Thursday, April 30, 2020

யானைபுக்க புலம் - புறம் 184

யானை புக்க புலம்: - புறநானூறு


நூல் : புறநானூறு - 184
பாடியவர் : பிசிராந்தையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் அறிவுடை நம்பி.
திணை : பாடாண்டிணை
துறை : செவியறிவுறூஉ.



செய்யுள்: - { சீர்பிரிக்காத மூலப்பாடல் }


காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகு
நூறுசெறு வாயினுந் தமித்துப்புக் குணினே
வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கு
மறிவுடை வேந்த னெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்து
மெல்லியன் கிழவ னாகி வைகலும்
வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானு முண்ணா னுலகமுங் கெடுமே.

{ பாண்டியன் அறிவுடைநம்பியுழைச்சென்ற பிசிராந்தையார் பாடியது }

விளக்கம் :

ஒரு குறிப்பிட்ட நிலத்தில் முற்றிக் காய்ந்திருக்கும் நெல்லை அறுத்து அரிசி உணவுக் கவளமாக்கி யானைக்குத் தந்தால் அது பல நாட்களுக்கு வரும். அதே நிலத்தில் யானை புகுந்து உண்டால் அதன் வாயில் புகும் உணவைக் காட்டிலும் காலால் மிதித்து வீணாக்கும் நெல் அதிகமாக அழியும். இந்த உண்மை நெறியை அறிந்து அறிவுடை அரசன் வரி வாங்கும்போது நாட்டின் செல்வம் கோடி கோடியாகப் பெருகும். இந்த நெறியை உணராத அரசன் அறிவு வலிமை இல்லாமல் மெல்லியனாகி, வரிசைச்சிறப்பு அறியாத தன் சுற்றத்தாரொடு இரக்கம் இல்லாமல் வரிப்பிண்டத்தை விரும்பி வாங்கினால், யானை தானே புகுந்து உண்ணும் நிலம் போல அரசனும் துய்க்காமல் அவன் நாடும் கெட்டொழியும். இதை உணர்ந்து செயல்படுவாயாக.

நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment