Tuesday, May 5, 2020

அருட்பேரொளி வள்ளற்பெருமான் சாதியை எதிர்த்த பாக்கள் சில

தைப்பூசம் -அருட்பெருஞ்சோதி திருநாள் :


காவிக்கு எதிரான, எம் புரட்சியாளர் வெண்பேரொளி வள்ளற்பெருமான் :

திருவருட்பாவின் திருமுறைகள் ஆறனுள், ஆறாந்திருமுறையையாவது நாம் படிக்கவேண்டும்.
நால்வண்ணம், சாதி, மத, சமய கொடுமைகளை எதிர்த்து நல்வழி(சன்மார்க்கம்) கண்ட வள்ளல். 🙏
சாதி, சமய, சாத்திரங்களை எதிர்த்து பெருமானருளிய வரிகள் சிலவற்றைத் தொகுத்துள்ளேன்.



வள்ளலார் வாய்மொழிகள்:


நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார்
இலைநீ விழித்திதுப்பார் என்றெனக்கு விளம்பியசற் குருவே.

சாதியு மதமுஞ் சமயமுங் காணா
ஆதிய நாதியா மருட்பெருஞ் சோதி

சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் சோதி

இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்

சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன்

இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்

சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே

சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்
விடுவித்தென் தன்னை ஞான
நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க
நிலைதனிலே நிறுத்தி னானைப்

சாதிமதம் சமயம்எனும் சழக்கையும்விட் டடக்கி

சாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த
சத்தியனே உண்கின்றேன் சத்தியத்தெள் ளமுதே.

சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக
ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.

சாதியும் பேதச் சமயமும் நீங்கித் தனித்தனனே.

சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.

சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற
பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்
வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.

சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்
சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக
வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்
மனம்வெளுத்து வாய்வெளுத்து

சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
சத்தியச் சுத்தசன் மார்க்க
வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
விளம்பினேன் வம்மினோ விரைந்தே.

சாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர்
தனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர்

சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது

சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்
சோதியைக் கண்டேன டி - அக்கச்சி
சோதியைக் கண்டேன டி.

சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த
சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே
ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்

இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால்
எங்கணும்பே ரொளிமயமாய் இருந்தனஆங் கவர்தாம்
மருட்சாதி நீக்கிஎனைப் புணர்ந்தஒரு தருணம்.

**************

அருட்பேரொளி வள்ளற்பெருமான் திருவடிகளே போற்றி போற்றி.

நன்றி. வணக்கம்.🙏
தொகுப்பு : அடியேன் தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment