Saturday, May 9, 2020

பாண்டியன் நெடுஞ்செழியனின் ஆட்சி :

குடிமக்கள் குறைதெளிந்த பாண்டியன் நெடுஞ்செழியன் :


அக்கால தமிழரசர்கள் ஆட்சியும், இக்கால அரசுகளின் ஆட்சியும். ஒரே ஒரு சொல்லில் வேறுபடுத்துகிறேன். சிலம்பு, நாமனைவருமறிந்ததொரு காப்பியம், அதிலிருந்தொருசொல்.



சிலம்பு - மதுரைக்காண்டம் - வழக்குரை காதை. 


கணவனையிழந்த கண்ணகி, பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்க வாயிற்காவலனை கடந்து அரசவைக்குள்ளே வருகிறாள். வந்த கண்ணகியை கண்ட மன்னன் நெடுஞ்செழியன் அவளை நோக்கி இவ்வாறு பேசத்தொடங்குகிறான்.

"நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்

யாரை யோநீ மடக்கொடி யோய்"


இதன் பொருள், நீரொழுகுகிற கண்ணுடன் எம்முன் வந்தாய், யாரோ நீ மடக்கொடி போன்றவளே?

இதிலுள்ள "நீர்வார் கண்ணை" என்பதுதான் அச்சொல். நாட்டு மக்களுக்கு குறையேதுமில்லா அளவிற்கு மன்னன் செங்கோன்மையாற்றவேண்டும். அதையும் மீறி குடிமக்கள் அரசனை காணவந்தால், அக்குடிமக்கள் வந்தவுடன், அவர்கள் தாமேதம் குறைகளை கூறுவதற்கு முன்னரே அவர்களின் கண்களைக்கண்டே குறைகளை நீக்கவேண்டும். இத்தகைய சிறந்த செங்கோன்மையே அக்கால அரசு. அவ்வாறு கண்ணகி அரசவைக்கு வந்தவுடன், மன்னன் அவளைக்கண்டு, இப்பெண் ஏதோ குறையோடு வந்துள்ளாள் என்றெண்ணி அவளின் கண்களில் நீர்வருவதை கண்டு கேட்கிறான், "நீர்வார் கண்ணை" என்று. குடிமக்களின் கண்களில் இவ்வாறு கண்ணீர் வரும் அளவிற்கு நாம் கொடுங்கோலாட்சி செய்கிறோமோ என்றெண்ணி தன்னைத்தானே வெட்கும் அளவிற்கு இருந்தது கண்ணகியின் நீரொழுகு கண்கள். நாட்டிலுள்ள ஏதோ ஒரேயொரு குடிமகளின் கண்ணீருக்கு இவ்வளவு மதிப்பளித்த நம் தமிழ் மன்னர்கள் எங்கே? தற்போதைய அமைச்சர்கள் எங்கே?



மன்னன் நெடுஞ்செழியன் இவ்வாறுதான் நினைத்தான் என்று ஐயமற கூறமுடியாது. ஏனெனில் என்றோ நடந்த கதையை காப்பியமாக புனைகிறான் இளங்கோ. அது பொய்யென்றே வைத்துக்கொள்ளலாம். ஆனால், இக்காப்பியம் செய்த இளங்கோ இவ்வாறு அரசாட்சியிருந்தது என காப்பியம் படைக்கிறான். எத்தகைய மேன்மையுடைய செங்கோன்மை பொருந்தியிருந்தனர் நம் தமிழ் மன்னர்கள் என்பதை இந்த "நீர்வார் கண்ணை" என்னும் ஒரு சொல் விளக்கிவிட்டது.
அடஅட தமிழ் நூற்களைப் படியுங்கள் ஐயா, அன்பும் அறமும் அரசாட்சியும் கற்கலாம். மனிதன் மனிதனாகலாம்.

தமிழ் வாழ்க

பாண்டியனின் அரசவையில் கண்ணகி வழக்குரைத்தல் :


வாயி லோயே வாயி லோயே
அறிவறை போகிய பொறியறு
நெஞ்சத்து  இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே
இணையரிச் சிலம்பொன்றேந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத்தாளென்று
அறிவிப் பாயே அறிவிப் பாயே; என

வாயிலோன்,
வாழியெங் கொற்கை வேந்தே வாழி 
தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி
பழியொடு படராப் பஞ்சவ வாழி

அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி 
வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை அல்லள்
அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு
சூருடைக் கானகம் உகந்த காளி
தாருகன் பேருரங் கிழித்த பெண்ணு மல்லள் 

செற்றனள் போலும்செயிர்த்தனள் போலும்
பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாளே
கணவனை இழந்தாள் கடையகத் தாளே; 
என

வருக மற்றவள் தருக ஈங்கென 
வாயில் வந்து கோயில் காட்டக்
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி

நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்
யாரை யோநீ மடக்கொடியோய் எனத்

தேரா மன்னா செப்புவ துடையேன் 
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் அரும்பெறற் புதல்வனை
ஆழியின் மடித்தோன் பெரும்பெயர்ப்
புகாரென் பதியே

அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு 
என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி யென்பதென் பெயரேயெனப்;

பெண்ணணங்கே கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று
வெள்வேற் கொற்றங் காண்என

ஒள்ளிழை நற்றிறம் படராக் கொற்கை வேந்தே
என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே, எனத்

தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி
யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே
தருகெனத் தந்து தான்முன் வைப்பக் 

கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப
மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி கண்டு
தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்
பொன்செய் கொல்லன்
தன்சொற் கேட்ட யானோ அரசன்
யானே கள்வன்

மன்பதை காக்குந்  தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென
மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்
கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக்
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று 
இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி.

நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment