Tuesday, May 5, 2020

சிலம்பில் கொற்றவை : 


“ஆனைத் தோல் போர்த்துப் புலியின் உரி உடுத்துக்
கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்—
வானோர் வணங்க, மறைமேல் மறையாகி,
ஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய்!

(வேட்டுவ வரி, சிலப்பதிகாரம்)




மதுரை நகருக்கு கவுந்தியடிகளுடன் நடந்து வந்த கண்ணகியும் கோவலனும் முதலில் ஒரு கொற்றவை கோவிலில்தான் தங்குகின்றனர்:

“விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை,
மையறு சிறப்பின் வான நாடி
ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு – என்”

(காடுகாண் காதை, சிலம்பு)


வேட்டுவ வரிப் பாடல் முழுதும் கொற்றவை வருணனை வருகிறது.

கொற்றவை கோவிலில் சாலினி வெறியாடியதை (சாமி ஆடல்)  எல்லோரும் வியப்புடன் பார்த்தனர். கலையமர் செல்விக்கு பலிதந்தால்தான் நன்மைகள் விளையும் என்று அவள் சாமி ஆடுகையில் முழங்குகிறாள். இதோ இளங்கோவின் வரிகள்:


“கலையமர் செல்வி கடன் உணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போள் அல்லள்;
மட்டு உண் வாழ்க்கை வேண்டுதீர் ஆயின்
கட்டு உண் மாக்கள்! கடம் தரும் என் ஆங்கு”

(கலை= மான்)


“பழங்குடிக் குமரியின் முடியை உயர்த்திப் பொன்கயிற்றினால் கட்டினர். காட்டுப் பன்றியின் கொம்பை பிறைச் சந்திரன் போல அவளுக்கு அணிவித்தனர். புலிப்பல் தாலியை அணிவித்து புலித்தோலை ஆடையாகப் போர்த்தி, அவளை மான் மீது ஏற்றி ஊர்வலம் விட்டனர். அவள் கையில் கிளி, கோழி முதலியவற்றைக் கொடுத்து வழிபட்டனர். அவளைத் தொடர்ந்து பெண்கள் பலர், சோறு, எள்ளுருண்டை, நிணச் சோறு, நறுமணப் பொருட்கள் ஆகியவற்றைச் சுமந்து வந்தனர். பெரிய வாத்தியங்கள் முழங்கின. இது இளங்கோ அடிகள் நமக்கு அளிக்கும் செய்தி.


“மதியின் வெண்தோடு சூடும் சென்னி
நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்
பவள வாய்ச்சி, தவளவாள் நகைச்சி,
நஞ்சு உண்டு கறுத்த கண்டி, வெஞ்சினத்து
அரவு நாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளை எயிற்று உரகக் கச்சுடை முலைச்சி,
வளியுடைக் கையில் சூலம் ஏந்தி
கரியின் உரிவை போர்த்து, அணங்கு ஆகிய
அரியின் உரிவை மேகலை ஆட்டி
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி,
வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை!
இரண்டு வேறு உருவின் திரண்டதோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல்; பலர் தொழும்
அமரி, குமரி, கவுரி, சமரி,
சூலி, நீலி, மால் அவற்கு இளங்கிளை
ஐயை, செய்யவள், வெய்யவாள் தடக்கைப்
பாய்கலைப் பாவை, பைந்தொடிப் பாவை;
ஆய்கலைப் பாவை, அருங்கலப் பாவை
தமர் தொழ வந்த குமரிக் கோலத்து
அமர் இளங்குமரியும் அருளினள் –
வரியுறு செய்கை வாய்ந்ததால் எனவே”


பொருள்: சந்திரப் பிறை சூடிய தலை; நெற்றிக் கண்; பவள வாய், முத்துச் சிரிப்பு, நஞ்சுண்ட கறுத்த கழுத்து, பாம்பையே கயிறாகக் கொண்டு மேரு மலையை வில்லாக  வளைத்த வில்லி; துளை அமைந்த பல்லுடைய விஷப் பாம்பையே கச்சு ஆக அணிந்த முலையுடையாள்; வளைகள் அணிந்த கையில் சூலம், யானைத்தோல் போர்வை, புலித்தோல் மேகலை, இடப்புற காலில் சிலம்பு, வலப்புறக் காலில் கழல், வெற்றி கொடுக்கும் வாள் ஏந்திய கை, மகிஷாசுரன் தலையில் நிற்பவள்; எல்லோரும் தொழும்குமரி, கறுப்பி, போரின் அதிதேவதை, சூலம் ஏந்திய பெண்; நீல நிறத்தவள்; எம் தலைவி, செய்யவள், தடக் கையில் கொடிய வாளேந்திய நங்கை; பாயும் மான் மீது ஏறி வருபவள்; மலைமகள், கலைமகள், திருமகளின் உருவம்; இளங்குமரி; அவள் அருள் நமக்குக் கிடைத்துவிட்டது.

No comments:

Post a Comment