தெறுகால் விளக்கீடு - கார்த்திகை விளக்கீடு:
விளக்கிடல் விளக்கீடு ஆனது.
கார்த்திகை மாதத்தைக் குறிக்கும் சொற்கள் :
தெறுகால், தேள், நளி.
கார்த்திகைநாளைக் குறிக்கும் சொற்கள் :
அங்கி, அளக்கர், அளகு, அறுவாய், ஆரல், இறால், எரிநாள், நாவிதன்.
வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்
கையற வந்த பொழுது.
- (நற்றிணை 58)
கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல்
சீர்த்து விளங்கித் திருப்பூத்தல்
– (பரிபாடல் திரட்டு 10)
ஆடு இயல் அழல் குட்டத்து
–(புறநானூறு 229) பாடலுக்குத் தரப்பட்டுள்ள பழைய உரையும், உ.வே.சா. குறிப்புரையும்
கார்த்திகை நாண்மீன்.
"அரவுக் கண்ணணியுற ழாரன்மீன் றகையொப்ப" (கலித்தொகை 64)
அகலிரு விசும்பின் ஆஅல் போல
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை
– (மலைபடுகடாம் – 10)
விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப
எரிசடை எழில் வேழம் தலை எனக் கீழிருந்து
தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கை
– (பரிபாடல் 11). இதற்கு உ.வே.சா எழுதியுள்ள குறிப்பு.
"நலம் மிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கு" (கார் 260).
"கொற்றவை ஓர் நாள் மாதமும் கார்த்திகை"
(பிங்கல நிகண்டு :10:325).
*************
நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்
கார்த்திகை மாலை-விளக்கு
வீரை என்னும் ஊரிலிருந்துகொண்டு ஆண்ட வேளிர்குடி அரசன் வெளியன்.
அவன் மகள் தித்தன்.
அவன் முரசில் திரி போட்டு விளக்கேற்றி வைத்தான். மாலையில் அந்த விளக்கை ஏற்றியபோது வெண்சங்கு ஊதப்பட்டது. பனி பொழிந்தது. (இந்தக் காலத்தில் போருக்குச் சென்ற தன் தலைவன் மீள்வான் எனத் தலைவி நம்புகிறாள்.)
இது சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக்காட்டுகிறது.[3]
கார்த்திகை பற்றிச் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.
கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டம் காதில் அணியும் மகரக்குண்டலம் போல ஒளிர்ந்தது.[4]
அழல் என்பது கார்த்திகை-நாளைக் குறிக்கும். ஆடு என்னும் மாதத்தில் வரும் அழல்-நாள் என்பது, மேடம் என்னும் சித்திரை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளைக் குறிக்கும்.[5]
ஆஅல் என்பது கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டத்தைக் குறிக்கும். இந்த மீன் கூட்டத்தின் வெண்ணிறம் போல முசுண்டைப் பூ மலர்ந்ததாம்.[6]
ஆரல் என்னும் பெயரிலும் சங்கப்பாடல்களில் குறிப்புகள் உள்ளன.
எரி என்பது கார்த்திகை மாதம். சையம் என்னும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பொழிந்து வையை ஆற்றில் வெள்ளம் வரும் காலம்.[7]
***************
சங்க இலக்கியம் காட்டும் கார்த்திகை தீபம்.
_______________________________________
தலைவியை பிரிந்து, காட்டு வழியே பயணிக்கிறான் தலைவன். அவன் கண்களில், மலை உச்சியில் நெருப்பென சிவந்து இதழ் விரித்து பூத்திருக்கும் இலவம் பூக்கள் கண்ணில் படுகின்றன. அவன் கண்களுக்கும், அந்தப் பூக்கள், கார்த்திகை தீபத்தின் போது ஏற்றப்படும் நூற்றுக்கணக்கான விளக்குகள் போல் தோன்றுகின்றனவாம். இப்படி தலைவவனின் கண்கொண்டு இந்தப் பாடலைப் பாடியவர், பாலை பாடிய பெருங்கோ. இடம் பெற்ற இலக்கியம், அகநானூறு(185).
ஊரை விட்டு காதலனுடன் காட்டு வழியே செல்கிறாள் தலைவி. அதுவும் நீண்ட தூரம் செல்கிறாள். ஊரை விட்டுப் பிரிந்தது, உற்றாரை விட்டு வந்தது, நடந்து வரும் களைப்பு என, அவள் முகம் சற்றே வாடுகிறது. அதைப் பார்த்து விடுகிறான் காதலன். தன்னை நம்பி வந்தவளின் முகம், எந்த விதத்திலும் வாடிவிடக் கூடாது என்று நினைக்கிறான். அவள் சோர்வடையாமல் இருக்க, சற்று துாரத்தில் தெரியும் அந்தக் காட்சியை விவரிக்கிறான்.'பெண்ணே நீ வாழ்க. மகிழ்ச்சி கொள்வாயாக! அங்கே பார். கார்த்திகைத் திங்களில் வரிசையாக ஏற்றும், தீபத்தின் விளக்கினைப் போல, கோங்கம் மரத்தின் பூக்கள் வரிசையாகப் பூத்திருக்கின்றன. அந்த தீஞ்சுடர் அழகினைப் பார். உன் களைப்பு போகும்' என்று கூறும் அந்தத் தலைவனின் வரிகள்,
'அறுமீன் கெழீய அறம்செய் திங்கள்செல்சுடர் நெடுங்கொடி போலப்பல்பூங் கோங்கம் அணிந்த காடே!'
என்று, நற்றிணையில் இடம் பெற்றுள்ளது (202 -நற்றிணை).
கார்த்திகை மாதத்தில் நடுநிசியில் கூட தெருக்களில் பெண்கள் வரிசையாக விளக்கு ஏற்றி வைத்திருக்கின்றனர். அழகிற்காகவும், மணத்துக்காகவும், வீட்டின் முன், பூ மாலைகள் வரிசையாக தொங்கவிடப்பட்டிருக்கின்றன, என்கிறது நக்கீரர் பாடிய அகநானூறுற்றுப் பாடல்.
'அறுமீன் சேரும் அகலிருள் நெடுநாள்மறுகு விளக் குறுத்து மாலை துாக்கி' (அகம் 141)
கோங்கம் மரத்தில் இருந்து காற்றிலாடி மணம் கமழும் பூக்கள் கீழே உதிர்கின்றன. அப்படி விழுந்த பூக்கள், திரியை துாண்டி விட்டால் எரியும் விளக்குப் போல் இருக்கிறது என்கிறார் சேரமான் இளங்குட்டுவன் (அகம் 153).
கார்நாற்பது என்றொரு சங்க இலக்கிய நுால். அதைப் பாடியவர் மதுரை கண்ணங்கூத்தனார். அவர் கண்களுக்கு காந்தள் மலராகிய தோன்றிப் பூ தெரிகிறது. அது விரல்களை குவித்து வைத்திருப்பது போல், செக்கச் சிவந்து மலர்ந்திருக்கிறதாம். அப்படி சிவந்திருக்கும் பூக்கள், நன்மை மிகுந்த கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் விளக்கைப் போல் காட்சித் தருகிறது என்பதை,
'நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்டதலைநாள் விளக்கின் தகயுடைய ஆகிப்புலமெலாம் பூத்தன தோன்றி' (கார்.நாற்: 26)
என்று உவமைப்படுத்தி இருக்கிறார்.
களவழி நாற்பது பாடியவர் பொய்கையார். போர்க்களத்தில் சோழ அரசன் நீர் நாடன் போரிடுகிறான். போரில் வீரர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்கின்றனர்; குத்தப்படுகின்றனர். வாளால் தங்களை சேதப்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் உடம்பில் இருந்து இரத்த ஆறு ஓடுகிறது. அப்படி ஓடும் ஆறு எண்ண முடியாத அளவிற்கு ஏற்றப்பட்ட கார்த்திகை விளக்கின் தீபச்சுடர் அசைந்தாடுவது போல் இருக்கிறது என்கிறார். அவர் கூறும் வரிகளைப் பாருங்கள்:
'கார்த்திகைச் சாற்றில் கழி விளக்குப் போன்றனவேபோர்க் கொடித் தானை பொருபுனல் நீர்நாடன்' (கள.நாற்பது 17)
இளவேனில் காலத்தில் இலவம் மரத்தில் இலைகள் உதிர்ந்த நிலையில் மலர்ந்த பூக்கள் செக்கச் சிவந்திருக்கின்றன.பூக்களின் நடுவில் நீட்டிக் கொண்டிருக்கும் மகரந்தக் குழல், எரியும் திரி போல் நீண்டு நிற்கிறது. அதைப் பார்த்த ஔவையாருக்கு. கார்த்திகை திருவிழாவின் போது, பெண்கள் ஒன்று கூடி நின்று ஏற்றுவது தீபங்கள் போல் தோன்றுகிறது.'நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டுஇலையில மலர்ந்த முகையில் இலவம்அருஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி!' (அகம்-11) :தினமலர்.
No comments:
Post a Comment