Saturday, May 9, 2020

ஊன்பொதிசோறு (பிரியாணி) - பழந்தமிழர் உணவு

தமிழரின் உணவு ஊன்சோறு (பிரியாணி) சுட்டகறி(தந்தூரி) மற்றும் வேவை(சூப்)


தமிழிலக்கியத்தில் சிறிய ஆய்வுக்கட்டுரை :

ஊன்சோறு என்பது பிறநாட்டாரிடமிருந்து நாம் கற்றுக்கொண்டதல்ல, பழந்தமிழரின் தமிழுணவே. அதை உறுதிசெய்யும் வகையில் தமிழிலக்கியங்களிலுள்ள சான்றுளை ஆய்ந்து பதிவிடுகிறேன். நன்றி.



இவ்வுணவை பழந்தமிழர் பலவாறு அழைத்துள்ளனர்.

௧) ஊன்சோறு
௨) ஊன்றுவையடிசில்
௩) ஊன்பொதிசோறு
௪) புலவு (புலாவ் என்று பின்னர் மருவியது)

இதற்கு இலக்கியகளில் எண்ணிலா சான்றுகள் உள்ளன. அடியேன் சிலவற்றை மட்டும் எடுத்துச் சான்றுகாட்டுகிறேன்.

"மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்
 அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும்
 பெட்டாங் கீயும் பெருவளம் பழுனி"

(புறநானூறு - 113)


மை - காராடு, வெள்ளாடு. விடை - கடா (கெடா) மற்றும் இளங்கோழியையும் குறிக்கும் (விடைக்கோழி - தற்காலவழக்கு) இவற்றின் கறிசோற்றை உண்டதாக சொல்கிறது இப்பாடல்.

"புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த
 மலரா மாலைப் பந்துகண் டன்ன
 ஊன்சோற் றமலை பாண்கடும் பருத்தும்
 செம்மற் றம்மநின் வெம்முனை யிருக்கை"

(புறநானூறு - 33)


"அமிழ்தன மரபின் ஊன்றுவை யடிசில்"

(புறநானூறு - 360)


ஊன்றுவையடிசில் என்றால் ஊனோடு சேர்த்து ஆக்கப்பட்ட அரிசி. அதாவது பிரியானி.

இது புலவின் சிறப்பு வகையாகத் தோன்றுகின்றது.

"விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின்
தொடித்தோள் கைத் துடுப்பாக
ஆடுற்ற ஊன்சோறு
நெறி அறிந்த கடிவாலுவன்

- (மதுரைக்காஞ்சி 29-36)


தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் போர்க்களத்தில் பகைவரைக் கொன்று சோறாக்கிய 'கடிவாலுவன்' என இங்குக் குறிப்பிடப்படுகிறான்.

"முடித்தலை யடுப்பிற் பிடர்த்தலைத் தாழித்
தொடித்தோள் துடுப்பின் துழைஇய ஊன்சோறு"

(சிலப்பதிகாரம், கால்கோட்காதை)   


"மையூன் தெரிந்த நெய்வெண்புழக்கல்"

(நற்றிணை - 83)


வெண்சோற்றுடன் நெய் கலந்து, இறைச்சியையும் சேர்த்து சமைத்து உண்டனர் என்ற செய்தியை நமக்குச் சொல்கிறது.

இறைச்சி வகைகளுள் உடும்பிறைச்சியைத் தலைசிறந்ததாகத் தமிழர் கொண்டமை, "முழுவுடும்பு, முக்காற்காடை, அரைக்கோழி, காலாடு" என்னும் பழமொழியால் தெரிய வருகின்றது.

"உடும்பிழு தறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
 சீறின் முன்றில் கூறுசெய் திடுமார்
 கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்
 மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து"

(புறநானூறு - 325)


உடும்பையும் பன்றியையும் அறுத்துக்கூறுபோட்டு தீயிலிட்டுச்சுட்டுத்தின்பர் என்கிறது இப்பாடல்.

"நாய்கொண்டால், பார்ப்பாரும் தின்பர் உடும்பு"
(பழ. 35)

என்னும் பழமொழிநானூற்றடியும், இதை வலியுறுத்தும்.

சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் கபிலர் கையைப் பிடித்து, "உம் கை மெல்லிதாயிருக்கிறதே! கரணியம் என்ன?" என்று வினவியதற்கு, அவர்,

"புலவு நாற்றத்த பைந்தடி
 பூநாற் றத்த புகைகொளீஇ ஊன்றுவை
 கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது
 பிறிதுதொழி லறியா வாகலின் நன்றும்
 மெல்லிய பெரும தாமே......
 ..................................
 செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே."

