்)




உலகத்தாய்மொழிநாள் என்பது வங்கமொழிப்போரில் உயிரிழந்த 5 பேரின்  நினைவாக, வங்காள அரசின் முயற்சியால் ஐக்கிய நாடுகள் அவையின் யுனெசுகோ-வால் 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் நாள் அறிவிக்கப்பட்டு, 2000ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் முதல் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது என்பது இதுவரை இருக்கிற வரலாறு. ஆனால், அதைவிட 60 ஆண்டுகால பழைய உலகத்தாய்மொழிநாள் வரலாறு தமிழர்களுக்குண்டு. அதையறிந்துகொள்வோம்.

1937ஆம் ஆண்டு இந்தி கட்டாயப்பாடமாக்கப்பட்டு இந்திய அரசால் திணிக்கப்பட்டது. அப்போது மூண்டதே முதல் இந்தி திணிப்பு எதிர்ப்புப்போர். நடத்தியவர் ஐயா பெரியார். தாய்மொழி விருப்பப்பாடமாகவும் இந்தி கட்டாயப்பாடமாகவும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல் இந்தி திணிப்புப்போரைத் தொடங்கினார். மறைமலையடிகளாரையும் நாவலர் சோமசுந்தரபாரதியாரையும் தலைமையேற்றச்செய்து, பெரியார் தொண்டராக இருந்து இப்போராட்டத்தை நடத்தினார்.

இதுவே முதல் இனப்போர், மொழிப்போர். தமிழர்கள் தம் இனம்காக்க மொழிகாக்க ஒன்றரையாண்டுகள் நெடும்போராட்டமாக இந்தி திணிப்பு எதிர்ப்புப்போராட்டத்தை நடத்தினர், பலவுயிர்களை பறிகொடுத்தனர். அதில் உயிரிழந்தவர்கள் தான் ஐயா தாளமுத்துவும் நடராசனாரும். 1940 பிப்ரவரி 21ஆம் நாள் இந்தி கட்டாயப்பாடம் என்பது ஒழிக்கப்பட்டது. தமிழர்கள் மொழிபோரில் வெற்றிகண்டனர். அதன்பிறகு, 1947, 1950 சட்டம், மீண்டும் 1965ல் இரண்டாம் இந்தி திணிப்பு எதிர்ப்புப்போர் உருவானது, இது ஒரு நீண்ட வரலாறு. (படித்தறிக)



ஐ.நா அவையால் வங்கமொழிப்போர் நினைவாக உலகத்தாய்மொழிநாள் அறிவிக்கப்படுவதற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தாய்மொழிப்போர் நிகழ்த்தி வெற்றிகண்டு உலகத்தாய்மொழிநாளை உருவாக்கினர். உலகத்து மக்கள் அனைவரும் இத்தாய்மொழிநாளைக் கொண்டாடினாலும், அதற்கு முழு உரிமையுடையவர் தமிழர்களே.

இது மட்டுமின்றி, உலகமொழிகளுக்கெல்லாம் மூத்தமொழியாகவும் தாய்மொழியாகவும் இருப்பது தமிழேயாகையால் இது உலகத்தமிழ்மொழிநாளாகும்.

இந்நாளில் தாய்த்தமிழ்மொழிகாக்க நாம் சில உறுதிகளை பூணவேண்டும்.

தமிழிலேயே பேசவேண்டும்
தமிழிலேயே படிக்கவேண்டும்
தமிழில் பிறமொழி கலப்பைத் தவிர்க்கவேண்டும்
வழிபாட்டுமொழி வழக்காடுமொழி தமிழாகவே இருக்கவேண்டும்.
பிறமொழி தவிர்த்து நற்றமிழிலேயே பெயரிடவேண்டும்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழாகவே இருக்கவேண்டும்.

அனைவருக்கும் உலகத்தாய்மொழிநாள் வாழ்த்துகள்.

நன்றி. வணக்கம்

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Thursday, February 18, 2021

எது மந்திரம்? தொல்காப்பியர், திருவள்ளுவர் விளக்கங்கள்

தொல்காப்பியரும் வள்ளுவரும்: மந்திரம்🙏


தொல்காப்பியர் சொன்ன கருத்தை, அவர்வழியில் வள்ளுவரும் அதே கருத்தை சொல்லியிருக்கிறார்.





தொல்காப்பியம்,

பொருளதிகாரம், செய்யுளியல்-1425


நூற்பா:

'நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்

மறைமொழிதானே மந்திரம்' என்ப.


உரை:

நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமதாணையாற் சொல்லப்பட்ட மறைசொல்லே மந்திரம் என்பதாகும்.


திருக்குறள், அறம், பாயிரம், நீத்தார்பெருமை - 28


நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.


விளக்கம்:

நிறைவான வாக்குப்பெருமையுடைய மேன்மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன  மறைசொற்களே அடையாளம் காட்டிவிடும்.


************************


இருவேறு காலங்களில் வாழ்ந்த இறுவேறு தமிழ்ப்புலவர்களின் ஒன்றுபட்ட கருத்து. என்னே வியப்பு!!! தொல்காப்பியரை அப்படியே பின்பற்றியிருக்கிறார் வள்ளுவர்.


நன்றி. வணக்கம்.

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Saturday, February 13, 2021

காதற்சிறப்பு

 காதற்சிறப்பு : - நற்காதலன் வள்ளுவன் ❤️


திருக்குறள் : காமம்

களவியல் / காதற்சிறப்புரைத்தல் :


1121. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

          வாலெயி றூறிய நீர்.


இனியமொழி பேசுகின்ற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்துவரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.


1122. உடம்பொ டுயிரிடை யென்னமற் றன்ன

          மடந்தையொ டெம்மிடை நட்பு.


உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு.


1123. கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழுந்

          திருநுதற் கில்லை யிடம்.


நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!


1124. வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாத

          லதற்கன்ன ணீங்கு மிடத்து.


ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன்.


1125. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே

          னொள்ளமர்க் கண்ணாள் குணம்.


ஒளி கொண்டிருக்கும் விழிகளையுடைய காதலியின் பண்புகளை நினைப்பதேயில்லை; காரணம் அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு.


1126. கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருகுவரார்

          நுண்ணியரெங் காத லவர்.


காதலர், கண்ணுக்குள்ளிருந்து எங்கும் போக மாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் வருந்த மாட்டார்; காரணம், அவர் அவ்வளவு நுட்பமானவர்.


1127. கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணு

          மெழுதேங் கரப்பாக் கறிந்து.


காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப்பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்.


1128. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்ட

          லஞ்சுதும் வேபாக் கறிந்து.


சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்.


1129. இமைப்பிற் கரப்பாக் கறிவ லனைத்திற்கே

          யேதில ரென்னுமிவ் வூர்.


கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணை இமைக்காமல் இருக்கின்றேன்; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத துன்பத்தை எனக்குத்தந்த அன்பில்லதாவர் என்று அவரைக்கூறும்.


1130. உவந்துறைவ ருள்ளத்து ளென்று

          மிகந்துறைவ

          ரேதில ரென்னுமிவ் வூர்.


காதலர், எப்போதும் உள்ளதோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு.


                              - நற்காதலன் வள்ளுவன் ❤️


❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️


நன்றி. வணக்கம்.



தமிழ் நீடுவாழ்க

தமிழ் நீடுவாழ்க ❤️💪😍


காதொளிரும் குண்டலமும் கைக்குவளை

      யாபதியும் கருணை மார்பின்

மீதொளிர்சிந் தாமணியும் மெல்லிடையில்

      மேகலையும் சிலம்பார் இன்பப்

போதொளிர்பூந் தாளினையும் பொன்முடிசூ

      ளாமணியும் பொலியச் சூடி நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்

      தாங்குதமிழ் நீடு வாழ்க!”




தமிழ்நாடு தமிழர்க்கே உரியது

தமிழ்நாடு தமிழர்க்கே உரியதுபிறருக்கன்று :


புறநானூறு 51 ஆம் பாட்டு :


பாடியவர் : ஐயூர் முடவனார் (அ) ஐயூர் கிழார்

பாடப்பட்டோன் : பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன் வழுதி.

திணை : வாகை.

துறை : அரச வாகை.

குறிப்பு : 'செம்புற்று ஈயல்போல ஒருபகல் வாழ்க்கைக்கு உலமருவோர்' என்னும் செறிவான அறவுரையைக் கூறுவது.




பாட்டு :


நீர்மிகின், சிறையும் இல்லை; தீமிகின்,

மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;

வளிமிகின், வலியும் இல்லை; ஒளிமிக்கு

அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,

‘தண் தமிழ் பொது’ எனப் பொறாஅன், போர் எதிர்ந்து,

கொண்டி வேண்டுவன் ஆயின், ‘கொள்க’ எனக்

கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;

அளியரோ அளியர், அவன் அளிஇழந் தோரே;

நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த

செம்புற்று ஈயல் போல,

ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே!


விளக்கம் :

மிகுந்துவரும் வெள்ளத்தை தடுக்கவியலாது. மிகுந்துவரும் தீயைத்தடுக்கக் குடைபிடிக்க முடியாது. மிகுந்துவரும் காற்றை எதிர்த்துநிற்கும் வலிமை யாருக்குமில்லை. வெயிலின் பெருவெளிச்சத்தையும் தடுக்கவியலாது. அதுபோல, வழுதியை எதிர்த்துநிற்க யாருமில்லை. தமிழ்நாடு, எல்லா அரசர்களுக்கும் பொது என்பதை இவன் பொறுத்துக்கொள்ளமாட்டான். தமிழ்நாடு முழுவதும் தனக்கே உரியது எனப்போரிடுவான். கொண்டி (திறை) தரவேண்டும் என்பானாயின் கொடுத்த மன்னர் அச்சமின்றி அரசாளலாம். அவனது அரவணைப்பை இழந்தவர் இரக்கங்கொள்ளத்தக்கவர். புற்றிலிருந்து கிளம்பும் ஈயல் ஒருநாள் வாழ்க்கையில் அழிவதுபோல அவர்களின் வாழ்வு அழியும்.


நன்றி. வணக்கம்.

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Tuesday, February 9, 2021

வழக்குரை காதை

கண்ணகி வழக்குரை காதை :


அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து 

இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே

இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள்

கணவனை இழந்தாள் கடையகத் தாளென்று

அறிவிப் பாயே அறிவிப் பாயே 

                                                        - கண்ணகி


அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்

பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி

வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை அல்லள்

அறுவர்க் கிளைய நங்கை இறைவனை

ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்

கானகம் உகந்த காளி தாருகன்

பேருரங் கிழித்த பெண்ணு மல்லள்

செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்

பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்

கணவனை இழந்தாள் கடையகத் தாளே

                                                             - வாயிலோன்


நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்

யாரை யோநீ மடக்கொடி யோய்

                                                      - நெடுஞ்செழியன்


தேரா மன்னா செப்புவ துடையேன்

எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்

வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்

ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி

மாசாத்து வாணிகன் மகனை யாகி

வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு

என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி

கண்ணகி யென்பதென் பெயரே.

