Tuesday, May 5, 2020

அயோத்திதாச பண்டிதர் நினைவுநாள்

அயோத்திதாசர் என்னும் காத்தவராயனார்:


தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர். பௌத்தத்திற்கு மாறிய இவர் பறையர்களின் மூலச் சமயம் பௌத்தம் என்றும் அதனால் அவர்கள் பௌத்தத்திற்குத் மாறவேண்டும் அறிவுறுத்தினார். தமிழன் என்னும் பெயரை இனத்திற்கு அடையாளமாக்கிக் காட்டியவர்.



"திராவிட மகாஜன சபை" கி.பி. 1891ல் தாத்தா இரட்டைமலை சீனிவாசனாரோடு சேர்ந்து இச்சபை தொடங்கப்பட்டது. அயோத்தி தாசர் 1885 ஆண்டிலேயே "திராவிட பாண்டியன்" என்னும் இதழைத் தொடங்கினார். அவர் கி.பி. 1886ஆம் ஆண்டில் இந்துக்களில் தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என்றார். அவர்கள் யாவரும் சாதியற்ற திராவிடர்கள் என்னும் கருத்தையும் முன்வைத்தார். அதனால், பஞ்சமர் என்போர் வருணாசிரம முறையில் வராமல், அவர்ணாக்கள் என அழைக்கப்பட்டனர். திராவிட மகாஜன சபையை நிறுவி திராவிட அரசியலைத் தொடங்கி வைத்ததால் திராவிட அரசியலின் முன்னோடி எனவும் கூறப்படுகிறார்.

"ஒருபைசாத் தமிழன்" என்றும், பின்னர் "தமிழன்" என்று பெயர்மாற்றப்பட்ட இதழை நடத்தினார். தமிழ்த்தென்றல் திரு.வி.க வின் குடும்ப மருத்துவருமாவார் இவர். பல்வேறு துறைகளில் பன்முகத்திறமையுடையவர்.

இவருடைய தாத்தா சமையலர் கந்தப்பன், நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளைத் தன்குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர். அதன் பின்னர்தான் திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது.

காசிமேடு சதாவதாணி வைரக்கண் வேலாயுதம் புலவர் (1830-1892), வல்லக்காளத்தி வீ. அயோத்தி தாசர் பண்டிதர் (1836-1900) ஆகியோரிடமும் கல்வி கற்றார். தமிழ், சித்த மருத்துவம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமையும் ஆங்கிலம், வடமொழி, மற்றும் பாலி போன்ற மொழியறிவும் பெற்று விளங்கினார். தன் ஆசிரியர் மீது கொண்ட மதிப்பால் "காத்தவராயன்" என்ற தனது பெயரை அயோத்தி தாசர் என மாற்றிக் கொண்டார்.

ஐயாவின் நினைவுநாள் இன்று. ஐயா அவர்களை  நினைவிலிருத்திப் போற்றுவோம்.

No comments:

Post a Comment