கோழி - கோழியூர் - உறந்தை - உறையூர்
கரிகால் அமைத்த உறையூரின் பண்டைப்பெயர் "கோழி" என்னும் சான்றுகள்.
"முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென்"
- சிலம்பு (புகார்க்காண்டம், நாடுகாண் காதை)
பொருள்:
முறம்போலுஞ் செவியினையுடைய யானையை முன்னர்ச் சமரிடத்துக் கெடுத்த, புறத்தே சிறகினையுடைய கோழி என்னும் நகரின்கண் விரும்பிப் புக்கார் என்க.
(கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளோடு, மதுரையை நோக்கிச் செல்கையில் உறையூரையடைந்ததை இளங்கோவடிகள் எழுதியது). புறஞ்சிறை வாரணம் - கோழி.
*************
"குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி,
வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது
சோழ நன்னாட்டுப் படினே, #கோழி
உயர் நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ,"
- புறநானூறு - 67ஆம் பாட்டு 6 முதல் 9 வரை அடிகள்.
பொருள் : அன்னச்சேவலே, நீ குமரித்துறை அயிரை மீனை உண்டபின்னர் வடமலையை (திருப்பதி) நோக்கிச் செல்வாயாயின் இடையில் கோழி (உறையூர்) நகர் மாடத்தில் தங்கி இளைப்பாறுக.
************
பின்னாளில், தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், உறையூரை மூக்கீச்சரம் என்னும் பெயரில் பாடியுள்ளார். அதில், அவ்வூரை கோழி என்று இரண்டு பாடல்களில் குறிப்பிடுகிறார்.
"தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்கு செங்கோலினான்" - 4ஆம் பாட்டு
"வடமன்நீடு புகழ்ப்பூழி யன்றென்ன வன்கோழிமன்" - 5ஆம் பாட்டு.
*************
முற்காலத்து ஓர் கோழி கரிகாலின் யானையொடு போரிட்டு வென்ற நகர்க்குக் கோழி என்பது பெயராயிற்று. அந்நகர் காணும்பொழுது சிறையும் கழுத்துமாக ஆக்கியவதனால் புறஞ்சிறை வாரணம் எனப்பட்டது என்பர் அரும்பதவுரையாசிரியர். இக்காரணக்கதை பொருநராற்றுப்படையிலும், பட்டினப்பாலையிலும் கூறப்படவில்லை.
நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்
உதவி :
1. சிலப்பதிகாரம் நூல்2. புறநானூறு நூல்
3. தேவாரம் - இரண்டாம் திருமுறை
No comments:
Post a Comment