                                                        - கண்ணகி


பெண்ணணங்கே

கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று

வெள்வேற் கொற்றங் காண்

                                                - நெடுஞ்செழியன்




நற்றிறம் படராக் கொற்கை வேந்தே

என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே

                                                           - கண்ணகி


தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி

யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே.

                                                  - நெடுஞ்செழியன்


தருகெனத் தந்து தான்முன் வைப்பக்

கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப

மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி கண்டு

தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்

                                                     - இளங்கோ


பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட

யானோ அரசன் யானே கள்வன் 

மன்பதை காக்குந் தென்புலங் காவல்

என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுள்

                                                      - நெடுஞ்செழியன்


மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்

கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கி

                                                             - இளங்கோ


கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்

                                                           - கோப்பெருந்தேவி


இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி                         

                                                        - இளங்கோ


👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍


சிலம்பு முற்றிற்று.

Thursday, January 28, 2021

ஆட்டுகிடாவின் குருதிகலந்து செந்தினை தூவி முருகவழிபாடு

ஆட்டுகிடாவின் குருதிகலந்து செந்தினை தூவி முருகவழிபாடு - முறுகாற்றுப்படுத்துதல் :

சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்
(திருமுருகாற்றுப்படை - 46)

சூர்மருங்கு அறுத்த சுடரிலை நெடுவேல்;
சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை (அகநானூறு - 59)




"சேயோன் மேய மைவரை உலகமும்"
                                           - தொல்காப்பியம்



குருதியொடு தூவெள்ளரிசி பலியிடல்

🌺🌺🌺

குருதியோடு செந்தினை கலந்து பரப்பி முருகியப்பறை முழக்கி முருகாற்றுப்படுத்தும் குறமகள் 🙏🌺🌺🌺🙏


"மதவலி நிலைஇய மாத்தாட் கொழவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் ளரிசி
சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துனையுற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியொடு இன்னியம் கறங்க
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகியம் நிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப் படுத்த உருகெழு வியனகர்
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட”

      - திருமுருக்காற்றுப்படை 232 - 248 அடிகள்


பிணிமுகம் - யானை
(யானையை ஊர்தியாகக்கொண்ட முருகன்)









ஆட்டின் குருதிகலந்த தினையைப் பலியாக ஏற்கும் வேலன் :


சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழலினு
மார்வல ரேத்த மேலரு நிலையினும்
வேலன் றைஇய வெறியயர் களனுங்

                           - திருமுருகாற்றுப்படை





செந்தினை குருதியொடு தூவி முருகாற்றுப்படுத்தல் :


களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி,
வளநகர் சிலம்பப் பாடிப்பலி கொடுத்து,
உருவச் செந்தினை குருதியொடு தூஉய், 
முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்
(அகநானூறு 22)



நன்றி. வணக்கம்.

தொகுப்பு : தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Thursday, January 21, 2021

தமிழே இறைமொழி - தெய்வத்தமிழ்

இறைவன் தமிழை ஏற்கமாட்டானா?


சமற்கிருதத்தில் தான் குழமுழுக்கு நடத்தவேண்டுமென்று சமற்கிருதத்தில் எழுதாமல் தமிழில் தான் எழுதுகிறார்கள் அறிவிலிகள். சமற்கிருதத்திலேயே எழுதியிருக்கலாமே, எதற்குத் தமிழில் எழுதவேண்டும்? சமற்கிருதத்திலேயே பேசலாமே? எதற்கு தமிழ் தேவைப்படுகிறது இவ்வஞ்சகர்களுக்கு? ஏன் தமிழைப் பயன்படுத்தவேண்டும்?




ஆரியன், அவன் மொழியில் வணங்கட்டும், தமிழர்கள் தம் தமிழ்மொழியில் வணங்குங்கள். செத்தமொழியிடம் எதற்குக் கடன்வாங்கவேண்டும்? இதுவரை யாரும் இதைச்செய்யவில்லையென்று நீங்கள் மறுப்பீராயின், இனிமேல் தமிழில் செய்வோம்.


ஒழிக ஆரியம், ஒழிக வேதம், ஒழிக செத்தமொழி சமற்கிருதம்.


என்றும் நற்றமிழே வாழ்க.


தமிழில் குடமுழுக்குச் செய்யவேண்டாம் என்று இறைவன் சொன்னால், என்மொழி அவனுக்கு தெரியாதென்றால் அவன் எனக்கு இறைவனே ஆகான். தமிழ்க்குடமுழுக்கை மறுப்பானானால் அவ்விறைவனே வந்துசொல்லட்டும். சொல்வானா எம்மிறைவன்? ஒருக்காலுமில்லை.


ஏனெனில்,


"வண்தமிழ்கொண்டு இன்பமர வல்லார்களைத் தன்னை எய்துவிப்பவன்"

                                      - ஞானசம்பந்தர்


"பண்ணிடைத் தமிழொப்பானவன்"

                                                 - அப்பர்


"நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன் தாளம் ஈந்தவன் பாடலுக்கு இறங்கும் தன்மையாளன்"

                                           - நம்பியாரூரர்


"தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டான்"


"உயர்மதில் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின்

துறைவாய் நுழைந்தவன்"

                                           - மணிவாசகர்


"செந்தமிழ் மலர் சூடுபவன்" - சேந்தனார்


"ஆரணத்தேன் பருகிஅருந் தமிழ்மாலை கமழவரும்

காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ்மாலை சூடுபவன்"

                    - கருவூரார்


"தன்னை நன்றாகத் தமிழ்செய்யுமாறு படைத்தவன்"

                                                - திருமூலர்


"செந்தமிழ் செப்பியவர்களைத் தன்னடியடைவைத்து இன்பம் எய்துவிப்பவன்"

                           -- இறைவனால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்காலம்மையார்.


"ஒண்முத்தமிழ் பயந்தவன்"

                   - நம்பியாண்டார் நம்பிகள்


"அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண் மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்றவர்"

                                        - தெய்வச்சேக்கிழார்


"சொல்லார் தமிழிசை பாடிய தொண்டன் தனை இன்னும் பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு" என்றவன்"

                                          - தெய்வச்சேக்கிழார்


திருமுறையே சைவநெறிக் கருவூலம்

தென்தமிழின் தேன்பா காகும்

திருமுறையே கயிலையின் கண் சிவபெருமான்

செவிமடுத்த செந்தமிழ் வேதம்

திருமுறையே நடராசன் கரம் வருந்த

எழுதியருள் தெய்வ நூலாம்

திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய்

மலர்ந்தருளும் சிறப்புற்றாமால்.


இப்படிச் சிவநெறியருளாளர்கள் தம்திருவாய்மலர்ந்து தமிழுக்கே இறைவன் செவிசாய்ப்பான் என்று ஐயமற நிறுவியுள்ளனர். இனி எவராவது, இறைவன் தமிழை

ஏற்கமாட்டான் என்று கூறுவாரானால் அவர்களின் நாவையறுத்துத் தீயிலிடுவேன்.


*********

தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏

நன்றி. வணக்கம்

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Monday, January 18, 2021

புறநானூற்று மறத்தாய்

புறநானூற்றில் மறத்தாய் ஒருத்தி :


நூல் : புறநானூறு (௨௭௯ - 279)

பாடியவர் : ஒக்கூர் மாசாத்தியார்

திணை : வாகை 

துறை : மூதின் முல்லை 




மூலப்பா (சீர்பிரிக்காத மூலவடிவப்பாடல்) :🏵


கெடுக சிந்தை கடிதிவ டுணிவே

மூதின் மகளி ராத றகுமே

மேனா ளுற்ற செருவிற் கிவடன்னை

யானை யெறிந்து களத்தொழிந் தனனே

நெருநலுற்ற செருவிற் கிவள் கொழுநன்


பெருநிரை விலங்கி யாண்டுப்பட் டனனே

இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி

வேல்லைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப்

பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி

ஒருமக னல்ல தில்லோள்

செருமுக நோக்கிச் செல்கென விடுமே.


**********************************************


பா (படிக்க எளியவகையில் சீர்பிரித்த வடிவம்) :🌺


கெடுக சிந்தை ; கடிதுஇவள் துணிவே;

மூதின் மகளிர் ஆதல் தகுமே;

மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,

யானை எறிந்து, களத்துஒழிந் தனனே;

நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,


பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;

இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,

வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,

பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,

ஒருமகன் அல்லது இல்லோள்,

செருமுக நோக்கிச் செல்க என விடுமே!


**********************************************


உரை :

இவள் எண்ணம் கெட்டொழியட்டும். இவளது துணிவான செயல் கடுமையானது. இவள் மூதில் மகளிருள் (மூத்த மறக்குடிப் பெண்டிர்) ஒருத்தியாக இருத்தல் வேண்டும். இவளது கடுமையான எண்ணம் கெட்டொழியட்டும். நேற்றைக்கு முந்தைய மேனாள் நடந்த போரில் இவளது அண்ணன் பகைவரின் யானையை வீழ்த்திய போரில் போர்க்களத்திலேயே மாண்டான். நேற்று நடந்த போரில் இவளது கணவன் பகைவரின் அணிவகுப்பு பிளவு படும்படி விலக்கிக்கொண்டு முன்னேறி அங்கேயே மாண்டான். இன்றும் போர்ப்பறை ஒலி கேட்டவுடன் ஏதாவது செய்யவேண்டும் என்னும் ஆவலுடன் எண்ணிப்பார்த்து, தன் ஒரே ஒரு மகனை, இளம் பிள்ளையை, பரந்துகிடந்த அவன் தலைமுடியை எண்ணெய் வைத்துச் சீவி முடித்து, வெண்ணிற ஆடையை உடுத்திவிட்டு, வேலைக் கையிலே கொடுத்து, “போர்க்களம் நோக்கிச் செல்க” என்று கூறி அனுப்பிவைக்கிறாளே! இவள் சிந்தைத் துணிவு கெட்டொழியட்டும்.


நன்றி. வணக்கம்

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Thursday, January 14, 2021

இலக்கியத்தில் நம்நாடு தமிழ்நாடு

இலக்கியத்தில் தமிழ்நாடு : 


நம்நாட்டிற்கு தமிழ்நாடு என்னும் பெயர், ஈகி சங்கரலிங்கனாரின் உயிர் ஈகத்தாலும், பல தமிழறிஞர்களின் போராட்டத்தாலும், அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரையாரால் 1969ஆம் ஆண்டு இதேநாளில் தான் சூட்டப்பட்டது என்பது நாம் அறிந்ததே. அவ்வீகியருக்கும் அரசுக்கும் நம் நன்றியை உரித்தாக்குவோம். 


ஆனால், இப்போது நாம் அறியவேண்டிய செய்தி யாதெனில், 1969க்கு முன்பும் நம்நாட்டின் பெயர் தமிழ்நாடே. அதற்கான சான்றுகளைத் தான் இப்பதிவில் காணவுள்ளோம். தமிழ்கூறும் நல்லுலகு, தமிழகம், தமிழர்நிலம், தமிழ்மருங்கு, தமிழ் வரைப்பகம் என்றெல்லாம் நம்நாட்டிற்கு பெயர் இருந்ததாக மிகப்பல சான்றுகள் இலக்கியகளிலுண்டு. ஆனால், "தமிழ்நாடு" "தமிழ்நன்னாடு" என்ற பெயரிலேயே இருக்கும் சான்றுகளை மட்டும்தான் ஈண்டு பதிவிடுகிறேன்.


அவை,


௧) பரிபாடல் - மதுரையைப்பற்றிய பாடல்

௨) சிலம்பு - மூன்று சான்றுகள்

௩) இளம்பூரணனாரின் தொல்காப்பிய உரைநூல்




1) பரிபாடல் மதுரையைப்பற்றிய பாட்டு:


தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லா

நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது

குன்றுத லுண்டோ மதுரை கொடித்தேரான்

குன்றமுண் டாகு மளவு.


பொருள்:

பாண்டிய மன்னனின் பொதியில்மலை இருக்குமளவும் மதுரை, குளிர்ந்த தமிழ்மொழியையே 

எல்லையாகவுடைய தமிழ்நாடெங்கும் தன் புகழ் பரவப் பொலிந்து நிற்பதன்றிக் குன்றமாட்டாது.


2) சிலப்பதிகாரம்:

அ) புகார்க்காண்டம் - நாடுகாண்காதை - 58ஆம் அடி


"தென்றமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு"


பொருள்: தெற்கின்கணுள்ள தமிழ் நாட்டின் கண்ணதாகிய குற்றந் தீர்ந்த மதுரைக்கு


ஆ) மதுரைக்காண்டம் காட்சிக்காதை 165ஆம் அடி


"இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கி" 


பொருள்: முழங்கும் கடலை வேலியாகவுடைய இந்நிலம் முழுவதையும் தமிழ்நாடாக்க விரும்பி


இ) மதுரைக்காண்டம் காட்சிக்காதை 171ஆம் அடி


"தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி"


தென்றிசைக் கண்ணதாகிய வளமிக்க தமிழ்நாட்டு வில்லுங் கெண்டையும் புலியுமென்னும் இவற்றின் இலச்சினை.


3) இளம்பூரணனாரின் தொல்காப்பியவுரைநூல்:


தொல்காப்பியத்தின் சொல்லதிகார கியவியாக்கத்தில் "செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்னும் நூற்பாவிற்கு உரை எழுதிய இளம்பூரணனார், வினாவும் விடையும் குழப்பமின்றி தெளிவாக இருக்கவேண்டும் என்று இந்தநூற்பாவின் பொருளை விளக்கி, அதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறார்.


“நும் நாடு யாது என்றால், #_தமிழ்நாடு என்றல்“ என்று கூறுகிறார். இதில் நாடுயாது என்பது வினாவாம், அதற்கு நேரடியான விடை தமிழ்நாடு என்பதாம். இவ்வாறு விளக்கினார். இவர் 11ஆம் நூற்றாண்டைச்சார்ந்தவர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.


பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் மாக்கதையிலும் தமிழ்நாடென்றே பலவிடங்களில் கூறப்பட்டிருக்கும்.


1969க்குப்பிறகு மட்டுமல்ல ஈராயிரமாண்டுகளாகவே நம் நாடு தமிழ்நாடு தான். நம்நாடு இந்தியா அல்ல நற்றமிழ்நாடு என்போம்.


நன்றி. வணக்கம்.


******************************************************

தரவுகள் உதவி:

1) பரிபாடல் நூல்

2) சிலப்பதிகாரம் நூல்

3) இளம்பூரணனாரின் தொல்காப்பிய உரைநூல்


தொகுப்பு : தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Tuesday, January 12, 2021

தமிழ்மன்னர் கொடைத்திறம்

தமிழ்மன்னர்களின் கொடைத்திறம் : 

நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது இந்த பாடம் எங்கள் தமிழ்ப்பாடத்திட்டத்தில் இருந்தது, எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஏனெனில், அத்தமிழ் நூலில் கொடுத்திருந்த படம், புலவர் யானை மீது பொற்காசுகள் கொண்டுவருவார். அதுகண்ட, புலவரின் மனையாளும் மகவும் புலவரை நோக்கி வருவர். அதுமட்டுமின்றி, எந்தமிழாசிரியை அக்கதையை சொல்லும்போது சொன்ன இரண்டு செய்திகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டுள்ளன. புலவர் மன்னனிடம் தம் நல்குரவை எடுத்துச்சொல்லும் தொடர்களாக அமைந்தவை. அவை, 


**என் மகவிற்கு பாலூட்ட இல்லாளுக்கு பாலும் சுரக்கவில்லை**


**எம்பசியை போக்கிக்கொள்ள கொல்லையிலுள்ள குப்பைக்கீரைகளையாவது பறித்து சமைக்கலாமென்றாலும் உப்பிற்கும் வழியில்லை**


😭😭😭


இன்று, புறநானூற்றை படிக்கும்போது இப்பாட்டு என் கண்களில்பட்டது. உடனே நான் என்னுடைய நான்காம் வகுப்பில் இந்த கதையை படித்தது எனக்கு நினைவிற்குவந்தது. இதையும், அந்த பாடலையும் இங்கு நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளலாமென பதிகிறேன். ஓர் அன்பான வேண்டுகோள், இதை முழுவதும் படியுங்கள் நண்பர்களே.


நன்றி.🙏🙏🙏


பெருஞ்சித்திரனார் என்ற புலவர். புலமை பெரிதுடையவர். வறுமையில் வாழ்கின்றார். தன் வறுமையைப் போக்கக் கொடைக்குப் பெயர்பெற்ற குமண வள்ளலிடம் செல்கின்றார்; கணக்கற்ற பரிசுப் பொருட்களோடு வருகின்றார். வந்தவர், அந்தப் பொருட்களைத் தானே வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் இன்பமாக வாழலாம் என்று கனவு கண்டாரா என்றால், அதுதான் இல்லை. வேறென்ன செய்தார்? மனைவியை அழைத்தார்;  செய்ய வேண்டியதைச் சொல்கின்றார்.




“என் மனைக்கு உரியவளே! இந்தப் பொருளையெல்லாம் உன்னிடம் அன்பு காட்டுகின்றவர்களுக்கும், நீ அன்பு செய்பவர்களுக்கும், உன்னுடைய உறவினர்களுக்கும்,  பசியால் நாம் வருந்தியபோது நமக்கு உதவிய நல்லோர்களுக்கும் மற்றும் இவர்கள் நமக்கு உறவினர்- உறவினர் அல்லாதவர் என்று நினைக்காமலும்,  நாம் வளமாக வாழ்வதற்கு இந்தப் பொருளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று எண்ணாமலும் …இவர்களுக்குக் கொடுக்கலாமா, வேண்டாமா என்று என்னிடமும் கேட்காமல்,  எல்லோருக்கும் கொடுப்பாயாக” என்கின்றார். அவரின் பாடல் இதோ…


பாட்டு:


நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்

பல்மாண் கற்பின் நின் கிளைமுதலோர்க்கும்

கடும்பின் பசிதீர யாழ நின்

நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்

இன்னோர்க்கும் என்னாது, என்னோடும் சூழாது

வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்

எல்லோர்க்கும் கொடுமதி மனைக்கிழவோயே

பழம்தூங்கு முதிரத்துக் கிழவன்

திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.


புறநானூற்றின் 163 ஆவது பாடல் இது.


கருத்துரை: 


மனைக்கு உரியவளே!  தொங்குகின்ற பழங்கள் நிறைந்த  முதிரமலைத் தலைவனும் செம்மையான வேலையுடையவனுமாகிய குமணன்,  எனக்குக் கொடுத்த வளத்தையெல்லாம், உன்னிடம் அன்போடு வாழ்பவர்களுக்கும், நீ அன்பு காட்டுபவர்களுக்கும், பல்குணங்களும் மாட்சிமைப்பட வாழுகின்ற உன்னுடைய சுற்றத்தினருக்கும், நம் சுற்றத்தினரின் கடும்பசியைத் தீர்ப்பதற்கான உன் எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்டு உனக்கு உதவியவர்களுக்கும், இவர் இப்படிப்பட்டவர் (நல்லவர், தீயவர்) என்று அவரின் தன்மையை மதிப்பிடாமலும், என்னிடமும் கேட்காமல், இந்தப் பொருட்களையெல்லாம் நாம் வைத்துக்கொண்டு செல்வ வளத்யோடு வாழலாம் என்றும் நினையாது,  நீயும் எல்லோருக்கும் கொடுப்பதற்குக் கருதுவாயாக!


சொற்பொருள் விளக்கம்:


நின் நயந்து- உன்னிடம் அன்பு காட்டி, உறைநர்க்கும்- வாழ்பவர்களுக்கும், நீ நயந்து – நீ அன்பு காட்டி, உறைநர்க்கும் –வாழ்பவர்களுக்கும், பல்மாண்- பல மாட்சிமைப்பட்ட, கற்பின் –சொன்ன சொல்லிலிருந்து மாறுபடாத, நின் கிளைமுதலோர்க்கும்- உன்னுடைய சுற்றத்தினர் முதலானோர்க்கும், கடும்பின் – சுற்றத்தின், பசிதீர –பசியைத் தீர்ப்பதற்கு, நின்நெடும் – உன்னுடைய நெடிய, குறியெதிர்ப்பு- எதிர்பார்ப்பு, நல்கியோர்க்கும் – வழங்கியோருக்கும், இன்னோர்க்கும் என்னாது- இவர் இப்படிப்பட்டவர் என்றும் நினையாமல் , என்னோடும் சூழாது- என்னிடம் கலந்து ஆலோசிக்காமல்,வல்லாங்கு வாழ்தும் – வன்மையாக வாழலாம், என்னாது நீயும்- என்றும் எண்ணாமல், எல்லோர்க்கும்- எல்லோருக்கும், கொடு-கொடுக்க, மதி –கருது, மனைக்கிழவோயே –மனைக்கு உரியவளே, பழம்தூங்கு –பழங்கள் தொங்குகின்ற, முதிரத்துக் கிழவன் –முதிரமலைக்குத் தலைவன், திருந்துவேல் – செம்மையான வேலையுடைய, குமணன் நல்கிய வளனே- குமணவள்ளல் வழங்கிய வளனே.


ஈத்துவக்கும் இன்பம் அறிந்த புலவனின் உண்மை மொழிகள் இவை. அவர் சொல்லுகின்ற ஒவ்வொரு சொல்லிலும் அவரின் உள்ளத்து உயர்வினையே பார்க்க முடிகின்றது.  தன்னுடைய மனைவி,  எங்கே தன்னிடம் கேட்டுவிட்டுத்தான் கொடுக்கவேண்டும் என்று தயக்கம்காட்டி கொடுக்க நினைப்பவர்களுக்குக்கூட கொடுக்காமல் இருந்துவிடுவாளோ என்பதால் முதலிலேயே சொல்லிவிடுகின்றார், “என்னோடும் சூழாது” என்று!


இன்பம் எது? என்பதை உணர்ந்திருந்த அப்பெரியோர்களின் பெற்றியை என்னென்பது?


இலஞ்சமும் ஊழலும் பிறர் பொருளுக்கு ஆசைப்படும் கயமையும் வாழ்கின்ற தமிழகத்திலா, இத்தகு சான்றோர்களும் வாழ்ந்தார்கள் என்பது வியப்பாக இருக்கிறதல்லவா?


உதவி : வலைத்தளம்.

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Wednesday, January 6, 2021

மனுநீதிச்சோழனல்லன் தமிழறச்சோழன்

மனுநீதிச்சோழனல்லன் தமிழறச்சோழன்:


இவன் ஆரூரைத் தலைநகராகக்கொண்டு அரசாண்டவன் என்று கூறப்படுகிறது. வடமொழி மனுநூல் வழிநின்று ஆண்டவனனாதலால் இவன் மனுநீதிச்சோழன் என்று அழைக்கப்பட்டானென்று சேக்கிழாரின் திருத்தொண்டர் மாக்கதையால் அறியக்கிடைக்கிறது. ஆனால், இதே நூலில் இம்மன்னன் அந்த மனுநீதிநூல் சொன்ன தீயறத்திற்கு எதிராக நல்லறஞ்செய்தான் என்பதையும் அவரே விளக்குகிறார்.


இம்மன்னனின் வரலாற்றை இயக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறதே தவிர வரலாறு மற்றும் கல்வெட்டுகள் மூலம் அறியுமளவிற்கு தக்கவுறுதிச்சான்றுகள் கிடைத்திலபோலும். இவனின் பெயர் மனுநீதிச்சோழன் என்னுஞ்சான்று யாண்டுமில.



பெருங்காப்பியமான சிலம்பில், நீதிகேட்டு பாண்டியன் அரசவைக்கு சென்ற கண்ணகி, தன்னை எந்நாட்டாளென்றும் யாரென்றும் அறிமுகஞ்செய்யும்போது,


"வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும்பெயர்ப் புகாரென் பதியே"


என்று கூறுகிறாள். இதுவே இவனைப்பற்றிய முதற்சான்று. ஈண்டு இம்மன்னன் பெயர் யாதென குறிப்பிடப்படவில்லை. .


அடுத்து, இராசராசசோழனுலா, விக்கிரமசோழனுலா, குலோத்துங்கச்சோழனுலா என்பவற்றிலும் இக்கதை வருகிறது. ஆனால், சேக்கிழார் தாமியற்றிய திருத்தொண்டர்மாக்கதையில் தான் இவன் பெயர் மனுநீதிச்சோழனென்றும் இக்கதையை விரிவாகவும் எழுதுகிறார். சேக்கிழார்தான் மனுநூலை இங்கே புகுத்திவிட்டார். பின் அவரே அதை மறுக்கவும் செய்கிறார். அக்காலத்திய சைவ சமயம் வேதத்தையும் மனுநூலையும் ஏற்றவையே அதனோடு தமிழ் அறமும் கலந்ததால் ஏற்றும் எதிர்த்தும் கதை அமைந்துள்ளது.


கதைச்சுருக்கம்:

மன்னனின் மகன் தேராழியில் சிக்கி இளங்கன்று இறந்துவிடுகிறது. அமைச்சர்கள், மன்னனைப்பார்த்து கவலைகொள்ளாதீர், இவ்வாறு ஆவினைக்கொன்றதற்கு மனுநூல் மற்றும் மறைநூலில் சொன்ன மாற்றுவழி அறம் செய்தால் போதும் என்கின்றனர். ஆனால் மன்னனோ, அதை ஏற்காமல் அந்த மறைநூல் சொன்ன மாற்று அறங்கள் ஒருபுறம் கிடக்கட்டும். எந்த மாற்றுவழியறம் செய்தாலும் இந்த ஆவின் துயர் தீருமோ? அப்படிசெய்தால் அறக்கடவுள் தான் ஏற்குமோ? அறம் தான் சலியாதோ? என்று அந்த மறைமனுநூல் சொன்ன தீயறத்தை எதிர்த்துப்பேசுகிறார். 


இவ்வா படும் துயர் போலவே யானும் என் மகனை இழந்து துயருறுவதே இவ்வான்கன்றை கொன்றதற்கு எனக்கும் என்மகனுக்கும் தக்க ஒறுத்தல் என்று தன்புதல்வனை தானே தேர்க்காலிலிட்டு ஊர்ந்து கொல்கிறான் மன்னன்.


அந்த திருத்தொண்டர்மாக்கதையின் மூன்று பாடல்களை இங்கே பதிவிட்டுள்ளேன். படித்தறிக. இனி இவ்வறச்செயல்புரிந்த நம் மன்னனை மனுநீதிச்சோழன் என்று அழைக்காமல் தமிழறச்சோழன் என்று விளிப்போம். நன்றி வணக்கம்.


திருத்தொண்டர்மாக்கதை - பாயிரம் - திருநகரச்சிறப்பில் 119, 120 மற்றும் 129 ஆம் பாட்டுகள்


மந்திரிகள் அதுகண்டு 

மன்னவனை அடிவணங்கிச்

சிந்தைதளர்ந் தருளுவது 

மற்றிதற்குத் தீர்வன்றால்

கொந்தலர்த்தார் மைந்தனைமுன் 

கோவதைசெய் தார்க்குமறை

அந்தணர்கள் விதித்தமுறை 

வழிநிறுத்தல் அறமென்றார்.


பொழிப்புரை :

இவ்வாறெல்லாம், அரசன் அடைந்த துயரத்தைக் கண்ட அமைச்சர்கள் பார்த்து. அம்மன்னவன் திருவடிகளை வணங்கி, இவ்விளைவிற்குத் தாங்கள் மனம் தளர்வது தீர்வாகாது; கொத்தாக அலர்ந்த பூமாலை உடைய நும்மைந்தனை, இதற்குமுன் பசுக்கொலை செய்த பாவிகட்குத் தீர்வாக மறை உணர்ந்தோரால் விதிக்கப்பட்ட ஆணைவழித்தீர்வு செய்வதே நீதியாகும் என்று கூறினர்.


வழக்கென்று நீர்மொழிந்தால் 

மற்றதுதான் வலிப்பட்டுக்

குழக்கன்றை இழந்தலறுங் 

கோவுறுநோய் மருந்தாமோ

இழக்கின்றேன் மைந்தனைஎன்

றெல்லீருஞ் சொல்லியஇச்

சழக்கின்று நானியைந்தால் 

தருமந்தான் சலியாதோ.


பொழிப்புரை :

பசுக்கொலை செய்தார்க்கு, மறைவழிக்காணும் தீர்வு செய்துகொள்ளுதல்தான் உலக வழக்கென்று நீவிர் கூறினால், அத்தீர்வு தானும் தன் இளங்கன்றினை இழந்து மனம் வருந்தி அலமருகின்ற இப்பசுவின் நோய்க்கு மருந்தாகுமோ? ஆகாது. அதனால் என் மகனை யான் இழக்கின்றேன் என்று நீவிரெல்லாம் கூறிய இப்பொய் மொழிக்கு, இன்றுநான் உடன்படுவேனானால் அறக்கடவுள்தான் சலிப்படையாதோ? அடையும்.


ஒருமைந்தன் தன்குலத்துக் 

குள்ளான்என் பதும்உணரான்

தருமம்தன் வழிச்செல்கை 

கடனென்று தன்மைந்தன்

மருமம்தன் தேராழி 

உறவூர்ந்தான் வேந்தன்

அருமந்த அரசாட்சி 

அரிதோமற் றெளிதோதான்.


பொழிப்புரை :

தன் குலத்தில் அரசுரிமை பெற்று ஆட்சி நடத்து தற்கு ஒரு மகன் தான் உளன் என்பதையும் மனத்தில் கொள்ளாமல், அறத்தின்வழி நடத்தலே தனக்குரிய முறைமை என்று கருதித், தன் மகனது மார்பைத் தன் தேர்க்காலானது பொருந்த நடத்தினான் அவ்வேந்தன். இதனால் அரிய மருந்தனைய அரசாட்சியை நடத்துதல் அரியதோ? அல்லது எளியதோ? என்பது எண்ணற்குரியதாம்.


நன்றி. வணக்கம்

தரவு : சிலம்பு மற்றும் திருத்தொண்டர்மாக்கதை

தொகுப்பு : தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

Saturday, January 2, 2021

புறநானூற்றுத்தாய் - புறம் 278

புறநானூற்றில் ஓர் வீரத்தாய்


நூல் : புறநானூறு (௨௭௮ - 278)

பாடியவர் : காக்கைபாடினியார் நச்செள்ளையார்

திணை : தும்பை 

துறை : உவகைக் கலுழ்ச்சி 




பா :

நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்

முளரி மருங்கின், முதியோள் சிறுவன்

படைஅழிந்து மாறினன் என்று பலர் கூற,

மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன்

முலைஅறுத் திடுவென், யான் எனச் சினைஇக்,

கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்,

செங்களம் துழவுவோள், சிதைந்துவே றாகிய

படுமகன் கிடக்கை காணூஉ,

ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே!  


உரை :

அவள் நரம்புகள் புடைத்தெழுந்து காய்ந்து வறண்டுபோன தோளை உடைய முதுமகள். தாமரை மலரின் இதழ்களைப் போல் எலும்புகள் தெரியும் இடையை உடையவள். மறக்குடி மூதில் வீரத்தாய். போருக்குச் சென்ற தன் மகன் படையைக் கண்டு பயந்து திரும்பிவிட்டான் என்று பலர் கூறக்கேட்டு, (அப்படி இருக்கமுடியாது என்னும் மன உறுதி கொண்டவளாய்) அப்படிப் போரைக் கண்டு மனம் உடைந்து திரும்பியிருப்பான் ஆயின், அவன் பாலுண்ட என் என் முலையை அறுத்தெரிவேன் என்று சினத்துடன் கூறிக்கொண்டு வாளேந்திய கையளாய்ப், போர்க்களம் சென்று, வாளால் பிணங்களைப் புரட்டுகையில், தன் மகன் வாளால் மார்பில் வெட்டுப்பட்டுக் கிடப்பதைக் கண்டதும் மகிழ்ந்தாள். அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும், விழுப்புண் பட்டு மாண்டதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தாள். 


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இனி சின்னாட்கள் புறநானூற்றில் கூறப்பட்ட வீரத்தாய்மார்கள் பற்றிய பாடல்களைப்பதிகிறேன்.

நன்றி. வணக்கம்🙏

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

கிழமை என்பதன் பொருள் உரிமை

கிழமை = உரிமை


ஞாயிற்றுக்கிழமை :

- ஞாயிற்றுக்கு உரிமையான நாள் (அனைத்து கிழமைகளுக்கும் பொது)


குறிஞ்சிக்கிழவோன் :

- குறிஞ்சி நிலத்திற்கு உரிமையானவன் (முருகன்)


காடுகிழாள் (அ) காடுகிழத்தி :

- காட்டிற்கு உரிமையானவள் (காடமர் செல்வி)


நிலக்கிழார் :

- நிலத்தின் உரிமையாளர்


குண்டையூர்க்கிழார் :

- குண்டையூருக்கு உரிமையாளர் (தேவார நம்பியாரூரர் வரலாற்றோடு தொடர்புடையவர்).


தமிழ்க்கிழவி

- தமிழுக்கு உரிமையானவள் (ஔவை)