(புறநானூறு - 14)


நாட்டுமக்களைக்காக்கும் உங்களின் கை வன்மையாக உள்ளது அரசே. என் கை மென்மையாக உள்ளது. ஏனென்றால்… புலால் நாறும் கறித்துண்டைப் பூமணம் கமழும் தீயில் வாட்டி, உணவும், துவையலும், கறிச்சோறுமாக நீ வழங்கியதை உண்டு வருந்தும் தொழில் அல்லது வேறு தொழில் அறியாததால் மென்மையாக உள்ளது.

"நெய்கனி குறும்பூழ் காய மாக
 ஆர்பதம் பெறுக தோழி யத்தை
 பெருங்கல் நாடன் வரைந்தென அவனெதிர்
 நன்றே மகனே யென்றனன்
 நன்றோ போலும் என்றுரைத் தோனே"

(குறுந்தொகை - 389)


என்பதில், நெய்யிற் பொரித்த குறும்பூழ்க்கறி கூறப்பட்டது.

குறும்பூழ் வேட்டுவன் 214ஆம் புறப்பாட்டிற் குறிக்கப்பட்டான். குறும்பூம் = காடை.

மனைக்கோழி 395ஆம் புறப்பாட்டிற் குறிக்கப்பட்டுள்ளது. ஆட்டில் வெள்ளாட்டுக் கடாவையே பண்டைத்தமிழர் சுவையுள்ளதென விரும்பியுண்டனர்.

"மாடந் தோறும் மைவிடை வீழ்ப்ப" (புறம். 33)
"மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்" (புறம். 113)
"நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின்" (புறம். 262)
"மைவிடை யிரும்போத்துச் செந்தீச் சேர்த்தி" (புறம். 365)
"விடைவீழ்த்துச் சூடுகிழிப்ப" (புறம். 366)
"மரந்தோறும் மைவீழ்ப்ப" (மதுரைக். 754)
"மல்லன் மன்றத்து மதவிடை கெண்டி" (பெரும்பாண்.143)
"செங்கண் மழவிடை கெண்டி" (பெரும்பொருள் விளக்கம்)

(மை = காராடு, வெள்ளாடு. விடை = கடா, வெள்ளாட்டுக் கடா)

"துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்
பராஅரை வேவை பருகெனத் தண்டிக்
காழிற் சுட்ட கோழூன் கொழூங்குறை
ஊழின் ஊழின் வாய்வெய் தொற்றி
அவையவை முனிகுவ மெனினே சுவைய
வேறுபல் லுருவின் விரகுதந் திரீஇ"

(பொருநாராற்றுப்படை)


பதத்தோடு சுட்டுச் சமைத்த செம்மறியாட்டுக் கறியும் சோறும் கூடிய உணவை அருகிருந்து ஊட்டலானான். அருகம்புல் மேய்ந்த துருவை என்னும் செம்மறியாடு. பராரை எனப்படும் அதன் பருத்த கால்தொடை. அதனைப் புழுக்கிய வேவை. வேவையை இக்காலத்தில் சூப் என்பர். அரசனாயிற்றே என்று அவனிடம் நெருங்கத் தயங்கினோம். அவன் விடவில்லை. பருகுக என்று சொல்லித் தண்டித்தான். காழ் என்பது வைரம் பாய்ந்த கட்டையில் செய்த உண்கலம். கை சுடாமல் இருக்க மரக் கிண்ணத்தில் தந்தான். அதில் கொழுத்த கறித் துண்டுகளும் இருந்தன. சூடு வாயில் சுட்டதால் வாயால் ஊதி ஊதிச் சுவைத்துப் பருகினோம். ஆட்டின் தொடைக்கறியை இரும்புக்கம்பியில் குத்தி தீயில் சுடப்பட்ட கறித்தூண்டுகளையும் உண்ணக்கொடுத்தான்.

*******************************


பாருங்கள் ஊன்சோறு(பிரியாணி), சுட்டகறி(தந்தூரி), வேவை (சூப்) என்பவையெல்லாம் பிறநாட்டாரிடமிருந்து கற்று, தற்காலத்தில் உருவான உணவுவகைகள் என்று நாம் நினைத்துக்கொண்டுள்ளோம். ஆனால், பழந்தமிழரின் விருப்ப உணவாகவே இருந்திருக்கிறது. தமிழனே உலகின் அனைத்திற்கும் முன்னோடியானவன்.

உதவி : பல வலைத்தளங்கள்
தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment