Sunday, May 10, 2020

உலகத்தமிழிசை மாநாடுகள்

உலகத்தமிழிசை மாநாடுகள்


இருநூறாண்டுகளாகத் தமிழ்நாட்டு இசையரங்குகளில் தமிழரிசைக்கு இடந்தரப்படாமல் வேற்றுமொழிப்பாடல்களே பாடப்பட்டன. அப்போது, 1900 முதல் 1919 வரை "தமிழிசை இயக்கம்" என்னும் பெயரில் தமிழிசைக்கென்று ஒரு இயக்கம் உருவாக்கி, ஏழு தமிழிசை மாநாடுகளை நடத்தினார் ஐயா.ஆபிரகாம் பண்டிதர்.

வாராது வந்த மாமணி ஆபிரகாம் பண்டிதர்



அதற்குப்பிறகு தமிழிசையைப்பற்றி மக்கள் கண்டுகொள்ளவில்லை. அந்நேரத்தில், தில்லையில் 1941ஆம் ஆண்டு, தில்லை சர்.அண்ணாமலையார், சண்முகனார், பெரியார் ஆகியோரின் பெருமுயற்சியால் தமிழிசை மாநாடு நடத்தப்பெற்றது. அம்மாநாட்டில் பெரியார்,

"தமிழனுக்குத் தெரியாத, புரியாதமொழியில் தமிழன் பாட்டைக்கேட்கவேண்டும். இதற்குப்பெயர்தான் கலைவளர்ச்சியாம். அறிஞர்களே, நமக்குப் பாட்டுக்கேட்கக்கூட தெரியாதென்றும், நம்மொழி பாட்டிசைக்கக்கூட பயன்படாதென்று சொன்னால், இவ்விழிசொல் நம் உயிரைப்போயல்லவா கவ்வுகிறதாயிருக்கிறது? என்று மிகவும் வருத்தமாகக் கூறுகிறேன். சுருக்கமாகச்சொன்னால் தமிழன், தான் நுகரும் இசையை தமிழில் இசை, தமிழில் பாடு, தமிழர்களைப்பற்றித் தமிழர்களுக்கு ஏற்றதை தமிழர்களுக்கு பயன்படுமாறு பாடு என்கிறேன்" என்று உரையாற்றினர்.

பிறகு, 1942ஆம் ஆண்டு தேவக்கோட்டையில் மீண்டும் தமிழிசை மாநாடு நடத்தப்பட்டது. பலவறிஞர்கள் பங்கேற்றனர்.

அதன்பிறகு, 1943ஆம் ஆண்டு மதராசப்பட்டினத்தில் பெரிய அளவில் தமிழிசை மாநாடு அரங்கேறியது.

******************

இவற்றையெல்லாம் அடிப்படையாகக்கொண்டு தமிழகமெங்கும் தமிழிசை பரவவேண்டுமென்ற எண்ணத்தில், நா.அருணாசலனார் என்பவரால் "பெரியார் தமிழிசை மன்றம்" என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இம்மன்றம், தமிழிசைப்பாணர் ஐயா.புசுபவனம் குப்புசாமி அவர்களின் குரலிசையில் "தமிழிசைப்பாடல்கள் - பகுதி 1 மற்றும் 2 என்னும் இரண்டு பகுதிகளில் 20 தமிழிசைப்பாடல்களை வெளியிட்டுள்ளது. ஐயாவிற்கும், இம்மன்றத்திற்கும், ஒலிப்பதிவு செய்த Vijay Musical's நிறுவனத்திற்கும் அடியேனின் பணிவான நன்றியைத் தெரியவித்துக்கொள்கிறேன். இப்பாடல்கள், புரட்சிக்கவிஞர் பாவேந்தர், உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் முதலானோரால் இயற்றப்பட்டனவாகும்.

*****************

இப்படியெல்லாம் பாடுபட்டு தமிழிசையைக் காக்கும் அறிஞர்களுக்கிடையில் நாமோ பிறமொழிப்பாடல்களைத் தான் இசையரங்குகளில் ஏற்றுகிறோம். நாம் நம் இசையைக்கேட்பது எக்காலம்?


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் உலகத்தமிழிசை மாநாடு, மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தில் கடந்தவாண்டு 2019ல் திசம்பர் மாதம் 14, 15 ஆகிய நாள்களில் நடைபெற்றது.

*************

நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment